Sunday, December 23, 2012

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

என் பள்ளிபடிப்பு முழுவதும் கிறிஸ்துவ பள்ளிகளில் படித்ததால், கிறிஸ்துமஸ் பற்றிய ஞானம் கொஞ்சம் உண்டு. அப்போது கிறிஸ்துவ பள்ளிகளில் நுழைவாயிலின் மேல் ஒரு கொட்டகை போல் செய்து, வால் நட்சத்திரம் மாட்டி, கொட்டகையின் உள்ளே குழந்தை இயேசு புல்கட்டில் படுத்தபடியே இருக்க சுற்றிலும் மேரி, ஜோசப், வானதூதர், மூன்று அரசர்கள் பரிசுகளுடன் இருப்பது போன்ற பொம்மைகள் இருக்கும். மாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த கொட்டகை சாலையில் போகும் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து வரும் லீவு நாளில் இந்த கொண்டாட்டம் வரும். வீட்டிற்கு அருகிலேயே St.Joesphs , St.Marys பள்ளிகளும், தேவாலயமும் இருந்ததால் இந்த கொண்டாட்டங்களை பார்க்க தவறியதில்லை. அங்கிருந்த கிறிஸ்துவ வீடுகளிலும் நட்சத்திரம் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். கிறிஸ்துவ தினத்தன்று இரவிலேயே, அதாவது அதிகாலை பூசைக்கே கூட்டம் கூட்டமாக புதுத்துணி உடுத்திக் கொண்டு, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்கிருந்தோவெல்லாம் சர்ச்சுக்கு வருவார்கள். பல பூசைகள் அன்று நடக்கும். மதுரை முழுவதும் gingerbread house என்று ரொட்டி, சக்கரையில் பண்ணிய வீடும், அழகான கேக்குகளுடன் கேக் கடைகள் சீரியல் லைட் மாட்டிக் கொண்டு பிஸியாக வியாபாரம் செய்வதும் நடக்கும். மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகில் இருந்த பெங்களூர் ஐயங்கார்ஸ் பேக்கரியில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். சிறு வயதில் கேசவன் பிரியாணி கடை அருகில் இருந்த அருணா பேக்கரியில் ஒரு சிறிய gingerbread house ஒன்றை வாங்கி சுவைத்த அனுபவமும் இருக்கிறது.

நாங்கள் இருந்த தெருவில் ஒரு கிறிஸ்தவ  குடும்பம் இருந்தது. அவருடைய மகள்கள் என் வயதிலும், என் தங்கை வயதிலும் இருந்ததால் எங்கள் குடும்பங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து சுவையான தின்பண்டங்களும் சாப்பாடும் எங்களுக்கு வரும். பசுமலை பக்கம் குடியிருந்த பொழுது அங்கிருந்த ஒரு கிறிஸ்துவ குடும்பத்துடன் ஆடு, கோழி, மீன் என்று ஒரு வெட்டு வெட்டியதும் நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அந்த ஆன்ட்டி அருமையாக சமைப்பார். வீடும் அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

இப்படி எல்லாம் நான் பார்த்த கிறிஸ்துமஸ், அமெரிக்காவில் ஏமாற்றத்தையே தருகிறது. முதலில், அன்று சர்ச்சுக்கு போகிற வெள்ளைக்காரர்கள் மிகவும் குறைவு. அமெரிக்க கறுப்பின மக்கள் நம்மூர் மாதிரியே சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு பின்னும் ஒரு சர்ச் இருக்கிறது. வயதானவர்கள் மட்டும் அதிகம் வருவார்கள் அன்று. மற்றைய ஞாயிற்றுக்கிழமைகளில் பெயருக்கு சிலர் வருகிறார்கள். இங்கும், இந்தியாவில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் மட்டும் நம்மூர் மாதிரியே சர்ச்சுக்கு ரெகுலராக போகிறார்கள்.

முதல் வருடம் கிறிஸ்துமஸ் அன்று Michigan-ல், என் கணவரின் அக்கா வீட்டில் இருந்தோம். அவர் எங்களை ஒரு பெரிய மாலுக்கு அழைத்துக் கொண்டு போய் கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்ஸ் காண்பித்தார். மால் முழுவதும் பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. நடுநடுவே பிளாஸ்டிக் மலர்களும், இலைகளும் பூந்தொட்டிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் சமயம் மட்டும் விற்கும் செடிகளும், மலர்களும் என்று அந்த இடமே சொர்க்கபுரியாக இருந்தது. மக்களும் 'சர்சர்'ரென்று கிரெடிட் கார்ட் தேய்த்து மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்தையும், சிரித்த முகங்களையும் பார்க்கவே நன்றாக இருந்தது. மாலின் நடுவே ஓரிடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா(Santa ) வேடமணிந்து ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள். ஏதோ நிஜ Santaவை பார்ப்பது போல் குழந்தைகளும், பெரியவர்களும் குதூகலமாய், பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது! சில குழந்தைகள் Santaவை பார்த்தவுடன் பயந்து அழுதன. சில குழந்தைகள் சமர்த்தாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும், தன்க்கு இன்ன இன்ன பரிசுகள் வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டை சொல்ல, அவரும் ஒரு candy ஒன்று கொடுத்து விட்டு அவர்கள் சொன்ன லிஸ்டை அவர்களுடைய பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் அதை வாங்கி அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே வைத்து விடுவார்களாம். அதனால், குழந்தைகளும் Santa தான் வாங்கி கொடுத்தார் என்று நம்பி விடுவார்களாம்! நாங்களும் மகளை வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். இப்படியாகத்தான் எங்கள் கிறிஸ்துமஸ் பயணம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் ஏதோ ஒன்றிரண்டு பொம்மைகளை வாங்கி கொடுத்தோம். என் மகளும் திருப்தியாக இருந்தாள், பள்ளி செல்லும் வரை. அதற்குப் பிறகு தான் எங்களுக்கு பிரச்னை ஆரம்பித்தது. அவளுடன் படித்தவர்கள் எனக்கு இது கிடைத்தது, அது கிடைத்தது உனக்கு என்ன கிடைத்தது என்று கேட்க போக, தனக்குத் தான் எதுவுமே கிடைக்க வில்லை போலிருக்கிறது என்று வீட்டில் வந்து அழ ஆரம்பிக்க, இந்த peer pressure காரணமாக நாங்களும் இந்த மாயைக்குள் வந்து விழுந்து விட்டோம். இந்த கிறிஸ்துமஸ் ஷாப்பிங் பீவர் நவம்பர் மாதம் முதலே ஆரம்பித்து விடும். குழந்தைகளும் ஒரு பெரிய லிஸ்டை போட்டு விடுவார்கள். பெற்றோர்களும் தகுதிக்கு மீறி செலவு செய்து வாங்கி கொடுக்கிறார்கள். வேலை செய்யும் இடங்களில், கோவில்களில், சர்ச்சுகளில், வசதி இல்லாத குழந்தைகளுக்கு என்று மற்றவர்களிடம் புது பொம்மைகளை வாங்கி தருமாறு கேட்டு கொடுக்கிறார்கள்.

நவம்பரில் வரும் Thanksgiving Day முதலே வீடுகளில் வண்ண விளக்குகளை போட்டு, வீட்டினுள் fireplace அருகே கிறிஸ்துமஸ் மரம் ஒரிஜினலோ, பிளாஸ்டிக்கோ வைத்து அதையும் அலங்கரித்து வைத்து விடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இருப்பது போல் எங்கும் வீட்டு வாசலில் வால்நட்சத்திரம் மாட்டி பார்க்கவில்லை. சம்பிரதாயப்படி, fireplace வழியாக Santa வந்து பரிசுப் பொருட்களை மரத்தின் கீழ் வைத்து விட்டு செல்வார் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். நாங்கள் அபார்ட்மெண்டில் குடியிருந்த போது, என் மகளும் கடமையாக ஒரு தட்டில் cookies, டம்ளரில் பால் வைத்து விட்டு தூங்கி விடுவாள். ஜன்னல் திரைகளை மூடாமல் Santa எப்போது வருவார் என்று வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டே தூங்கி இருப்பாள். நானும் அதிகாலையில் எழுந்து அவளுக்காக ஏற்கெனவே வாங்கி அழகிய பேப்பரை கொண்டு wrap செய்த பொருட்களை முன்னறையில் வைத்து விட்டு மறக்காமல் பாலையும் குடித்து பாதி cookieயும் சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவேன்! காலையில் அவளுடைய 'ஆஆஆஆஆஆஆஆஆஆ' அம்பாஆஆஆஆஆஆஆ என்ற ஆனந்த அதிர்ச்சி குரலில் எழுந்திருக்கும் பொழுது, கை நிறைய பரிசுப் பொருட்களுடன் அவள் கண்கள் மின்ன நிற்கும் கோலம்- priceless :) அவள் பல வருடங்கள் Santa நிஜம் என்றே நம்பினாள். நாங்களும் ஒன்றும் சொல்லவில்லை.

வீட்டிற்கு வந்த பிறகு, பல வருடங்கள் தொடர்ந்து அனர்த்திய பிறகு போன வருடம் தான் செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ஒன்று வாங்கினோம். என் மகனும் பல வருடங்கள் இந்த கிறிஸ்துமஸ் கதைகளை நம்பிக் கொண்டிருந்தான். இவ்வளவு சின்ன fireplace வழியாக எப்படி பெரிய சாண்டா வரமுடியும்? நான் fireplace ஆன் செய்து விட்டால் எப்படி இறங்க முடியும் என்று குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பான்:( போன வருடத்திலிருந்து அவனுக்கு இதெல்லாம் கட்டுக்கதை என்று தெரிந்து என்னிடமே, கிறிஸ்துமஸ் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்கிற வரை முன்னேறி விட்டான்:( அவனுடைய நண்பர்கள் வீட்டில் ஒவ்வொருத்தனுக்கும் $500 பட்ஜெட் என்று சொன்ன போது மிகவும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது!

இந்த மாதத்தில் குளிர், பனி, செலவுகள் காரணமாக பலரும் மனஅழுத்தத்தில் பாதிக்கபடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் வியாபார நோக்கில் நடைபெறும் இந்த விழா பல குடும்பங்களில் குழந்தைகளை அலைக்கழிக்க வைக்கிறது. ஒரு நல்ல இனிய நாளை பரிசுகள் கொடுக்கும் நாளாக மாற்றிய பெருமையும், மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாத இந்த நாட்டில் இதைப் போன்ற வியாபாரங்கள் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தினமாகவே மாறி விட்ட பெருமையும் இந்த கார்ப்பரேட் கம்பனிகளை சாரும். Merry Christmas என்று சொன்னால் பிற மதத்தினரை புண்படுத்துவதால்(??) Happy Holidays என்று சொல்கிறார்கள்! டீவியிலும் Santa இப்பொழுது இந்த ஊரில் இருக்கிறார் இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருப்பார் என்று குழந்தைகளை கவரும் விதத்தில் படம் போட்டு சொல்கிறார்கள். குழந்தைகள் Santaவிற்கு தபால் அனுப்பினால் கடமையாக பதிலும் கிடைக்கிறது! எப்படியோ பல குழந்தைகள் உலகம் இனிமையாக இருக்கிறது :)


உங்கள் அனைவருக்கும் Happy Holidays மற்றும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்.

Thursday, December 20, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 5

நான்காம் வருடம் ப்ராஜெக்ட், vice-versa , unix லேப், C-language, கணினியல் துறை யின் சார்பாக நடத்தப்பட்ட விழாக்கள், ஆட்டோகிராப் நேரங்கள்  என்று ஓடியே போய் விட்டது. என் தம்பியும் முதல் வருடம் கல்லூரியில் வந்து சேர்ந்தான்.

எங்களுடைய சூப்பர் சீனியர்கள் இரண்டு பேர்-புது பெண் விரிவுரையாளர்கள், வகுப்புகள் எடுத்தார்கள்.(ஷ்யாமளா & உமா) என்று நினைக்கிறேன். Dr.நித்யானந்தம், Maths HOD, Dr.ராஜதுரை(?) என்று பல பெரிய ஆசிரியர்கள் வகுப்புகளை எடுத்தார்கள். ஏஞ்ஜலோவின்  voice recognition ப்ராஜெக்ட் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நானும் அருணாகுமாரியும் சேர்ந்து இறுதி வருட ப்ராஜெக்ட் செய்தோம்:) அது ஒரு தனிக்கதை. கடைசியில் MCA பிரபாகர் உதவியுடன் செய்து முடித்தோம்!

ஐந்தாவது செமஸ்டரின் போது கணித வகுப்பில் ஸ்ரீநிவாசன் சாக்பீஸ் எரிய அது என் தலையில் விழ என்று என்னை எரிச்சலடைய செய்ததும், மாணவர்கள் சிலர்(?) மாணவிகளின் லஞ்ச் பாக்ஸை காலி செய்து விட்டு காண்டீனில் கிடைக்கும் கேக் வைத்து விட்டு போவது என்று நடந்ததும், கடைசி வருடம் நெருங்க,நெருங்க பல மாணவ மாணவிகள் GRE , TOEFL தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருந்ததும், கல்லூரியில் நடைபெற்ற வேலைக்கான நேர்முகத்தேர்விலும் பலர் பங்கெடுத்துக் கொண்டதும்,.'பலவிதமான மன நிலையில்' மாணவ, மாணவியர்கள் உலா வந்ததும் அந்த காலத்தில் தான்.  நான்காம் வருட மாணவ, மாணவியர்கள்  எல்லாம் All India டூர் போனார்கள். சில பிரச்னைகளின் காரணமாக என்னால் போக முடியவில்லை:( போய் விட்டு வந்து பல கதைகள்! மேகலா எனக்கு ஒரு அழகிய கைப்பை ஒன்றை வாங்கி வந்து பரிசாக கொடுத்தாள் :)  என் வகுப்பு மாணவிகள் எல்லாம் ஒரே மாதிரியாக சேலை வாங்கினோம். அனைவரும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். செந்தில் அனைவருக்கும் நியூஆர்யபவனில் வைத்து ட்ரீட் கொடுத்தான். அருமையாக இருந்தது. ஒருநாள், வகுப்பு முழுவதும் சேர்ந்து கேண்டீனில் உட்கார்ந்து கொண்டு சில மணிநேரங்களை  பொழுது போக்கினோம். துர்காராணி- பொங்கலு பொங்கலு வைக்க, மஞ்சளை மஞ்சளை எடு தங்கச்சி தங்கச்சி என்ற அப்போதைய பிரபலமான பாடலை பாடினாள். ஸ்ரீநிவாசன், முரளிதரன்  & கோ  சேர்ந்து மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் என்ற பக்தி பாடலை மண்ணானாலும் மலர்விழி வீட்டில் மண்ணாவேன், ஒரு மரமென்றாலும்... என்று மாணவிகளின் பெயரை போட்டு பாடினார்கள். நன்றாகத் தான் இருந்தது. ஒருநாள் எல்லோரும் சேர்ந்து அழகர் கோவிலுக்கு பிக்னிக் சென்றோம்.


ஜெயபாரதி அவள் ஊருக்கு எங்களை அழைத்து சென்று அங்கு பனை வெல்லம் பண்ணுவதையும், அவர்களுடைய தென்னந்தோப்பில் இளநீர் குடித்ததையும்,  கிணற்று மேட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்ததையும்,அவர்கள் ஊரே எங்களை பார்க்க ஊர்வலம் வந்து அவர்கள் வீட்டில் வாழை இலையில் 'சுடச்சுட' சுவையான கிராமத்து உணவு உண்டு மகிழ்ந்ததையும் என்று அன்றைய விருந்தோம்பலிலல்.. நினைத்தாலே சுகம் தானடி ....

நாங்கள் கல்லூரி முடிக்கும் பொழுது மூன்று முதல்வர்களை பார்த்து விட்டோம் --Dr.மரியலூயிஸ்,  Dr.மெய்யப்பன் & Dr.நித்யானந்தம் என்று நினைத்திருந்தேன். சரவணன் நான் மறந்து போன முதல்வர் Dr.வள்ளியப்பனை நினைவுறுத்தி நான்கு முதல்வர்களை பார்த்த பெருமை கொண்ட குரூப் என்று நினைவு கூர்ந்ததற்கு நன்றி.  இரண்டு பெரிய ஸ்ட்ரைக்குகளால் கால வரையின்றி கல்லூரி மூடப்பட்டு நேராக தேர்வெழுத வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்  உதயம் பட ஸ்டைலில் சைக்கிள் செயின், கட்டை என்று படிக்கிற வேஷத்தில் திரியும் ரௌடிகளை பார்க்க நேரிட்டதுகொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பசங்க ஹாஸ்டலில் வார்டனை மாணவர்கள் மொத்தியது கேட்டு அதிர்ச்சியாக இருந்தது...நிஜமாகவே நடந்ததா தெரியவில்லை!ஸ்ட்ரைக் என்று சொன்னவுடன் என்ன காரணம் என்று கூட தெரிந்து கொள்ளாமல் எப்படி பஸ்ஸைப் பிடிப்பது என்ற நினைப்புடன் சில சமயங்களில் திருப்பரங்குன்றம் வரை நடந்து போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும்...ஹ்ம்ம்.

இந்த காலங்களில் வந்த புன்னகை மன்னன் கமல் ஸ்டைலில் நீண்ட  முடி, தாடியுடனும், சத்யா கமல் ஸ்டைலில் பலரும் தாடியும், அரை குறை மொட்டையுடனும், நாயகன் ஸ்டைலில் மீசையை மழித்துக் கொண்டும், கல்லூரி இறுதி நாட்களில் மாணவர்கள் பலரும் வேட்டி, சட்டை என்று  வலம் வந்து கொண்டிருந்ததும்... கணினியல் துறைக்கு ஆரோலேக் நிறுவனத்தின் சார்பில் வரும் உயரமான, பிரெஞ்ச் பியர்ட், நுனி நாக்கு ஆங்கிலம், நேர்த்தியான உடை, டை என்று டிப்டாப்பாக வந்தவர்களைப் பார்த்து அசந்ததும்... என்று பல வேடிக்கையான தருணங்கள்!

எனக்கு கல்லூரியில் பிடிக்காத இரண்டு இடங்கள் என்றால் லேடீஸ் ரூமும், கல்லூரி வங்கியும் தான். இவ்வளவு பெண்கள் படித்த கல்லூரியில் கழிவறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுத்தமோ கிலோ என்ன விலை என்ற நிலை தான். மொத்தமே நான்கு கழிவறைகள்.அதில் ஒன்று எப்போதும் பயன்படுத்த முடியாத நிலையில்! எப்பொழுதும் நீண்ட வரிசை. அங்கிருக்கும் கைகழுவும் இடமும் தண்ணீர் கீழே கொட்டி சொதசொத வென்று.. நம் கல்வி நிறுவனங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆனால் கண்டு கொள்ளாத விஷயமும் கூட கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் கட்டிடத்திற்கு போன பிறகு தான் இந்த தொல்லைகள் எல்லாம் குறைந்தது.

அதே போல் தான், ஒரு சின்னஞ்சிறிய வங்கியும். இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். பீஸ் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டால் அங்கே ஈ போல் மாணவ,மாணவிகள் கூட்டம். ஒழுங்காக வரிசையில் நின்று அமைதியாக நடக்க வேண்டிய வேலை ஒரு சில கீழ்த்தரமான மாணவர்களால் வரிசையில் நிற்பவர்கள் மேல் விழுவது, கத்துவது போன்ற வேதனை தரும் விஷயங்களும் நடந்தது. அந்த சின்ன கூண்டில் ஒரே நேரத்தில் 10 சலான் பார்த்தால் எந்த வங்கி கணக்கரும் என்ன பண்ணுவார்? நம் கல்வி நமக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்று வருந்த வைத்த தருணங்கள்

முதல் வருடம் முதலே என்னை பிரமிக்க வைத்த வீணா சுந்தரம்! மெக்கானிக்கல் லேபில் அவளுடைய வேலைகளை யாருடைய உதவியுமின்றி தனக்கு இருக்கும் குறையை கண்டு கொள்ளாமல்
ஒரு செயற்கை கையுடன் முடித்த பாங்கு என்னை வெட்கமடைய செய்தது. நன்றாக பல மொழிகளில் பாடும் திறமை, படிப்பதில் இருந்த ஆர்வம், யார் பேசுவதையும் பொறுமையாக கேட்கும் குணம், அதிர்ந்து பேசாத குணம், ரயில்வே காலனி யிலிருந்து S.S. காலனிக்கு சைக்கிளில் வந்து குடும்பத்தையே அசர வைத்ததும்.. நான் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று என்னை உணர்த்திய தருணங்கள்.

எனக்கு பிடித்தவைகள்- கவலையின்றி திரிந்த முதல் மூன்று வருடங்கள், விசாலமான, வெளிச்சமான முதலாண்டு கல்லூரி வகுப்புகள்,  லேப்கள், நீண்ட கல்லூரி சாலை, பல தலைமுறைகளை கண்ட ஆலமரங்கள், கான்டீன் சூடான வடை, பிடித்த வகுப்புகள், நண்பர்களுடன் அரட்டை, கம்ப்யூட்டர் லேப், பெண்கள் ஹாஸ்டலில் இருந்து வரும் கலவைச் சாப்பாடு- அதை தோழிகளுடன் உண்டது என்று காலம் ஓடியேயேயேயேப் போச்சு! பெண்கள் ஹாஸ்டலில் நடந்த ஹாஸ்டல் டே இரவன்று ஜூனியர்களுடன் விடிய விடிய அடித்த கூத்து மறக்க முடியாத ஒன்றாகியது. அதற்குப் பிறகு, எப்படா கல்லூரி முடியும், அடுத்த நாள் எப்படி விடியும் என்று எதிர்காலம் பற்றிய மிகப் பெரிய கேள்விகளுடன், சொந்தப் பிரச்சினையின் காரணமாக வருத்தத்துடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது. ஹ்ம்ம். வாழ்க்கையின் கொடுமையை உணர்ந்த காலங்கள். அதிலிருந்து கற்ற பாடங்கள் பல.கடவுளின் ஆசியாலும், பெரியவர்கள் செய்த புண்ணியத்தாலும், நல்லவர்களின் அன்பாலும், வழிநடத்தலாலும், நல்ல நண்பர்களின் துணையாலும் படிப்பை முடித்து, பட்டம் பெற்று இன்று இந்த நிலைமைக்கு வர முடிந்தது.

Hostel Day
இன்று நினைத்துப் பார்க்கையில் ஒரே வகுப்பில் மூன்று வருடங்கள் படித்திருந்தாலும் எல்லோருடனும் அவ்வளவாக பேசி பழகவில்லை. தனிக் குழுக்களாகவே இருந்து விட்டோம். ஒரு நல்ல புரிதலுடன் பழகியிருந்தால் பல நல்ல நண்பர்கள் அன்றே கிடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு பெண் ஆணுடன் பேசினாலே அதற்கு ஏதாவது அர்த்தத்தை பார்க்கின்ற மனப்பான்மை இருந்ததாலே எதற்கு வம்பு என்று ஒதுங்கியே இருக்க வேண்டியதாயிற்று.

படித்து முடித்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும் கல்லூரி வாழ்க்கையை நினைத்தாலே இன்றும் இனிமையாக, இளமையாக, பசுமையாக  இருக்கிறது! கல்லூரி வாழ்க்கை, ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத காலம்.

ம்ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!

Tuesday, December 18, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 4

ஐந்தாவது செமஸ்டர் ஒரு புதிய கட்டிடத்தில் Mech Engg வகுப்புகளுக்கு பக்கத்தில் போட்டுவிட்டனர். மாணவிகள் மிகவும் குறைவு அந்த வகுப்புகளில். மாணவர்களின் கொட்டம் தெரிந்த கதை தான்:( அதனால், வகுப்புகளுக்கு போய் வர கொஞ்சம் சிரமப்பட்டோம். வகுப்பில், பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, வெளியில் உட்கார்ந்து கொண்டு, ஏதாவது சொல்லி கமெண்ட் அடித்துக் கொண்டு சீனியர் மாணவர்கள் கொட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வகுப்புகள் மட்டும் முன்னதாகவே முடிந்து விடும்! அவர்கள் சொல்வதை கேட்டு சிரித்து விட்டால் ஆள் அம்பேல். ஆனால், ரசிக்கிற மாதிரியான கூத்துக்கள் தான்! சார், கடைசி பெஞ்சில இருக்குறவங்க பாடத்தை கவனிக்கல, நோட்ஸ் எடுக்கல என்பதிலிருந்து....மதிய உணவு இடைவேளையில் வந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற கலாட்டாக்களும் நடந்தது.

புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் சிவா மற்றும் ஸ்ரீதரன் அவர்களுடைய வகுப்புகள் ஓகே ஓகே. மூன்றாம் வருட வகுப்புகள் கணினியை சார்ந்து இருந்ததால் interesting ஆக இருந்தது. microprocessor லேபில் assembly language எழுதி பதில் பளிச்சென்று தெரியும் பொழுது நன்றாக இருந்தது. இவ்வளவு சின்ன processorஇல் இவ்வளவு விஷயமா என்று வியக்க வைத்தது. டெஸ்டில் ஒரே மாதிரி கேள்விகளை கேட்டார்கள். அதற்கும் பயந்து கொண்டு கைகள் சில்லிட கேள்வித்தாளை எடுத்து ஒரு பதட்டத்துடனே தேர்வுகள் எழுதியதெல்லாம்... அங்கு இரண்டு அட்டெண்டர்கள் இருந்தார்கள். பெயர் ஞாபகமில்லை. ஒருவர் நல்ல சிரித்த முகத்துடன் உதவிகள் செய்வார். இன்னொருவர் ஏனோ, எப்போதுமே 'உர்ர்'ரென்று இருப்பார். அவரிடம் எந்த உதவிகளும் எதிர்பார்க்க முடியாது.


ஆறாவது செமஸ்டரிலிருந்து என்று நினைக்கிறேன், வகுப்புகள் கணினியியல் துறை இருந்த MCA வகுப்புகள் நடக்கும் இடத்தில்  மாற, அங்கிருக்கும் ஆலமரமே போதி மரமானது பலருக்கும். MCA படிக்க கேரளா, ஆந்திராவிலிருந்து மாணவ, மாணவியர்கள் வந்திருந்தார்கள். சிலர் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தனர் :) மம்மூட்டி, மோகன்லால் என்று அவர்களுக்கு பெயர் வைத்து நக்கல் பண்ணிக் கொண்டிருந்தோம். லேபில் கம்ப்யூட்டர்-க்காக அவர்களிடம் சின்ன,சின்ன செல்ல சண்டைகள் போட, அதனால் சிலர் நண்பர்கள் ஆக என்று - ம்ம்ம் அது ஒரு கனாக் காலம்!
2011 visit to college

அந்த வகுப்பும் ஆடிடோரியம் ஸ்டைலில் கட்டப்பட்டிருந்தது. பச்சை வண்ண போர்டும், கொஞ்சம் இருட்டிய அறையுமாய் இருந்தது. அருகில் MCA வகுப்புகளும், மாடியில் கம்ப்யூட்டர்/மைக்ரோ ப்ராசசர்/ துறை ஆசிரியர்களுக்கான அறையும் இருந்தது. மாடியிலிருந்து பார்த்தால் பச்சை  நிறமே, பச்சை  நிறமே... என்று வயல்வெளிகளும் தூரத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் என்று நல்ல view. துறைத்தலைவர் அய்யாதுரை நல்ல மனிதர். ஸ்கூட்டரில் கல்லூரிக்கு வருவார். அவருடைய வண்டியில் மாணவர்கள் காற்றை பிடுங்கி விட்டதாக கேள்வி. உண்மையா- தெரியாது?

அந்த வருடத்தில், துறை சார்பாக நடை பெற்ற symposium கோலாகலமாக நடைபெற்றது. அதற்காக மாணவ,மாணவிகள் ரங்கோலி மற்றும்  விழாவிற்கான பல வேலைகளையும் முடித்து விட்டு இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆகி வீட்டில் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன்:( பல கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு விவாதங்கள் நடந்தது. 'ஆ'வென்று வாயை  பிளந்து கொண்டு கேட்டோம். பல நக்கீரர்களும் கேள்விக்கணைகளை தொடுத்தார்கள்!

ஒரு மதிய நேரத்தில் அப்போது ரிலீஸ் ஆகியிருந்த 'இதயத்தை திருடாதே' படத்தை வகுப்பு முழுவதுமாக சேர்ந்து பார்த்து விட்டு வந்தோம். அதில் வந்த கதாநாயகியை என் வகுப்பில் படித்த மாணவர்கள் பலருக்கும் பிடித்திருந்தது. கதாநாயகன்- of course, அப்போதைய -இளம் நாயகன் - நாகர்ஜுனா தான் :) மூன்றாம் வருடம் கேரளா டூர் போனார்கள். போய் விட்டு வந்து பல கதைகள்!
லேப் வகுப்புகள் ஜாலியாக இருக்கும். உட்கார நாற்காலிகள் எல்லாம் இருக்காது. இரண்டு மணி நேரம் நின்று கொண்டே கால் கடுக்க சிவகுமார் சந்திரசேகர், அருணாகுமாரி, அனிதா, டெல்லா, சரவணன், நான் என்று.. சரவணன் மிகவும் சீரியஸாக டிஸ்கஸ் செய்து கொண்டு பொழுதுகள் போனதெல்லாம்.. ஒருமுறை லேபில் சரியாக சாப்பிடாததால் நான் மயக்கம் வந்து விழ ஒரு சின்ன களேபரம்!

வகுப்பு எடுத்த பேராசிரியர் ஒருவர் அட்டெண்டன்ஸ் குறைவாக இருந்தால் அவர் லேபில் அவ்வளவு மணி நேரங்களை அங்கு உட்கார்ந்து ஏதாவது செய்ய சொல்லி அட்டெண்டன்ஸ் போடுவார். அங்கு போனால், சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல் பலரும் அட்டெண்டன்ஸ்க்காக 'தேமே' என்று உட்கார்ந்து பொழுது போக்கி விட்டு போவார்கள்! ஒருமுறை இவர் வகுப்பில் ஒரு கேள்வி கேட்டு பதிலை பலரும் அடுத்தவரிடம் கேட்டுக் கொண்டு வெறும் கால்குலேட்டரில் அந்த பதிலை அடித்து காண்பித்து விட்டு வெளியில் தப்பி வந்தது என்று...
இன்னொரு பேராசிரியர் ஒருவர் வகுப்பில் டெஸ்ட் கொடுக்கும் பொழுது அருகிலிருந்து யாரும் காப்பி அடிக்க முடியாவண்ணம் கேள்வித்தாள்களை கொடுப்பார்! இப்படி கில்லாடி பேராசிரியர்களும் இருந்தார்கள்.

நானும் துர்காவும் சேர்ந்து ஆவினில் ஒரு ப்ராஜெக்ட் செய்யப் போனோம். பழைய கம்ப்யூட்டர் ஒன்று-ஒவ்வொரு வரியாக கோபாலில் ப்ரோக்ராம் எழுதி என்று..

Linear Integrated Circuits, Boolean Algebra & Switching Theory, Algorithm Anlaysis & Design, Numerical Methods, Digital Integrated Circuits, Microprocessor என்று பிடித்த மற்றும் பிடிக்காத சில பாடங்களும், ஆசிரியர்களும் என்று மூன்றாம் வருடம் ஓடியே போய் விட்டது. வகுப்பில் என்னுடன் படித்தமாணவி ஆவணி அவிட்டத்தன்று அவள் வீட்டில் விருந்து வைத்து அவளுடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்தினாள். அவளுடைய திருமணமும் அந்த வருடம் மிக விமரிசையாக நடந்தது. நிறைய MCA மாணவ, மாணவியர்களும், எங்களுடைய ஜுனியர்களும் என்று நண்பர்கள் பட்டாளம் விரிவடைந்ததும் இந்த காலத்தில் தான். எங்கள் சீனியர் மாணவர்கள் இருவர் தங்கள் ப்ராஜெக்ட் வேலைக்காக திருச்சி செல்லும் வழியில் காரில் செல்லும் பொழுது டிரைவர் தூங்கிய காரணத்தினால் விபத்து ஏற்பட்டு இறந்த செய்தி கேட்டு கதிகலங்கியதும் அந்த வருடம் தான்:(

நினைவலைகள் தொடரும்..

Saturday, December 15, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 3

இரண்டாம் வருடம், கணிப்பொறியியல்  துறை என்று முடிவான பிறகு, மீண்டும் புது மாணவர் கூட்டம். நான், மேகலா, லதாமணி மற்றும் பிற வகுப்புகளிலிருந்து வந்த மாணவ, மாணவியர்கள். இந்த வகுப்பில் துர்கா, வீணா, விஷாலாக்ஷி, சுகந்தி, அருணா, அருணாகுமாரி, அருணாதேவி, ஜெயபாரதி, சாந்தி(திருநகர்), சுகந்தி, ராஜம், மலர்விழி, மகேஸ்வரி, துர்காராணி, ஆன்சி, ஜாய்ஸ், ப்ரிசில்லா, டெல்லா, அனிதா, உமாதேவி, சாந்தி, லலிதா,மீரா காந்தி, ப்ரீத்தி என்று மாணவிகளும்,

மாணவர்களில் ஏஞ்சலோ, பால்கி, சந்திரசேகர், பாலக்ருஷ்ணன், ஸ்ரீதரன், கிஷோர், சதீஷ், கண்ணன், ஸ்ரீனிவாசன், செந்தில், பாஸ்கரன், கடற்கரையாண்டி, பெரியசாமி, ரமேஷ், ராதாகிருஷ்ணன், குகராஜன், பிரபாகரன், முரளிதரன், ராஜசேகர், கனக சுந்தர் ராஜன், 'கணிதப்புலி' லக்ஷ்மணராஜ், சாலமன் ஹென்றி, சங்கரலிங்கம், நாராயணன், முருகவேல், மகேஷ், சரவணன், யாகூப், சிவகுமார், ஈஸ்வரன்  என்று இன்னும் பலர். இவர்களுடன் தான் மூன்று வருட கல்லூரி வாழ்க்கையும்.


Electronics வகுப்பிலிருந்து ராஜி, Electrical வகுப்பிலிருந்து அமர்தீபா இன்னும் பலர் நட்பும் கிடைத்தது.
இரண்டாம் வருடம் மெயின் பில்டிங்கில் வகுப்புகள் இருந்தன. Material Science-Prof. மீனாக்ஷி சுந்தரம் வகுப்பு ஒரு இனம் புரியாத பீதியை ஏற்படுத்தியது. ஒன்றும் புரியவில்லை. அத்தனைக்கும் மிக குறைந்த அளவு பக்கங்கள் கொண்ட புத்தகம். எப்படி புரட்டினாலும் ஒன்றுமே விளங்கவில்லை:( செமி கண்டக்டர் அது இது என்று..இன்று வரை அந்த பாடம் மனதளவில் ஒரு பயத்தையே எழுப்பியுள்ளது. இங்கு பலரும், Material Science-ல் டாக்டரேட் வாங்கியிருப்பதை பார்த்தால் தெய்வமே என்று தோணும்! என் மகளுக்கும் அந்த பாடம் உள்ளது. அவளுடைய புத்தகத்தை வாங்கி படித்து இப்பதாவது புரிகிறதா என்று பார்க்க வேண்டும்!

அதே போல் தான் Circuit Theory பாடமும். resistor , capacitor, கரண்ட் இப்படி போனால் பிளஸ், அப்படி போனால் மைனஸ் என்று தலையை பிய்த்துக் கொள்ள வைத்தது. ஒரு வழியாக BASIC, FORTRAN என்று படிக்க ஆரம்பித்தோம். எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் லேபுகளும் நன்றாக புது விதமாக இருந்தது.

எலெக்ட்ரிக்கல் லேபில் பெரிய பெரிய என்ஜின்களை சுற்றி நின்று கொண்டு, அன்று பண்ணவிருக்கும் experiment- க்குத் தேவையானவைகளை எழுதி மேடத்திடம் காண்பித்து விட்டு, லேப் அட்டெண்டரிடம் கொடுத்தால் அவரும் அந்த சாமான்களை கொடுப்பார். பிறகு படம் வரைந்து, ரீடிங் பார்த்து observation நோட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் சீக்கிரம் லேப் முடிந்து விடும் :)

Computer Organisation என்று ஒரு வகுப்பு. வெறும் தியரி தான். படிக்க interesting ஆக இருந்தது. COBOL & Pascal Prof.ராம்ராஜ் எடுத்தார். அந்த வகுப்புகளும் நன்றாக இருந்தது. syntax மறக்காமல் COBOL ப்ரோக்ராம் எழுதுவதற்குள் ஒரு வழியாகி விட்டது. அநியாயத்திற்கு ஒரு சிறிய தப்பிற்கு நூறு errors காண்பித்து.. அங்கு வேலை பார்த்தவர்களின் துணையோடு ப்ரோக்ராம்கள் எழுதி...பச்சை வண்ணத்தில் no errors என்று ஸ்க்ரீனில் வந்தவுடன் வரும் பரவசம் இருக்கே....

இரண்டாம் வருடத்திலிருந்து முனிச்சாலை பஸ்-ஸ்டாப்பில் 31 ஆம் நம்பர் பஸ்சிற்காக காத்திருந்து போனோம். அவ்வளவு கூட்டம் இருக்காது. கார்த்திகை மாதம் வந்து விட்டால், தளும்பும் பால் தூக்குகளுடன் கூட்டம் அலைமோதும். சமயத்தில் பஸ் சீக்கிரம் போய் விட்டால் 'லொங்கு லொங்குவெ'ன்று கீழவாசல் வரை நடக்க வேண்டும்.  LDC , Fatima கல்லூரி மாணவிகளும் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரமது. எப்பொழுதும் நல்ல கூட்டம் இருக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில். இந்த பஸ்களில் ஏறினால் ஒரு பிரச்சினை. மாணவர்கள் அவர்களுடைய புத்தகங்களை கேட்காமலே வச்சுக்கோ என்று தூக்கிப் போடுவார்கள். இருக்கிற பிரச்சினை போதாதென்று இதை வேற கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிச்சலாக இருக்கும். திங்கள், கார்த்திகை மாதம், முருகன் ஸ்பெஷல் தினங்களன்று கல்லூரியிலிருந்து வீடு போய் சேர்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும்.

என் அக்கா சிவில் பிரிவும், என் மாமா மகள் electronics ம் எடுத்து தனித்தனியாக பிரிந்தோம். என் அக்காவின் தோழிகள் ராதா, சாருலதா, பாலா எப்பவுமே ஒன்றாக இருப்பார்கள், ஒன்றாகவே வகுப்புக்கு போவார்கள். அவர்கள் வகுப்பு லேடீஸ் ரூம் பக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு வசதியாக போய் விட்டது. எங்களுடைய சீனியர் electrical வகுப்பு, காதலர் சோலைகள் மாதிரி இருக்கும். ஒரு ஆசிரியரின் வகுப்பில், யார் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம். பலரும் ஜோடி, ஜோடியாக உட்கார்ந்திருப்பார்கள். எவ்வளவு ஜோடி உண்மையிலே வாழ்க்கையில் சேர்ந்ததோ! எனக்கு தெரிந்து, ஒரு ஜோடி, நான்கு வருடங்கள் காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்குப் பிறகு பிரிந்து விட்டனர். வருத்தமாக இருந்தது அதை கேள்விப்பட்டவுடன்.

இரண்டாம் வருடம் நன்றாக போனது. இரண்டாம் வருட டூரும் நன்றாக இருந்தது. ஊட்டி போனோம். எங்களுடன் சாந்தி மற்றும் மின்பொறியியல் துறையிலிருந்து இன்னொரு பேராசிரியையும்(சுகுனேஷ் மேடம் ) வந்தார்கள். எங்களை வழியனுப்ப வந்த கூட்டம் மாணவர்களை உயரத்தில் தூக்கிப் போட்டு பிடிப்பதுமாய் கலாட்டா செய்து வழியனுப்பினார்கள். கடைசி சீட்டில் பாட்டில்கள் உருண்டதாக சொன்னார்கள். யாமறியேன் பராபரமே!
நன்றாக ஆட்டம் பாட்டமாகவே ஆரம்பித்தது அந்த பயணம். ஓசூர் அருகே ஏதோ ஒரு காரணத்திற்காக சாலை முழுவதும் மறிக்கப்பட்டு ஒரே போக்குவரத்து நெரிசல். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் லாரிகளும், பஸ்களுமாய். நல்ல வெயில். அந்த இடத்தை சாதகமாக்கி கொண்டு இளநீர் விற்பவரிடமிருந்து இளநீர் குடித்து எப்படா ஊட்டி போய் சேருவோம் என்றாகி விட்டது. ரோடு கிளியராகி ஊட்டி மலைப்பாதையில் ஏறும் பொழுது ஒரே தலை சுற்றல். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி சோடா, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து குடித்தோம் பலரும். மீண்டும் மலை ஏற்றம். ஒரு வழியாக ஊர் வந்து சேந்தோம்.

நல்ல குளிர். அடுக்கடுக்காக இருந்த அந்த நிலப்பரப்பு பார்க்க ரம்மியமாக இருந்தது. மாணவிகளுக்கு சில அறைகளும், மாணவர்களுக்கு சில அறைகளும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. அடுத்தநாள் Botanical Garden, Boat ride போக கிளம்பினோம். எங்களை மாதிரியே சிவகாசியிலிருந்து மாணவர்கள் பட்டாளம் ஒன்றும் வந்திருந்தது. அவர்களிடம் சிலர் பேசினார்கள். இன்னும் சில இடங்களுக்கும் சென்றோம். மழையில் மாட்டிக் கொண்டு அப்படியே மார்க்கெட்டும் போனால் எல்லாம் பிரெஷ் காய்கறிகள். வேண்டிய மட்டும் வாங்கி கொண்டு பஸ்ஸை நோக்கி ஓடினோம் மழையில் நனைந்தபடி! இந்த டூர் மட்டும் தான் நான் போன கல்லூரி டூர் :(

இந்த வருடத்தில் ரிலீஸ் ஆன அக்னி நட்சத்திரம் படத்தை சௌராஷ்டிரா இஞ்சினியரிங் ஸ்டுடண்ட்ஸ் அசோசியேஷனுடன் சேர்ந்து பார்த்தது நன்றாக இருந்தது.



நினைவலைகள் தொடரும்...

Thursday, December 6, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 2

காலையில் வெயில் 'சுள்'ளென்று அடிக்கும் முன்னே கல்லூரிக்கு வந்து விடுவோம். பஸ்ஸை தவற விட்டவர்கள் கூட்டம் சாரை சாரையாக மெயின் ரோட்டிலிருந்து 'லொங்குலொங்கு'வென்று கையில் T-Square, நோட்டுப் புத்தகங்களை சுமந்து கொண்டு வந்து கொண்டிருப்பார்கள்.

பைக்கில் 'சர்சர்'ரென்று பெண்கள் கூட்டத்தை பார்த்தவுடன் அப்டி ஒரு வளைவு வளைந்து செல்லும் மாணவர்கள். சமயங்களில் மூன்று பேரை இருத்தி நெருக்கி அடித்துக் கொண்டு போகும் கூட! ஒரு சில கார்களும், ஹாஸ்டலில் இருந்து மாணவிகளுக்கான பஸ்களில் மாணவிகளும், மாணவர்கள் ஹாஸ்டலில் இருந்து குழுக்களாகவும் கல்லூரியை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள்.

கல்லூரி போகும் வழியில் கால்நடை மருத்துவமனை இருந்ததால் சமயங்களில் கால்நடைகளும் கால்நடையாக போய்க் கொண்டிருக்கும்! வயலில் வேலை செய்பவர்கள், ஸ்கூட்டரில் போகும் ஆசிரியர்கள் என்று அந்த காலை நேரம் கல்லூரி முன்பு பரபரப்பாகவே இருக்கும்.

படத்தில் உள்ள இந்த இடத்தில் தான் கல்லூரி பஸ் நிற்கும்.செட்டியாரின் மணி மண்டபம், நீரூற்று, தோட்டங்கள் எல்லாம் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி மெயின் பில்டிங் மூன்றாவது மாடியில் முதல் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள். நுழைந்தவுடன் கணிதத்துறை ஆசிரியர்களுக்கான அறை. அதை தாண்டி போனால், D, C, B, A வகுப்புகள். மறுபுறம் Applied Science, Applied Maths வகுப்புகள். Engg Drawing வகுப்பிற்காக ஒரு நீண்ட பெரிய ஹால், பெரிய பெரிய மேஜைகளுடன். வகுப்புகள் எல்லாம் விசாலமாக பெரிய ஜன்னல்களுடன் காற்றோட்டமாக இருபுறமும் கதவுகள் வைத்து நன்றாக இருக்கும்.

முதல் வருடம் வேதியியல் எடுத்த பேராசிரியர் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக வகுப்புகள் எடுப்பார். அவருக்கு மாணவர் ஒழுக்கம் மிகவும் முக்கியம். அவர் வகுப்பு எடுக்கும் நேரத்தில் பேசவோ, சிரிக்கவோ முடியாது. அவர் மகளும் எங்களுடன் தான் படித்தாள். லேபிலும் அவர் தான் வாத்தியார்.  எனக்கு பிடித்த பாடமும் வேதியியல் என்பதால் படிப்பதில் பிரச்சினை இல்லை. ஒரே வருடத்தில் Organic , Inorganic , Physical chemistry என்று படித்தோம். புத்தகமே அவ்வளவு கனமாக இருக்கும்!

இயற்பியல் எடுத்தவர் பேராசிரியர் சுப்ரமணியன். அவரும் நிதானமாக வகுப்புகள் எடுப்பார். அவ்வளவு கண்டிப்பில்லை. கணித Prof . மோகன்-அவருடைய வகுப்பு எனக்கு பிடித்தது. மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்தார்.இங்கிலீஷ், ஒரு வயதான ஆசிரியர். பார்த்தால் வெள்ளைக்காரர் போல் இருப்பார். பொதுவாக கடைசி வகுப்பாக இருக்கும். எப்படா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கும் போது புத்தகத்திலிருந்து வாசித்து அர்த்தம் சொல்லி... இந்த வகுப்பில் பாதி மாணவர்கள் ஓடிப் போய் விடுவார்கள்.
Engg Drawing எடுத்தவர் அருமையாக பாடுவார். அதுவும், பாடல்களின் நடுவிலிருந்து பாடி, முதல் அடியை சொல்ல வேண்டும். வகுப்பில் முரளிதரன்,ஸ்ரீநிவாசன்  இந்த பாடல்களை எல்லாம் ஈசியாக கண்டுபிடித்ததாக ஞாபகம். சில வகுப்புகள் அவர் எடுத்தது பிடிக்கும். அடிக்கடி imagine the cylinder/cone/triangle from top view, front view என்று சொல்லி அப்பப்பா..   Drawing  வரைந்து முடித்து பேப்பரை கொடுத்து விட்டு அடுத்த வகுப்பில் திருத்தத்துடன் வரும் வரை கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

Mech Engg - Prof.முரளிதரன் என்று நினைவு. அவர் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்த புதிது என்று நினைக்கிறேன். சீனியர் Mech Engg மாணவர்களோடு நெருக்கமாக இருந்தார். அவர்கள் எங்களை கலாய்த்த போதும் ஒரு சிரிப்புடன் நகர்ந்து விடுவார்:( கோல்ட் ப்ரேம் போட்ட கண்ணாடி போட்டுக் கொண்டு கரகர குரலில் அவர் வகுப்புகள் புதிதாக நன்றாக இருந்தது.  அடிக்கடி ஒற்றை விரலால் நெற்றியை சொறிந்து கொண்டே, ப்ரேம் அட்ஜஸ்ட் செய்து கொண்டே வகுப்புகள் எடுப்பார்.

மெக்கானிக்கல் லேப் தான் கொஞ்சம் உதறலாக இருந்தது. அதுவும் அதே சீனியர் மாணவர்களை கடந்து போக வேண்டும் என்ற பயமும், அந்த வகுப்புகளும்... ஒரு சிறிய சதுர இரும்பு துண்டை கொடுத்து,  நடுவில் அரை வட்ட வடிவத்தில் வெட்டி கொடுப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது. file பண்ணுவதற்குள் யாரிடம் போய் உதவி கேட்பது என்ற நினைப்பு தான் இருக்கும். வீணாவைப் பார்த்து நானே லேபில் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று நினைப்பேனே தவிர, யாரிடமாவது எனக்காக செய்யச் சொல்லி கேட்டு விடுவேன். வெட்கமாகத் தான் இருக்கும்.

ஆனால், file செய்து குறிப்பிட்ட வடிவத்தை கொண்டு வருவது பெரிய கண்கட்டு வித்தையாகவே பட்டது எனக்கு. கொஞ்சம் குறைத்தும் file பண்ண முடியாது, கூடவும் பண்ண முடியாது. என்னடா ரோதனை என்று தான் இருக்கும்? ஆனால் ஒன்று, முடித்தவுடன் ஓடிப் போய் விடலாம்.அதே போல் தான் கட்டைகளை வைத்து ஷேப் வராமல், சமயங்களில் சுத்தியால் அடித்தவுடன் இரண்டாக பிளந்து விடும். மொத்தத்தில் Mech லேப் பிடிக்கும் ஆனா பிடிக்காது என்ற மாதிரி தான் இருந்தது.

Elec Engg வகுப்பும் எனக்கு மிகவும் பிடித்தது. அதை எடுத்த வாத்தியாரும் கொஞ்சம் கிஷ்மு சாயலில் சிரித்த முகத்துடன் ரொம்பவே ரிலாக்ஸாக வகுப்பில் இருப்பார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் யார் பக்கத்திலேயும் உட்காரலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று அதிரடியாக சொன்னவரும் அவர் ஒருவர் மட்டுமே. எங்கள் இன்டெர்னல் பேப்பர்களை சீனியர் மாணவர்களிடம் கொடுத்து கரெக்ட் பண்ணச் சொல்ல, அவர்களும் கடமையாக, ஒன் பேப்பரை நான் தான் கரெக்ட் பண்ணேன், நிறைய மார்க் போட்டிருக்கிறேன் என்று சொல்லும் பொழுது அடச்சே இதுக்கா இப்படி அடிச்சுக்கிட்டுப் படிச்சோம் என்றிருக்கும்.
Civil Engg - Prof.மெய்யப்பன் எடுத்தார்.  வார்த்தைகளை அழுத்தி, அழுத்தி பேசுவார். வகுப்பு எடுக்கும் பொழுது வேர்த்து ஒழுகும் அவருக்கு. அடிக்கடி கர்சீப்பால் முகத்தை துடைத்தபடி வகுப்பு எடுப்பார். பெரும்பாலும் மதிய நேரத்தில் அவருடைய வகுப்புகள் இருக்கும். சுகமாக காற்றும் வீச, உண்ட மயக்கமும் சேர, தூக்கம் சொக்கும். பல நாட்களில் மாணவர்கள் அவர் எந்த பக்கம் வருகிறார் என்று பார்த்து விட்டு மறுபுறம் ஜன்னல்/கதவு வழியாக தப்பித்து ஓடுவார்கள் :) கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சீனியர் மாணவர்களின் தயவால் நிறைய புத்தகங்களும், நோட்ஸ்களும் கிடைத்தது :) அவர்களுடைய லைப்ரரி டோக்கன்களையும் தங்களுக்காக வைத்துக் கொள்ளாமல் கொடுத்து உதவியதால்(!) நிறைய புத்தகங்கள் எடுக்க முடிந்தது. காலையிலேயே இடைவேளையின் போது லைப்ரரியில் என்ன புத்தகம் வேண்டுமோ அதை எழுதி கொடுத்து விட வேண்டும். பிறகு மதியம் போய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். அப்போதெல்லாம் லைப்ரரி main building கீழேயே இருந்தது.

முதல் வருடம் ஆடிட்டோரியத்தில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு செல்ல, ராக்கெட் பல 'விர்விர்' என்று பல பறந்து மாணவிகள் பக்கம் வந்து, ஏண்டா வந்தோம் என்று நினைக்க வைத்து விட்டார்கள். ஒரே விசில், ராக்கெட். ஜூனியர் மாணவ, மாணவிகள் பாடினால் காசு தூக்கிப் போடுவதும், கூச்சல் போடுவதும், கலாட்டா பண்ணுவதுமாய் இருந்தார்கள். தாமோதரன் மற்றும் மூன் வாக்கர் என்று ஒரு நன்கு பிரேக் டான்ஸ் ஆடும் சீனியர் ப்ரோக்ராம்கள் மட்டும் எந்தவித தங்கு தடையில்லாமல் நடந்தது. நேரமாகி கொண்டிருந்ததால் பாதியிலேயே பஸ்ஸை பிடிக்க ஓடி வந்து விட்டோம். அருமையான ஆடிடோரியம் அது.

ஒரு நாள் சீனியர் மாணவர்கள் தட்டில் ரோஜாப்பூக்களையும், சந்தனம், பன்னீர், கல்கண்டு என்று ஆரவாரத்துடன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஆசிரியர்களின் அனுமதியுடன் அவர்கள் போகவிருக்கும் டூருக்கு வந்து வழியனுப்புமாறு அழைத்து விட்டு போனார்கள். வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முதல் வருடத்தில் ஒரு வழியாக 3 இன்டெர்னல் டெஸ்டுகளையும் முடித்து விட்டோம். மூன்றாவது டெஸ்டின் போது என் அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவளால் எழுத முடியாமால் போய் விட்டது. முழுஆண்டு தேர்வுகளுக்காக ஒரு மாதம் விடுமுறை. படித்ததெல்லாம் மறந்து போனது போலவே இருக்கும். ஒரே பயத்துடன் சரியான தூக்கமும் இல்லாமல் அடுத்தடுத்து தேர்வுகள், லேப்ஸ் என்று முதல் வருடம் பயமும், ஆர்வமுமாக முடிந்து விட்டது. முதல் வருட இறுதியில் யார் யார் கூட படிக்கிறார்கள், எந்த எந்த வகுப்புகள், யார் சீனியர் மாணவர்கள் என்று தெரிந்து விட்டது. அடுத்து எந்த துறை கிடைக்குமோ என்ற கவலையும் வந்து விட்டது :(


நினைவலைகள் தொடரும்...




Tuesday, December 4, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 1

முகநூல் வந்த பிறகு பல கல்லூரி நண்பர்களை பார்க்கவும், அவர்களுடன் உரையாடவும் முடிகிறது. இன்று வந்த கெட்-டுகதர் அழைப்பிதழை பார்த்தவுடன், கல்லூரி விட்டு வந்து இவ்வளவு வருடம் ஓடிப் போய் விட்டது என்று மனம் பின்னோக்கி நகர்ந்து அந்த இனிமையான நினைவில்..

+2 படிக்கும் போதே Engg அல்லது மெடிக்கல் தான் என்று முடிவாயிற்று. நானும் அம்மாவும் சென்று கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை வாங்க பஸ் ஸ்டாப்பில் இறங்கி வெகுதூரம் அந்த வெயிலில் நடந்து போகும் பொழுதே, இங்கே சேர்ந்தால் தினமும் இப்படி நடக்கணுமே என்று மலைப்பாக இருந்தது!

கல்லூரி அருகில் வழியெங்கிலும் மரங்களும், சுற்றி பச்சை பசேல் என்று விளை நிலங்களும், திருப்பரங்குன்றம் மலையும், பிரமாண்டமான ஆலமரங்களும், ஓங்கி உயர்ந்த நெட்டிலிங்கம் மரங்களும், அழகாக பராமரித்த தோட்டங்களும், குரோட்டன்ஸ் செடிகளும், பெரிய விளையாட்டு மைதானமும், நிமிர்ந்து பார்க்க வைக்கும் கட்டிடமும் என்று பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

அப்போது சீனியர் மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு மாணவிகளிடம் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். என்னிடமும் எவ்வளவு மார்க், எந்த ஸ்கூல் என்று அதிகாரமாக கேட்டார்கள் என் அம்மாவிற்கு தான் கொஞ்சம் பயம். அப்பொழுதே அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பெண்கள் பள்ளியில் படித்து விட்டு இந்தச்  சூழ்நிலைக்கு எப்படி நானும் என் அக்காவும் இருப்போமா என்று அவர்களுக்கு கவலை!

நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எந்த கல்லூரி என்ற குழப்பம் சிறிது காலம். எனக்கு எங்காவது வெளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆசை. அது நடக்கவில்லை TCE தான் என்று முடிவாகி விட்டது எனக்கும் என் அக்காவிற்கும், என் மாமா மகளுக்கும். அதைத் தவிர என்னுடன் படித்த மேகலாவும், லதாமணியும் அங்கு வருவதால் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் பயம்.

அந்த நாளும் வந்தது. கல்லூரி வந்து சேர அழைப்பிதழும், என்ன டாக்குமென்ட்ஸ் எடுத்து வர வேண்டுமென்றும். நான், அக்கா, அம்மா, அப்பா என்று குடும்ப சகிதமாக அங்கே போக, முதல்வர் Dr.மரியலூயிஸ் அறைக்கு முதலில் வரிசைப்படி நான் போக, Prof .SRB டாக்குமென்ட்ஸ் சரிபார்த்து முதல்வர ிடம் கொடுக்க, அவர் கையொப்பமிட்டு, வெல்கம் என்று சொல்ல, வேர்க்க விறுவிறுக்க அப்பாடா என்று அந்த குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்து, அக்காவின் அட்மிஷனும் முடிய, பேங்க் போய் பணத்தைக் கட்டி விட்டு வர, அன்று கோலாகலமான நாள். எங்கள் குடும்பத்தில் பெண்கள் முதலில் பொறியியல் கல்லூரிக்குப் போவதால் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. என் அம்மாவுக்குத் தான் மிகவும் பயம். இருபாலாரும் படிக்கும் கல்லூரி வேறு. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே அட்வைஸ் மழை தான். ஒழுங்காக படித்து எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் கல்லூரிக்குப் போய் வர வேண்டும் என்று.

முதல் நாள், கல்லூரிக்குப் போகும் பொழுது பாலரெங்கபுரத்திலிருந்து பல சந்துகளின் வழியாக மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் வந்து சேர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகியது. வாழ்க்கையே மாறி விட்டது. காலையில் எழுந்திருந்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கல்லூரி பஸ் பிடிக்க ஓட என்று பழக்கமாக சில நாட்கள் ஆயிற்று. என் அம்மாவும் காலையில் ஐந்து மணியிலிருந்து எழுந்திருந்து எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு செய்து கொடுத்து ஒரு வீட்டு வேலையையும் செய்ய விடாமல் படிப்பில் ஒன்றிலே கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி எல்லா வேலைகளையும் அவரே மாங்கு மாங்கு என்று செய்த காலம்.

எங்கள் தெருவிலிருந்து பல சீனியர் மாணவர்களும் மாணவிகளும் சக மாணவர்களும் என்று ஒரு பெரிய கூட்டமே போவோம். முதல் வருடம் ராக்கிங்கிற்கு பயந்து கல்லூரி பஸ்ஸில் தான் பயணம். அந்த கட்ட வண்டியிலே எல்லாம் வரக் கூடாது என்ற சீனியர் மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து அதில் தான் முதல் ஆண்டு முழுவதும். முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் ஆடிட்டோரியத்தில் வரச் சொல்லி அங்கிருந்து வகுப்புகளுக்குச் சென்றோம்.

நான், மேகலா, அக்கா, லதாமணி என்று தெரிந்தவர்கள் எல்லாம் A செக்க்ஷன். நேராகப் போய் கடைசி பெஞ்சிற்கு முந்தின பெஞ்சில் தஞ்சம். உடம்பெல்லாம் சில்லிட பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தோம். யார் முதல் ஆண்டு மாணவர்கள், யார் சீனியர் மாணவர்கள் என்று தெரியாமல் ஒரே குழப்பம். ஒரே கூட்டமாக லேடீஸ் ரூமிற்கு குடுகுடுவென்று ஓடுவோம். B ,C, D வகுப்புகளை கடந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் லேடீஸ் ரூம் போவதற்குள் சீனியர் மாணவர்களின் கண்களில் படாமல் தப்பிக்க வேண்டுமே என்ற ஒரே நினைப்புடன் போனது எல்லாம்...

மதிய இடை வேளையில் வாத்தியார் வருவதற்குள் Mech Engg சீனியர் குழாம் ஒன்று வந்து ஒரு பெயரை சொல்லி தெரியுமா என்று கேட்க, நானும் அப்படி எல்லாம் யாரையும் தெரியாது என்று சொல்ல போக, டேய் மாப்ள, மாமாவை தெரியாதாண்டா என்று இவர்கள் கத்த , யார் மாப்பிள்ளை, யார் மாமா என்று நான் குழம்ப... ஒரு நாள், சீக்கிரம் வகுப்பிலிருந்து தப்பித்துப் போவதற்குள், சீனியர் மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு எங்கே போறீங்க? என்று அவர்கள் பீட்டர் இங்கிலிஷில் கேட்ட கேள்விகளுக்கு பயந்து பயந்து அந்தக் கூட்டத்தை பார்த்தாலே... உதறல் தான்.

கடமையாக பஸ் உள்ளே வரும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்கள் இந்த மரத்தடி மாமாக்கள். வகுப்புகள் நடக்கும் நேரத்தில் கேன்ட்டீன் முன்புறம் ஸ்டைலாக பைக்கின் மேலும் சிலர் மரக்கிளைகளின் மேலும் உட்கார்ந்திருப்பார்கள்!! கல்லூரி முடிந்த பிறகு ஹாஸ்டலுக்கு அடுத்து இருக்கும் காப்பி கடையில் உட்கார்ந்திருப்பர்கள். ஏதாவது ஒரு கும்பலுக்குப் பின் நடந்து வந்து பஸ் ஸ்டாப் வரை வருவார்கள் இந்த ரோமியோக்கள். சில சமயங்களில், பஸ்ஸில் ஏறி இறங்கும் வரை பாதுகாவலர்களாகவே வருவார்கள் :)

T -squre வைத்து பல கலாட்டாக்கள். அதைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. ஏசு சிலுவையை சுமந்த மாதிரி அதை ஒன்று சுமந்த காலம். இன்று யாரிடம் மாட்டிக் கொள்ளப் போகிறமோ என்று பயந்து பயந்து போன காலம். அதை வைத்து அவ்வளவு ராகிங் கொடுமைகள். சீனியர்களிடம் மாட்டிகொண்டு மாணவர்கள் தான் பாவம், மாணவிகளிடம் போய் ஐ லவ் யூ சொல்லச் சொல்லி அவர்களும் அழாத குறையாக வந்து சொல்லி விட்டுப் போவார்கள். சிலரை வெறுந்தரையில் நீச்சல் அடிக்கச் சொன்ன கொடுமையும் நடந்தது.

இதைத் தவிர, நிஜ குரங்குகளின் அட்டகாசம் வேறு! பெண்கள் என்றாலே இளக்காரம் தான். லேடீஸ் ரூமில் புகுந்து சாப்பாட்டை எடுத்துப் பண்ணும் கலாட்டா என்ன, ஸ்டோர்ஸ் போகும் வழியில் முறைத்துப் பார்ப்பதென்ன, ஏற்கெனவே, பசங்களுக்குப் பயந்து போய்க் கொண்டிருப்போம். இது வேறு, கையில் கிடைத்ததை பிடுங்கிக் கொண்டு மரத்தில் ஓடி விடும். இப்படி பல குரங்குகளுக்கும் பயந்த காலம். காக்கி யூனிபார்ம் வேறு! எனக்கு பிடிக்காத இன்னொன்று.

முதன் முதலில் சூப்பர் மார்க்கெட் சென்று வாங்கிய கால்குலேட்டர், பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒன்றும், அக்காவுக்கு ஒன்றுமாக வாங்கிய பொழுது சிறு குழந்தைக்கு பொம்மை கொடுத்தால் எவ்வளவு சந்தோஷப்படுமோ அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
கல்லூரியில் அவரவர் சாதிகளுக்கேற்ப பல குழுமங்கள் இருந்தன. நாடார், செட்டியார், சௌராஷ்டிரா... என்று. சௌராஷ்டிரா குரூப் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிர்த்தாற்போல் மாடியில் இருந்த லைப்ரரியில் கூடுவார்கள். எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். சீனியர் மாணவர்கள் நன்கு உதவினார்கள். வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது பங்க்ஷன் வைத்து நன்றாக படித்த மாணவ, மாணவிகளை கௌரவிப்பார்கள். பல திரைப்படங்களுக்கும் குழுவாக சென்றிருக்கிறோம். அந்த அமைப்பு பலருக்கும் மிகவும் உதவியாக இருந்தது.


நினைவலைகள் தொடரும்...

Friday, November 16, 2012

ஐயப்பன் பூஜை


கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து, விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து...

என்று காலை வேளைகளில் காபி கடைகளிலும், வீடுகளிலும் வீரமணி/ஜேசுதாசின் குரல்களில் ஐயப்ப பக்திபாடல்கள் ஒலிக்கும் நாட்கள் இது. பலரும் மாலையணிந்து, விரதம் ஆரம்பிப்பார்கள். வீடுகளிலும் பூஜை, புனஸ்காரம் என்று ஐயப்ப மந்திரம் ஒலிக்கும். பக்தர்களும் துளசி மாலை,காவி, கருப்பு வேட்டி அணிந்து, செருப்பு போடாமல் செல்வதைப் பார்க்கலாம். பலரும் முறையாக 48 நாட்கள்( ஒரு மண்டலம்) விரதமிருந்து குருசாமியின் அருளுடன் இருமுடி எடுத்துக் கொண்டு ஐயப்ப கோவிலுக்கு குழுக்களாக பஸ்ஸில் செல்வார்கள். பல இடங்களிலும் எப்படி சாமி இருக்கிறீங்க, சாமி சரணம் என்று ஒருவருக்கொருவர் பார்த்து வணங்குவதையும் இந்த மாதத்தில் பார்க்கலாம்.

என் பெரியப்பா இருபது வருடங்களுக்கும் மேலாக தவறாமல் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்தார். அவருடைய குருசாமியின் காலம் முடிந்தவுடன் இவர் பொறுப்பேற்றார். இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடக்கும் அன்று பந்தடி ஏழாவது தெருவில் இருந்த அவர் வீட்டில் பஜனை, பூஜை, பக்தர்களுக்கு சாப்பாடு என்று களை கட்டும். நாங்களும் தவறாமல் போய் விடுவோம். மாலையில் இருட்டிய பிறகு தான் பூஜை ஆரம்பிக்கும். பெரிய ஐயப்பன் சுவாமி படத்தை மலர்மாலைகளால் அலங்கரித்து, பதினெட்டுப் படிகள் வைத்து, திருவிளக்குகள் இரு புறமும் ஏற்றி பூஜைகள் ஆரம்பிப்பார்கள்.

ஒரு பக்கம் இருமுடிக்கான தேங்காய்கள் குடுமிகள் இல்லாமல், ஒரு கண் மட்டும் துளையிட்டு நெய்க்காக காத்திருக்கும். மிகப் பெரிய பாத்திரங்களில் நெய், தட்டுகளில் பழங்கள், ஜவ்வாது, சந்தனம், குங்குமம், சாம்பிராணி வாசனையுடன் அந்த இடமே பரவசமாக இருக்கும். ஐயப்பன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடனும், குடும்பங்களுடனும் வர ஆரம்பிக்க,

உள்ளே ஒரு பெரிய பாயில் சாதம் ஆற வைத்து, புளிக் கரைசல் கொட்டி, புளியோதரை மணக்க மணக்க தயார் ஆகி கொண்டிருக்கும். வருகிறவர்களை போய் சாப்பிட்டு வாருங்கள் என்று பெரியம்மாவும், அவர் குடும்பமும் சொல்ல, அனைவரும் எழுந்து சென்று புளியோதரை, சுண்டல், தேங்காய் சட்னி, சேமியா கேசரி சாப்பிட்டு விட்டு பூஜை செய்யும் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொள்வார்கள். மெதுவாக கூட்டம் சேர ஆரம்பிக்கும்.

எல்லா பக்தர்களும் வந்தவுடன், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற நீண்ட முழக்கத்துடன் இருமுடி பூஜை ஆரம்பிக்கும். மார்கழி மாதம் இளங்குளிருடன் இருக்கும் அந்த மாலைவேளையில், கோவிலுக்குச் செல்பவர்கள் நாற்பத்தியெட்டு நாட்கள் விரதமிருந்து தாடி வளர்த்துக் கொண்டு திருநீறு, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு பக்திப் பழமாக இருப்பார்கள். முதலில் குழந்தைசாமிகளும், பிறகு கன்னிசாமிகளும் (திருமணமாகதவர்கள், முதல் முறை போகிறவர்கள்), என்று வரிசைக் கிரமமாக நெய் நிரப்ப வருவார்கள்.

மறுபக்கம் மைக், தபேலா, ஆர்மோனியம் பெட்டியுடன் பாடுபவர்கள் கூட்டம். அவரும், ஸுவாமியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் என்று சொல்ல, பக்தர்களும், கூட்டமும்,சரணம் ஐயப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சொல்லி முடிக்க, பள்ளிக்கட்டுச் சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சுவாமியே ஐயப்போ என்று ஆரம்பமாகும் கச்சேரி, அனைவரையும் கட்டுப் போட்டு வைத்திருக்கும். பொதுவாகவே, இந்த பாடல்கள் எல்லாம் எளிய நடையில், பாமரரும் பாடும் வண்ணம் இருப்பதால் பலரும் இந்த பாடலை பாடிக் கொண்டே இருப்பார்கள்.

அந்த பக்கம், குருசாமியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு, மனையில் அமர்ந்து, ஐயப்ப கோஷத்துடன் நெய்யை எடுத்துத் தேங்காய்களில் ஒவ்வொருவராக நிரப்பிக் கொண்டே வர, ஒருவர் துளைகளை மூடி, இருமுடி பையுனுள் வைக்க, அதனுடன் மற்ற பூஜை சாமான்களையும் வைத்துக் கட்டி, நிரப்பியவர் தலையில் வைக்க, அவரும் மூன்று முறை சுவாமியே சரணம் அய்யப்பா சொல்லி குருசாமியிடம் கொடுக்க, என்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

அதற்குள், பகவான் சரணம், பகவதி சரணம், தேவன் பாதம், தேவி பாதம், பகவானே, பகவதியே... என்று வீரமணி, மற்றும் ஜேசுதாஸ் பாடிய பிரபலமான பாடல்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். பாடகர்களும் மாற, மாற கூட்டத்தை உற்சாகப்படுத்தும் வண்ணம் வில்லாளி வீரனே, வீரமணி கண்டனே, யாரைக் காண, சுவாமியைக் காண  என்று எல்லோரும் பாடும் வண்ணம் பாட, நேரம் போவது தெரியாமல், பூஜையின் கடைசி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் போது மணி இரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்கும்.

நடுநடுவில் ஆண்கள் கூட்டம் மெதுவாக தவிட்டுச் சந்தை காபி கடைக்குப் போய் சூடாக காபியும் குடித்து விட்டு வர, குருநாதரும் இருமுடி கட்டி விட்டு, கடைசி நிமிட ஆரத்தி பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்.

பாட்டு கச்சேரியும் முடிந்து விட்ட நிலையில், பதினெட்டு படிகளிலும் தீபங்கள் ஏற்றி, மற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு, எண்ணை விளக்கொளியில் எரியும் தீபங்கள் மட்டும் ஒளிர, ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா, சுவாமி பொன் ஐயப்பா, என் ஐயனே பொன் ஐயப்பா என்று மொத்த கூட்டமும் பாடிக் கொண்டே வர, பெரியப்பாவும் ஒவ்வொரு படிகளின் தீபங்களையும் ஏற்றிக் கொண்டே வர, பதினெட்டாம் படி வந்தவுடன் பாடலின் வேகமும் அதிகரித்து, அந்த இடமே கற்பூர வாசனையுடன் பக்தி மணம் கொண்டு கமழும்.

அதற்குள் பஸ்சும் வாசலில் வந்து விட, ஆரத்தி எடுத்து முடித்தவுடன், பெரியப்பா அவரவர் இருமுடி எடுத்து பக்தர்கள் தலையில் வைக்க, அவர்களும் அவரிடம் ஆசி வாங்கி குடும்பத்தினரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு,உறவினர்கள் போட்ட மாலைகளுடன் பஸ்ஸில் ஏற, தேங்காய் உடைத்த பிறகு, அனைவரையும் ஏற்றிக் கொண்டு பஸ்சும் புறப்பட, நாங்களும் பெரியம்மவிடமும், அக்காக்களிடமும் விடை பெற்றுக் கொண்டு நல்ல பூஜையை பார்த்த திருப்தியில் வீடு போய் சேர்வோம். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குப் பிறகு, நெய் பிரசாதம் வீடு வந்து சேரும். கமகமக்கும் பிரசாத நெய் கையில் வைத்து சப்புக் கொண்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

நான்கு வருடங்களுக்கு  முன்பு, என் கணவர் மாலையிட்டு, கனடாவில் இருக்கும் scarborogh நகரத்திலிருக்கும் ஐயப்பன் கோவிலிலிருந்து இருமுடி எடுத்துக் கொண்டு, டிசம்பர் மாத குளிரில் செருப்பு போடாமல், மேல் சட்டை அணியாமல், ஐநூறு பக்தர்களுடன், பெரும்பாலும் ஸ்ரீலங்கா தமிழ் மக்கள், போன பொழுது, அந்த பஜனை, பூஜைகள், கற்பூர வாசனை என்று மதுரையை நினைவுப்படுத்தியது. அதற்கு அடுத்த வருடங்களில், பனிப் பொழிவின் காரணமாக, லோக்கலில் இருக்கும் கோவிலிலேயே பூஜையை செய்து விடுகிறோம். இங்கும் மலையாளிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் பூஜை செய்கிறார்கள். கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஐயப்பன் கோவிலுக்குப் போக இந்தியா வருகிறவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலும் வாஷிங்டன் DC யில் உள்ள ஐயப்ப கோவிலுக்கு போகிறார்கள்.

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால், ஐயனை நீ காணலாம், சபரி ஐயனை நீ காணலாம்  ... ,

ஹரிஹராசனம் விஷ்வமோகனம், ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்....

என்று ஜேசுதாஸ் உருகி உருகிப் பாடும் பாடல்கள் இன்னும் காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Thursday, November 8, 2012

மதுரையில் தீபாவளி - 2

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே முறுக்கு, சீடை, அதிரசத்திற்கென்று மாவு அரைக்க ரைஸ்மில்லுக்கு அம்மாக்கள் கூட்டம் போக ஆரம்பித்து விடும். அதிரசத்திற்கு மாவு, சக்கரையுடன் பிசைந்து எறும்பு வராமல் இருக்க உயரமான இடத்தில் கயிறு கட்டியோ, இரும்பு வளையங்களில் மாட்டியோ இருக்கும் பாத்திரத்திலிருந்து திருடி எடுத்துச் சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும் :) பெரிய பெரிய எவர்சில்வர் தூக்குகளில் முறுக்கு, சீடை, சீவல், மிக்சர் என்று இருக்கும். முறுக்கு சுடும் போதும், அதை பிழியும் போதும் வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். அடுப்பிலிருந்து எடுத்தவுடன் முறுக்கு மெதுவாக இருக்கும். நன்கு ஆறியவுடன் தான் சாப்பிட சுவையாக இருக்கும். சீடை மட்டும் போடும் போது எங்களை அம்மா விரட்டி விடுவார். சீடை எண்ணையில் போட்டவுடன் அநியாயத்திற்கு தெறிக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கென்று ஆரியபவனில் ஸ்வீட் பாக்கெட், அவர்களுக்கு புது துணிமணிகள், போனஸ் பணம் எல்லாம் பட்டுவாடா செய்ய அவர்களுக்கும் சந்தோஷம்.

தீபாவளி முதல் நாள் இரவு பல இடங்களிலும் வெங்காய வெடி, லக்ஷ்மி வெடி, சீனி வெடி வெடிக்க ஆரம்பித்திருக்கும்.எப்படா, தீபாவளி காலை நேரம் வரும் என்று காத்திருப்போம். காலை எழுந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்து விட்டு, பூஜை செய்து முடித்து இனிப்புடன் காலைப் பலகாரங்கள் முடிக்க, அப்பாவும் எல்லோருக்கும் அவரவர் துணியை எடுத்துக் கொடுக்க, போட்டுக் கொண்டு பாட்டி, அப்பா, அம்மாவிடம் ஆசிகளும், காசுகளும் வாங்க, மனம் பூரித்துக் கொள்ளும். உச்சாணிக்கொம்பில் இருக்கும் மல்லிகை/முல்லை பூவும் வைத்துக் கொண்டு, பட்டாசு எடுத்துக் கொண்டு வெடிக்க கிளம்புவோம்.

முதலில் ஆயிரம்வாலா சரங்களை கொளுத்தி ( காசை கரியாக்கி விட்டு !) போட, தெருவே காதைப் பொத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும். அதிலும் சில தில்லான பொடிசுகள், வெடி வெடிக்கும் போதே நடுவில் புகுந்து ஓடுவார்கள்! வெடிக்க ஊதுவத்தியை பக்கத்தில் எடுத்துக் கொண்டு போய் ஒரு கால் முன்னேயும், ஒரு கால் ஓடுவதற்கு தயாராக பின்னேயும் வைத்துக் கொண்டு வெடி பக்கத்தில் போக, திரியை அட்ஜஸ்ட் செய்ய, நடுக்கத்துடன் வெடிக்க பக்கத்தில் போவதும் பின் பதற்றத்துடன் வருவதுமாய் ஒரு வழியாக பத்த வைத்து விட்டு ஓடிப் போய் வாசலில் ஒதுங்கி காதைப் பொத்திக் கொள்ள, பார்த்துக் கொண்டிருக்கும் வாண்டுகளும் ஆவலுடன் வெடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த 'சட சட' வெடிச் சத்தமும், வெடிப்புகையும் தான் தீபாவளியின் சிறப்பு. அதற்குப் பிறகு, சின்ன சின்ன வெடிகள் வெடித்து விட்டு, பக்கத்து வீடு, பெரியப்பா வீடு, அப்பாவின் உறவுக்காரர்களுக்கெல்லாம் இனிப்புகள் கொடுத்து விட்டு, ஆசீர்வாதமும், தீபாவளி பணமும் வாங்கிக் கொண்டு, அவர்கள் வீட்டிலிருந்து வரும் இனிப்புகளையும் ருசித்து விட்டு, விடு ஜூட், பாட்டி வீட்டுக்கு. எல்லோரும் எவ்வளவு தீபாவளி பணம் கொடுப்பார்கள் என்பதிலேயே மனம் அலைபாயும்.

பாட்டி வீட்டிற்கு போனவுடன் நாங்கள் உடுத்தியிருக்கும் புது டிரெஸ்ஸை காண்பித்து விட்டு, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு அவர்கள் புது டிரஸ்சையும் பார்த்து விட்டு, அவர்கள் கொடுக்கும் பணம், பட்டாசு வாங்கி கொள்வோம். மாமா குழந்தைகள் அவர்கள் பாட்டி வீட்டிற்கு கிளம்ப, நாங்கள் பாட்டி வீட்டில் டேரா போட்டு விடுவோம். அன்று காலையிலிருந்து சாப்பிட்ட இனிப்பும், பட்டாசின் புகையும், லெமன் சாதம், வெண் பொங்கலும் சேர்ந்து தலை சுத்துற மாதிரி தோன்றும். சிறிது இளைப்பாறி விட்டு, மாலையில் பாட்டி வீட்டு சார்பில் வாங்கின புதுத் துணி போட்டுக் கொண்டு புளியோதரை, சேமியா கேசரி சாப்பிட்டு முடித்து, பட்டாசு வெடித்து விட்டு வீட்டுக்குத் திரும்புவோம். எல்லோரிடமும் தீபாவளி வசூல், பட்டாசு என்று கனத்துடன், சிரிப்புடன் வீடு வந்து சேருவோம்.


மீண்டும் சிறிது நேரம் பொட்டு பட்டாசு, பாம்பு பட்டாசு, கம்பி பட்டாசு, சங்கு சக்கரம், புஸ்வானம் வெடித்து விட்டு தூங்க போய் விடுவோம். நம்மூர் நடிகர்கள் வைத்திருக்கும் பொம்மை துப்பாக்கி பல வீடுகளிலும் அன்று டப் டப் என்று பொட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும். அதில் ஒரு கேப் ரோலை மாட்டி விட்டு அடுத்தவரை பார்த்து சுடுவது போல் வேடிக்கை செய்து சுடுவதில் தான் என்ன ஆனந்தம்! சிறு குழந்தைகள் சின்ன சுத்தியலை வைத்து 'டப்டப்' என்று பிங்க் வண்ணத்தில் இருக்கும் ஒவ்வொரு பொட்டு பட்டாசாக வெடிப்பார்கள்.வாசல் முழுவதும் பாம்பு பட்டாசு கொளுத்தி கருப்பாக இருக்கும். கம்பி பட்டாசு கொளுத்தி சுற்றி சுற்றி விளையாட, அதிலிருந்து தெறிக்கும் நட்ச்சத்திரங்களை பார்க்கும் போதே தலை சுற்றுவது போல் இருக்கும்.

சிலருடைய சங்கு சக்கரம் சுத்தாமல் சண்டித்தனம் பண்ண, மேலே போ, மேலே போ என்று சொன்னால் தான் புஸ்வானம் மேலே போகும் என்கிற மாதிரி எல்லா வாண்டுகளும் சேர்ந்து கோரசாக கத்த, அது மேலே போகும், சில வெடிக்கும், எப்படியும் அன்று ஒரு சிறு விபத்தில்லாமல் போகாது. ட்ரெஸ்ஸில் பட்டாசு பட்டு ஓட்டை விழுந்து விட்டால் அழுகையுடன் தான் முடியும் அந்த நாள்:( இளவட்டங்கள் பாட்டிலில் ராக்கெட் பட்டாசை வைத்து வெடிக்க சில 'விர்'ரென்று வானில் பறக்க, சில 'தொஸ்' என்று விட்ட இடத்திற்கே திரும்பி வரும் வேடிக்கையும் நடக்கும். ரேய், தொரே தொஸ்சு பட்டாஸ் ரீ (உன்னுடையது தொஸ்சு பட்டாஸ்) என்று சக வாண்டுகள் கேலி பண்ணும் கூத்தும் நடக்கும். சிலர், அதிமேதாவித்தனமாக கையில் வெடியை பத்த வைத்து வெடிக்க போகும் நேரத்தில் தூக்கி போட்டு விளையாடுவதும் நடக்கும்.


கார்த்திகை மாதம், பெரிய கார்த்திகை அன்று கொளுத்த சில பட்டாசுகளை எடுத்து வைத்துக் கொண்டு, தீபாவளியை முடித்து விடுவோம். அடுத்த தீபாவளிக்காக இப்பொழுதிருந்தே பலரும் இனிப்பு, பண்டம், பாத்திரங்கள், நகை வாங்க என்று சீட்டு போடவேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய நாள் வேகமாக போய் விடும். எப்படா பள்ளி திறக்கும் புது டிரஸ் போட்டுக் கொண்டு போகலாம் என்று காத்துக் கிடப்போம்.





நாங்கள் பசுமலை பக்கம் இருந்த பொழுது, நடு இரவே ஆட்டுக்கறிக்குழம்பு, இட்லி, இனிப்புகள் சாப்பிட்டு விட்டு தீபாவளி கொண்டாடினோம். இப்பொழுது தீபாவளி அன்று வீட்டில் பூஜை, புதுத்துணி, சாப்பாடு, வார இறுதியில் கோவிலில் பூஜை, கல்சுரல் ப்ரோக்ராம்ஸ், வான வேடிக்கை, நண்பர்களுடன் ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டம் என்று போகிறது.




அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!



Tuesday, November 6, 2012

மதுரையில் தீபாவளி - 1


தீபாவளி என்றதும், மத்தாப்பு சுத்தி சுத்தி போடட்டுமா என்று குழந்தைகளுக்கெல்லாம் ஜாலி ஜாலி தான். புதுத்துணிமணிகள், பட்டாசு, முறுக்கு, சீடை, அதிரசம் என்று அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் கிடைக்கும். பெற்றோர்களுக்குத் தான் இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறது என்ற கவலை இருக்கும். போனஸ் கைக்கு வந்தவுடன் பலர் வீட்டிலும் சிரிப்பும், மத்தாப்பும் வெடிக்க ஆரம்பித்து விடும். கொலு முடியும் போதே கடைகளுக்குப் போய் துணிமணிகள் வாங்குவது, பட்டு சேலை வீட்டில் வைத்து விற்பவர்களிடம் குடும்பமாக போய் பார்த்து விட்டு எடுத்து வருவது, சட்டை, பேன்ட், சேலை தைக்க கொடுத்து விட்டு எப்படா வரும் என்று காத்திருந்தது என்று ஒரு சுகமான காலம். டெய்லர் கடைகளில் துணிகளை கொடுத்து தைக்க வருபவர்களின் அளவுகளை ஒரு சிறு நோட்டில் சிறிய பென்சிலால் அளவுகளை எழுத, காசா எடுக்கும் பையன் கழுத்தை வளைத்துக் கொண்டு அவன் வேளையில் மும்முரமாய் இருக்க, அந்த சிறிய கடையில் துணிகள் சிதறி தீபாவளியின் அருகாமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும். இன்று எல்லாமே ரெடிமேட் ஆக கிடைத்து விடுவதால் அந்த காத்திருத்தலில் இருந்த சுகம் என்ன என்று பலருக்கும் தெரியாமலே போய் விட்டது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை புதுத்துணி வாங்கும் பழக்கம் போய், கடைக்குப் போகும்போதெல்லாம் வாங்கும் பழக்கம் வந்து, புதுத்துணிக்களுக்காக காத்திருந்த அந்த இனிமையான நாட்களின் அருமை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய் விட்டது:(


எங்கள் வீட்டில் அப்பா புதுத்துணிகள் வாங்கி வந்தவுடன் அவர் தெரு முக்கில் வரும் போதே எத்தனை கடைப் பை இருக்கிறது என்று பார்த்து ஓடிப் போய் வாங்கி வந்து, வீட்டிற்குள் போய் பிரித்து இது எனக்கு, இது உனக்கு என்று சண்டை போட ஆரம்பித்து விடுவோம். கலர், சைஸ் சரியில்லை என்றால் மீண்டும் கடைக்குப் போய் மாற்ற வேண்டியிருக்கும். அடிக்கடி புதுத்துணி போட்டு, அந்த புதுத்துணி வாசனை பார்த்து, அதன் மடிப்பு கலையாமல் திருப்பி மஞ்சள் பையிலே வைக்க, பிறகு அதற்கு மேட்சாக நதியா தோடு, ஹேர்பின், பொட்டு.. என்று கோவில் கடை, புதுமண்டபம் என்று போக, நடுவில் மழையும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு வெடிச் சத்தம் கேட்க ஆரம்பித்து விடும். பலசரக்கு கடைகளில் எண்ணை, டால்டா, அரிசி மாவு, கடலை மாவு ஸ்டாக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ரேஷன் கடைகளிலும், மண்ணெண்ணெய், பலகாரங்கள் செய்ய எண்ணை, அரிசி மாவு, சீனி எல்லாம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதை வாங்க பெண்களும், குழந்தைகளும், ஆண்களும், வயதானவர்களும் நீண்ட வரிசையில் நின்று கால்கடுக்க தவம் கிடப்பார்கள். பலரும், இனிப்பு, பாத்திரங்கள், துணிமணிகள், நகைகள் வாங்க என்று வருடம் முழுவதும் சீட்டு கட்டியிருப்பார்கள். அது கையில் கிடைத்தவுடன் அவர்களும் கடைக்கு கிளம்பி விடுவார்கள்.

தீபாவளிக்கெல்லாம் ஹைலைட் - தீபாவளி முன்தினம் தான். கீழவாசலில் இருந்து(இப்பொழுதெல்லாம் அரசமரத்திலிருந்து) மஞ்சனக்காரத்தெரு வரை தெற்குமாசி வீதியின் இருபுறங்களிலும் தள்ளு வண்டியிலும், பிளாட்பார்மிலும் துணிகள், தோடு,ஹேர்பின், பொட்டு, செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், பாக்ஸ்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், அண்டா குண்டாக்கள் என்று எல்லாவிதமான சாமான்களும் கொட்டிக் கிடக்கும். நேரம் நேரம் ஆக ஆக விலை குறைத்து கூவி கூவி விற்பார்கள். பார்த்து வாங்கினால் நல்ல லாபம். இடிமன்னர்களிடமும், பிக்பாக்கெட்காரர்களிடமும் இருந்து தப்பித்து கூட்டத்திற்குள் போகும் சாமர்த்தியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஓரிடத்தில் இருந்து வேடிக்கைப் பார்த்து விட்டு வர வேண்டியது தான். பாட்டி வீடு விளக்குத்தூண் பக்கம் இருந்ததால் கூட்டத்தை நன்றாக வேடிக்கை பார்க்க முடிந்தது. நடுநடுவே திகர்தண்டா சாப்பிட, பீமா புஷ்டி அல்வா, மாங்காய், தென்னங்குருத்து, மிட்டாய், வேக வைத்த கடலை, கிழங்கு என்று வாங்க, பட்டாசுக்கடைக்கு போக, அசைவம், சைவம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா உணவகங்களிலும் என்று எங்கும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். இப்படி நடுநிசி வரை போய்க் கொண்டிருக்கும். மழை பெய்தாலும் குடையுடன் போகும் கூட்டம். இதைத்தவிர, ஆங்காங்கே, திடீர் பட்டாசுக் கடைகளில் கூட்டம், ஆரியபவன், திண்டுக்கல் ரோடு, மேல மாசி வீதிகளில் இனிப்புகள் வாங்கும் கூட்டம், நகைகள் வாங்க என்று மதுரை முழுவதும் விழித்துக் கொண்டு இருக்கும் தூங்கா நகர நேரமது. சேலைக்கடைகள், அம்மன் சந்நிதி, ஜடாமுனி சந்து என்று எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் கூட்டம் ஜே ஜே அலைமோதிக் கொண்டிருக்கும். தீபாவளி ரிலீஸ் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதை வேடிக்கை பார்க்கிற கூட்டமும், தங்களின் விருப்பமான நடிகர்கள் படம் என்றால் பால் அபிஷேகமும், மாலையும், தலைவனைப் போலவே மொட்டையடித்தும், மீசைஎடுத்தும், தாடி வளர்த்தும், பிடித்த நடிகைகள் என்றால் கோவில் கட்டி கும்பிட தயங்காத விடலைகளின் கூட்டமுமாய் என்று முழு நகரமும் விழாக்கோலத்தில் இருக்கும் நாளது!

ஊரிலிருந்து வரும் விருந்தினர்கள் கூட்டம், தலை தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகள் கூட்டம், மகன்/மகள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெற்றோர்கள் கூட்டம், அப்பா, அம்மாவைப் பார்க்க போகிற மகன்/மகள்கள் கூட்டம், தாத்தா , பாட்டிகளைப் பார்க்க போகின்ற பேரன், பேத்திகள் கூட்டம் என்று ரயில், பஸ், விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதும் நேரமிது.

தீபாவளிப் பயணம் தொடரும் ..

Friday, November 2, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவுகள்- மீன், கருவாடு


பொதுவாக, மீன் சாப்பிடும் குடும்பங்கள் எனக்குத் தெரிந்து மிகவும் குறைவு. சிலருக்கு மீன் வாசனை பிடிக்காது. சிலருக்கு முள்ளைப் பார்த்தால் பிடிக்காது. ஆனால், மீன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு அந்த வாசனையும், முள்ளும் ஒரு பொருட்டே அல்ல.

நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு ...முள்ளும் மலரும் என்ற படத்தில் வரும் இந்த பாடலில், கதாநாயகி நேத்து வெச்ச மீன்குழம்பு பற்றி பாடியது போல், மீன் குழம்பின் சுவை சமைத்த தினத்தை விட, மறுநாள் தான் சுவை கூடி இருக்கும். புளி,  தக்காளி போட்டு சமைக்கும் உணவுகள் எல்லாம் அடுத்த நாள் சாபிட்டால் புளிப்பு சுவை இன்னும் கூடி அருமையாக இருக்கும். அதே போல், முதல் மரியாதையில் ராதா மண்சட்டியில் செய்த மீன் குழம்பை, தட்டு நிறைய சாதத்தில் ஊற்றி, சாப்பிடுய்ய்ய்யா என்று சிவாஜிக்கு கொடுக்கும் பொழுது, ஜிவ்வென்று பலருக்கும் நாக்கில் நீர் ஊறியிருக்கும். அதை விட, ராதா மீன் சாப்பிடும் காட்சியில், சின்ன முழுமீனை வாயில் போட்டு, மீன் எலும்பு மட்டும் வெளியில் எடுக்கும் காட்சி கண்ணிலிருந்து மறைய ரொம்ப நாளானது. தியேட்டரை விட்டு வெளியில் வரும் பொழுதே அம்மாவிடம் அதே மாதிரி மீன் குழம்பு பண்ணிக் கொடுக்க வேண்டும், நாங்களும் அதே மாதிரி சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று பண்ணிய அடத்தில், விரைவிலேயே மணக்கும் மீன் குழம்பு தயாரானது. நாங்களும் ஆசையுடன் மீன்குழம்பு சாதத்தை பிசைந்து கொண்டு, மீனை எடுத்து, வாயில் வைக்க, கடுக்கு முடுக்கு என்று எலும்புடன் தான் சாப்பிட முடிந்தது. அதில் மிகுந்த வருத்தம். பிறகு வழக்கம் போல் முள்ளை  எடுத்து சாப்பிட  வேண்டியதாகி விட்டது. ஆனாலும் என்ன, சுவையான் மீன் குழம்பு சாதம் சாப்பிட்ட திருப்தி !

நாங்கள் இருந்த பகுதியில் காலையில் மீனு,மீனு என்று கூவிக் கொண்டு கூடையில் மீன் விற்பவர்களிடம் வாங்கி அவர்களையே சுத்தம் செய்ய சொல்லி விட்டு எப்படா மீன் குழம்பு ரெடி ஆகும், மீன் வறுவல் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். வறுவலுக்கு மசாலா எல்லாம் தடவி  மீனை சிறிது நேரம் வெய்யிலில் வைத்து பிறகு பொரித்தால் சும்மா 'ஜிவ்'வென்றிருக்கும்!
நல்லெண்ணையில் கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி வதக்கி, கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, சிறிது கொதித்தவுடன், தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து, நன்கு கொதித்தவுடன், மீனை போட்டு, மீன் வெந்ததும் சாப்பிட்டால், ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்ம, அவ்வளவு நன்றாக இருக்கும். அதை விட, மறுநாள் சாப்பிட்டால், அதை விட சூப்பராக இருக்கும்.

மதுரையில் எனக்குத் தெரிந்து ஆட்டுக்கறி, கோழிக்கறி அளவிற்கு மீன் சாபிடுவதில்லை.

அதே போல் தான், கருவாட்டுக் குழம்பும். அதுவும், என் அம்மா வைக்கும் கருவாட்டுக் குழம்பு ஒரு ஸ்பூன், ஒரு தட்டு நிறைய சாதத்திற்கு வரும். எண்ணை மிதக்க, பூண்டு, கருவாடு குழம்புடன் ஒட்டிக் கொண்டிருக்க, சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் கை மணக்கும். நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகாமையில், பல கிறித்துவ வீடுகளில் கருவாடு விற்றார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் பொழுதே, கருவாட்டு வாசனை மூக்கைத் துளைக்கும். அதை, வெறும் எண்ணையில் வறுத்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டாலும் அவ்வளவு நன்றாக இருக்கும். உடம்பு சுகமில்லாமல் இருந்து, வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், சிறிய வறுத்த கருவாடை சாப்பிட்டாலே போதும். ருசி நாளங்கள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடும். கருவாட்டுப் பிரியர்களுக்கு நான் சொல்வது புரியும். உடம்புக்கும் மிகவும் நல்லது என்று அடிக்கடி எங்கள் வீட்டில்நெய் மீன் கருவாட்டுக் குழம்பு பண்ணுவோம். இப்பொழுது அதை தூக்கிக் கொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் K9 நாய்களின் பிடியில் மாட்டாமல் வர வேண்டுமே என்ற பயத்திலும், என் மகனுக்கு அந்த 'தீவிர' வாசனை பிடிக்காததாலும், எடுத்து வருவதில்லை.


Monday, October 29, 2012

அடடா மழைடா, அடை மழைடா..

Sandy புயல்,மழை காரணமாக நியூயார்க் நகரம் ஸ்தம்பித்து போய்' இருக்கிறது. புயலுக்கு பயந்து கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. நாடக நடிகை போல் வானமும் வந்து கொட்டி அழுது தீர்த்து விட்டுப் போகிறேன் என்று இருண்டு கொண்டு வருகிறது. இந்த புயல் கடந்து வருகின்ற பாதை முழுவதும் பல அழிவுகளை நடத்திக் கொண்டே வருவதால் பல இடங்களிலும் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றிலிருந்து சூரியனும் உள்ளேன் அய்யா பாணியில் வருவதும் பின் மறைந்து போவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. உதிர்ந்த இலைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இன்றிரவிற்குப் பிறகு நிறைய மரங்கள் காற்றில் கீழே விழும் அபாயம் உள்ளது! தொலைக்காட்சிகளில் அடிக்கடி புயல் பற்றிய செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மதியத்திலிருந்து காற்றுடன் மழை என்ற அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளும் சீக்கிரமாகவே மூடப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள்:( இன்னும் Irene புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் விவசாயிகள் இன்னும் கலக்கம் அடைந்திருப்பார்கள். வீடுகளில் தண்ணீர் புகுந்து அதன் விளைவுகளை சந்தித்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் பட்ட காலிலேயே படும் என்பது போல் மீண்டும் ஒரு பெரும்புயல். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

நியூயார்க் 
என் சிறுவயதில் மேகம் கருத்து வானம் இருண்டு கொண்டு வந்தாலே மனதில் சந்தோஷமும், கரண்ட் போய் விடுமே என்ற கவலையும் வந்து விடும். என் அப்பா, அம்மாவிற்கோ மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் சாயம் போட்ட நூல்களை மழையில் நனையாமல், விரைவில் காய வைக்க வேண்டுமே என்ற கவலை. அந்த காலத்திலேயே தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் மழை வந்தால் எங்கள் வீடே அல்லோலகப்படும். வேலைக்காரர்கள் இல்லை என்றால்,ஆளுக்கு ஒரு திசையில் மாடிக்குச் சென்று விறுவிறுவென்று, காயப்போட்டிருக்கும் நூல்களை ஓரத்திலிருந்து தள்ளி நடுப்புறத்திற்கு கொண்டு வருவோம், மழையில் நனையாமல் இருப்பதற்கு. அதற்குள், நாங்கள் நன்றாக நனைந்திருப்போம். அவசர அவசரமாக எல்லோரும் தலையை துவட்டிக் கொண்டு உட்கார்ந்தால், சொல்லி வைத்த மாதிரி, எங்கேயாவது 'டப்' என்று ட்ரான்ஸ்பார்மர் வெடிக்க, 'பட்'டென்று கரண்ட் போக, படிப்பு அம்பேல். அதுவும், அடுத்த நாள் டெஸ்ட் ஏதாவது இருந்தால், அவ்வளவு தான். அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி தேடி போக, இருட்டில் ஒவ்வொன்றையையும் தேடி பிடித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். மெழுகுவர்த்தி காற்றுக்கு அணைந்து போக, மீண்டும் அரிக்கேன் விளக்குக்கு பலத்த சண்டை நடக்கும். இப்பொழுது இந்த காட்சிகள் எல்லாம் மதுரையில் சர்வ சாதாரணமாகி விட்டது! மாணவர்களுக்கு தான் பெரும் அவஸ்தை.

நன்றாக மழை பெய்து நிற்கும் வேளையில், அந்த ஈர மண் வாசனையும், மழை கிளப்பிய சூடும், குப்பைகளுடன் ஓடும் கலங்கலான தண்ணீரும் என்று தெருக்கள் சொத,சொதவேன்றிருக்கும். வீட்டு ஓடுகளில் இருந்து மழை நீர் வடிய, தண்ணீர் தெருக்களில் ஓட ஆரம்பிக்கும். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்து விடும் என்று மழையில் வெளியே விடமாட்டார்கள். அப்படியே பழகி, ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்ப்பது, கதவை லேசாக திறந்து வைத்து ரசிப்பது என்றாகி விட்டது. எங்கள் தெருவில் என் வயதை ஒத்த குழந்தைகள் எல்லோரும் எப்படா மழை நிற்கும் என்று காத்திருப்போம். பிறகு, எல்லோரும் பேப்பர் கப்பல் செய்து அவரவர் வீட்டு வாசலில் இருந்து விடுவோம். யார் கப்பல் வெகு தூரம் போகிறது என்று ஆவலுடன் பார்ப்பது, யார் கப்பல் நன்றாக இருக்கிறது என்று போட்டி போட்டு சிறு வயதில் விளையாடியது எல்லாம் மழை வரும் பொழுதெல்லாம் நினைவில் வருகிறது. அப்பாவிடம் போய், எனக்கு பெரிய பேப்பர் கப்பல் வேண்டும் என்று கேட்டு அதை தண்ணீரில் மெதுவாக விட, சமயங்களில், மழை நீர் ஓடும் வேகத்தில், கப்பல் கவிழ்ந்து விடும். அதைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்ய, வெட்கத்தில் கண்ணில் பொல,பொலவென்று மழை நீர் :(இங்கே குழந்தைகளோ, மழைக்காலத்தில் போடும் பூட்ஸ்களைப் போட்டுக் கொண்டு, மழைத் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் போய் குதித்து விளையாடுகிறார்கள். கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மழை வந்தால், குழந்தைகள் எல்லாம் ஆனந்தமாக மழையில் விளையாடுவார்கள். எல்லா இந்திய அம்மாக்களும் போலவே நானும் ஏன் மழையில் நனைகிறாய், உடம்புக்கு ஏதாவது ஆகிடப் போகிறது என்று படப்படப்பாகி விடுவேன். ஆனாலும், நாம் தான் ஆடவில்லை, நம் குழந்தையாவது அனுபவிக்கட்டுமே என்று சமயங்களில் விட்டு விடுவதும் உண்டு :) நம்மூர் மாதிரி ரோடுகளில் தண்ணீர் தங்குவதில்லை. அதனால், கத்தி கப்பல், கப்பல் எல்லாம் விட முடியவில்லை :(

ஒரு விடுமுறையில் மதுரை வந்திருந்த பொழுது, நானும் என் மகளும் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தோம். 'ஜோ'வென்று மழை கொட்டித் தீர்த்து விட்டது. கடையில் உள்ளே இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. வெளியில் வந்த பார்த்தால் முழங்கால் வரை தண்ணீர். அதுவும் அழுக்குத் தண்ணீர். ஒரே சேரும் சகதியும், குப்பையுமாய். என் மகளோ நான் இறங்கி நடக்க மாட்டேன் என்று ஒரே அடம். காரோ எங்கேயோ ஓரிடத்தில். டிரைவரை கூப்பிட்டால், அது ஒன் வே, நீங்கள் தெருவை கடந்து தான் வர வேண்டும் என்று சொல்ல, என் மகள் அப்போது சின்ன வயது தான், தூக்கிக் கொண்டு போனேன். நல்ல வேளை, அவள் ஒல்லியாக இருந்தாள். அதே வாரத்தில், என் குடும்பத்துடன், என் கணவரின் அண்ணன் வீட்டிற்கு போய் விட்டு வரும் பொழுது, ஒரே அடை மழை. காரில் தவிட்டுச்சந்தைப் பக்கம் வரும் வழியில், தண்ணீர் வெள்ளம் போல் வர, என் மகனுக்கோ குஷி. ஆ, flood,flood என்று ஆனந்த கூச்சல். எனக்கோ, காருக்குள் தண்ணீர் வந்து விடாமல் ஒரு பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாக வீடு திரும்பனுமே என்று. பந்தடி பக்கம் இஷ்டத்திற்கு ரோட்டை ஏத்தி மேடு செய்திருக்கிறார்கள். தண்ணீர் எங்கும் போக முடியாமல் அங்கேயே தேங்கி, கஷ்ட காலம்! பல இடங்களில் பள்ளங்கள். சில மூடப்படாமல் இருந்தது. அதனால், மழை வந்தால் ஒரு சிறு குளம் போல் ஆகி விடுகிறது. பஸ், லாரி வந்தால் பைக், ஸ்கூட்டர், சைக்கிள்-ல் போவோர் கதி அதோ கதி தான்:( இந்த அழகில் கரண்டும் போய் விட்டால் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும், கரண்டில்லாமல் இருந்த மழை அனுபவம் குழந்தைகளுக்கு புதிது. இலவசமாக கொசுக்கடியும் :(

மழை பெய்யும் பொழுது சூடாக வாழைக்காய் பஜ்ஜி, கீரை வடை(பங்கரா பான் பைரி), தேங்காய் வடை(நளறு பைரி) சாப்பிட்டால் நன்றாக இருக்கும் :) நல்லாத் தான் இருக்கும், யாரவது சமைத்துக் கொடுத்தால் :) சமயங்களில், பண்ணுவதுண்டு. எனக்கு, சூடாக, டீ போட்டு, மழையை வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். என் கணவர் கேமரா சகிதம் போட்டோக்கள் எடுக்க கிளம்பி விடுவார். மழை நின்ற பிறகு, இள வெயிலில் தெரியும் வானவில் பார்க்க அதை விட அழகாக இருக்கும்.ம்ம்ம் ...

மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சல் ஆடியது, இதற்காகத் தானே அன்று ஒரு ஜீவன் வாடியது....

Sunday, October 21, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவகங்கள் மதுரையில்- 2

அம்சவல்லி - மதுரையில் பலரின் விருப்பமான அசைவ உணவகம். கீழ வெளி வீதியில் சிந்தாமணி தியேட்டருக்கு அருகில் நெல்பேட்டை ஜன சந்தடியில் டிராபிக் அல்லாடும் இடத்தில் இருக்கிறது. முன்பு, கால் ப்ளேட் பிரியாணி கூட கிடைக்கும். அது மட்டன் பிரியாணி ஆக இருக்கும். வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருந்ததால் வேலை ஆட்களோ, அப்பாவோ போய் பிரியாணி வாங்கி வருவார்கள். அன்று சமயலறைக்கு விடுமுறை. காலையிலிருந்தே பசிக்கிற மாதிரி இருக்கும். நேரம் மெதுவாக போகிறதோ என்று அடிக்கடி பார்க்கத் தோன்றும். மதிய நேரத்தில் யார் யாருக்கு என்ன என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொடுக்க, அக்காவிற்கு எப்பொழுதும் முக்கால் ப்ளேட் பிரியாணி, தம்பி ஒருவனுக்கு அப்போது பிரியாணி பிடிக்காது. அவனுக்கு பரோட்டா. ஆனால், இப்பொழுது வெளுத்துக் கட்டுகிறான் பிரியாணியை

சமயங்களில் மீன் ரோஸ்டும் கூட. பிரியாணி பையை வாங்கும் பொழுதே வாசனை தூக்கும். பரபரவென்று பொட்டலத்தை பிரித்து எனக்கு துப்பாக்கி, எனக்கு எலும்பில்லாமால் நல்ல கறி என்று ஒவ்வொருவர் சொல்ல, அடுத்தவர் பொட்டலத்தில் நிறைய கறி இருப்பதாகவே தெரியும் :(  அன்றும், இன்றும், என்றென்றும், அம்சவல்லி பிரியாணி, அம்சவல்லி பிரியாணி தான். இப்பொழுது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருக்கிறது. நிறைய பெண்களும் சாப்பிட வருகிறார்கள் :) அம்சவல்லி பிரியாணியின் ஒரு சிறப்பு, மசாலா எல்லாம் நன்கு அரைக்கப்பட்டு அரிசியுடன் நன்கு கலந்து அந்த கலரை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். பொட்டலத்தை பிரிக்கும் போதே, தயிர் வெங்காய வாசனையுடன் மசாலா வாசனையும் சேர்ந்து ஏற்கெனவே பசியோடு இருப்பவர்களுக்கு இன்னும் பசிக்க, சில நிமிடங்கள் யாரும் பேசாமல் ருசித்துச் சாப்பிட...ம்ம்ம்ம். அது எப்படி என்று தெரியவில்லை, நெய்மீன் ரோஸ்ட் சுத்தமாக எண்ணை இல்லாமல் காரத்துடன் சிவக்க வறுத்து அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால், அநியாயத்திற்கு விலை :( சாப்பிட்ட பிறகு, சூடா ஒரு டீ. மணமணக்கும் கையுடன் மனம் மகிழ அந்த தினம் போகும் :) மசாலா சாப்பாடு சாப்பிட்டால் அன்றைய தினம் மகிழ்ச்சியாகவே இருக்கும். அது தான், மசாலாக்களின் குணமே!


இப்படித் தான், மதுரை அருளானந்தம் ஹோட்டலில் கிடைக்கும் அயிரை மீன் குழம்பும். இந்த ஹோட்டல் விளக்குத்தூண் அருகில் ஒரு சந்தில் இருந்தது. அரைத்து விட்ட மசாலாக்களுடன், மண் வாசனை நிறைந்த நெத்திலி மீன், நெத்தியடியாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு நிறைய கொடுப்பார்கள். அந்த மீன் சிறு குளங்களில் கிடைக்கும். கரகரவென்று மண் வாசனையுடன் ஒரு வித சுவையுடன் இருக்கும். ஒரு முறை, சென்னை, தி. நகரில் மதுரை அருளானந்தம் ஹோட்டல் என்று பார்த்தவுடன் ஆஹா, இங்கேயுமா என்று ஒரு பிடி பிடித்துவிட்டு வந்தோம். ஆனால், சரியான காரம் :(



சரி, அம்மா மெஸ், அம்மா மெஸ் என்று கோரிப்பாளையம் பக்கம் ஒரு பிரபலமான கடைக்கு போய் சாப்பிடலாம் என்று போனால், சரியான கூட்டம். சாப்பிடுபவர்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். பரிமாறுபவர்கள் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மக்களும் லபக்கு லபக்கு என்று அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட நிதானமாக உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. ஏதோ, பஸ்ஸை தவற விட்டு விடுவோம் என்ற பயத்தில் உருட்டி உருட்டி சாப்பிட்ட மாதிரி இருந்தது:( அங்கு கோலா உருண்டை, ஷ்ரிம்ப் மசாலா படு டேஸ்டாக இருந்தது. (இப்போது அய்யா மெஸ், தாத்தா மெஸ் என்று பல கடைகள்..:) )அப்படியே இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், தாஜ் உணவகம் இருந்தது. அங்கும் சூப்பர் பிரியாணி. கொடுக்கும் பொழுது, ஐயோ இவ்வளவு பிரியாணி சாப்பிட முடியுமா என்று மலைக்கத் தோன்றும். சாப்பிட ஆரம்பித்தால், தட்டு காலி. கல்யாணமான பிறகு, முதலில் கணவர் குடும்பத்துடன் சாப்பிடச் சென்ற முதல் இடம்! அப்போதெல்லாம், என்ன ஒன்றுமே சாப்பிட மாட்டேங்கிறாய், நன்றாக சாப்பிடு என்று சொன்னவர்கள் எல்லாம், இப்போது, நன்றாக வெட்டுகிறாய் என்று சொல்லும் அளவுக்கு நல்ல வளர்ச்சி! டவுன்ஹால் ரோட்டில் இருக்கும் தாஜ்ஜில் வீட்டு விஷேஷங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது. எப்போதாவது, சௌராஷ்டிரா பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால், பனைமரத்து பிரியாணி/மாகாளிப்பட்டி பிரியாணி கடையில் வாங்கி வருவோம். அங்கு ஆட்டுக் கால் சூப், சுக்கா வறுவல் நன்றாக இருக்கும். இப்போது எப்படியோ?

விருந்துகளுக்கு சமைத்துக் கொடுக்கும் பல சௌராஷ்டிரா வீடுகளில் அருமையான பிரியாணி சமைத்துக் கொடுக்கிறார்கள். மசாலா குறைத்து, சிக்கன் கிரேவியுடன், பொறித்த மீன்/சிக்கன் என்று கேட்கிற மாதிரி சமைத்துச் சாப்பிடும் வசதிகள் பல மதுரையில் :)

என் கணவருக்கு சின்னக்கடை தெருவில் காளி கோவில் பக்கத்தில் இருக்கும் ராபியா மட்டன் ஸ்டால் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அங்கு கொத்துப் பரோட்டா மிகவும் பிரபலம். நாலைந்து பரட்டோவை பிச்சுப் போட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மஞ்சத்தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, அதன் மேல் சிக்கன் சால்னாவையும் கொட்டி, இரண்டு இரும்பு கரண்டியால் தெருவே அலறுகிற மாதிரி அந்த தோசைக் கல்லில் 'ந ந' என்று நர்த்தனமே ஆட விடுவார். அந்த கொத்துப் பரோட்டா சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் அதன் சுவை! அதேபோல் தான், சிக்கன் வறுவலும். பிரியாணியும். மசால் கம்மியாக நன்றாக இருக்கும். மசாலா அதிகம் பிடிக்காதவர்களுக்கு இந்த பிரியாணி கண்டிப்பாக பிடிக்கும். இந்தக் கடை இரவில் வெகு நேரம் வரை திறந்திருப்பதால், நல்ல வியாபாரம்

மதுரை தூங்கா நகரமோ இல்லையோ, நல்ல சாப்பாட்டு நகரம் :)




அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...