Wednesday, June 13, 2012

ரயில் பயணங்களில் --1

எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதன் முதலாக ரயிலில் ஏறியது என் பாட்டியின் காசியாத்திரை/ டெல்லி வழியனுப்பு தினத்தில் தான். அந்த சிறிய, உயர்ந்த படியில் யாரோ தூக்கி விட, கால் தடுக்கி விழுந்தால் ரயிலுக்கு அடியில் போய்விடுவோம் என்ற பயத்துடனே வேகமாக உள்ளே தாவ, கண்கள் விரிய compartment ஐ நோட்டம் விட்டு விட்டு சிக்னல் விழுந்தாச்சு எல்லோரும் இறங்குங்கள் என்றவுடன் மிகவும் கவனமாக இறங்கியதும் நன்றாக நினைவில் இருக்கிறது.

பிறகு குடும்பத்துடன் சென்னை, திருப்பதி செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ்சில் பயணம் செய்ததும் யார் ஜன்னல் பக்கத்தில் உட்காருவது என்ற சண்டை முடிந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துச் சென்றதும், வண்டியிலேயே பாப்பின்ஸ், ஜெம்ஸ் ( இங்கிருக்கும் m & m போன்று இருக்கும்), biscuits , chocolates வாங்கிச் சாப்பிட்டதும், வைகை, மதுரா கோட்ஸ் , பாத்திமா காலேஜ் தாண்டியதும் காலை உணவை முடித்து கொண்டு பச்சை பசேலென வாழை, தென்னை, கரும்பு வயல்களை சோழவந்தானில் இருந்து திராட்சை தோட்டம் வரும் திண்டுக்கல் வரை ரசித்ததும், கொடைரோட்டில் பழங்கள் வாங்கியதும், ரயில் முன்னே செல்ல செல்ல வீடுகள், மரங்கள் , ஆடு , மாடுகள் பின்னோக்கி செல்வதும் சிறியதாக மறைந்து போவதும் பாலத்தின் மேல் போகும் பொழுது எழுப்பும் ஒரு 'கட கட தட தட' திகிலூட்டும் சத்தமும், காவேரி ஆற்றின் மேல் செல்லும் பொழுது ரயில் விழுந்து விட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயமும் கீழே கரை புரண்டு ஓடும் காவிரியின் அழகும் (நம்புங்கள், ஒரு காலத்தில் இருகரை தொட்டு காவிரியில் தண்ணீர் இருந்தது!!!), அங்கிருந்து தெரியும் உச்சி மலை கோட்டையைப் பார்த்து கன்னத்தில் போட்டு கொள்வதும், ஒரு சிலர் தூரத்தில் ஸ்ரீரங்கம் கோபுரம் தெரிகிறது என்றவுடன் பார்க்காமலே அந்தப் பக்கம் திரும்பி மீண்டும் கன்னத்தில் போட்டுக்  கொண்டதும், சென்னையில் இறங்கியவுடன் பிரமிப்புடன் ரயில் நிலையத்தை பார்த்துக் கொண்டே வெளியில் வந்ததும், டாக்ஸி பிடித்துக் கொண்டு ஹோட்டலுக்குப் போனதும், ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்ததும் நன்கு நினைவில் உள்ளது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு ஒரு நாள்  திருச்சியில் இருக்கும் மாமா வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக என் அக்கா, தங்கை, தம்பிகள் , பெரியம்மா பெண், மாமா மகள்கள் (நான்கு பேர்) ஆக 10  குழந்தைகள், என் பெரிய மாமாவுடன் குதூகலமாக கிளம்பினோம். அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் ரயில் நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் அவருக்கு வணக்கம் வைத்ததைப் பெருமையாக பார்த்துக் கொண்டே a/c கோச்சில் உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டே போனதும், எங்களுடன் பயணம் செய்த மேல் நாட்டுக்காரர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மெதுவாக பயந்து கொண்டே சிரித்ததும், இறங்கும் போது அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு விடை பெறுவதை பார்த்து அதிர்ந்து போனதும், (!!!!) மாமாவும் இது அவர்கள் ஊர் பழக்கம் என்ற போதும் புரிந்தும் புரியாமலும் 'ங்கே' என்று விழித்துக் கொண்டே இறங்கியதும் இன்றும் நினைவில்.

இதைப் போல் பல பிரயாணங்கள். ஒவ்வொன்றிலும் ஒரு பாடம். அப்போதெல்லாம் கையில் வைத்து கொண்டு விளையாடும் வீடியோ கேம் எதுவும் இல்லாததினால் வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதும் பக்கதிலிருப்பவர்களுடன் ரயில் சிநேகம் கொள்வதும், அவர்களுடைய குழந்தைகளுடன் விளையாடுவதும், அவர்களுடன் பகிர்ந்து உண்ணுவதும் கனவாகி போய் விட்டது இந்த காலத்தில் :(

இப்போதெல்லாம் ரயிலில் ஏறும் போதே  யாருடனும் வெட்டி பேச்சு பேசாதீர்கள், பிஸ்கட் கொடுத்தால் கண்டிப்பாக வாங்க கூடாது என்று பயமுறுத்தியே ஏற்றி விடுகிறார்கள். இதைக் கண்டால் பயம், அதைக் கண்டால் பயம் என்று ' தெனாலி பட' கமல் மாதிரி ஆகி விட்டது ரயில் பயணம். குழந்தைகளும் ஏறியவுடன் கேம்பாய் (Gameboy) / DS ஒன்றை வைத்து கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படியே அவர்கள் யாருடனாவது பேச ஆரம்பித்து விட்டால் நமக்கு பக் பக் என்றிருக்கிறது.!!!!

சார் 'காபி, டீ, காபி, டீ' என்று தொண்டை கிழிய சிலர் கத்திக் கொண்டே ஒரு பாத்திரத்தில் சூடான டீயையோ , காபியையோ எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் டம்பளருடன் ஜன்னலுக்கு ஜன்னல் குரல் கொடுத்துக் கொண்டே வியாபாரம் செய்வார்கள். எல்லா பிளாட்பார்மிலும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் , தமிழிலும் அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். சிவப்பு சட்டையில் போர்ட்டர்கள் பெட்டிகளைச் சுமந்த வண்ணம் ஓடிக் கொண்டிருப்பார்கள் அல்லது பெரிய பெரிய சூட்கேசுகளை வைத்திருப்பவர்களிடம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்!!!.

தள்ளு வண்டியில், பழங்கள், பிஸ்கட்டுகள் , வார இதழ்கள், தினசரி பேப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். குடும்பங்களை வழியனுப்ப வந்த உறவினர்கள் கூட்டம் ஒரு பக்கம், ஊருக்கு வந்தவர்களை அழைத்துச் செல்ல வந்த கூட்டம் என்று பல கூட்டங்களையும், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி, சோகம் என்று பல உணர்ச்சிகளையும் அந்த நேரத்தில் காணலாம். பார்த்துப் போம்மா/போப்பா , போனவுடன் போன் பண்ணு என்று சிலர் அன்பு கட்டளைகள் இட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். சில இளங்காளைகள் அழகான தாவணி, சுடிதார் அணிந்த இளம்பெண்களை ஏக்கத்துடன் பார்துக்கொண்டிருப்பார்கள் :( சும்மா, டைம் பாசுக்கு தான்.

என் மகளுடன் சென்ற முதலாவது ரயில் பயணம் மிகவும் என்னை கலங்கடித்த ஒன்று. கனடாவில் வேலை கிடைத்தவுடன் கோயம்புத்தூர் சென்று விசா அப்ளை செய்வதற்காக மூன்று வயது குழந்தையுடன் அவளுக்கு வேண்டிய பால், பழங்களை எடுத்துக் கொண்டு ஆரவாரமாக ஆரம்பித்த பயணம். முதல் நாளிலிருந்தே நாளை கனடா விசா வாங்க ரயிலில் போகிறோம் என்று அவளிடமும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய பயணம். ரயிலில் ஏறியவுடன், என் தம்பியின் நண்பனின் அம்மா, அப்பாவுடன் பேச்சு துணையோடு நன்றாகவே ஆரம்பித்தது அந்த ரயில் பயணம். நிவி மிரட்சியுடன் ரயிலில் உட்கார்ந்து கொண்டு, தாத்தா, பாட்டி என்று அவர்களுடனும் பேசிக் கொண்டு, வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். ரயில் மெல்ல நகரவும் விரலை சூப்பிக் கொண்டே அரை தூக்கத்துடன் என் மடியில் படுத்திருந்தாள். ரயில் மதுராகோட்ஸ் தாண்டி பாத்திமா கல்லூரியிலிருந்து சிறிது தொலைவில் நின்று விட்டது. உடனேஎல்லோருக்கும் தோன்றும் 'இந்தியன் ரயில்வே என்றாலே இப்படித்தான்' என்ற எண்ணம் வந்ததை மறுப்பதற்கு இல்லை. ஆண்கள் (?? பெண்கள் இறங்கிப் பார்த்ததில்லை) எல்லோரும் இறங்கி என்ன ஏதுவென்று பார்க்க கிளம்பி விட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்ன செய்தி தான் மிகவும் கலங்கடித்த ஒன்று..........அது..

2 comments:

  1. Excellent Article !!! What I wanted to write about the trains in India, you had written !!!

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...