Wednesday, June 20, 2012

ஒலியும், ஒளியும் - 1

மதுரையில் எனக்குத் தெரிந்து 80 -களில் தொலைக்காட்சிப் பெட்டி வரும் வரை வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. சாயங்கால வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி விட்டு பெரியவர்கள் சிறிது நேரம் வாசலில் உட்கார்ந்து கொண்டு அக்கம் பக்கதவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் அனைவரும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். தெருவில் வேக வைத்த கடலை, கருப்பு உளுந்து (உடித் - சௌராஷ்டிராவில்), பஞ்சு மிட்டாய், இன்னும் பல நொறுக்குத் தீனி விற்பவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். மெல்ல பொழுது சாயும் நேரத்தில் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய சென்றவுடன் அம்மாக்களும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள். வேலை முடிந்து அப்பாக்களும் வரும் நேரம் அது. சில வீடுகளில் அப்பாக்கள் வெளியே செல்லும் நேரமும் கூட! பாட்டிக்கள் மட்டும் யாருடனவாவது பேசிக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக நிதானமாக போய் கொண்டிருந்தது. (இன்னும் கூட மதுரையில் ஒரு சில இடங்களில்!!! )

ஆல் இந்தியா ரேடியோவில் பகல் வேலையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒலி பரப்புவார்கள். மிக நல்ல கருத்துகளையும், புதிர்களையும் நடுநடுவே சொல்வார்கள். இரவுகளில், இனிமையான, அருமையான பாடல்கள் ஒலிப்பரப்பாகும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, அந்த அமைதியானச் சூழலில் TMS /AM ராஜா/P .சுசீலா/PBSrinivas/SPB.... பாடிய பழைய பாடல்களை கேட்க ஆனந்தமாக இருக்கும். வணிக விளம்பரம் இல்லாமல், முழுப் பாடல்களையும் கேட்க முடிந்த காலமது! இலங்கை வானொலியும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. அப்துல் ஹமீது , கே.எஸ். ராஜாவின் காந்தக் குரலால் கவரப்பட்டவர்கள் பலர். பல நிகழ்ச்சிகளையும் நிறைய தகவல்களுடன் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கியவர்கள்.

இந்த தலைமுறை தொகுப்பாளர்கள் இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் .

எங்கள் வீட்டு வானொலி பெட்டி மிகவும் பெரியதாக இருந்தது. (அநேகமாக எல்லோர் வீட்டிலும் தான்) அதை on பண்ணியவுடன், நிதானமாக(?) ஒரு பல்பு உள்ளே எரியும். அதைத் தொடர்ந்து சிறிய சத்தத்துடன் வேண்டுமென்ற அலை வரிசையில் பாட்டு கேட்கலாம். உள்ளே இருக்கும் vaccum tubes எல்லாம் வெளியே தெரியும். knobs எல்லாம் பெரியதாக இருக்கும். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வானொலி பெட்டிகள் எல்லாம் எடையும் அதிகம். மின் இணைப்பில் மட்டுமே வேலை செய்யும். வெளியே ஏதாவது மோட்டார் பைக் சென்றாலோ அல்லது வேறு அதிர்வு ஏற்பட்டாலோ , ரேடியோ கொர்ர் ர் ர் ர் ...... என்று சத்தம் போடும்L

அப்போதெல்லாம் மர்பி ரேடியோ மிகவும் பிரபலம். அந்த விளம்பரத்தில் வாயில் விரலை வைத்து இருக்கும் கொழுகொழு குழந்தை படம் அதை விடவும் பிரபலம்.

காலையில் அம்மா எழுந்து ஸ்கந்த ஷஷ்டி கவசம் , சுப்ரபாதம் போன்ற பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கென்று ஒரு சிறிய டேப் ரெக்கார்டர் வைத்திருந்தார். நடு நடுவே பாட்டு நிற்கும் பொழுது, கேசட்டை வெளியே எடுத்து ஒரு பேனாவோ , பென்சிலோ வைத்து மெதுவாக அந்த துளையில் வைத்து சுற்றிச் சரி செய்வார்கள். விவரம் தெரியாத குழந்தைகள் டேப் மேக்னடிக் ரீலை முழுவதுமாக உருவி அலம்பல் செய்வதும் உண்டு.
சில சமயங்களில், மேக்னடிக் ரீல் உள்ளே மாட்டிக்கொண்டு 'கிர்' என்ற சத்தத்துடன் நின்று போவதும் உண்டு.

பல (தமிழ்/ஹிந்தி ) சினிமா பாடல் காசெட்டுகள், சுவாமி பாட்டு காசெட்டுகள், ஐயப்பன் சீசனில் யேசுதாஸ், மதுரை சோமுவின் பாடல்கள், கார்த்திகை மாதத்தில் TMS - இன் உள்ளம் உருக வைக்கும் முருகன் பாடல்கள்,சினிமா வசனங்கள் உள்ள காசெட்டுகள், சௌராஷ்டிரா நாடகங்கள் , நாங்கள் பேசி அதை ரெக்கார்ட் செய்த காசெட்டுகள் என்று பலவும் எங்களிடம் இருந்தன. பட்டிக்காடா பட்டணமா , தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், திரிசூலம் மற்றும் பல சிரிப்புக் காட்சி வசனங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு கேட்டிருக்கிறோம். நம் குழந்தைகளுக்கு அந்த டேப் ரெக்கார்டர் எல்லாம் ஏதோ museum ஒன்றில் தான் காட்ட முடியும் இப்பொழுது. !!!

இதற்கு முன் கிராமபோன் இருந்தது. அதைச் சுற்ற சுற்ற , ஊசி முனையை கவனமாக இசைத்தட்டின் மேல் வைத்தால் பாட்டு கேட்கும். ஸ்பீக்கர் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இன்னும் சிலர், அதை வைத்திருக்கிறார்கள். இசைத்தட்டுக்கள் சிறிய மற்றும் பெரிய வடிவங்களில் கிடைக்கும்.

பிறகு கையில் வசதியாக பிடித்துக் கொள்ளும் வகையில் மிகச் சிறிய வானொலி பெட்டி வந்தது. அதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம். மிகவும் வசதியாக இருந்தது. ஆர்வ மிகுதியால் உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்து விட்டு (அழகாக சிறியதாக இருந்த diode , capacitors ), மூட தெரியாமல் அடி வாங்கிய அனுபவமும் உண்டு. ஒரு நல்ல curious / இன்ஜினியரிங் mind-ஐ யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அப்போதிருந்தே இருந்தது😉

பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் காதோடு காதாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்கவும் , கமெண்டரி கேட்கவும் வசதியாக இருந்தது. அதுதான், அப்போதைய பேஷன்! பிறகு வாக்மேன் என்று ஒன்று வந்தது.

இன்றோ, தொலை பேசியிலே பாட்டுக் கேட்கும் வசதியும் வந்து விட்டதால், ரேடியோ ஒரு அவசியமற்ற சாதனமாகி விட்டது பலருக்கு. இன்றும் பாட்டுக் கேட்டு கொண்டே வீட்டு வேலைகள் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறதுJ

உலகம் சுருங்குகிறதோ இல்லையோ, வானொலிப்பெட்டி சுருங்கிவிட்டது என்பது தான் உண்மை.







































பல வடிவங்களில் கைக்கு அடக்கமான சைசில் ஒலிப்பெட்டிகள் சுருங்கி விட்டன.

                                                                    


No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...