Wednesday, June 13, 2012

இவர்கள் எங்கே, என்ன ஆனார்கள் ????

நான் எழுதுவதெல்லாம் 30 , 35 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் அரசமரம் ஏரியாவில் இருந்த காலங்களில் என் நினைவில் இருந்து...

நான் சிறுமியாக இருக்கும் பொழுது குழந்தைகள் பள்ளிக்குச்  செல்லும் முன் அதாவது, 8 மணிக்குள் ரோசாப் பூ /பெங்களூர் பூ என்று கலர் கலராக கூடையில் வைத்து விற்றுக் கொண்டு வருவார்கள். அவ்வளவு அழகாக இருக்கும். அப்போதே 50 பைசா , ஒரு ரூபாய் என்று பெங்களூர் பூ (dahlia flowers ) இருக்கும். 10 பைசா , 25 பைசாவிற்கு ரோசாப்  பூ கிடைக்கும். (!!)அவர்கள் இன்னமும் வருகிறார்களா?

ஒரு பெரிய கூடையில் பானையில் கட்டித் தயிர் , சின்ன பாத்திரத்தில் வெண்ணை எடுத்துக் கொண்டு தயிர் விற்கிறவர் வருவார். கட்டித் தயிரை அழகாக வெட்டி எடுத்துத் தருவார். ஒசியாக சிறிது வெண்ணையும் கொடுப்பார். யம் யம் யம் யம் .....

மதிய நேரத்தில் நன்கு காய்ச்சிய நெய் விற்பவர் வருவார். ( இவர் அடிக்கடி வரமாட்டார், மாதத்திற்கொருமுறை தான் வருவார் ) . அவரிடம் நெய் வாங்கினால் மட்டி போன்ற நெய் சிறிது கையில் ஊற்றுவார். அவ்வளவு சுவையாக இருக்கும்!

சிறிய தையல் மெசினை தலையில் வைத்து கொண்டு 'தையல் தையல்' என்று கூவிக் கொண்டே வருபவர்கள் இன்னும் வருகிறார்களா? சிறிது நேரத்தில் தைத்து கொடுப்பார்கள்!!!! அந்த சிறிய மெசினுக்குள் தைக்க வேண்டிய அத்தனையையும் வைத்திருப்பார்!!!!. வேலை நடுவில் பீடியையும் குடித்து சாப்பிட எதாவது கொடுத்தால் வாங்கியும் கொள்வார். எங்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு அவர் தைப்பதை வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். எல்லாமே புதிராக இருந்த காலமது!

'கத்தி, அருவாமனை சாணை பிடிக்கிறவர்கள்' ஒரு மெசினை தோளில் மாட்டிக் கொண்டு ''கத்தி அருவாமனை சாணை பிடிக்கனுமோ சாணை சாணை" என்று கூவியபடியே வருவார்கள். அழகாக கத்தியை அந்த மிஷனில் வைத்து பொறி பறக்க தீட்டி தருவார்கள். இதற்கெல்லாம் குறைந்த கூலி தான் கேட்பார்கள். அந்த பொறி பறப்பதை பார்ப்பதற்கு குழந்தைகள் பட்டாளம் அவரைச்  சுற்றி நின்று கொண்டிருக்கும். வேகமாக பெடலை அழுத்த அழுத்த சக்கரம் போல இருக்கும் மெசின் ஓட ஆரம்பிக்கும். அதன் ஓரத்தில் கத்தியை வைத்து சாணை பிடிக்க , கத்தியும் அடுத்த வெட்டிற்குத்  தயாராகிவிடும் :)

'பாத்திரத்துக்குப்  பே........ர்.... வெட்...றது' என்று ஒருவர் கையில் ஒரு சுத்தியல் மற்றும் ஆணி மாதிரி கூர்மையான ஒன்றை பையில் வைத்து கொண்டு வருவார். முன்பு விஷேங்களுக்குப்  போகும் போது ஏதாவது வீட்டு உபயோகத்திற்கான பாத்திரங்களை பரிசாக கொண்டு செல்வார்கள். இவர்களிடம் ஒரு சீட்டில் பெயர் எழுதி கொடுத்தால் 'நொட்டு, நொட்டென்று' ஒரு கோணத்தில் அந்த ஆணியை வைத்து தட்டி அழகாக எழுதிக் கொடுப்பார்கள். ஆனந்தா மெட்டல் வாசலில் மெஷின் வைத்து விரைவாக அடித்து கொடுக்க ஆரம்பித்த பிறகு மக்களும் அவர்களிடம் போக ஆரம்பித்தார்கள். அன்றே இவர்களின் வரவும் குறைய ஆரம்பித்து விட்டது. நாமும் மறந்து விட்டோம் இவர்களை. அவர்களும் வேறு தொழிலுக்கு மாறி இருப்பார்கள்!!!

இதைத் தவிர கிளி ஜோசியம், பூ, மீன், காய்கறி விற்பவர்கள், பின் காலைப் பொழுதில் போண்டா, வடை, பட்டாணி என்று பெரிய பாத்திரம் நிறைய நொறுக்கு தீனி கொண்டு வருபவர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், வேக வைத்த கடலை விற்பவர்கள், லேட் நைட்டில் வரும் பெரிய கிளாஸ் மூடிய (தோவ்ரின் கேஸு மிட்டாய் ) கண்ணாடியில் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள் , குல்பி ஐஸ் விற்பவர்கள், பட்டர் பன், கேக் , ஐஸ் கிரீம் கோன் என்று பல தினுசுகளில் இனிப்புகளை ஒரு வண்டியில் வைத்து கொண்டு வருபவர் ..............என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

இவர்களில் ஒரு சிலரை நான் மதுரைக்கு போகும் பொழுது பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ?? காலம் தான் எப்படி மாறி விட்டது!













No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...