Monday, June 25, 2012

பள்ளிப் பட்டமளிப்பு விழா!

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று என் மகளின் பள்ளிப் பட்டமளிப்பு விழா நடந்தது. வாழ்க்கையில் முதன் முதலில் நான் கண்டுகளித்த ஒன்று. காலை பத்து மணிக்கு விழா ஆரம்பமாகியது. மாணவ, மாணவியர்கள் 8.30 முதல் வரத் தொடங்கினார்கள். பெற்றோர்களும் நல்ல இருக்கையில் தங்கள் குழந்தைச்செல்வங்கள் வாங்கவிருக்கும் பட்டத்தினை அருகிலிருந்து பார்க்கும் வகையில் தங்கள் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் இடம் போட்டு வைத்திருந்தனர். முதல் வரிசை முழுவதும் உடல் ஊனமுற்றவர்களுக்காகவும், வயதான பெரியவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தன. மேடையில் அன்றைய சிறப்பு பேச்சாளர்களும், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் விழாவுக்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களும் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பள்ளியில் வேலைப்பார்த்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனியாக இருக்கைகள்.

விழா பள்ளிக்கு அருகிலிருக்கும் ஒரு கல்லூரியின் பெரிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 2500 முதல் 3000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் இருந்தன. அரங்கத்தின் நடுவில் அனைவரும் பார்க்கும் வகையில் மாணவ, மாணவியருக்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அரங்கம் முழுவதும் நீலநிறம் மற்றும் வெள்ளை நிற பலூன்களால், பள்ளியின் அடையாள நிறத்தால் கண்கவரும் விதத்ததில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நானும், என் மகளும் காலை 8.30 மணிக்கே ஆஜரானோம். அப்போதே கார் நிறுத்துமிடத்தில் அவ்வளவு கூட்டம். சிறப்பு பேருந்துகள் அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு விடப்பட்டிருந்தது. பட்டமளிப்பு உடையணிந்த மாணவர்களும், பெற்றோர்களும் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தார்கள். சீருடையணிந்த போலீஸ், அவர்களுடைய கார்களும், அவசர சிகிச்சை வண்டிகளும் அரங்கத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  மாணவ, மாணவியர்கள் உள்ளே செல்லும் வழியும் மற்றவர்களுக்கான வழிகளும் திறக்கப்பட பெரியவர்கள் அனைவரும் அரங்கத்தினுள் நுழைந்து நல்ல இடத்தில் அமர்ந்து கொண்டோம். நான் என் கணவருக்கும், என் மகனுக்கும் இருக்கைகள் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் மகளின் தோழிகளின் பெற்றோர்களும் வந்து சேர, அவர்களும் அமர்ந்து கொண்டு அவர்களின் பெற்றோர்களுக்காக அருகினில் இருக்கைகளை கைப்பை போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டோம்.

மாணவ, மாணவியர் குழு ஒன்று அழகாக இன்னிசை வாசித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. சிலர் கையில் பூங்கொத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். 9.30 மணியளவில் ஒரு குழு மேடையில் பாடத் துவங்கியது. எல்லாமே, எங்குமே ஆனந்தமயம். அங்கிருந்த அனைவருமே ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தார்கள். பார்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரைப் பார்த்தால் நமக்கும் அது தொற்றுக் கொள்ளும். அப்படித்தான் இருந்தது அந்தச்  சூழ்நிலை. நானும் கணவருக்குப் போன் போட்டு எங்கிருக்கிறார் என்று தெரிந்து கொண்டு விரைவில் விழா ஆரம்பித்து விடும் என்று சொல்லிவிட்டு நான் இருக்கும் இடத்தையும் தெரியப்படுத்தினேன். அவரும் 9.55 க்கு 'டாண்'  என்று வந்து சேர்ந்தார். பிறகு மேடைக்கு அருகில் போட்டோ எடுக்க வசதியாக இருக்கும் என்று சென்று விட்டார்.

சரியாக பத்து மணிக்கு இசை வாத்தியங்கள் முழங்க, மாணவ, மாணவியர் இரு வரிசைகளில் அழகாக அணிவகுத்து வர, அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது. மாணவிகள் அனைவரும் வெள்ளை கவுனும், தொப்பியும் அணிந்திருக்க, மாணவர்கள் அனைவரும் நீலநிற கவுனும், தொப்பியும் அணிந்திருந்து வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள். அனைவரும் அழகான செந்நிற செம்பருத்திப் பூவை கவுனில் அணிந்திருந்தார்கள். அன்று 482 பேர் பட்டம் பெற்றார்கள். பள்ளியில் முதல் 5% மதிப்பெண்கள் பெற்றவர்களை முன்வரிசையில் அமர்த்தி கௌரவித்தார்கள். மிகவும் பெருமையாக இருந்தது என் மகளையும் அவள் தோழிகளையும் அங்கே பார்ப்பதற்கு. ஒரு வழியாக அனைவரும் வந்த பிறகு தலைமைஆசிரியர் அனைவரையும் வரவேற்று மாணவர்களை உட்காருமாறு கேட்டுக் கொண்டார். அந்த வருடத்தின் மாணவர்களின் சாதனையைப்  பெருமையுடன் கூறினார். தேசியகீதத்தை அந்த பள்ளியில் பயின்ற அகாடமி அவார்ட் வின்னர் தன் காந்தக்குரலால் பாடி நிகழ்ச்சிகளை  ஆரம்பித்தார்.  அன்றைய சிறப்பு விருந்தினர்-அந்தப் பள்ளியில் படித்து ஆசிரியராக வேலை பார்த்தவர், தன் அனுபவங்களையும், மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கையைப் பற்றியும் நகைச்சுவைப்பட அருமையாக பேசினார்.

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு நாட்டுக்காக ராணுவத்தில் சேரவிருக்கும் மாணவ, மாணவிகளும் கௌரவிக்கப்பாட்டர்கள்.

மாணவ, மாணவியர்களின் பெயர்கள் அழைக்கப்பட ஒவ்வொருவரும் அவர்களுடைய டிப்ளமோவை வாங்கிக் கொண்டு தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினர், வகுப்பு ஆசிரியர்களிடம் கைக்குலுக்கி விட்டு, மேடையிலிருந்து இறங்கிக் கொள்ள, அங்கேயே ஒருவர் அவர்களை அந்த பட்டமளிப்பு ஆடையில் டிப்ளமோவுடன் ஒரு புகைப்படம் க்ளிக் செய்து கொண்டிருந்தார். பெற்றோர்களும், தங்களிடமிருந்த ஐ-போனில், ஐ-பேடில், காமெராவில் புகைப்படம் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். தங்கள் குழந்தைகளின் பெயரைக் கேட்டவுடன் உணர்ச்சிப் பொங்க விசிலடித்தும், கூக்குரல் கொடுத்தும் ரகளை செய்தார்கள். சிலர் அரங்கம் அதிர மணி அடித்தும் ஹார்ன் ஒலி எழுப்பியும் ஆர்பாட்டம் செய்தார்கள். விழா நடுவில் மாணவ, மாணவியர்களும், கடற்கரைப்பந்து( beach ball ) ஆடியும் கலகலப்பாக்க அனைவரும் பட்டத்தை வாங்கிய பின் தலைமை ஆசிரியர் வாழ்த்த, மாணவர்களும் தங்கள் தொப்பியை தூக்கிப் போட,  அரங்கம் கலையத் தொடங்கியது.

 அரங்கத்திற்கு வெளியே அனைவரும் தத்தம் நண்பர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டு விடைபெற்றோம். பல மாணவ, மாணவியர்களின் வீட்டில் விருந்துகளும், விழாக்களுமாய் அன்றைய பொழுது இனிதே கழிந்தது.

நான் பள்ளிப்படிப்பு முடித்த பொழுது அடுத்து கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு என்னை தயார் செய்யும் வகையில் அந்த தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன்.  இங்கோ, பள்ளிப்படிப்பு முடிக்கும் பொழுது அவர்கள் எந்த கல்லூரியில் சேர்ந்து என்ன படிக்கப் போகிறார்கள் படிக்கவில்லை என்றால் எங்கு வேலைக்குப் போகப் போகிறார்கள் அல்லது சிறிது காலம் இடைவெளி விட்டு படிக்கப் போகிறார்களா என்று ஒரு தெளிந்த நிலையில் இருக்கிறார்கள்!

ம்ம்ம்ம்....




No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...