Wednesday, June 13, 2012

கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவு...

பள்ளியில் படிக்கும் பொழுது அந்த கடைசி நாள் பரீட்சை முடிந்தவுடன் மனதில் பிறக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வீட்டிற்கு வந்தவுடன் புத்தகப் பையை ஓரமாக வைத்து விட்டு, நன்றாக சாப்பிட்டுத் தூங்கினால் சில சமயங்களில் அடுத்த நாள் மதியம் தான் எந்திரிப்போம்.(நான், என் அக்கா, தங்கை , தம்பிகளும் தான் ). லீவு விட்டவுடன், எங்கே யார் யார் வீட்டுக்கு எப்போது போகப்போகிறோம் என்று பிளான் போட ஆரம்பித்து விடுவோம்.

முதலில் பாட்டி வீட்டுக்கு ஒரு நாள் விசிட். நன்றாக மட்டன் கறிக் குழம்பு, சுக்கா வறுவல்/ பிரியாணி சாப்பிட்டு விட்டு பக்கத்திலிருக்கும் தியேட்டர்ல் ஒரு மதிய ஷோ பார்த்து விட்டு, இடைவேளையில் ஐஸ் கிரீம், முறுக்கு, கடலை மிட்டாய் என நொறுக்கி விட்டு, வீட்டுக்கு வந்து சூடாக காபி சாப்பிட சுகமாக இருக்கும். பாட்டி வீடு தென்னோலைகார தெருவில் இருந்தது. ஞாயிற்று கிழமைகளில் தெருவில் ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. அங்கு ரிக்க்ஷா வாடகைக்கு விடுபவர் வீட்டு முன் நின்று கொன்றுகொண்டிருக்கும் ரிக்க்ஷாவில் ஏறி கொஞ்ச நேரம் ரிக்க்ஷா ஓட்டுவதும், பெல் அடித்தவுடன் வாடகைக்கு விடுபவர் எங்களை விரட்டி அடிப்பதும் என்று கொஞ்சம் (??) கலாட்டா செய்ததும் சுகம். முதலில் மூன்று சக்கர வண்டி பழகிய புதிதில், அதை வாடகைக்கு எடுத்துத் தெருவை சுற்றி சுற்றி வந்ததும், நேரமாகி விட்டதே , திரும்பக் கொண்டு போய் கொடுக்கணுமே என்று வேக வேகமாக போனதும் இன்றும் நினைவில்.

மாலை நேரத்தில் சூடான போளியல், சக்கரை வடை (மிகவும் பிரபலமானது) நெய் வழிய , வாயெல்லாம் எண்ணெய் பிசுக்குடன் சாப்பிட்டதும் அலாதி சுகம். பிறகு பாட்டியோ, பெரியம்மோவோ மல்லிகை பூவுடன் kattiya மனோரஞ்சிதம் (கெலா பூல்) /பிச்சிப் பூ/முல்லை பூ/ கனகாம்பரம் வாங்கி வருவார்கள். முகம் கழுவி , பூச்சூடி , இரவு உணவுக்கு ரெடி ஆகி விடுவோம். இரவு புளியோதரை(அம்பட் பாத் ), சுண்டல்(கச்சனோ ) , பன் ஹல்வா/சேமியா சாப்பிட்டுவிட்டு, ஒரு தூக்கு சட்டியில் அப்பாவுக்கும், பாட்டிக்கும் எடுத்து கொண்டு, ரிக்க்ஷாவில் ஏறி மீண்டும் க்ருஷ்ணாபுரத்திற்க்கு(அங்கு தான் எங்கள் வீடு ஆரம்பத்தில் இருந்தது) பயணம்.

 எட்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பொழுது, பெரிய மாமா S.S.காலனியில் வீடு வாங்கி போயிருந்தார். அங்கு போவதென்றால், ஆரப்பாளையம்/அரசரடி பஸ் பிடித்து போக வேண்டும். அப்போதெல்லாம் எங்கு சென்றாலும் பஸ் பயணம் , மிகவும் அனுபவித்துச் சென்றோம். நாங்கள் போகும் பொழுது சில சமயம் பாட்டியும், பெரியம்மா குடும்பமும் (அவருக்கு 5 பெண்கள், அவர்கள் எங்களுக்கு எல்லாம் மூத்தவர்கள், 2 பையன்கள் ), இன்னொரு பெரியம்மா, அவர் பெண்( கொஞ்சம் சீனியர்), இரண்டாவது மாமா (அவருக்கு 1 பெண், 2 பையன்கள்) என்று ஒரு பெரிய குரூப் செல்வோம். மாமியும், நாங்கள் வருவதை முன் கூட்டியே தெரிந்து, நன்றாக சமைத்து வைத்திருப்பார். போனவுடன் ரஸ்னா போட்டு குடித்து விட்டு, சிறிது அரட்டை. பெரிய மாமாவிற்கு நான்கு பெண்கள். சில சமயம், பெரியவர்கள் தாயம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். வீடு இரண்டுபட்டு போகும். நாங்கள் சுற்றி நின்றுகொண்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்வோம்.(அப்போதுதான் டிவி கிடையாதே). காசு வைத்து விளையாடுவார்கள். என் பெரிய மாமா எங்களை சத்தம் போடாதீர்கள் என்று சொன்னாலும் அந்த கடைசி நிமிட ஒன்னு போட்டு யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை நகம் கடித்து கொண்டே பார்த்ததும், கத்தியதும் சுகம் சுகம் சுகம். அங்கேயே நாங்கள் ஒரு வாரம் வரை தங்கி இருந்து பக்கத்திலிருக்கும் குரு, வெள்ளைகண்ணு , மிட்லேன்ட் , நடராஜ் தியேட்டர்க ளில், நல்ல படங்கள் ஓடினால் பார்த்து விட்டு மீண்டும் க்ருஷ்ணாபுரத்திற்க்கு பயணம்.

இப்போது மாமாவின் குடும்பங்கள் எங்கள் வீட்டில் :) பெரியவர்கள் வந்து விட்டுப் போய் விடுவார்கள். என் அம்மா மிகவும் அருமையாக சமைப்பார். லீவ் என்றால், அரிசி மாவில் செய்யும் கொழக்கட்டை( தொவ்ளோ), பூரி, நான்-வெஜ் ஐட்டம், கருவாட்டு குழம்பு என்று வெட்டுவோம். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் பொழுது, பக்கத்திலிருக்கும் அலங்கார், சிந்தாமணி, அபிராமி தியேட்டர்களில் ஓடும் படங்களை பார்ப்போம்.

இப்போது இரண்டாவது மாமா வீட்டுக்கு விஜயம். அவர் அண்ணா நகரில், இருந்தபோது, நன்றாக சாப்பிட்டு விட்டு, சினி/மினி/சுகப்ரியா தியேட்டர்க்கு விஜயம்.
பெரியம்மா வீட்டுக்கு போனால் சாப்பாடு முடிந்தவுடன், மீனாக்ஷி, மது, (இன்னும் பல தியேட்டர்கள் , பெயர்கள் நினைவில்லை) ஏதாவது ஒன்றில், படம் பார்த்து விட்டு வீடு திரும்புவோம்.

பார்த்த படத்தை கூட நான்கு,ஐந்து முறை பார்த்திருக்கிறோம்(மூன்றாம் பிறை, தங்க மகன் இன்னும் பல படங்கள்).
ஆக மொத்தம், விடுமுறை சீசனில் வந்த படங்களை பார்த்து விடுவோம். வேறு பொழுதுபோக்கு என்ன மதுரையில் அப்போது ??

இது தவிர, பாட்டியுடன் அழகர் கோவில் விசிட் (அங்கு தங்கி குரங்குகளுடன் விளையாடியதை மறக்கவே முடியாது, அது ஒரு தனிக் கதை) , யானைமலை விசிட் (அங்கும் தங்கி, ஆற்றில் குளித்து, தாமரை பூவை பறித்து விளையாடி இருக்கிறோம்), திருப்பரங்குன்றம், எப்போதாவது பழனி, குற்றாலம், திருப்பதி ட்ரிப்ஸ்..

அப்போதெல்லாம் கூட்டம் இப்போது போல் இருக்காது. எங்கு சென்றாலும் பஸ்/குதிரை வண்டி/ ரிக்க்ஷாவில் பயணம்.எல்லாம் முடியும் போது, லீவும் முடிய ஆரம்பித்து விடும். அப்போதெல்லாம் லீவில், முடிந்து போன எக்ஸாம் கேள்வித்தாளிலிருந்து எல்லா கேள்விகளுக்கும், பதில் எழுதிக் கொண்டு போக வேண்டும். அந்த வேலையை ஆரம்பித்து விடுவோம். அழகாக எழுத்துப்பிழை இல்லாமல், அடித்து திருத்தாமல் எழுத மிகவும் பிடிக்கும். மற்றும் கிட்டிபுல்லு, பம்பரம், ஸ்கிப்பிங், கலர் கலர் வாட் கலர் என்று வீட்டுக்கு வீடு அந்த கலர் தேடி ஓடி விளையாடியதும், தீப்பெட்டி சைசில் படங்களை வைத்து சிங்கி பொட்டி விளையாடியதும், வெயிலில் அலைந்தால் கருப்பாகி விடுவாய் என்று அம்மா பயமுறுத்திய போதும் வெளியில் சுற்றியதும், தேன் மிட்டாய், கமர்கட் வாங்கி சாப்பிட்டதும், நடுவில், PROMOTED என்று பிரிண்ட் செய்யப்பட்ட போஸ்ட் கார்டு பார்த்தவுடன் இன்னும் குஷியாகி, எப்போது ஸ்கூல் திறக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்ததுமாய் கோடை விடுமுறை முற்று பெறும் :)


2 comments:

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...