Monday, July 2, 2012

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்


என் மாமாவிடமிருந்து பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு முடிந்த அளவு நன்கொடைகளைத் தருமாறும், நண்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியும் வந்த கடிதத்தைப் பார்த்தவுடன் இக்கோவிலைப் பற்றிய என் நினைவுகள்.

தெற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயரும் இந்தக் கோவிலுக்கு உண்டு.

என் பாட்டி வீடு தென்னோலைக்காரத் தெருவில் இருந்த காலங்களில் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சௌராஷ்ட்ரா மத்திய சபையின் கீழ் இந்த கோவில் வருவதால் விசேஷங்களுக்கும் குறைவில்லை. கோவில் நுழைவாயிலின் இடதுபுறம் கருப்பசாமி வீச்சரிவாளுடன் மஞ்சள்/சந்தனம் பூசியபடி காட்சி தருகிறார். நான் கருப்பண்ணச்சாமி ஒரு கிராமத்துக் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணமான பிறகு என் கணவர் ஒப்லா குடும்பக் கடவுள் என்ற விஷயம் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பொதுவாக, பெருமாள் அல்லது முருகக் கடவுள் தான் பெரும்பாலான சௌராஷ்ட்ரா குடும்பங்களுக்கு குடும்பக் கடவுளாக கேள்விப்பட்டிருக்கிறேன்! 

கோவில் வாசல் என்றால் பூக்கடைகாரர், செருப்பு பார்த்துக் கொள்பவர், மிட்டாய் விற்பவர்கள் இருக்க வேண்டும் என்பது எழுதாத சட்டம். இங்கும் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால்  வைஷ்ணவ விநாயகரைத் தரிசித்தப் பிறகு ஆஜானுபாகான ஆஞ்சநேயர். மக்கள் எண்ணெய் விளக்கு ஏற்றி ஏற்றி அந்த இடம் முழுவதும் ஒரே எண்ணெய் பிசுக்கு. சில நேரங்களில், துளசி மாலையுடனும், பக்தர்களின் ராமஜெயம் மாலையுடனும், பல நேரங்களில் வடை மாலையுடனும் 😃 அழகாக காட்சி அளித்துக் கொண்டிருப்பார். அவரைத் தாண்டி படியேறி மேலே போனால் அழகான லட்டு கோபால்!

அவரைத் தொடர்ந்து மூலவர் பெருமாளின் அழகான திவ்ய தரிசனம். பெருமாளை விதவிதமாக அலங்காரம் செய்து பக்தர்களை பரவசமூட்டுவது இங்குள்ள அர்ச்சகர்களின் சிறப்பு. காலை, மாலை, இரவு நேர பூஜைகளை சிறு வயதில் பாட்டி, பெரியம்மா, பெரியம்மா மகளுடன் கண்டு களித்திருக்கிறேன். அம்மனும் மங்களகரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அந்தக்  கோவிலில் சிறு வயதில் நான் ரசித்தது, அங்கிருக்கும் பெரிய பெரியவண்ண கண்ணாடி குடுவை விளக்குகள் தான். பார்ப்பதற்கு மிகவும்அழகாக இருக்கும். இப்போது அவை எல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. கோவில் சுவரில் வரைந்திருக்கும் ஓவியங்களும் அழகு.

பெருமாள் கோவிலுக்கே உரித்த துளசி, பச்சைக் கற்பூரம் வாசனையுடன் தீர்த்தம் திவ்யமாக இருக்கும். அப்படியே கீழிறங்கினால் சுவாமி புறப்பாட்டிற்க்கான அனைத்து வாகனங்களும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அங்கு தான் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு காட்சி தரும் பரமபத வாசல். அதன் பிறகு நவக்கிரகங்களை வழிப்பட்டு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு அங்கிருக்கும் பெரிய நாமம் போட்ட உண்டியலில் காணிக்கையைப் போட்டு திருப்தியுடன் வெளியே வந்து மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கோவிலைச் சேர்ந்த இடத்தில் கோவிலுக்கான யானை இருக்கும் இடத்திற்கு சென்று யானையைச் சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு வர என்று நன்கு பொழுது போகும்.

இந்தக் கோவிலில் பங்குனித் திருவிழா, கோலாட்டம் எல்லாம் மிகவும் விமரிசையாக நடக்கும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோலாட்ட நிகழ்ச்சியில் அனைத்து இளம் வயது பெண்களும் கோலாட்ட குச்சியுடன் வந்து வளைத்து வளைத்து ஆட கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சின்னக் குழந்தைகள் கோலாட்ட குச்சியின் முனையில் ரோஸ் கலர் ஜவ்வு மிட்டாயை வைத்துக் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பங்குனி திருவிழாவின் போதும் 'ஜேஜே' என்ற திருவிழா கூட்டத்துடன் சுவாமி ஊர்வலம் கோலாகலமாக நடக்கும். சௌராஷ்டிரா மக்களின் ஆஸ்தான கோவில்களுள் இதுவும் ஒன்று. இன்றும் பலர் தங்கள் பெற்றோர்களின் திதியன்று சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பொங்கல் பிரசாதமும் சூப்பராக இருக்கும் 😊



No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...