Tuesday, July 10, 2012

ஹைர ஹைர ஐரோப்பா, ஹைர ஹைர ஐரோப்பா..

சென்ற வருடம் இதே நாளில் எங்கள் ஐரோப்பா பயணம். அதன் நினைவுகளிலிருந்து...

பயணக் குறிப்புகள் - 1. திட்டமிடல்

எங்களுடைய நெடு நாளைய கனவான ஐரோப்பா பயணம் சென்ற வருடம் நிறைவேறியது. இதோ,இதோ என்று இரண்டு வருடங்களாகத் திட்டமிட்டும், சென்ற வருடம் தான் செல்ல முடிந்தது. 2011 ஜனவரி மாதமே விமான டிக்கெட்டுகள் பார்க்க ஆரம்பித்து ஏறும் இடம், ஐரோப்பாவில் இறங்கும் இடம், பின் இந்தியா போகுமிடம் என்று பல அலைக்களிப்புக்களுக்குப்பின் ஒரு வழியாக டிக்கெட்டுகள் வாங்கி முடித்தோம். அப்பாடா! ஒரு பெரிய வேலை முடிந்து விட்டது என்ற திருப்திக்குப்பின் ஜெர்மனியில் இருக்கும் நண்பரிடமும் விசயத்தை சொல்லிவிட்டு, சுற்றிப் பார்க்கும் இடங்களைத் திட்டமிட ஆரம்பிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம்.

மார்ச்சில் ஆரம்பித்த விசா விண்ணப்பங்கள் அந்தா, இந்தா என்று இழுத்தடித்துக்கொண்டு ஏப்ரலில் முடிந்து, பெல்ஜியம் தூதரகத்திற்கு அனுப்பி வைத்தோம். நிறைய கேள்விகள்! அதற்குப் பதில்களும் அதை நிரூபிக்கும் சான்றிதழ்களும் என்று ஒரு பெரிய பேப்பர் மூட்டையை பாஸ்போர்ட்டுடன் அனுப்பி வைத்தோம். போன சில நாட்களில் எங்களிடமே எல்லாம் திரும்பி வந்து விட்டது. காரணம்😐 எங்கு அதிக நாட்கள் தங்கப் போகிறோமோ அந்த நாட்டிற்கு விண்ணப்பிக்குமாறு செய்தி சொல்லி இருந்தார்கள். பிறகு ஜெர்மனி தூதரகத்திற்குப் புதிதாக விசா விண்ணப்பித்தோம். முதல் வாரத்திலேயே அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது நேரில் வரவேண்டுமென்று😓

என் கணவரும் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டுப் போனால், நூத்தியெட்டு கேள்விகள் (ஒரு பேச்சுக்குத்தான்! ) கேட்டார்களாம். எந்த நாட்டில் முதலில் இறங்குகிறீர்கள் என்பதிலிருந்து, எந்தெந்த ஊர்களை எப்படி எல்லாம்(கார் /பஸ் / ரயில் /விமானம் ) சுற்றிப் பார்க்க போகிறீர்கள், நிறைய செலவாகுமே? யார் வீட்டில் தங்கப் போகிறீர்கள்? என்று நண்பரின் விலாசம், அவர் வேலை செய்யுமிடம், பண நிலவரம் என்று எல்லா தகவல்களையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். என் மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் பள்ளியிலிருந்து ஒரு தகவலையும் கேட்டு, கடைசியில் விசாவும் வந்து சேர்ந்தது. ட்ராவல் இன்சூரன்ஸ் என்று ஒரு தண்டத்தையும் வாங்கச் சொன்னார்கள். இது எல்லாம் அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்களுக்குத் தான்!!! அது என்ன கணக்கோ தெரியவில்லை:( அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் இநத வேலை எல்லாம் கிடையாது. டிக்கெட் எடுத்தோமா போனோமா என்று மிகவும் எளிமையாக இருந்திருக்கும்!) விசா வாங்கும் இரண்டாவது பெரிய வேலையும் முடித்தாயிற்று!

இன்டர்நேஷனல் லைசென்சும் வாங்கியாகி விட்டது.

மே மாதம் முதல் எங்கெல்லாம் போகப் போகிறோம் என்பதைத் திட்டமிட ஆரம்பித்து விட்டோம். நண்பர் முருகனும், செல்வியும் மிக அழகாக எங்கள் பயணத்திட்டத்தை வகுத்திருந்தார்கள். முதலில் கொண்டு போகும் சூட்கேசுகளை விமான நிலையத்தில் வைத்துவிட்டுச் செல்லும் வகை இருக்கிறதா என்று பார்த்தோம். எதேச்சையாக கணவரின் உறவினர் மகள் மற்றும் அவர் கணவர் ப்ரஸ்ஸெல்சில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்களிடமும் எங்கள் பயணத்தைக் கூறி பெட்டிகளை வைத்துக்கொள்ள முடியுமா என்று உதவி கேட்டோம். அவரும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி விமான நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்வதாக கூறினார். அடுத்த பிரச்சினையும் முடிந்தது.

வாடகைக்கார் விமான நிலையத்திலிருந்தே எடுக்க ஏற்பாடு செய்தாயிற்று. தானியங்கி என்றால் வாடகை அதிகம் என்பதினால் ஷிஃப்ட் காரை வாடகைக்கு எடுத்தோம். இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் கார் ஓட்ட வேண்டியதில்லை. என் கணவருக்கும் கியர் காரை ஓட்டப்பிடிக்கும் என்பதினால் அவருக்கும் பிரச்சினையில்லை என்று சொல்லிவிட்டார். அந்த ஊரில் தங்கப் போகிற விடுதியில் அறையையும் முன் பதிவு செய்து விட்டோம்.

ஆக மொத்தம் பயணத்திற்கு வேண்டிய முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்தாயிற்று. எங்கள் பயண குறிப்பில் ஸ்விட்சர்லாண்டும் இருந்ததால் அந்த சீதோஷண நிலைக்கேற்றவாறு உடைகளையும், இந்தியாவிற்கான உடைகளையும், மற்ற ஐரோப்பா நகரங்களுக்கான உடைகளையும், நண்பர்களுக்கான பரிசுப்பொருட்களையும், கேமரா, பைனாகுலர், லேப்டாப், நண்பர் வாங்கி வரச்சொன்ன ஐபேட், மற்ற நண்பர் இந்தியாவிலிருக்கும் அவர் மச்சினருக்காக எடுத்துச் செல்ல சொன்ன லேப்டாப் சகிதமாக சூட்கேசில் வைத்து முடிக்கும் போது வீடு நிறைய சூட்கேசுகள் ஆகி விட்டது!

அந்த நாளும் வந்திடாதோ என்று நாங்கள் காத்துக் கொண்டிருந்த தினமும் வந்தே விட்டது. கொஞ்சம் படபடப்பு, கொஞ்சம் கவலை ( இன்னும் ஏதாவது மறந்து விட்டோமோ என்று) நிறைய சந்தோஷத்துடன் அன்றைய தினம் ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்து குளித்து விட்டு அனைவரும் காலை உணவை முடித்து பாத்திரங்களைக் கழுவி ஃபிரிட்ஜை சுத்தம் செய்து சுவாமி கும்பிட்டு விட்டு பக்தி பரவசமாய் விபூதி, குங்குமம் அணிந்து, வண்டியில் எல்லா சாமான்களையும் ஏற்றி விட்டு பக்கத்து வீட்டில் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டுச் சாவியை கொடுத்து விட்டு விடை பெற்றோம். துளசிச் செடியை நண்பரின் வீட்டில் வைத்து விட்டு வேனில் ஏறி கடவுளை வேண்டிக் கொண்டுப் பயணமானோம். குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்குமாறு பணம் கொடுத்தார்கள் (அவர்கள், வட மாநிலத்தவர் , அவர்களுடைய அப்பா, அம்மா அப்போது வந்திருந்தார்கள்) அவர்களிடம் தோட்டத்திற்குத் தண்ணீரை மறக்காமல் ஊற்றுமாறு சொல்லி விட்டு வீட்டிலிருந்து இரண்டு மணி நேரத்தில் வரும் ஒரு ரெஸ்ட் ஏரியாவில் வண்டியை நிறுத்தி சிறிது வயிற்றுக்கும் உணவு கொடுத்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து போக்குவரத்து மிகுந்த நியூஜெர்சி வந்து சேர்ந்தோம்.

நியூஜெர்சியில் நண்பர் ஒருவர் எங்களை நியூயார்க் விமான நிலையத்தில் விட்டு விட்டு வண்டியை அவர் வீட்டில் வைத்துக்கொள்வது தான் திட்டம். அதன் படி அங்கு சென்று அவரையும் அவர் நண்பர்களையும் பார்த்துப் பேசி விட்டுப் புறப்பட்டோம். அங்கிருந்து, ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தோம். எல்லா சூட்கேசுகளையும் இறக்கி வைத்து விட்டு டிக்கெட் கவுன்ட்டர் சென்று செக்-இன் செய்து விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது மாலை மணி 5.30. சிற்றுண்டி முடித்து விட்டு வந்த பின் செக்யூரிட்டி செக் வழியாக வருவதற்குள் விழி பிதுங்கி விட்டது.

அவ்வளவு கூட்டம்.இதெல்லாம் முடிந்து நாங்கள் பயணிக்கவிருந்த இடத்திற்கு வந்து விமானத்தில் ஏற, விமானம் 6.30க்கு புறப்பட்டது.



















No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...