Tuesday, July 24, 2012

பெர்லின், ஜெர்மனி - பயணக் குறிப்புகள்

அடுத்த நாள் காலையில் எழுந்து காலை உணவை முடித்து விட்டு விபூவுடன் பெர்லின் நகருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அது நண்பரின் வீட்டிலிருந்து இரண்டரை மணிநேரத் தொலைவில் இருந்தது. நெடுஞ்சாலையில் எங்கள் காரை மற்ற கார்கள் முந்திச் செல்ல நாங்கள் பதட்டப்படாமல் போய்க் கொண்டிருந்தோம்😊

ஜெர்மனியில் எல்லோரும் அசுர வேகத்தில் ஓட்டுகிறார்கள்! எங்கள் காரோ இந்தா நகர்வேனா என்று ஊர்ந்து கொண்டிருப்பது போல் இருந்தது. தமிழ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ஜெர்மனியின் ரோடுகளில் செல்லுவதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெர்லின் நகரத்தில் காரை ஒரு இடத்தில் நிறுத்தி அதற்கான கட்டணத்தையும் கட்டிவிட்டு பாராளுமன்றம்(Reichstag) பார்க்க கிளம்பினோம். அங்கு வருவதாக ஏற்கெனவே நண்பர் முருகன் மூலம் முன்பதிவு செய்து விட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போக முடிந்தது. அந்த கட்டடமும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. உள்ளே பாஸ்போர்ட் சகிதம் செல்ல, எல்லாவற்றையும் சரிபார்த்தவுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். ஒவ்வொரு குழுவாக வேகமாக செல்லும் லிஃப்ட் மூலம் மேலே அழைத்துச் சென்றார்கள். மேலே கண்ணாடியால் ஒரு அழகிய dome கட்டி இருக்கிறார்கள்.
நாங்கள் சென்ற போது ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. அதைச் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே நின்று கொண்டு பெர்லின் நகரின் உயர்ந்த கட்டடங்களையும், தேவாலயங்களையும், நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்த எங்களைப் போன்ற சுற்றுலாவினரையும் சுற்றி வரப் பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.

வழி நடுவே பலூன், ஐஸ்கிரீம் என்று தெருவில் விற்றுக் கொண்டிருப்பவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோடைகாலத்தில் வெளிநாட்டினரும் அதிகம் வருவதால் அவர்களுக்கும் நல்ல விற்பனை. நடுவில் வயிற்றுக்கும் சிறிது ஈந்து விட்டு, காசு கொடுத்து ரெஸ்ட்ரூம் போய்விட்டு, Brandenburger Tor என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சென்றோம். இந்த Brandenburg Gate தான் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை உலகப்போரில் பிரித்துக் காட்டிய இடமாகவும், உயர் அதிகாரிகள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் செல்லும் வழியாகவும் இருந்திருக்கிறது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கும், மேற்கு ஜெர்மனியும் இணைந்த பிறகு இது வரலாற்றில் இன்னும் முக்கிய இடமாகி விட்டது. நாங்கள் சென்ற அன்று அங்கு நல்ல கூட்டம். ஒரு புறம், சுடச்சுட ஆட்டுக்கறியை சுட்டு ரொட்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பல கலைநிகழ்ச்சிகளும் நடப்பதற்கான அரங்குகள் போடப்பட்டிருந்தன. உருளைக்கிழங்கு fries , ஐஸ்கிரீம், கபாப் வாங்கிக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தோம். நல்ல வெயில். உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் வேடமிட்டு நின்று கொண்டிருப்போருடன் நாங்களும் படம் எடுத்துக் கொண்டோம்.

அந்த இடமே திருவிழா கூட்டம் போல் இருந்தது. பல விதமான மொழிகளில் பேசிக்கொண்டு பல நாட்டு மக்கள்! நகர் முழுவதும் உலகப்போரைப் பற்றிய அருங்காட்சியகங்கள். அழகான கட்டடடங்களுடன் மற்ற நாடுகளின் இம்மிக்ரேஷன் அலுவலகங்கள். பூங்காக்கள். இடிபட்ட பெர்லின் சுவரிலிருந்து எடுத்த சில்லுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள்!நண்பரின் மகள் விபூ, எங்களுக்கு அந்த நகரின் வரலாற்றையும் ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் அருமையாக சொல்லிக் கொண்டே வந்தார்.கடைக்குச் சென்று சில நினைவுப் பொருட்களையும் வாங்கினோம்.


அங்கிருந்து மீண்டும் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து சென்று holocaust memorial பார்க்க கிளம்பினோம். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியர்களால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான யூதர்களின் நினைவிடமாக அதைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடம் முழுவதும் சிமெண்ட்டால் சிறு,சிறு பாளங்களாக எந்தவித அலங்காரமும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே யாரும் அதன் மேல் நடக்கக் கூடாது. தெரியாமல் நடந்தாலும் அங்கிருக்கும் பாதுகாவலர்கள் அவர்களை இறங்கச் சொல்லிவிடுகிறார்கள். ஒரு மயான அமைதி அங்கே. சிலர் அந்த சிமெண்ட் பாளங்களை தடவிக் கொண்டே முகம் இறுகிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களோ, கொலையில் தங்கள் குடும்பத்தில் யாரையாவது பறிகொடுத்தவரோ என்னவோ! பார்வையாளர்களுக்கு அன்று நடந்த கொடுமையை விவரிக்கும் வகையில் படங்களுடனும், வீடியோ காட்சிகளுடனும், போரில் பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விரிவாக விளக்கி இருக்கிறார்கள். இவ்வளவு அட்டாகசம் செய்த ஜெர்மனியரசே இந்த நினைவிடைத்தை அமைத்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

அங்கிருந்த படங்களும், அதற்கு கீழ் எழுதி இருந்த வாசகங்களும் நெஞ்சை உருக வைக்கும். அதிலிருந்த முக்கால்வாசி காட்சிகளை அருமையாக The Pianist என்ற படத்தில் எடுத்திருந்தார்கள். அந்த படத்தின் டைரக்டர் தன் குடும்பம் எப்படி இந்த கொலையில் சிதறுண்டு போனது என்றும், அவர் கண்முன்னே நடந்த நிகழ்ச்சிகளை படத்தில் கொண்டுவர எப்படி மெனக்கெட்டார் என்பதையும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்த போது நாமெல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன். அங்கிருந்து வெளியே வரும் பொழுது அனைவர் முகமும் இருண்டு சிலர் அழுத முகத்துடன் வந்ததையும் பார்க்க முடிந்தது. இன்றும் சிறிலங்காவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடக்கும் கொடுமை இப்படிப்பட்டது தான் என்று நினைக்கையில் மனம் கனக்கத் தான் செய்கிறது. அதற்குள் என் மகன் கீழே விழுந்து கையில் அடிப்பட்டு, அவசர அவசரமாக ஐஸ் ஒத்தடம் கொடுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருக்குமோ என்று பயந்து ஒரு பெரிய களேபரம் நடந்தது. அழுதழுது நடந்த களைப்பால் மீண்டும் மகனுக்கு பசியெடுக்க அருகிலிருக்கும் ஐஸ்கிரீம் கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே சிறிது இளைப்பாறினோம். ஐஸ்கிரீம் மிகவும் சுவையாக இருந்தது😋

மீண்டும் காரில் ஏறி பெர்லின் சுவர் பார்க்க கிளம்பினோம். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரிக்கும் விதமாக கட்டப்பட்ட சுவர், ஜெர்மனியை இருநாடுகளாக துண்டாடியது. அதனால் பிரிந்த குடும்பங்களும், அவர்கள் பட்ட துன்பங்களும் பல. அவற்றை எல்லாம் நன்கு டாகுமெண்ட் செய்து வைத்திருக்கிறார்கள். சுவருக்கு எதிர்த்தாற்போல் உயரத்திலிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுவர் நீள்கிறது! இதனால் குழந்தைகளைப் பிரிந்தவர்கள், கணவன்/பெற்றோர்/மனைவியைப் பிரிந்தவர்கள் என்ன அவதிப்பட்டிருப்பார்கள்? வரலாறு மிகவும் கொடியது என்று உணர்ந்த தருணம்.

இப்போது மனதாலும், நடந்து நடந்து சென்றதாலும் களைப்பாக இருந்ததால் வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். முருகன் பார்த்து விட்டு வரச் சொன்ன Alexanderplatz என்ற இடத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. மீண்டும் இரண்டு மணிநேரப் பயணம். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி, சாப்பிட்டு விட்டு, Dresden வந்து சேர்ந்தோம். ஜெர்மானியர்கள் நிறைய sausage சாப்பிடுகிறார்கள். என் மகளும் சில புது வகை உணவுகளைச் சாப்பிட்டாள்.
வீட்டுக்கு வந்து முருகன், செல்வியுடன் பேசி விட்டு, விரைவிலேயே தூங்கியும் போனோம். அடுத்தநாள், கனவுப் பிரதேசமான Swtizerland போவதற்கான ஆயத்தங்கள் செய்ய, கடைகளுக்குப் போய் பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, பிரட், வெண்ணை, சாப்பாட்டு சாமான்கள் வாங்கி வந்தோம்.

அமெரிக்க கடைகளைப் போல் இல்லாமல் இந்த ஊர் கடைகளும் வித்தியாசமாக இருந்தது. விதவிதமான மதுபானங்களை ஒரு பகுதி முழுவதும் அடுக்கி வைத்திருந்தார்கள். என் கணவரும் ஜெர்மனியின் பீர் எப்படித் தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஒன்றை வாங்கிக் கொண்டார். நொறுக்குத் தீனிகள் அமெரிக்காவில் கிடைப்பது போல் இல்லை. மக்களும் அனாவசியமாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல், வீட்டிலிருந்து பைகளை கொண்டு செல்கிறார்கள்.

துணிமணிகள், சாப்பாட்டுச் சாமான்கள் என்று எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு வர, முருகனும் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு நாங்கள் வரும் நேரத்தையும் சொல்லி அவருடைய விலாசத்தையும் வாங்கிக் கொண்டார்.

போன வருடம் இதே நாளில், சுவிட்சர்லாந்தில் இருந்தோம்J

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...