Monday, October 29, 2012

அடடா மழைடா, அடை மழைடா..

Sandy புயல்,மழை காரணமாக நியூயார்க் நகரம் ஸ்தம்பித்து போய்' இருக்கிறது. புயலுக்கு பயந்து கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. நாடக நடிகை போல் வானமும் வந்து கொட்டி அழுது தீர்த்து விட்டுப் போகிறேன் என்று இருண்டு கொண்டு வருகிறது. இந்த புயல் கடந்து வருகின்ற பாதை முழுவதும் பல அழிவுகளை நடத்திக் கொண்டே வருவதால் பல இடங்களிலும் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றிலிருந்து சூரியனும் உள்ளேன் அய்யா பாணியில் வருவதும் பின் மறைந்து போவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. உதிர்ந்த இலைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இன்றிரவிற்குப் பிறகு நிறைய மரங்கள் காற்றில் கீழே விழும் அபாயம் உள்ளது! தொலைக்காட்சிகளில் அடிக்கடி புயல் பற்றிய செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மதியத்திலிருந்து காற்றுடன் மழை என்ற அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளும் சீக்கிரமாகவே மூடப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள்:( இன்னும் Irene புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் விவசாயிகள் இன்னும் கலக்கம் அடைந்திருப்பார்கள். வீடுகளில் தண்ணீர் புகுந்து அதன் விளைவுகளை சந்தித்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் பட்ட காலிலேயே படும் என்பது போல் மீண்டும் ஒரு பெரும்புயல். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.

நியூயார்க் 
என் சிறுவயதில் மேகம் கருத்து வானம் இருண்டு கொண்டு வந்தாலே மனதில் சந்தோஷமும், கரண்ட் போய் விடுமே என்ற கவலையும் வந்து விடும். என் அப்பா, அம்மாவிற்கோ மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் சாயம் போட்ட நூல்களை மழையில் நனையாமல், விரைவில் காய வைக்க வேண்டுமே என்ற கவலை. அந்த காலத்திலேயே தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் மழை வந்தால் எங்கள் வீடே அல்லோலகப்படும். வேலைக்காரர்கள் இல்லை என்றால்,ஆளுக்கு ஒரு திசையில் மாடிக்குச் சென்று விறுவிறுவென்று, காயப்போட்டிருக்கும் நூல்களை ஓரத்திலிருந்து தள்ளி நடுப்புறத்திற்கு கொண்டு வருவோம், மழையில் நனையாமல் இருப்பதற்கு. அதற்குள், நாங்கள் நன்றாக நனைந்திருப்போம். அவசர அவசரமாக எல்லோரும் தலையை துவட்டிக் கொண்டு உட்கார்ந்தால், சொல்லி வைத்த மாதிரி, எங்கேயாவது 'டப்' என்று ட்ரான்ஸ்பார்மர் வெடிக்க, 'பட்'டென்று கரண்ட் போக, படிப்பு அம்பேல். அதுவும், அடுத்த நாள் டெஸ்ட் ஏதாவது இருந்தால், அவ்வளவு தான். அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி தேடி போக, இருட்டில் ஒவ்வொன்றையையும் தேடி பிடித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். மெழுகுவர்த்தி காற்றுக்கு அணைந்து போக, மீண்டும் அரிக்கேன் விளக்குக்கு பலத்த சண்டை நடக்கும். இப்பொழுது இந்த காட்சிகள் எல்லாம் மதுரையில் சர்வ சாதாரணமாகி விட்டது! மாணவர்களுக்கு தான் பெரும் அவஸ்தை.

நன்றாக மழை பெய்து நிற்கும் வேளையில், அந்த ஈர மண் வாசனையும், மழை கிளப்பிய சூடும், குப்பைகளுடன் ஓடும் கலங்கலான தண்ணீரும் என்று தெருக்கள் சொத,சொதவேன்றிருக்கும். வீட்டு ஓடுகளில் இருந்து மழை நீர் வடிய, தண்ணீர் தெருக்களில் ஓட ஆரம்பிக்கும். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்து விடும் என்று மழையில் வெளியே விடமாட்டார்கள். அப்படியே பழகி, ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்ப்பது, கதவை லேசாக திறந்து வைத்து ரசிப்பது என்றாகி விட்டது. எங்கள் தெருவில் என் வயதை ஒத்த குழந்தைகள் எல்லோரும் எப்படா மழை நிற்கும் என்று காத்திருப்போம். பிறகு, எல்லோரும் பேப்பர் கப்பல் செய்து அவரவர் வீட்டு வாசலில் இருந்து விடுவோம். யார் கப்பல் வெகு தூரம் போகிறது என்று ஆவலுடன் பார்ப்பது, யார் கப்பல் நன்றாக இருக்கிறது என்று போட்டி போட்டு சிறு வயதில் விளையாடியது எல்லாம் மழை வரும் பொழுதெல்லாம் நினைவில் வருகிறது. அப்பாவிடம் போய், எனக்கு பெரிய பேப்பர் கப்பல் வேண்டும் என்று கேட்டு அதை தண்ணீரில் மெதுவாக விட, சமயங்களில், மழை நீர் ஓடும் வேகத்தில், கப்பல் கவிழ்ந்து விடும். அதைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்ய, வெட்கத்தில் கண்ணில் பொல,பொலவென்று மழை நீர் :(இங்கே குழந்தைகளோ, மழைக்காலத்தில் போடும் பூட்ஸ்களைப் போட்டுக் கொண்டு, மழைத் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் போய் குதித்து விளையாடுகிறார்கள். கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மழை வந்தால், குழந்தைகள் எல்லாம் ஆனந்தமாக மழையில் விளையாடுவார்கள். எல்லா இந்திய அம்மாக்களும் போலவே நானும் ஏன் மழையில் நனைகிறாய், உடம்புக்கு ஏதாவது ஆகிடப் போகிறது என்று படப்படப்பாகி விடுவேன். ஆனாலும், நாம் தான் ஆடவில்லை, நம் குழந்தையாவது அனுபவிக்கட்டுமே என்று சமயங்களில் விட்டு விடுவதும் உண்டு :) நம்மூர் மாதிரி ரோடுகளில் தண்ணீர் தங்குவதில்லை. அதனால், கத்தி கப்பல், கப்பல் எல்லாம் விட முடியவில்லை :(

ஒரு விடுமுறையில் மதுரை வந்திருந்த பொழுது, நானும் என் மகளும் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தோம். 'ஜோ'வென்று மழை கொட்டித் தீர்த்து விட்டது. கடையில் உள்ளே இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை. வெளியில் வந்த பார்த்தால் முழங்கால் வரை தண்ணீர். அதுவும் அழுக்குத் தண்ணீர். ஒரே சேரும் சகதியும், குப்பையுமாய். என் மகளோ நான் இறங்கி நடக்க மாட்டேன் என்று ஒரே அடம். காரோ எங்கேயோ ஓரிடத்தில். டிரைவரை கூப்பிட்டால், அது ஒன் வே, நீங்கள் தெருவை கடந்து தான் வர வேண்டும் என்று சொல்ல, என் மகள் அப்போது சின்ன வயது தான், தூக்கிக் கொண்டு போனேன். நல்ல வேளை, அவள் ஒல்லியாக இருந்தாள். அதே வாரத்தில், என் குடும்பத்துடன், என் கணவரின் அண்ணன் வீட்டிற்கு போய் விட்டு வரும் பொழுது, ஒரே அடை மழை. காரில் தவிட்டுச்சந்தைப் பக்கம் வரும் வழியில், தண்ணீர் வெள்ளம் போல் வர, என் மகனுக்கோ குஷி. ஆ, flood,flood என்று ஆனந்த கூச்சல். எனக்கோ, காருக்குள் தண்ணீர் வந்து விடாமல் ஒரு பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாக வீடு திரும்பனுமே என்று. பந்தடி பக்கம் இஷ்டத்திற்கு ரோட்டை ஏத்தி மேடு செய்திருக்கிறார்கள். தண்ணீர் எங்கும் போக முடியாமல் அங்கேயே தேங்கி, கஷ்ட காலம்! பல இடங்களில் பள்ளங்கள். சில மூடப்படாமல் இருந்தது. அதனால், மழை வந்தால் ஒரு சிறு குளம் போல் ஆகி விடுகிறது. பஸ், லாரி வந்தால் பைக், ஸ்கூட்டர், சைக்கிள்-ல் போவோர் கதி அதோ கதி தான்:( இந்த அழகில் கரண்டும் போய் விட்டால் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும், கரண்டில்லாமல் இருந்த மழை அனுபவம் குழந்தைகளுக்கு புதிது. இலவசமாக கொசுக்கடியும் :(

மழை பெய்யும் பொழுது சூடாக வாழைக்காய் பஜ்ஜி, கீரை வடை(பங்கரா பான் பைரி), தேங்காய் வடை(நளறு பைரி) சாப்பிட்டால் நன்றாக இருக்கும் :) நல்லாத் தான் இருக்கும், யாரவது சமைத்துக் கொடுத்தால் :) சமயங்களில், பண்ணுவதுண்டு. எனக்கு, சூடாக, டீ போட்டு, மழையை வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும். என் கணவர் கேமரா சகிதம் போட்டோக்கள் எடுக்க கிளம்பி விடுவார். மழை நின்ற பிறகு, இள வெயிலில் தெரியும் வானவில் பார்க்க அதை விட அழகாக இருக்கும்.ம்ம்ம் ...

மழைக்கால மேகமொன்று மடி ஊஞ்சல் ஆடியது, இதற்காகத் தானே அன்று ஒரு ஜீவன் வாடியது....

Sunday, October 21, 2012

போவோமா ஊர்கோலம் - அசைவ உணவகங்கள் மதுரையில்- 2

அம்சவல்லி - மதுரையில் பலரின் விருப்பமான அசைவ உணவகம். கீழ வெளி வீதியில் சிந்தாமணி தியேட்டருக்கு அருகில் நெல்பேட்டை ஜன சந்தடியில் டிராபிக் அல்லாடும் இடத்தில் இருக்கிறது. முன்பு, கால் ப்ளேட் பிரியாணி கூட கிடைக்கும். அது மட்டன் பிரியாணி ஆக இருக்கும். வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருந்ததால் வேலை ஆட்களோ, அப்பாவோ போய் பிரியாணி வாங்கி வருவார்கள். அன்று சமயலறைக்கு விடுமுறை. காலையிலிருந்தே பசிக்கிற மாதிரி இருக்கும். நேரம் மெதுவாக போகிறதோ என்று அடிக்கடி பார்க்கத் தோன்றும். மதிய நேரத்தில் யார் யாருக்கு என்ன என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொடுக்க, அக்காவிற்கு எப்பொழுதும் முக்கால் ப்ளேட் பிரியாணி, தம்பி ஒருவனுக்கு அப்போது பிரியாணி பிடிக்காது. அவனுக்கு பரோட்டா. ஆனால், இப்பொழுது வெளுத்துக் கட்டுகிறான் பிரியாணியை

சமயங்களில் மீன் ரோஸ்டும் கூட. பிரியாணி பையை வாங்கும் பொழுதே வாசனை தூக்கும். பரபரவென்று பொட்டலத்தை பிரித்து எனக்கு துப்பாக்கி, எனக்கு எலும்பில்லாமால் நல்ல கறி என்று ஒவ்வொருவர் சொல்ல, அடுத்தவர் பொட்டலத்தில் நிறைய கறி இருப்பதாகவே தெரியும் :(  அன்றும், இன்றும், என்றென்றும், அம்சவல்லி பிரியாணி, அம்சவல்லி பிரியாணி தான். இப்பொழுது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருக்கிறது. நிறைய பெண்களும் சாப்பிட வருகிறார்கள் :) அம்சவல்லி பிரியாணியின் ஒரு சிறப்பு, மசாலா எல்லாம் நன்கு அரைக்கப்பட்டு அரிசியுடன் நன்கு கலந்து அந்த கலரை பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். பொட்டலத்தை பிரிக்கும் போதே, தயிர் வெங்காய வாசனையுடன் மசாலா வாசனையும் சேர்ந்து ஏற்கெனவே பசியோடு இருப்பவர்களுக்கு இன்னும் பசிக்க, சில நிமிடங்கள் யாரும் பேசாமல் ருசித்துச் சாப்பிட...ம்ம்ம்ம். அது எப்படி என்று தெரியவில்லை, நெய்மீன் ரோஸ்ட் சுத்தமாக எண்ணை இல்லாமல் காரத்துடன் சிவக்க வறுத்து அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால், அநியாயத்திற்கு விலை :( சாப்பிட்ட பிறகு, சூடா ஒரு டீ. மணமணக்கும் கையுடன் மனம் மகிழ அந்த தினம் போகும் :) மசாலா சாப்பாடு சாப்பிட்டால் அன்றைய தினம் மகிழ்ச்சியாகவே இருக்கும். அது தான், மசாலாக்களின் குணமே!


இப்படித் தான், மதுரை அருளானந்தம் ஹோட்டலில் கிடைக்கும் அயிரை மீன் குழம்பும். இந்த ஹோட்டல் விளக்குத்தூண் அருகில் ஒரு சந்தில் இருந்தது. அரைத்து விட்ட மசாலாக்களுடன், மண் வாசனை நிறைந்த நெத்திலி மீன், நெத்தியடியாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு நிறைய கொடுப்பார்கள். அந்த மீன் சிறு குளங்களில் கிடைக்கும். கரகரவென்று மண் வாசனையுடன் ஒரு வித சுவையுடன் இருக்கும். ஒரு முறை, சென்னை, தி. நகரில் மதுரை அருளானந்தம் ஹோட்டல் என்று பார்த்தவுடன் ஆஹா, இங்கேயுமா என்று ஒரு பிடி பிடித்துவிட்டு வந்தோம். ஆனால், சரியான காரம் :(



சரி, அம்மா மெஸ், அம்மா மெஸ் என்று கோரிப்பாளையம் பக்கம் ஒரு பிரபலமான கடைக்கு போய் சாப்பிடலாம் என்று போனால், சரியான கூட்டம். சாப்பிடுபவர்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். பரிமாறுபவர்கள் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மக்களும் லபக்கு லபக்கு என்று அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட நிதானமாக உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. ஏதோ, பஸ்ஸை தவற விட்டு விடுவோம் என்ற பயத்தில் உருட்டி உருட்டி சாப்பிட்ட மாதிரி இருந்தது:( அங்கு கோலா உருண்டை, ஷ்ரிம்ப் மசாலா படு டேஸ்டாக இருந்தது. (இப்போது அய்யா மெஸ், தாத்தா மெஸ் என்று பல கடைகள்..:) )அப்படியே இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், தாஜ் உணவகம் இருந்தது. அங்கும் சூப்பர் பிரியாணி. கொடுக்கும் பொழுது, ஐயோ இவ்வளவு பிரியாணி சாப்பிட முடியுமா என்று மலைக்கத் தோன்றும். சாப்பிட ஆரம்பித்தால், தட்டு காலி. கல்யாணமான பிறகு, முதலில் கணவர் குடும்பத்துடன் சாப்பிடச் சென்ற முதல் இடம்! அப்போதெல்லாம், என்ன ஒன்றுமே சாப்பிட மாட்டேங்கிறாய், நன்றாக சாப்பிடு என்று சொன்னவர்கள் எல்லாம், இப்போது, நன்றாக வெட்டுகிறாய் என்று சொல்லும் அளவுக்கு நல்ல வளர்ச்சி! டவுன்ஹால் ரோட்டில் இருக்கும் தாஜ்ஜில் வீட்டு விஷேஷங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார்கள். அதுவும் நன்றாக இருக்கிறது. எப்போதாவது, சௌராஷ்டிரா பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால், பனைமரத்து பிரியாணி/மாகாளிப்பட்டி பிரியாணி கடையில் வாங்கி வருவோம். அங்கு ஆட்டுக் கால் சூப், சுக்கா வறுவல் நன்றாக இருக்கும். இப்போது எப்படியோ?

விருந்துகளுக்கு சமைத்துக் கொடுக்கும் பல சௌராஷ்டிரா வீடுகளில் அருமையான பிரியாணி சமைத்துக் கொடுக்கிறார்கள். மசாலா குறைத்து, சிக்கன் கிரேவியுடன், பொறித்த மீன்/சிக்கன் என்று கேட்கிற மாதிரி சமைத்துச் சாப்பிடும் வசதிகள் பல மதுரையில் :)

என் கணவருக்கு சின்னக்கடை தெருவில் காளி கோவில் பக்கத்தில் இருக்கும் ராபியா மட்டன் ஸ்டால் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அங்கு கொத்துப் பரோட்டா மிகவும் பிரபலம். நாலைந்து பரட்டோவை பிச்சுப் போட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மஞ்சத்தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, அதன் மேல் சிக்கன் சால்னாவையும் கொட்டி, இரண்டு இரும்பு கரண்டியால் தெருவே அலறுகிற மாதிரி அந்த தோசைக் கல்லில் 'ந ந' என்று நர்த்தனமே ஆட விடுவார். அந்த கொத்துப் பரோட்டா சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் அதன் சுவை! அதேபோல் தான், சிக்கன் வறுவலும். பிரியாணியும். மசால் கம்மியாக நன்றாக இருக்கும். மசாலா அதிகம் பிடிக்காதவர்களுக்கு இந்த பிரியாணி கண்டிப்பாக பிடிக்கும். இந்தக் கடை இரவில் வெகு நேரம் வரை திறந்திருப்பதால், நல்ல வியாபாரம்

மதுரை தூங்கா நகரமோ இல்லையோ, நல்ல சாப்பாட்டு நகரம் :)




அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...