Thursday, November 8, 2012

மதுரையில் தீபாவளி - 2

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே முறுக்கு, சீடை, அதிரசத்திற்கென்று மாவு அரைக்க ரைஸ்மில்லுக்கு அம்மாக்கள் கூட்டம் போக ஆரம்பித்து விடும். அதிரசத்திற்கு மாவு, சக்கரையுடன் பிசைந்து எறும்பு வராமல் இருக்க உயரமான இடத்தில் கயிறு கட்டியோ, இரும்பு வளையங்களில் மாட்டியோ இருக்கும் பாத்திரத்திலிருந்து திருடி எடுத்துச் சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும் :) பெரிய பெரிய எவர்சில்வர் தூக்குகளில் முறுக்கு, சீடை, சீவல், மிக்சர் என்று இருக்கும். முறுக்கு சுடும் போதும், அதை பிழியும் போதும் வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். அடுப்பிலிருந்து எடுத்தவுடன் முறுக்கு மெதுவாக இருக்கும். நன்கு ஆறியவுடன் தான் சாப்பிட சுவையாக இருக்கும். சீடை மட்டும் போடும் போது எங்களை அம்மா விரட்டி விடுவார். சீடை எண்ணையில் போட்டவுடன் அநியாயத்திற்கு தெறிக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கென்று ஆரியபவனில் ஸ்வீட் பாக்கெட், அவர்களுக்கு புது துணிமணிகள், போனஸ் பணம் எல்லாம் பட்டுவாடா செய்ய அவர்களுக்கும் சந்தோஷம்.

தீபாவளி முதல் நாள் இரவு பல இடங்களிலும் வெங்காய வெடி, லக்ஷ்மி வெடி, சீனி வெடி வெடிக்க ஆரம்பித்திருக்கும்.எப்படா, தீபாவளி காலை நேரம் வரும் என்று காத்திருப்போம். காலை எழுந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்து விட்டு, பூஜை செய்து முடித்து இனிப்புடன் காலைப் பலகாரங்கள் முடிக்க, அப்பாவும் எல்லோருக்கும் அவரவர் துணியை எடுத்துக் கொடுக்க, போட்டுக் கொண்டு பாட்டி, அப்பா, அம்மாவிடம் ஆசிகளும், காசுகளும் வாங்க, மனம் பூரித்துக் கொள்ளும். உச்சாணிக்கொம்பில் இருக்கும் மல்லிகை/முல்லை பூவும் வைத்துக் கொண்டு, பட்டாசு எடுத்துக் கொண்டு வெடிக்க கிளம்புவோம்.

முதலில் ஆயிரம்வாலா சரங்களை கொளுத்தி ( காசை கரியாக்கி விட்டு !) போட, தெருவே காதைப் பொத்திக் கொண்டு வேடிக்கைப் பார்க்கும். அதிலும் சில தில்லான பொடிசுகள், வெடி வெடிக்கும் போதே நடுவில் புகுந்து ஓடுவார்கள்! வெடிக்க ஊதுவத்தியை பக்கத்தில் எடுத்துக் கொண்டு போய் ஒரு கால் முன்னேயும், ஒரு கால் ஓடுவதற்கு தயாராக பின்னேயும் வைத்துக் கொண்டு வெடி பக்கத்தில் போக, திரியை அட்ஜஸ்ட் செய்ய, நடுக்கத்துடன் வெடிக்க பக்கத்தில் போவதும் பின் பதற்றத்துடன் வருவதுமாய் ஒரு வழியாக பத்த வைத்து விட்டு ஓடிப் போய் வாசலில் ஒதுங்கி காதைப் பொத்திக் கொள்ள, பார்த்துக் கொண்டிருக்கும் வாண்டுகளும் ஆவலுடன் வெடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த 'சட சட' வெடிச் சத்தமும், வெடிப்புகையும் தான் தீபாவளியின் சிறப்பு. அதற்குப் பிறகு, சின்ன சின்ன வெடிகள் வெடித்து விட்டு, பக்கத்து வீடு, பெரியப்பா வீடு, அப்பாவின் உறவுக்காரர்களுக்கெல்லாம் இனிப்புகள் கொடுத்து விட்டு, ஆசீர்வாதமும், தீபாவளி பணமும் வாங்கிக் கொண்டு, அவர்கள் வீட்டிலிருந்து வரும் இனிப்புகளையும் ருசித்து விட்டு, விடு ஜூட், பாட்டி வீட்டுக்கு. எல்லோரும் எவ்வளவு தீபாவளி பணம் கொடுப்பார்கள் என்பதிலேயே மனம் அலைபாயும்.

பாட்டி வீட்டிற்கு போனவுடன் நாங்கள் உடுத்தியிருக்கும் புது டிரெஸ்ஸை காண்பித்து விட்டு, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு அவர்கள் புது டிரஸ்சையும் பார்த்து விட்டு, அவர்கள் கொடுக்கும் பணம், பட்டாசு வாங்கி கொள்வோம். மாமா குழந்தைகள் அவர்கள் பாட்டி வீட்டிற்கு கிளம்ப, நாங்கள் பாட்டி வீட்டில் டேரா போட்டு விடுவோம். அன்று காலையிலிருந்து சாப்பிட்ட இனிப்பும், பட்டாசின் புகையும், லெமன் சாதம், வெண் பொங்கலும் சேர்ந்து தலை சுத்துற மாதிரி தோன்றும். சிறிது இளைப்பாறி விட்டு, மாலையில் பாட்டி வீட்டு சார்பில் வாங்கின புதுத் துணி போட்டுக் கொண்டு புளியோதரை, சேமியா கேசரி சாப்பிட்டு முடித்து, பட்டாசு வெடித்து விட்டு வீட்டுக்குத் திரும்புவோம். எல்லோரிடமும் தீபாவளி வசூல், பட்டாசு என்று கனத்துடன், சிரிப்புடன் வீடு வந்து சேருவோம்.


மீண்டும் சிறிது நேரம் பொட்டு பட்டாசு, பாம்பு பட்டாசு, கம்பி பட்டாசு, சங்கு சக்கரம், புஸ்வானம் வெடித்து விட்டு தூங்க போய் விடுவோம். நம்மூர் நடிகர்கள் வைத்திருக்கும் பொம்மை துப்பாக்கி பல வீடுகளிலும் அன்று டப் டப் என்று பொட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும். அதில் ஒரு கேப் ரோலை மாட்டி விட்டு அடுத்தவரை பார்த்து சுடுவது போல் வேடிக்கை செய்து சுடுவதில் தான் என்ன ஆனந்தம்! சிறு குழந்தைகள் சின்ன சுத்தியலை வைத்து 'டப்டப்' என்று பிங்க் வண்ணத்தில் இருக்கும் ஒவ்வொரு பொட்டு பட்டாசாக வெடிப்பார்கள்.வாசல் முழுவதும் பாம்பு பட்டாசு கொளுத்தி கருப்பாக இருக்கும். கம்பி பட்டாசு கொளுத்தி சுற்றி சுற்றி விளையாட, அதிலிருந்து தெறிக்கும் நட்ச்சத்திரங்களை பார்க்கும் போதே தலை சுற்றுவது போல் இருக்கும்.

சிலருடைய சங்கு சக்கரம் சுத்தாமல் சண்டித்தனம் பண்ண, மேலே போ, மேலே போ என்று சொன்னால் தான் புஸ்வானம் மேலே போகும் என்கிற மாதிரி எல்லா வாண்டுகளும் சேர்ந்து கோரசாக கத்த, அது மேலே போகும், சில வெடிக்கும், எப்படியும் அன்று ஒரு சிறு விபத்தில்லாமல் போகாது. ட்ரெஸ்ஸில் பட்டாசு பட்டு ஓட்டை விழுந்து விட்டால் அழுகையுடன் தான் முடியும் அந்த நாள்:( இளவட்டங்கள் பாட்டிலில் ராக்கெட் பட்டாசை வைத்து வெடிக்க சில 'விர்'ரென்று வானில் பறக்க, சில 'தொஸ்' என்று விட்ட இடத்திற்கே திரும்பி வரும் வேடிக்கையும் நடக்கும். ரேய், தொரே தொஸ்சு பட்டாஸ் ரீ (உன்னுடையது தொஸ்சு பட்டாஸ்) என்று சக வாண்டுகள் கேலி பண்ணும் கூத்தும் நடக்கும். சிலர், அதிமேதாவித்தனமாக கையில் வெடியை பத்த வைத்து வெடிக்க போகும் நேரத்தில் தூக்கி போட்டு விளையாடுவதும் நடக்கும்.


கார்த்திகை மாதம், பெரிய கார்த்திகை அன்று கொளுத்த சில பட்டாசுகளை எடுத்து வைத்துக் கொண்டு, தீபாவளியை முடித்து விடுவோம். அடுத்த தீபாவளிக்காக இப்பொழுதிருந்தே பலரும் இனிப்பு, பண்டம், பாத்திரங்கள், நகை வாங்க என்று சீட்டு போடவேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய நாள் வேகமாக போய் விடும். எப்படா பள்ளி திறக்கும் புது டிரஸ் போட்டுக் கொண்டு போகலாம் என்று காத்துக் கிடப்போம்.





நாங்கள் பசுமலை பக்கம் இருந்த பொழுது, நடு இரவே ஆட்டுக்கறிக்குழம்பு, இட்லி, இனிப்புகள் சாப்பிட்டு விட்டு தீபாவளி கொண்டாடினோம். இப்பொழுது தீபாவளி அன்று வீட்டில் பூஜை, புதுத்துணி, சாப்பாடு, வார இறுதியில் கோவிலில் பூஜை, கல்சுரல் ப்ரோக்ராம்ஸ், வான வேடிக்கை, நண்பர்களுடன் ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டம் என்று போகிறது.




அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!



No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...