Wednesday, February 13, 2013

சென்னை- திருவண்ணாமலை - 3


கோவிலிலிருந்து வெளியே வந்தவுடன் மாடுகளுக்கு கொடுக்க என்று வாழை இலையில் சுற்றி விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நச்சரிப்பைத் தாங்காமலும், என் மகளுக்கு இருந்த ஆர்வத்தாலும் ஒன்றை வாங்கி கொடுக்க நினைக்கும் பொழுதே மாடு வந்து பிடுங்காத குறையாக வாங்கித் தின்றது!

கோவில் இருக்கும் சாலையிலேயே பல ஆஷ்ரமங்கள் இருக்கிறது. முதலில் சேஷாத்ரி சுவாமிகள் மடம் , ஸ்ரீரமணர் மடம் அப்படியே கிரிவலம் போனால் யோகி ராம்சுரத்குமார், நித்யானந்தா  என்று வரிசையாக பல மடங்களை காண முடிகிறது. குழந்தைகளுடன் மேலை நாட்டினர் பலரும் இந்த ஆஷ்ரமங்களுக்கு வந்திருந்ததைப் பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது.பிறகு ரமணாஷ்ரமம் போனோம். வெளியில் இருந்த பரபரப்பு, கரச்சல் எதுவும் இல்லாமல் பெரிய மரங்கள், அமைதியான தியான பீடம் என்று அந்த இடமே ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்ட மாதிரி இருந்தது. நடக்கிற மனிதர்கள், நாய்கள் தவிர கண்களை மூடி உட்கார்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்கிறவர்கள் நிறைய, அதுவும் மேலைநாட்டினர! அவர்கள் தேடி வந்தது அவர்களுக்கு கிடைத்திருக்கிறது! இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம் நாம்! சிறிது நேரம் நாங்களும் அமர்ந்து தியானம் செய்தோம். அங்கும் அய்யப்ப, செவ்வாடை பக்தர்கள் கூட்டம். பதறியடித்து ஓடிக் கொண்டிருந்தார்கள்!! ஒரு ஹாலில் ஸ்ரீரமணரின் புகைப்படங்கள் பெரிய பெரிய சைசுகளில். அவருடைய திருஉருவச்சிலையை மலர்களால் அலங்கரித்து நடுவில் வைத்திருந்தார்கள். பல அறைகளிலும் ரமணரின் சிறுவயது கருப்பு வெள்ளை புகைப்படங்கள், பலவிதமான அரிய பழைய திருவண்ணாமலை புகைப்படங்கள். ஒரு அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த இடமே மௌன ராகம் பாடிக் கொண்டிருந்தது. ஸ்ரீரமணர் பற்றி பல புத்தகங்களிலும் தொகுப்புகளிலும் படித்திருந்தாலும் அந்த மடத்தில் இருந்த புகைப்படங்கள், தியான மண்டபம், மடத்தின் சுற்றுப்புறச்சூழல், தியானம் செய்யும் பொழுது இருக்கும் அந்த சாந்தமான முகங்கள் - ஒரு நல்ல அனுபவம்.

இருட்டுவதற்கு முன் கிரிவலம் போக தீர்மானித்தோம். பௌர்ணமியன்று கூட்டம் கூட்டமாக மக்கள் போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரில் உட்கார்ந்து கொண்டே வழியில் வரும் ஒவ்வொரு கோவில்களையும் பார்த்துக் கொண்டே வந்தோம். அப்போதும் ஒரு சிலர் நடந்து கிரிவலம் போய்க் கொண்டிருந்தார்கள்! மலையும் கூடவே வருவது போல் ஒரு பிரமை. அதை சுற்றித் தானே போய்க் கொண்டிருந்தோம்!பரபரப்பான சாலைகள், ஒழுங்குப்படுத்த போலீஸ் என்று இவர்களை கடந்து போனால், கிரிவலம் போகிறவர்களுக்காக நடை வசதி செய்திருக்கிறார்கள். வழியெங்கும் சின்ன சின்ன கோவில்கள். பல இடங்களில் நன்கு வெளிச்சமாக லைட் வசதிகள் இருந்தன. சில இடங்களில் மிகவும் இருட்டாக இருந்தது. சாலையோர பழக்கடைகளும், இளநீர், சர்பத் கடைகளும், ஆட்டோ, ரிக்க்ஷா, டாக்ஸி வண்டிகளும், இட்லி கடைகளும் வஞ்சனை இல்லாமல் இருந்தது. மலையின் பின்புறம் அமைதியாக இருந்தது. முடியும் இடத்தில் அதே பரபரப்பு! நடந்து போனால் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நேரமில்லை. ஒரு வழியாக மீண்டும் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தேர்களை பார்த்து விட்டு, ஹோட்டலுக்கு திரும்பினோம்.
அந்த நாள் போனதே தெரியவில்லை. jet lag- இல் இருந்ததால் விரைவிலேயே தூங்கியும் போனோம். அருமையான ஹோட்டல். நல்ல வசதியுடன் இருந்தது. அதிகாலையிலேயே எழுந்திருந்து மலையைப் பார்த்தால் மேக மூட்டமாக இருந்தது. சிலர் மலை ஏறுவார்கள் போலிருக்கிறது. சிறிது நேரம் மலையையும் அந்த அமைதியான சூழலையும் ரசித்துக் கொண்டிருந்தோம். காலை நேரத்தில் எங்கோ 'ஓம் நமோ பகவதே ருத்ராய' என்று ருத்ரம் ஒலித்துக்  கொண்டிருந்ததை கேட்க ஆனந்தமாக இருந்தது. மெதுவாக சூரியன் வர, மேகம் விலக, மலையும் தெரிய, கோபுர தரிசனம், கோடி தரிசனம் என்று கோபுரத்தை பார்த்து கும்பிட்டு விட்டு காலை சாப்பாடு சாப்பிட கிளம்பினோம். மொறு  மொறு வடை, சுடச்சுட பூரி, இட்லி, முறுகல் தோசை, நெய் வழியும் வெண்பொங்கல், cereals , பழச்சாறுகள், காபி, டீ என்று அனைத்தும் மிகச் சுவையுடன்! வயிறும் மனமும் நிறைய அண்ணாமலையாரை தரிசித்த பரவசத்துடன் ஊர் பார்த்து கிளம்பினோம். கோவிலின் பிரமாண்டம் இன்னும் மனதில்!


தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ...என்று லிங்காஷ்டகத்தை மனதில் பாடிக் கொண்டே திருவண்ணாமலையை விட்டு புறப்பட்டோம்.

2 comments:

  1. Good one...

    In the last few years had opportunity to visit some of the ancient Shiva temples like - all Panchabootha stalas - Tiruvannamalai, Ekambaranathar - Kanchipuram, Kalahasti,TiruvanaiKaval & Chidambaram and also Kailasanathar (Kanchipuram), Tanjore - Periya kovil, Kumbeshwarar - Kumbakonam......

    In many of these Shiva temple the main 'vigraham' does not have a 'date' associated with it. No wonder, Hinduism is not only one amongst oldest religion and also complex, it might take years / Yuga.... for one to understand it completely.....:)

    ReplyDelete
  2. True, GuhaRajan. It'll be interesting to know about other shiva temples. expecting in your blog :)

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...