Friday, March 29, 2013

திருவண்ணாமலை - பாண்டிச்சேரி

திருவண்ணாமலையில் காலை உணவை முடித்துக் கொண்டு பாண்டிச்சேரி நோக்கிப் பயணமானோம். மீண்டும் அதே குண்டு குழி ரோடுகளின் வழியே சென்றாலும், காலை நேரப் பயணம் என்றுமே ஆனந்தம் தான்...சில இடங்களில் சாலைகளின் இருபுறமும் பெரிய பெரிய புளியமரங்கள் அடர்த்தியாக நிழலுடன். அந்த இடம் மட்டும் ஏதோ சில்லென்று இருப்பது போல் ஒரு உணர்வு.


மேய்ச்சலுக்கு ஆடு,மாடுகளுடன் செல்பவர்கள், மாட்டு வண்டிகள், மக்களை சுமந்து சாய்ந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள், நடந்து பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள், அரசு அளித்த மிதிவண்டிகளில் செல்பவர்கள், அதிவேக பைக்கில் கல்லூரி செல்லும் கட்டிளங்காளைகள், நான்கு சக்கர வாகனங்களில் ஊருக்குள் செல்பவர்கள், ஊரை விட்டு செல்பவர்கள், கட்சி கொடிகளை பறக்க விட்டுக் கொண்டு சாலை விதிகளை 'கவனத்துடன்' மீறிக் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளின் கார்கள், கிடைக்கிற கேப்பில் வளைந்து நெளிந்து செல்லும் ஆட்டோகாரர்கள், எருமைகளை அடைத்துக் கொண்டு மாநிலம் விட்டு மாநிலம் போகும் லாரிகள், புழுதி பறக்க ஆற்று மணலை எடுத்துக் கொண்டு யாரை பற்றியும் கவலை படாமல் போகும் லாரிகள் என்று பொறுமையில்லாத பலதரப்பட்ட வாகனங்களுடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு திண்டிவனம் சாலையில் பயணம்.


வழியில் ஓரிடத்தில் எல்லை/காவல் தெய்வம் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி சிறு சிறு தெய்வங்களும். சமீபத்தில் யாரோ பொங்கல் படைத்து வழிபட்டிருந்தார்கள். மிகவும் வண்ணமயமாக இருந்தது அந்த கோவில்.

திண்டிவனம் வந்து சேரும் பொழுது நல்ல வெயில், கூட்டமும் அதிகமாகி விட்டது. ஒரு வழியாக பாண்டிச்சேரி ஹைவேஸ் தொட்டவுடன் சடுதியில் எல்லா கூட்டமும் தொலைந்ததைப் போல் ஒரு பிரமை! ஹைவேஸ் வந்தவுடன் ஆங்காங்கே தெரிந்த பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி. வாழை, தென்னை, நெற்பரப்புடன் நடுநடுவே அடர்த்தியாக மூங்கில் மரங்கள்! நகரம் நெருங்க,நெருங்க குச்சி மச்சி வீடுகள் பல வண்ணங்களில்!!! பல வீடுகளிலும் தவறாமால் திருஷ்டி பொம்மைகள் படம் அனைவரும் பார்க்கும் வண்ணம்:) சில சமயங்களில் திருஷ்டிக்கே திருஷ்டியா என்று வியக்கவும் வைத்தது! பாண்டிச்சேரி நுழைவாயில் முன்பே பஞ்சவடிக்கு போவதாக திட்டம்.



Monday, March 11, 2013

அவள் ஒரு தொடர்கதை - 2

ஒரு வழியாக திருமணமும் நடந்து விட்டால், புகுந்த வீட்டில் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று அவளை ஒரு மனுஷியாக பார்த்தால், 'அவள் மா தவம் செய்தவள்'! நிதர்சனத்தில் பலருக்கும் அந்த கொடுப்பினை இருப்பதில்லை. அந்த பெண் வந்த நேரம் எல்லாமே சரியாக போனால் பிரச்சினைகள் குறைவு. வயதானவர்கள் இறந்து போனாலோ, வீட்டில் வேறு ஏதாவது நடந்து விட்டாலோ, எல்லாம் அந்த பெண்ணால் வந்தது தான்.

கொண்டு வரும் சீரில் சிறிது குறைந்து விட்டாலும் அவள் கதி அதோகதிதான், இம் மாதிரி சமயங்களில் அம்மா முந்தானையை பிடித்து கொண்டு அம்மாவின் நிழலில் வாழும் முதுகெலும்பில்லாத நல்லவர்கள்(!) வாய் மூடி மௌனியாக நின்று கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாக இருக்கும் பொழுது அடச் சே , இவனையா ஒரு ஆண் என்று நம்பி வந்தோம் என்று நோகாத பெண்களே இருக்க முடியாது. இதை விட பெண்ணை கட்டி கொடுத்த ஒரு காரணத்திற்காக அவளை பெற்றவர்களை/உடன் பிறந்தவர்களை கேவலமாக பேசுவதும், நடத்துவதும் அதை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தன்னுள்ளே நொறுங்கி போகும் பெண்கள் எத்தனை பேர்?

மனைவி தன்னை விட அதிகம் படித்திருந்தால் வேலைக்கு போக கூடாது என்பதிலிருந்து வேலைக்கு போனாலும் வீட்டுக் கடமைகளை எல்லாம் முடித்து விட்டுத்தான் போக வேண்டும் என்று சொல்வதிலிருந்து... இவர்களுக்கு இலவசமாக ஒரு வேலைக்காரியாக அந்த பெண் நடத்தப்படுகிறாள். ஏதாவது திருப்பி கேட்டு விட்டால் படித்த திமிர், வேலைக்கு போகும் திமிர், இந்த திமிர் அந்த திமிர் என்று அடுக்கடுக்காக அவள் மேல் போடப்படும் அத்தனை வசவுகளையும் வாங்கி அன்றிருந்தே தனிமையில் அழ ஆரம்பிக்கும் எத்தனை பெண்களுக்கு விடிவு காலம் கிடைக்கிறது? எல்லா இடங்களிலும் இப்படி இல்லை என்றாலும் பல இடங்களிலும் நம் கண் முன்னே இது நடக்கிறது.

பெரும்பாலும் படித்த, வேலை பார்க்கிற பெண்கள் பல கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். கணவனை விட சம்பளம் குறைவாக இருந்தால் ஒரு குரூர திருப்தியும், அதை சொல்லி குத்தி காட்டுவதும், ஒரு வேளை கணவனை விட அதிகம் வாங்கினால் தாழ்வு மனப்பான்மையில் எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியுமோ, எப்படியெல்லாம் வசை பாட முடியுமோ என்று மன நிலை பிறழ்ந்த நிலையில் பெண் தானே என்று போட்டு மிதிக்கும் ஜென்மங்களுடன் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும் பெண்கள் எத்தனை பேர்? படிக்காதாவர்களுக்கு வேறு வகையில் பிரச்சினைகள். குழந்தைகள், குடும்ப சூழ்நிலை கருதி பல பெண்களும் தங்கள் மனதுக்குள்ளேயே பிரச்சினைகளை போட்டு பூட்டி வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு பிறந்த வீட்டு சீதனம் என்ற பெயரில் வதை, சிலருக்கு சம்பாதிக்கிற பணத்தால் பிரச்சினை, சிலர் அழகாக இருப்பதால் பிரச்சினை, சிலருக்கு அழகாக இல்லையென்பதால் பிரச்சினை, குழந்தை பிறக்கா விட்டால் பிரச்னை, பிறந்து அந்த குழந்தைக்கு சரியாக சீர் செய்யவில்லையென்றால் பிரச்னை என்று ஒவ்வொரு நிலைகளிலும் எத்தனை எத்தனை பிரச்சினைகள் இந்த 'மா தவப் பெண்களுக்கு'!

வேலைக்குப் போனால், தன் முயற்சியால் பதவி உயர்வு கிடைத்தாலும் அதற்கு ஒரு குத்தலான பேச்சு, வக்கிர பார்வைகளுடனும் பேச்சுக்களுடனும் உலா வருபவர்களுடன் நாள் முழுவது உடலும் மனமும் நொந்து போகிற 'மா தவப் பெண்கள்' தான் எத்தனை பேர்? மனித உருவில் நடமாடும் பணப்பிசாசுகளுடன், சந்தேகப் பேய்களுடன், பணந்தின்னி கழுகுகளுடன் நித்தம் நித்தம் எத்தனை எத்தனை பெண்கள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது? பல பெண்களையும் வார்த்தைகளால் சாடி அவளை நடைப்பிணமாகவே வைத்திருக்கும் எத்தனை பேருக்கு புரியும் அவள் படுகின்ற துன்பங்கள்?

என் அம்மா சொன்னதால் உன்னை திருமணம் செய்து கொண்டேன், உன் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்வதும், விவாகரத்து செய்வதும்...வெட்கங்கெட்ட ஈனப் பிறவிகள்.ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், சில/பல மோசமான பெண்களும் இருக்கிறார்கள், மறுப்பதற்கில்லை. ஆனால் நித்தமும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்ற பெண்கள் தான் அதிகம்.

பெண்ணை ஒரு பெண்ணாக, சக மனுஷியாக, தோழியாக, அவள் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்களாக, அவளை நன்கு புரிந்து நடந்து கொண்டு அவளுடைய வாழ்க்கையை முன்னேற்றுபவர்களாக இருப்பவர்கள் கிடைத்தால் அவள் தான் 'மாதவம் செய்தவள்'.

இல்லையென்றால் அவள் ஒரு தொடர்கதை தான்.

Thursday, March 7, 2013

அவள் ஒரு தொடர்கதை- 1

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் எதை வைத்து சொன்னார்களோ தெரியவில்லை நிச்சயம் இப்பொழுது இந்த காலத்தில் சொல்ல மாட்டார்கள். பெண்களுக்கு எதிராக நிகழும் வன்மங்களை பார்த்தால் நிச்சயம் why this கொலைவெறி என்று தான் கேட்பார்கள். அவ்வளவு துன்பங்கள் பல பெண்கள் வாழ்விலும்.

பெண்குழந்தை பிறந்து சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டால் அந்த பெண் 'மா தவம் செய்தவள்' தான். பெண் பிறந்து விட்ட காரணத்திற்காக அந்த குழந்தையையும், அவள் தாயையும் ஒதுக்கி வைக்கும் ஆணும் அவனை பெற்ற பெண்ணும் எத்தகைய கொடியவர்கள்? அதோடு முடிந்ததா? ஒரு சில வீடுகளில் பெண் குழந்தைகளை ஒரு விதமாகவும், ஆண் குழந்தைகளை ஒரு விதமாகவும் நடத்துகிறார்கள். இன்று அந்த அளவிற்கு மோசம் இல்லையென்றாலும் இன்னும் பல இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்ணாக பிறந்த ஒரே காரணத்திற்காக எத்தனை குழந்தைகள் கள்ளிப்பாலை தாய்ப்பாலாக நினைத்து உயிரை விட்டு கொண்டிருக்கின்றன. பல வீடுகளில், நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், யாரோ ஒரு சில பெண்கள் செய்த தவறுக்கு பல பெண் குழந்தைகளும் அனுபவிக்கும் இத்தகைய கொடுமைகள் ஏராளம். பெண் பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்று இருந்த நிலை மாறி, பெண்களும் படிக்க வேண்டும் என்று மாறியிருப்பது சிறிது ஆசுவாசத்தை தருகிறது. அதிகம் படிக்க விரும்பினால், நாளை உன்னை எவன் கட்டிப்பான்? இதோடு நிறுத்திக் கொள் என்று அங்கும் முட்டுக்கட்டை பலருக்கு. அப்படி மீறி படித்து விட்டால், திருமணத்திற்குப் பின் ஈகோ பிரச்னை. உன்னை ஒருவனிடம் பிடித்து கொடுக்கும் வரை எனக்கு தூக்கம் வராது என்று புலம்பும் தாய்மார்கள் அதிகம். அவள் வளரும் பொழுது வெளியில் போய்விட்டு வருவதற்குள் அநேக கழுகுப்பார்வைகளில் இருந்து தப்பி வர வேண்டும். பஸ்களில், கூட்டங்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்தால் ஒழுங்காக படிக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். விருந்தினர்களை கவனிக்க வேண்டும். என்று பல எழுதப்படாத நியதிகள், இந்த 'மா தவப் பெண்களுக்கு'. சில பெண்கள் தாங்கள் செய்யாத தவறுக்கு தண்டனையும் அனுபவிக்கிறார்கள். தெருவில் போகும் எவனோ ஒருத்தன் காதலித்தால் அதற்கு இவளா பொறுப்பு? அதற்கு பதில் இவள் முகத்தில் ஆசிட் கொடுமை என்று பல இடங்களில் இப்போது. என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்? கல்லூரிக்குப் போனாலும் இதே கொடுமை தான்.

அதோடு முடிந்ததா? கல்யாணத்திற்கு வரன் தேடுகிறேன் பேர்வழி என்று அந்த பெண்ணை பாடாய் படுத்தி விடுவார்கள். வருகிற வரன்களும் ஏதோ தேவலோகத்தில் இருந்து குதித்த மாதிரி புடை சூழ வந்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு விட்டு பெண்ணையும் பார்த்து விட்டு பெற்றோர்கள் எதிபார்க்கும் நகை நட்டு கிடைக்காததால் வேறு வரன் பார்க்கிறோம், ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்று நொள்ளை காரணங்களை  சிறிது நாள் கழித்து சொல்லும் பொழுது பெண்ணும், அவளை பெற்றவர்களும் படும் பாடு இருக்கிறதே! இப்படியே எத்தனை முறை அந்த பெண் அலங்கரித்துக் கொண்டு உட்காருவாள்? வேறு வழி? பலர் பார்த்தும் நிச்சயம் ஆகவில்லை என்றால் பெண்ணை பெற்றவர்களுக்கே மனவருத்தம் எரிச்சலாக மாறி ஊரிலிருக்கும் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது என் பெண்ணிற்கு நடக்க வில்லையே என்று மன அழுத்தம் அதிகமாகி அதனால் எத்தனை பிரச்சினைகள்? பெற்றோர்கள் வேதனையை பார்க்க சகிக்காமல் ஏதோ கல்யாணம் என்று ஒன்று நடந்தால் சரியென்று சொல்லி, வந்த வாழ்க்கையை கொடுமையுடன் ஏற்று மனதிற்குள்ளே புழுங்கும் மாதவப் பெண்கள் எத்தனைப் பேர்? பெண் பார்க்க வருபவர்களும் பெண் குட்டை, நெட்டை, குண்டு, ஒல்லி, கருப்பு என்று சொல்வது அதையும் விட கொடுமை. ஆனால் அதே பெண் வீட்டில் இருந்து அதிக நகை, பணம் கொடுக்கிறோம் என்றவுடன் பல்லை இளித்துக் கொண்டு சம்மதிப்பதும், அதை பார்த்து புழுவாய் பெண்கள் துடிப்பதும் எத்தனை ஜென்மங்களுக்கு புரியும்? இதை சொல்பவர்கள் தங்களின் உண்மையான முகம் என்னவென்று தெரியாமல் ஐஸ்வர்யாராய் ரேஞ்சில் பெண்ணிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ( இந்த தகர டப்பா மூஞ்சிகளுக்கு இதுவும் ஒரு கேடு!) , அம்பானி ஸ்டைலில் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக பலரும் தங்கள் சேமிப்பு அல்லது கடனை வாங்கி செய்யும் கொடுமை தான் உச்சம். ஜாதகத்தில் பெண்ணுக்கு மூல ராசி என்றால் நிர்மூலம் ஆகி விடுமாம். ஆண் மூலம் அரசாளுமாம், என்ன விதமான கண்டுபிடிப்பு!

அவள் ஒரு தொடர்கதை...

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...