Wednesday, April 24, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி திருத்தேர் ஊர்வலம்

மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் விளக்குத்தூண் அருகில் இருக்கும் தேர்முட்டியில் தான் நின்று கொண்டிருக்கும். பார்த்தாலே பிரமாண்டமாக இருக்கும் இந்த தேர் அழகான வேலைப்பாட்டுடன் பெரிய சக்கரங்களுடன் இந்த திருநாளுக்காகவே காத்திருக்கும். திருவிழா நேரம் நெருங்க நெருங்க இந்த தேரை சுத்தம் செய்து சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம், அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதை காண விரைந்தோடிக் கொண்டிருக்கும்.

நாங்களும் காலையில் எழுந்திருந்து கூட்டத்தோடு கூட்டமாக போக, வெடிச் சத்தம், முரசு சத்தம் கேட்டவுடன் இன்னும் நடையை விரைவுப்படுத்த, ஆடி அசைந்து வரும் அந்த பிரமாண்டமான தேர் பார்க்கும் எவரையும் வசீகரிக்கும். வாழை மரங்கள் இருபுறமும் கட்டி, தென்னை ஓலைகளால் செய்த மாலைகளும் துணிகளால் செய்த சிவப்பு நிற தோரணங்களும், மணிகளும், தேரை இழுக்க பெரிய வடங்களும், அதை இழுக்கும் மாணவர்கள்,பெரியவர்கள்,குழந்தைகள் என்று கூட்டமும், பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

தேரின் உச்சியில் படப்படத்துக் கொண்டிருக்கும் கொடியும், கால்களை தூக்கிக் கொண்டு இருக்கும் வெள்ளைக் குதிரைகளும், ஒருவர் சாமரம் வீசிக் கொண்டே வர, ஒருவர் மைக்கில் கூட்டத்தை எச்சரிக்கை செய்து கொண்டே வர, அழகு தேவதையாய் தேரில் அம்மன் வரும் அழகையும், இன்னொரு தேரில் அம்மன், சொக்கநாதருடன் தம்பதி சமேதரராக வலம் வரும் காட்சியும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
தேரைக் காண தெற்குமாசி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். மாடிகளில், தெரிந்தவர்கள் வீட்டு வாசல்களில் என்று எங்கும் மக்கள் கூட்டம் 'ஜேஜே' என்றிருக்கும். தேர் வரும் வழியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும். மின்சார வயர்கள் கூட மேலே தூக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமால் சென்று கொண்டிருக்கும் தேர் திடீரென்று கூச்சலுடன் நின்று விடும். அதை மீண்டும் இழுத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனாலும் என்ன, ஆடி அசைந்து வரும் தேரை பார்த்த திருப்தியில் வரும் வழியில் பந்தலில் நீர் மோரோ, பானகமோ குடித்து விட்டு, சில இடங்களில் பொங்கலும் கொடுப்பார்கள் அதையும் வாங்கி சாப்பிட்டு விட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் நாளை எதிர்பார்த்து வீடு திரும்பும் கூட்டம் :)

மதுரை மக்களுக்கு திருவிழாக் கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும்?

Tuesday, April 23, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி திருக்கல்யாணம்

மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாண நாளன்று திருமணமான பெண்கள் அனைவரும் புதுப்புடவையையோ அல்லது நல்ல உடையையோ அணிந்து கொண்டு வீட்டில் பூஜை செய்து விட்டு தங்கள் தாலிக்கயிறையையும் மாற்றிக் கொள்வார்கள். பல பெண்களும் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்வார்கள். பலரும் அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று அம்மனின் திருமணத்தை நேரில் தரிசனம் செய்து விட்டு அம்மனின் ஆசி பெற்று வருவார்கள். சிலர் விருந்தும் சாப்பிட்டு விட்டு மனம்,வயிறு நிறைய திரும்புவார்கள். இப்பொழுது நேரிடையாகவே ஒளிப்பரப்பு செய்து விடுவதால் போக முடியாதவர்களுக்கும் நேரில் சென்று பார்த்த திருப்தி! என்ன மின்துறை தான் மனது வைக்க வேண்டும்!

அன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மனையும், சிவபெருமானுடன் இணைந்து வரும் கோலத்தையும் பார்க்க கூடும் கூட்டம் இருக்கே!!!

மாலை ஏழு மணியிலிருந்தே சேரும் கூட்டம் நேரம் ஆகஆக நகரக் கூட இடமில்லாமல் பிதுங்கி வழியும். இடி மன்னர்களிடம் இருந்தும் பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்தும் தங்களை பாதுக்காத்துக் கொண்டே கூட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள், வெடி சத்தம் கேட்டவுடன் ஒரு தள்ளுமுள்ளுடன் அம்மனை எதிர் நோக்க, போலீஸ் பந்தோபஸ்காரர்களும் திமிரும் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருப்பார்கள்.

முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாக பவனி வர, விநாயகர், முருகன், பின்பு வரும் மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித பூக்கள் வாசம் அந்த இடத்தையே மணக்க வைக்க, சிவபெருமானுடன் வரும் அன்னையை, தம்பதி சகிதமாய் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு மனமுருகி வணங்க, அடுத்து, அழகு பூப்பல்லக்கு ஆடி அசைந்து வர, அனைவரும் பயபக்தியுடன் இரு கைகூப்பி வணங்க, சர்வ அலங்கார அன்னையை பார்க்க எட்டி எட்டி பார்க்கும் கூட்டம், இன்னவென்று சொல்ல முடியாத பக்தி பரவசத்துடன் இருக்கும் கூட்டம், காண கண் கோடி வேண்டும்.


மெதுவாக அம்மனின் அழகுப் பூப்பல்லக்கு பார்த்த திருப்தியுடன் மறுநாள் காலை வரவிருக்கும் திருத்தேரைக் காண வீடு திரும்பும் கூட்டம்.

Saturday, April 20, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி பட்டாபிஷேகம்

 திருவிழாவின் முதலாம் நாள் அம்மைஅப்பன் கற்பகவிருட்ச வாகனத்திலும்,  அம்மன் சிம்ம வாகனத்திலும் வந்து அருள் புரிவார்கள். இரண்டாம் நாள், பூத வாகனம் மற்றும் அழகிய அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்திலும், நான்காம் நாள் தங்கப்பல்லக்கிலும், ஐந்தாம் நாள் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆறாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஏழாம் நாள் யாளி, நந்திகேசுவரர் வாகனத்திலும் என்று வெள்ளி, தங்க வாகனங்களில் வந்து வலம் வருவார்கள்.

எட்டாம் நாள் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்று பட்டாபிஷேகம் முடிந்து கையில் கோலுடன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் அம்மனைக் காண கூட்டம் கோவில், விளக்குத்தூணிலிருந்து ஆரம்பித்து தெற்குமாசி வீதி,  மேலமாசி, வடக்கு மாசி வீதி என்று அதகளப்படும். குழந்தைகளுடனும், சுற்றங்களுடனும் முன் கூட்டியே வந்து இடத்தை பிடித்துக் கொண்டு காத்திருக்கும் கூட்டம். என் பாட்டி வீடு விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த சந்தில் இருந்ததால் அடித்து பிடித்துக் கொண்டு போகும் கூட்டத்தை பார்த்துக் கொண்டே வாசலில் உட்கார்ந்திருப்போம். சில நேரங்களில் தண்ணீர் பானையும் வெளியில் வைத்திருப்போம்.

ஒன்பதாம் நாள் அம்மனின் திக்விஜயம். அன்று இந்திரவிமானத்தில் வந்து தெரு முக்குகளில் அம்மன் திக்குபாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமானது.

ஒவ்வொரு நாளின் விழாவிற்கும் ஒரு தாத்பர்யம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் என்று திருவிழா கோலாகலமாக நடக்க, உச்சமாக அன்னையின் திருக்கல்யாணம்!



Monday, April 15, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி விழாக்கோலம்


இன்னும் சில நாட்களில் மதுரை திருவிழா கோலம் பூண்டு விடும். இப்பொழுதே ஆரம்பித்திருக்கும் கூட! மதுரை மக்கள் தங்கள் மீனாக்ஷி அம்மனை பட்டத்து அரசியாக்கி, சிவபெருமானுடன் திருமணக்கோலம் காணத் தயாராகி விடுவார்கள். விடுமுறை நேரமாதலால் குழந்தைகளும் குதூகலமாக அம்மன் கோவில் அலங்காரங்களையும், தினம் வெவ்வேறு வாகனங்களில், அலங்காரங்களில் பவனி வரும் சுவாமியையும், அம்மனையும் காணவும்,  வரும் வழியில் வாய் இனிக்க, உதடு சிவக்க முட்டாய் வாங்கித் தின்னவும் தயாராகி விடுவார்கள் :)

மீனாக்ஷி அம்மன் கோவிலில் கொடியேற்றம் ஆரம்பித்தவுடனே ஆரம்பிக்கும் விசேஷங்கள் ஆற்றில் அழகர் இறங்கி ஊர் போய் சேரும் வரை மதுரையையே அலைக்கழிக்கும்! வெயிலுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், அதற்கெல்லாம் அசந்து விடுவார்களா மதுரை மைந்தர்கள்? வெயில் கொளுத்தினாலும், தண்ணீர் பஞ்சம் இருந்தாலும், நகரமே இருட்டில் மூழ்கினாலும் கூட்டம்,கூட்டமாக கோவிலுக்கு போவதில் தான் என்னே ஆனந்தம்!


சித்திரை முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பன்று பெரும்பாலோனோர் வீடுகளில் செம்மண் கரைத்து அதன் மேல் கோலம் போட்டு மங்களகரமாக ஆரம்பிக்கும்இந்த மாதம் வரும் மாதங்களுக்கும், விசேஷங்களுக்கும் ஒரு பிள்ளையார் சுழி.

சுவாமி வருவதற்கு முன்பு ஒரு வெடி போடுவார்கள். கூட்டமும் சலசலக்க ஆரம்பிக்கும். முதலில் வரும் குதிரை ஒட்டகம், எருது என்று வரிசையாக வருபவைகளைப் பார்த்து குழந்தைகள் ஆர்ப்பரிக்க, விநயாகர் , முருகன் அவரவர் வாகனங்களில் வர, மக்களும் பயபக்தியுடன் எழுந்து நின்று கும்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே ஒளிவெள்ளத்தில் அம்மனும், சுவாமியும், தனியாக அம்மனும் என்று வெள்ளி வாகனங்களில் ஜொலிக்க வரும் காட்சியே அலாதியானது. ஆங்காங்கு நின்று கொண்டே பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டு சுவாமி புறப்பட , கூட்டமும் களைய ஆரம்பிக்கும்.

குழந்தைகளும் பொம்மை மிட்டாய்க்காரனிடம் போய் கையில் வாட்ச்சோ அல்லது ஏதாவது ஒரு டிசைனோ போட்டுக் கொண்டு ஒரு முறை சப்பி பார்த்து விட்டு அந்த இனிப்புடனும் கையை பார்த்துக் கொண்டும் போவார்கள்.

இன்னும் சிலர் மண்ணெண்ணெய் வாசம் மணக்க பெரிய திரியுடன் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில், வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மிட்டாய் விற்பவர்களை நோக்கிப் போவார்கள். சிவப்பு நிற மிட்டாய் விரைவில் தீர்ந்து விடும், அதை வாயில் போட்டு கடக் முடக் என்று கடிப்பதை விட, வாயிலேயே வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட, ராமராஜன் லிப்ஸ்டிக் போட்ட மாதிரி ஆகி விடும் சிறிது நேரத்தில். குழந்தைகளும் யாருக்கு அதிக சிவப்பு நிறம் வாயில் இருக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே போவதும், இன்னும் சிலரோ குருத்து, மாங்காய், திகர்தெண்டா என்று ஆளுக்கொரு திசையாக போய்க் கொண்டிருப்பார்கள்! ஆப்பிள் பலூன், ஆரஞ்சு பலூன், ஊதுகுழல், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் மூங்கில் குச்சிகள் என்று எதையாவது கேட்டு அழுது கொண்டே போகும் குழந்தைகளையும் பார்க்கலாம்.

ஒரே தெருவிலிருந்து வந்தவர்கள் கூட்டமாக பேசிக் கொண்டே மறுநாள் எத்தனை மணிக்கு வருவது என்று பேசிக் கொண்டே போவதும், சுற்றங்களுடன் வந்தவர்கள் மீண்டும் நாளை பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே பிரிவதுமாய் கூட்டம் களையும். தூரத்தில் மீனாக்ஷி அம்மன் போவதை பார்த்துக் கொண்டே விரைவில் அம்மனின் பட்டாபிஷேகம், திருக்கல்யாண கோலத்தைப் பார்க்கும் ஆவலுடன் வீட்டுக்குத் திரும்பும் கூட்டம்.
















Saturday, April 13, 2013

அந்த சில நிமிடங்கள்

படுக்கப் போவதற்கு முன்,  நாளை அதிகாலையில் எழுந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று மனம் கணக்கு போட்டு தூங்கினாலும் கடிகாரத்தின் அலாரம் சத்தம் கேட்டவுடன் போர்வையை இழுத்துக் கொண்டு இது எனக்கான நேரம் இல்லை என்று ஒரு சிறு மனப்போராட்டத்திற்கு பின் தூங்குவதில் தான் என்ன சுகம்!

சிறிது நேரம் கழித்து மீண்டும் கடிகாரம் எழுப்ப, பனிக்காலம் என்றால் இன்னும் ஒரு ஐந்து நிமிடம், இன்னும் ஒரு ஐந்து நிமிடம்  என்று சுருண்டு கொண்டு படுப்பதும்,

வசந்த காலம் என்றால் பறவைகளின் இன்னிசை கச்சேரி கேட்டுக் கொண்டே இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தது இந்த 'கிச்கிச்' சத்தம் என்று அனுபவித்துக் கொண்டே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் தூங்குவதும்,

மழைக்காலம் என்றால், 'சிலுசிலு' மழைத் தூறல்களின் சத்தத்தில் கண் விழித்துப் பார்த்தாலும் இல்லாத குளிரை இருப்பதாக நினைத்து இழுத்துப் போர்த்தி படுப்பதிலும்,

கோடைக்காலத்தில் அதிகாலையில் கண்ணை கூச வைக்கும் வெளிச்சம் வந்தாலும் முகத்தை மூடி படுப்பதிலும்,

ஆடி மாத காற்றில் 'ஊஊ' என்று ஊளையிடும் சத்தமும், மரங்களும் வீட்டின் பின்னால் இருக்கும் பொருட்களும் நர்த்தனம் ஆடினாலும் இதோ இன்னும் ஒரு ஐந்து நிமிடம் என்று எதுவுமே கேட்காதது போல் தூங்குவதிலும்,

குளிர்காலத்தில் இருட்டிய கோலத்தில் நேரமானது தெரிந்தாலும் ஐந்து நிமிடம் தானே என்று உறங்குவதிலும்,

இன்று விடுமுறையா என்று இல்லாத ஒரு சந்தேகம் வந்து விடுமுறை தான் என்று தெரிந்ததும் மனம் குதூகலித்து அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவதிலும்,

இல்லையென்று தெரிந்ததும் அடித்து பிடித்து குழந்தைகளையும், கணவரையும் எழுப்பி விட்டு அரக்க பரக்க 'தடதட' வென்று வீட்டு வேலைகளை ஆரம்பிக்க ...


காலை நேர  அந்த சில நிமிட தூக்கம் மட்டும் ஏன் இவ்வளவு சுகமாக இருக்கிறது?

Thursday, April 4, 2013

பாண்டிச்சேரி - 2

பாண்டிச்சேரியின் நெரிசலில் புகுந்து அந்த மாநில முதலமைச்சர் போஸ்டர்களை தாண்டி போனால் ஒரு சிறிய குறுகலான தெருவில் மணக்குள விநாயகர் கோவில். பல கல்லூரிகள், வியாபாரங்கள் இவர் பெயரில் கனஜோராக நடக்கிறது. ஆங்கில வருடப்பிறப்பிற்கு முன் மற்றும் விடுமுறை காலம், அய்யப்ப, செவ்வாடை பக்தர்கள் வேறு என்று கூட்டம். நுழை வாயிலில் பூக்கடைகள், பொம்மைக்கடைகள் என்று பலவிதமான கடைகள். உள்ளே ஏசி காற்றில் 'சில்'லென்று விநாயகர்! அன்று வெள்ளி கவசம் அணிந்து விபூதி வாசத்துடன் தரிசனம் தந்து கொண்டிருந்தார். அவரை வலம் வருகையில் வேறு பல சன்னிதானங்கள்! சின்னக் கோவில். நல்ல கூட்டம் வருகிறது.

மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சேர்ந்து நின்று கொண்டு சுவாமி தரிசனம் முடித்தோம். ஆங்கில  வருடப்பிறப்பை ஒட்டி வெள்ளி கவசத்துடன் அங்கிருந்த மூலவர், உற்சவர்களுக்கு அன்று அலங்காரம் செய்திருந்தார்கள். நல்ல விபூதி, சந்தனம், மலர்கள் நறுமணத்துடன் கோவில் திவ்யமாக இருந்தது. வெளியில் கொலுசு போட்ட கோவில்யானை காசு வாங்கி கொண்டு ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தது.  வெளியில் வந்து சிறிது நேரம் கடைகளை அலசி விட்டு, ஸ்ரீஅரவிந்தர் ஆஸ்ரமம் நோக்கி நடந்தோம்.

அப்படியே சிறிது தூரம் நடந்து போனால், ஸ்ரீஅரவிந்தர் ஆஷ்ரமம். முதலில் என் கணவர் மற்றும் அவர் நண்பர் குடும்பத்துடன் 2011ல் வந்திருந்தோம். கற்கள் பதித்தஅந்த தெருக்கள், மரங்களுடன் கூடிய உயரமான வீடுகள்- வித்தியாசமாக இருக்கிறது.

ஸ்ரீஅரவிந்தர் ஆஷ்ரமத்தின் வெளியில் செருப்புகள் வைக்க வசதிகள் செய்திருக்கிறார்கள். உள்ளே நுழையும் பொழுதே ஒருவர் அமைதியாக செல்லுமாறு சொல்ல பல பூச்செடிகளை கடந்து போனால் எதிரே சமாதி. மலர்கள் வைத்து அதை சுற்றி மக்கள் நடந்து போய் வணங்குகிறார்கள்.  அங்கு மர நிழலில், வாசற்படிகளில் உட்கார்ந்து மணிக்கணக்கில் கண்களை மூடி தியானம் செய்கிறார்கள். 'சிலுசிலு'வென்ற காற்றுடன் அந்த பரந்த இடமும், அமைதியும் மனதிற்கு இதமாக இருக்கிறது.

ஸ்ரீஅரவிந்தர் வாழ்ந்த அறையில் சில நிமிடங்கள் தியானம் செய்ய ஸ்பெஷல் அனுமதி வேண்டும். அங்கு அவர் உட்கார்ந்த நாற்காலி, படுத்திருந்த கட்டில், பயன்படுத்திய பொருட்கள் இருக்கிறது. நாம் மூச்சு விடும் சப்தம் தவிர வேறு எதுவும் கேட்க முடியாது. அவ்வளவு நிசப்தம் அங்கே. முதல் முறை போயிருந்த பொழுது அங்கு அமர்ந்து தியானம் செய்யும் பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது. அங்கும் பல வெளி நாட்டினரை பார்க்க முடிகிறது. அங்கிருக்கும் புத்தக சாலையில் ஸ்ரீஅரவிந்தர்  மற்றும் அன்னை எழுதிய பல புத்தகங்களும் கிடைக்கிறது. புத்தகம் வாங்கவும் நல்ல கூட்டம்.


பிறகு, என் கணவரின் நண்பருக்கு தொலைபேசியில் நாங்கள் வீட்டிற்கு வருவதை சொல்லி விட்டு வழி கேட்டு தெரிந்து கொண்டு அவர் வீட்டிற்கு சென்றோம். மிகவும் குறுகிய தெருக்களை கடந்து சென்றோம். அந்த தெருக்களில் கூட சாமர்த்தியமாக கார்களை ஓட்டுகிறார்கள்!!! 'ஜேஜே' என்று மக்கள் வெளியில் அமர்ந்து கொண்டும், கடைகளுக்கு போய்க் கொண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்தில் மற்றுமொரு நண்பரும் எங்களை பார்க்க வந்திருந்தார். பேசிக் கொண்டே மதிய உணவு அவர் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டோம். சுவையான உணவு, அன்பான மனிதர்கள். நேரம்
போனதே தெரியவில்லை.

அன்னையால் நிறுவப்பெற்ற 'ஆரோவில்' போகும் சந்தர்ப்பமும் 2011-ல் எங்களுக்கு கிடைத்தது. அதற்கு முன்பதிவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. என் கணவரின் நண்பர் எங்களுக்காக முன்பதிவு செய்து வைத்திருந்தார். ஆரோவில் பாண்டிச்சேரியிலிருந்து சிறிது தொலைவில் இருக்கிறது. நண்பர் மூலமாக அறிமுகமான இன்னொரு நண்பர் எங்களை அவர் காரில் அங்கே அழைத்துப் போனார். போகும் வழி என்னவோ ஒரு வசதியில்லாத கிராமத்தை போல் இருந்தது. பல வெளிநாட்டினரும் சைக்கிளிலும், நடந்தும் போய்க்கொண்டிருந்தார்கள்.

வெள்ளை உடையணிந்த ஆசிரமத்துக்காரர்கள் முகத்தில் அமைதி தழுவ வரவேற்று ஒரு பஸ்ஸில் குழுக்களாக அழைத்து சென்றார்கள். வறண்ட பாலை நிலமாக இருந்த இடத்தை சோலைவனமாக மரங்களும், செடிகளும், புற்களும் என்றும் பல வருடங்கள் உழைத்து மாற்றியதாக சொன்னார்கள். ஒவ்வொரு குழுக்களையும் அழைத்துக் கொண்டு மரங்களை பற்றியும் அந்த கட்டிடத்தைப் பற்றியும் விரிவாக சொல்லிக் கொண்டே மாத்ரிமந்திர் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

மாத்ரிமந்திர்- வேறு உலகம். அங்கே அமைதி தவிர வேறு எதுவுமில்லை. பூகோள வடிவ அந்த கட்டிடம் நான்கு பாதைகளாக சுற்றிலும் புற்கள் சூழ, தொலைவில் மரங்கள் அடர்த்தியாக, உள்ளே படிகளில் இறங்க, வெயில் படாத வகையில் அந்த கட்டிடம் 'சில்'லென்றிருக்கிறது. உள்ளே இறங்கி தியானம் செய்யும் அறைக்குள் போக, அவரவர் வசதிக்கேற்ப உட்கார்ந்து தியானம் செய்யலாம். சில நேரங்களில் அமைதியாக இருப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே ஒரு சவாலான வேலை தான். அப்பொழுது பூதாகரமாக எழும்பும் விஷயங்களை அடக்க முயல, முடியாமல் தத்தளிப்பதற்குள்  அவர்கள் விளக்கைப் போட தூக்கத்தில் இருந்து எழுந்த மாதிரி இருந்தது. அதற்குப் பின்னும் சிலர் கண்மூடி தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

அதுவும் என் வாழ்க்கையில் ஒரு நல்ல அனுபவம்.

Monday, April 1, 2013

பாண்டிச்சேரி - 1

 திண்டிவனம்- பாண்டிச்சேரி ஹைவேஸ் பாதையில்,சுங்க சாவடி வருவதற்கு முன் பாண்டிச்சேரி ஊர் எல்லை அருகே இருக்கிறது இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். மிகச் சிறிய எழுத்தில் ஒரு போர்டில் எழுதி இருப்பதால் எளிதில் வழியை தவற விட முடிகிறது. ஒரு சின்ன ஊர் வழியே போனால் கோவிலைப் பார்க்கலாம். இப்பிடியே நேரா போங்க, கோயில் வந்துரும் என்று வழி கேட்பவர்களிடம் பொறுமையாக சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள். இது தனியாரால் நடத்தப்படும் கோவில் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 2011-ல் முதல் முறை இந்த கோவிலுக்கு போன பொழுதே மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்த முறையும் போய் விடுவது என்று போனோம்.

நெடுநெடுவென்ற பஞ்சமுக ஆஞ்சநேயர், நங்கநல்லூர் ஆஞ்சநேயரை நினைவுறுத்தினாலும், பஞ்சமுகத்துடன் விஸ்வரூபமாக காட்சி தருவது இந்த கோவிலின் சிறப்பு. பெருமாள், விநாயகர் சன்னதிகளும் இருக்கிறது. நீண்ட மண்டபம்-நல்ல காற்று, சூரிய வெளிச்சத்துடன்! தொன்னையில் வைத்து நெய் மிதக்க மிளகு காரத்துடன் வெண்பொங்கல் கொடுத்தார்கள். மதிய நேரம் இலவச உணவு சாப்பிட பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் நல்ல கூட்டம் இருக்கிறது. பெரிய சுற்றுப் பிரகாரம். நல்ல தரிசனம், திவ்யமான பிரசாதம் முடித்து விட்டு மெதுவாக வெளியில் கிளம்பி வந்தோம்.

சிறிது நேரத்தில்சுங்க சாவடி தாண்டி பாண்டிச்சேரிக்குள் பிரவேசம். கைத்தடியுடன் காந்தி சிலை வரவேற்க, எங்கும் மணக்குள விநாயகர் பெயர் தான். அவரை அடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் வானாளவ இரு கரம் கூப்பி வரவேற்கும் படங்களும்,போர்டுகளும் ஊரெங்கும்:( பாண்டிச்சேரி ஜிப்மர் வளாகம் தாண்டி குறுகிய சாலைக்குள் போக்குவரத்து நெரிசலில் ஐக்கியமானோம். பலவிதமான கடைகள் - துணி, நகை, பிளாஸ்டிக்...என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே கோவில் இருக்கும் பகுதிக்குள் வந்து விட்டோம்.

வருட கடைசி நாள் வேறு, சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் என்று கூட்டமோ கூட்டம். ஒரு வழியாக காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு கோவிலுக்கு நடந்தோம். தெருக்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக பிரெஞ்ச் கலவையுடன்! தெருக்களும் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்த வீடுகளும் வேறு விதமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே மணக்குள விநாயகர் கோவில் இருக்கும் தெருவிற்கு வந்து விட்டோம். தாமரை மலர்கள், சிறு,சிறு விளையாட்டுப் பொருட்கள் விற்பவர்கள் கூட்டம் கோவிலுக்கு வருபவர்களிடம் முந்தியடித்துக் கொண்டு வியாபாரம் செய்ய அவர்களை கடந்து கோவிலுக்குள் போனோம்.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...