Wednesday, April 24, 2013

சித்திரை மாதம் - அன்னை மீனாக்ஷி திருத்தேர் ஊர்வலம்

மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் விளக்குத்தூண் அருகில் இருக்கும் தேர்முட்டியில் தான் நின்று கொண்டிருக்கும். பார்த்தாலே பிரமாண்டமாக இருக்கும் இந்த தேர் அழகான வேலைப்பாட்டுடன் பெரிய சக்கரங்களுடன் இந்த திருநாளுக்காகவே காத்திருக்கும். திருவிழா நேரம் நெருங்க நெருங்க இந்த தேரை சுத்தம் செய்து சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் அதிகாலையில் மக்கள் கூட்டம், அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதை காண விரைந்தோடிக் கொண்டிருக்கும்.

நாங்களும் காலையில் எழுந்திருந்து கூட்டத்தோடு கூட்டமாக போக, வெடிச் சத்தம், முரசு சத்தம் கேட்டவுடன் இன்னும் நடையை விரைவுப்படுத்த, ஆடி அசைந்து வரும் அந்த பிரமாண்டமான தேர் பார்க்கும் எவரையும் வசீகரிக்கும். வாழை மரங்கள் இருபுறமும் கட்டி, தென்னை ஓலைகளால் செய்த மாலைகளும் துணிகளால் செய்த சிவப்பு நிற தோரணங்களும், மணிகளும், தேரை இழுக்க பெரிய வடங்களும், அதை இழுக்கும் மாணவர்கள்,பெரியவர்கள்,குழந்தைகள் என்று கூட்டமும், பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

தேரின் உச்சியில் படப்படத்துக் கொண்டிருக்கும் கொடியும், கால்களை தூக்கிக் கொண்டு இருக்கும் வெள்ளைக் குதிரைகளும், ஒருவர் சாமரம் வீசிக் கொண்டே வர, ஒருவர் மைக்கில் கூட்டத்தை எச்சரிக்கை செய்து கொண்டே வர, அழகு தேவதையாய் தேரில் அம்மன் வரும் அழகையும், இன்னொரு தேரில் அம்மன், சொக்கநாதருடன் தம்பதி சமேதரராக வலம் வரும் காட்சியும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
தேரைக் காண தெற்குமாசி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதும். மாடிகளில், தெரிந்தவர்கள் வீட்டு வாசல்களில் என்று எங்கும் மக்கள் கூட்டம் 'ஜேஜே' என்றிருக்கும். தேர் வரும் வழியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும். மின்சார வயர்கள் கூட மேலே தூக்கப்பட்டு எந்தவித தடங்கலும் இல்லாமால் சென்று கொண்டிருக்கும் தேர் திடீரென்று கூச்சலுடன் நின்று விடும். அதை மீண்டும் இழுத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விடும். ஆனாலும் என்ன, ஆடி அசைந்து வரும் தேரை பார்த்த திருப்தியில் வரும் வழியில் பந்தலில் நீர் மோரோ, பானகமோ குடித்து விட்டு, சில இடங்களில் பொங்கலும் கொடுப்பார்கள் அதையும் வாங்கி சாப்பிட்டு விட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் நாளை எதிர்பார்த்து வீடு திரும்பும் கூட்டம் :)

மதுரை மக்களுக்கு திருவிழாக் கொண்டாட்டம் என்றால் கேட்கவா வேண்டும்?

4 comments:

  1. இந்த முறை தேரோட்டத்திற்கு வழக்கமாய் கூடும் கூட்டம் இல்லை என்றே நினைக்கிறேன். இதற்கு உள்ளூர் தொலைக் காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த நிகழ்வுகளை நேரலையாய் காட்டுவதும் ஒரு காரணமாய் இருக்கலாம். போதாதற்கு வெய்ய்ய்ய்ய்ய்யில் கொளுத்தியது.

    இப்போது நல்ல மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. ஏரியாவே குளிர்ந்து கிடக்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. போட்டோக்களைப் பார்த்தால் கூட்டம் அதிகமாக தோன்றியது எனக்கு!


      மழை ஒரு வரப்பிரசாதம் தான் :)

      Delete
  2. இந்த முறை என்னால் மட்டும் செல்ல முடியவில்லை... வீட்டில் சென்றார்கள்...

    அந்த கொண்டாட்டமே தனி...

    ReplyDelete
    Replies
    1. அந்த கொண்டாட்டமே தனி... :)

      Delete

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...