Tuesday, June 18, 2013

கும்பகோணம்

 சுவாமிமலை முருகனின் அழகான தரிசனம் முடிந்து வெளியே வந்து சூரியனார் கோவிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்து வழி கேட்டுக் கொண்டு போனோம். வழியில் பச்சை பசேலென்று வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக! தெருக்களும் ஓரளவு சுத்தமாக இருந்தது. குடிசையோ, கட்டிடமோ தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க 'டிஷ்' வைத்திருக்கிறார்கள். கிராம வாசனை இன்னும் கொஞ்சம் இருக்கிறது இந்த பக்கங்களில். வழி கேட்டால் நின்று நிதானமாக சொல்கிறார்கள்.

கும்பகோணத்தில் கோவில் கோபுரங்கள் எல்லாம் பெரியதாக இல்லாமல் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. சமீபத்தில் தான் குடமுழுக்கு முடிந்திருக்கும் போல. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் கோபுரங்கள்.

சூரியனார் கோவில் கோபுரம் ஐந்து நிலைகளே கொண்ட சிறிய கோபுரம். மிகவும் பழமையான கோவில்.சிவன், அம்மன் சன்னிதானங்கள் தவிர்த்து மற்ற சந்நிதிகளின் அருகில் சென்று பார்த்தால் சிலைகளின் நிலை தெரிகிறது. நல்ல கூட்டம். நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், துர்க்கை - எல்லோருக்கும் சிறு சிறு சன்னிதானங்கள். மேடும் பள்ளமுமாக கோவில் பிரகாரங்கள். சில இடங்களில் வழுவழு வென்று மொஸைக் போட்ட தளங்கள். பரிகாரம் செய்ய வந்தவர்கள் கூட்டம் அர்ச்சகர்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமியை கும்பிட்டு விட்டு சிறிது நேரம் கோவிலை வலம் வந்து விட்டு வெளியில் வரும் பொழுது எரிச்சல் இல்லாத ஆனால் 'பளிச்'சென்ற வெயில்.

கோவில் தெருவில் சூடான பஜ்ஜி, வடை வண்டிகள் முதல் பூக்காரர்கள், கடைகள், கோவிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்களின் கூட்டம் என்று அந்த காலை வேளையிலும் கலகலப்பாக இருந்தது.

அடுத்து சுக்கிரனின் ஸ்தலமான கஞ்சனூர் அருகில் இருப்பதால் அங்கு போகலாம் என்று தீர்மானித்தோம். வரும் வழியில் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளநீர் வண்டியும், இலந்தைப்பழமும் கோவில் தெருவில் வரவேற்க, கோவிலுக்குப் போய் விட்டு வந்து பார்த்துக் கொள்வோம் என்று கோவிலுக்குள் நுழைந்தோம்.

கஞ்சனூர்
இந்த கோவிலும் கிட்டத்தட்ட சூரியனார் கோவில் மாதிரியே இருந்தது. சின்ன கோபுரம். மூலவர், அம்மன், விநாயகர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் என்று வரிசையாக. என் மகளுக்கு ஒரு வழியாக அடுத்து எந்த சந்நிதானம் வரும் என்ற அளவில் தெரிய ஆரம்பித்து விட்டது! சுவாமி தரிசனம் முடித்து சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு வெளியில் வந்தோம். இளநீர் சாப்பிட்டு விட்டு, நடுநடுவில் பாசி படர்ந்த குளங்களை கடந்து அடுத்து திருநாகேஸ்வரம் சென்றோம்.
 
திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம் ராகுபகவான் ஸ்தலம் என்பதால் இங்கு கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோவில் வாசல் அலங்காரமும் நன்றாகவே இருந்தது. நுழை வாயிலிலே கொடிமரமும், கோவில் பிரகாரமும், கோவில் குளமும், நீண்ட மண்டபங்களும் என்று கொஞ்சம் பெரிய கோவில், சைவப் பெரியார்களால் பாடப் பெற்ற ஸ்தலம் என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருந்தார்கள். ராகு பகவான் நாகவல்லி மற்றும் நாககன்னி என்று அன்னைகளுடன் மங்களகரமாக காட்சி தந்து கொண்டிருக்கிறார். அங்கு பூஜை செய்து முடித்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டோம்.

மெதுவாக பசிக்க ஆரம்பித்து விட்டது. சாப்பிடலாம் என்று தீர்மானித்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் கும்பேஸ்வரர் கோவில் போகும் வழியில் இருந்த ஸ்ரீ மங்களாம்பிகா விலாஸ் உணவகத்திற்கு போகலாம், வீட்டு சாப்பாடு மாதிரியே நன்றாக இருக்கும் என்று என் தம்பியும் சொல்ல, சரியென்று அங்கு போனோம். காரை ஹோட்டலில் நிறுத்தி விட்டு, கடை வீதி வழியாக போனோம். சின்ன சின்ன கடைகள் ஏராளம். பொங்கலை முன்னிட்டு பளபள பித்தளை, செம்பு பொங்கல் பானைகள் பாத்திரக் கடைகளின் முன் அழகாக அடுக்கி வைத்திருந்ததைப் பார்க்க நன்றாக இருந்தது. செருப்புக் கடைகள், வாட்ச், சேலை, நகைக்கடைகளைத் தாண்டி கோவில் சந்தில் நுழைய பாசிமணி கடைகளைத் தாண்டிப் போனால் ஸ்ரீ மங்களாம்பிகா விலாஸ் வருகிறது.

கல்லாவில் அமர்ந்திருந்தவர் பார்க்க சௌராஷ்டிரா போல இருந்தார். உள்ளே போனோம். ஒரு வயதானவர் வந்து இலையைப் போட்டு விட்டு என்ன வேண்டும் என்று கேட்க, நாங்களும் என்ன இருக்கு என்று கேட்டு விட்டு காத்திருந்தோம். அங்கு வேலைப் பார்ப்பவர்கள் இருவர் சௌராஷ்ட்ராவில் உரையாடுவதை கேட்க சந்தோஷமாக இருந்தது. நாங்களும் சௌராஷ்ட்ராவில்  பேசுவதை பார்த்து எந்த ஊர் என்று விவரம் கேட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கூட்டு,ஒரு பொரியல், ஊறுகாய், அப்பளம், சுடச்சுட வெள்ளரிசி சாதம் வர, சாம்பார், ரசம், தயிர், கட்டித்தயிர் கேட்டு வாங்கிச் சாப்பிட்டோம். பாயசம் வரும் என்று ஏமாந்தேன் :( மிகவும் சிம்பிள் ஆனால் சுவையாக இருந்தது. இலையில் சப்புக் கொட்டி சாப்பிடுவதும் ஒரு சுகம் தான் :)  ரொம்பவே சாப்பிட்ட மாதிரியும் இருந்தது :)


வெளியில் கோவில் வாசலில் யானையை பார்த்தவுடன் என் மகளுக்கு அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை வர, அருகில் போய் பார்த்தோம். அங்கேயே ஒரு பெண்மணி ஒரு தட்டில் பீன்ஸ், முட்டைகோசு இன்னும் பிற காய்கறிகளை வைத்து யானைக்கு என்று விற்றுக் கொண்டிருந்தார். பாகனும் யானைக்கு காய்கறிகள் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்ல நாங்களும் வாங்கிக் கொடுத்தோம். வாழைப்பழம் இப்போதெல்லாம் கொடுப்பதில்லை யானைக்கு சர்க்கரை நோய் வந்து விடுகிறது என்று சொன்னார்!!! பரவாயில்லை, யானையும் டயட்டில் இருக்கிறது என்று பேசிக்கொண்டே வர, அமெரிக்க நேரப்படி இரவு நேரம் - மெதுவாக தூக்கமும் வருவது மாதிரியும் இருந்தது :) உண்ட மயக்கம் வேறு. கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்து விட்டு மீண்டும் கோவில்களுக்குப் போகலாம் என்று நினைத்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

7 comments:

  1. a very good blog with lots of imaginative writing. god bless you.

    ReplyDelete
  2. Your Narration and Photography are very nice.Both makes a sense of virtual tour.. :) thanks for sharing.

    ReplyDelete
    Replies
    1. You are welcome, SenthilVelan. I am glad you enjoyed reading it.

      Delete
  3. நவக்கிரக கோவில்கள் தரிசன சுற்றுலாவா! :)

    அடிப்படையில் இவை யாவும் சிவன் கோவில்களே!, அந்தந்த கோவில்களின் மூலவர்களாகிய சிவனையே இப்படி ஒவ்வொரு கிரகமாக உருவகித்து வழிபடுகின்றனர். எதனால் இப்படியொரு ஏற்பாடு எனத் தெரியவில்லை.இது இங்கு மட்டுமில்லை, நம்ம மதுரையின் சொக்க நாதர் கூட புதன் கிரகமாகத்தான் உருவகிக்கப் பட்டிருக்கிறார்.

    :)

    ReplyDelete
    Replies
    1. மதுரை கோவில் செய்தி புதிதாக இருக்கிறது!

      நன்றி, சரவணன்.

      Delete
  4. கும்பகோணம்-ன்னாலே நவக்கிரக கோவில்கள்-ன்னு ஆயிடுச்சு. முடிஞ்ச வரைக்கும் கோவில்களுக்குப் போனோம். திருத்தியமைக்கு நன்றி, சரவணன்.

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...