Wednesday, June 19, 2013

பன்னீர் புஷ்பங்கள்

இன்று என் மகனின் பள்ளியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு காலையில் இருந்தே சட்டை, பேன்ட் அயர்ன் பண்ணியாச்சா, டை எங்கே என்று நான் பரபரத்தாலும் அவன் எனகென்ன என்றே இருந்தான்:( ஒரு பக்கம் ஆறாவது முடித்து போவதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என்று தோணினாலும் மனதளவில் இந்த குழந்தைகளை நடுநிலைப்பள்ளிக்கு தயார் செய்வது போலத் தான் தோன்றியது. ஹ்ம்ம். அந்த காலத்துலே இப்படியெல்லாம் இருந்துச்சா என்ன என்று நினைத்தால் ரொம்ப வயசான மாதிரி தோணும். அதனால் அந்த நினைப்பை கை விட்டு விட்டு, மகனுடன் பள்ளிக்குச் சென்றேன். என்னை விட அவன் தான், டிக்கெட் வைத்திருக்கிறீயா, ஒன்பது மணிக்குத் தான் பெற்றோர்களுக்கு அனுமதி என்று சொல்ல நானும் நீ பாட்டுக்கு ஒன் கிளாசுக்குப் போ என்று அவனை அனுப்பி விட்டு, என்னை மாதிரியே வந்த பெற்றோர்களுடன் சேர்ந்து கொண்டு விழா நடக்கும் மைதானத்திற்குப் போய் மூன்றாம் வரிசையில் கணவருக்கும் மகளுக்கும் இடம் பிடித்து வைத்துக் கொண்டேன்.

நேற்று வரை பெய்த மழையின் சுவடே தெரியாமல் நீல நிற வானம் பளிச்சென்று குழந்தைகளை வழியனுப்ப வந்த மாதிரி இருந்தது. சில்லென்ற குளிர் காற்றுடன் காலை நேரம் நன்றாகவே இருந்தது.

அங்கிருந்த பெற்றோர்களுடன் எப்படி குழந்தைகள் வளர்ந்து இன்று நடுநிலைப் பள்ளிக்கும் போக தயாராகி விட்டார்கள் என்று காலம் தான் எப்படி ஓடி போச்சு, நல்ல வேலை மழை வந்து விழாவை கெடுக்கவில்லை என்று பேசிக் கொண்டிருந்தோம். என் மகனின் பல நண்பர்களின் அக்காவோ, அண்ணனோ என் மகளுடன் படித்ததால் அவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணி நெருங்கும் சமயத்தில் என் கணவரும் மகளும் வந்து சேர்ந்தனர். அவளும் அவளுடைய நண்பர்களின் பெற்றோர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு எங்களுடன் வந்து அமர்ந்து கொண்டாள்.

'டான்' என்று ஒன்பது மணி ஆனவுடன் ஐந்தாம் வகுப்பு இசைக்குழு மாணவ மாணவிகள் இன்னிசை இசைக்க, பள்ளியிலிருந்து தலைமையாசிரியர், ஆறாம் வகுப்பு ஆசிரியர்கள் வரிசையாக வர அவர்களைத் தொடர்ந்து மாணவ மாணவிகள். மாணவிகள் கைகளில் பூங்கொத்து. மாணவர்களின் சட்டைகளில் பூக்கள் பின் செய்யப்பட்டு. ஒவ்வொரு குழந்தைகளும் முத்துக்கள் தான்.

மாணவிகள் எல்லாம் அழகான உடைகளில், பின்னல்கள் எல்லாம் டிசைனாக போட்டுக் கொண்டு கூட்டத்தைப் பார்த்து வெட்கத்துடன் கூடிய புன்முறுவலுடன் நடக்க, மாணவர்கள் ஒரு சிலர் நீட்டாக டிரஸ் செய்து கொண்டு, ஒரு சிலர் ஜாக்கெட் போட்டுக் கொண்டு, ஒரு சிலர் வாராத தலை மாதிரி ஸ்டைலுடன், (வணங்காமுடி!) சிலர் முடியை ஓட்ட நறுக்கிய தலையுடன் என்று வந்து அவர்களுக்கு உரிய சேர் அருகே நிற்க, அதற்குள் பெற்றோர் ஐ பேட், ஐ-போன், கேமரா மூலம் கிளிக் செய்து கொள்ள, தேசிய கீதத்துடன் விழா ஆரம்பமாகியது.

முதலில் பேசிய தலைமையாசிரியர் எப்போதும் போல், இந்த குழந்தைகள் சூப்பர், டூப்பர் என்று பேசி விட்டு போக, ஒரு மாணவி கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை நடந்த நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சொல்ல, ஐந்து மாணவிகளுக்கு ஸ்பெஷல் அவார்ட் கொடுத்தார்கள். ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் இருந்த மாணவி இன்று நம்முடன் இல்லை என்று அந்த மாணவியை பற்றி மனம் வருந்தி கொண்டே சொன்னது கேட்க மனம் கனத்து போனது.

அதற்குப் பிறகு இன்னிசைக் கச்சேரியும் எல்லோருக்கும் பட்டமும் கொடுத்து முடிக்க, பெற்றோர்களும், தாத்தா,பாட்டி,உறவினர்களும் ஆரவாரத்துடன் கைத்தட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நாங்களும் மற்ற பெற்றோர்களுடன் பேசிக்கொண்டே பள்ளிக்குத் திரும்பினோம். பல பெற்றோர்களும், பாட்டிகளும் தங்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் கொண்டு வந்திருந்தார்கள்! நண்பர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டு எல்லோருக்கும் பை பை சொல்லிவிட்டுத் திரும்பியாச்சு. மதியம் பிக்னிக். அங்கு போய் ஜாலியாக விளையாடி விட்டு வருவான்.

முதன் முதலில் ஐந்து வயதில் விரல் பிடித்து உள்ளே நுழைந்தது முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் எல்லாம்...

கின்டர்கார்டன் ஆசிரியை 32 வருடங்களாக பணிபுரிந்தவர். நொடியில் குழந்தைகளை அவர் வழிக்கு கொண்டு வந்து விட்டார். ஏற்கெனவே பழகிய நண்பர்களுடன் என் மகனுக்கும் நாட்கள் சந்தோஷமாக கழிந்தன. அம்மாவிற்கு எல்லாம் தெரியும் என்று நம்பிய காலம்:)

முதலாண்டு வகுப்பில் அவனுக்கு அழகான இளவயது ஆசிரியை. ஆரம்பத்தில் அவரை பார்த்து வெட்கப்பட்டு பேச மாட்டேங்கிறான் என்ற போது புது மனிதர்களிடம் சிறிது காலம் ஆகும், நீங்கள் அவன் பேசுவதை நிறுத்த மாட்டேங்கிறான் என்று சீக்கிரம் சொல்லி விடுவீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன். அவர் வகுப்பில் Fact Vs Opinion எழுதச் சொல்ல, All schools have big doors is a fact. Ms.Albaneese is beautiful is an opinion என்று என் மகன் எழுதியதை பள்ளி முழுவதும் ஆசிரியர்களிடம் காட்டி அவர் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் போக, என்னிடமும் காட்டி சிரிக்க, நிதினும் நான் இன்று பிரபலமாகி விட்டேன் என்று பெருமையுடன் வீட்டுக்கு வந்தான். Ms.Albaneese வகுப்பாசிரியரின் பெயர்!

அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கூத்தும் கும்மாளமுமாக ஓடி விட்டது. நான்காம் வகுப்பு ஆசிரியை உன்னால் இன்னும் நன்றாக செய்ய முடியும் என்று ஊக்கமளித்து ஆங்கிலத்தில் அவனுடைய comprehension skillsஐ வளர்த்தார். flute வாசிப்பிலும் அவனுடைய மியூசிக் டீச்சரின் கவனத்தை ஈர்த்தான். ஐந்தாம் வகுப்பில் கொஞ்சம் படிக்க ஆரம்பித்து, நடுவில் போர் அடிக்கிறது பள்ளிக்குப் போக பிடிக்கவில்லை என்று ஆரம்பித்து பஸ்ஸில் nerd என்று சொல்லி தொந்தரவு செய்த மாணவனை ஒரு வழி பண்ணி என்று முடிந்தது. ஆறாம் வகுப்பில் ஆசிரியர்களே வியக்கும் வகையில் பொறுப்புடன் படித்து மீண்டும் நல்ல பிள்ளை பேர் எடுத்து...ஹ்ம்ம்..

மதிய சாப்பாடுஎடுத்துப் போக மறந்தது, வீட்டுப்பாடம் மறந்தது, சட்டையை inside out போட்டுப் போனது, எப்படா பனி மழை கொட்டும் லீவு கிடைக்கும் என்று ஏங்கியது, மார்க் குறைந்தால் கேள்வித்தாளில் தான் பிரச்சினை என்று ஏதாவது சாக்கு போக்கு சொன்னது, உடம்புக்கு முடியலை என்று பல முறை பள்ளிக்கு மட்டம் போட்டது,  என் அம்மாவும், பெரியம்மாவும் வரும் பொழுது முடிந்த வரை பள்ளிக்கு மட்டம் போட்டது, பள்ளி விட்டு after school care போகாமல் மறந்து போய் வீட்டுக்கு வந்தது என்று ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல...

சுப்பிரமணியின் முகத்தில் அப்பாடா முடிந்தது இந்த ஆரம்பப்பள்ளி வாசம் என்ற நிம்மதி இருந்தது!  எனக்கும் தான் :)

இதற்குப் பிறகு நடுநிலைப்பள்ளி ..ம்ம்ம். எனக்கென்ன மனக்கவலை என்ற ரேஞ்சில் தான் என் மகன் இப்போது...இதுவும் கடந்து போகும்.

6 comments:

  1. Mami, Nitin's example of Fact vs opinion was hilarious! -Rakesh

    ReplyDelete
    Replies
    1. Thanks, Rakesh. It's just one example :)

      Delete
    2. Give us more!
      - Rakesh

      Delete
    3. Come to our place, Rakesh. I will talk non-stop about his settais and funny jokes :)

      Delete
  2. நிதின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ஒரு ஆசிரியர் சொன்னது மனதை வருத்தியது...

    ReplyDelete
  3. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, தனபாலன்.

    அந்த மாணவி இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. அங்கு வந்திருந்த அனைவரும் வருத்தப்பட்டார்கள்.

    ReplyDelete

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...