Wednesday, July 24, 2013

போவோமா ஊர்கோலம்

போவோமா ஊர்கோலம் - நாகலட்சுமி அனெக்ஸ், அரசமரம், மதுரை

நாகலட்சுமி அனெக்ஸ்-ல் சாப்பிடாத சௌராஷ்டிரா மக்கள் அந்த ஏரியாவில் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த ஹோட்டல் பிரபலமாக இருந்தது. இந்த ஹோட்டலின் நிர்வாகியும் ஒரு சௌராஷ்டிரர் தான்.

பல நேரங்களில் இரவு உணவுக்காக இங்கிருந்து இட்லி, தோசை வாங்கப் போவோம். ஒரு பெரிய ஹால் மாதிரி இருக்கும் இடத்தில் நிறைய டேபிள், சேர்கள் போடப்பட்டு உள்ளே கண்ணாடிக் கூண்டில் பஜ்ஜி, வடை, இட்லிகள் குவிக்கப்பட்டிருக்கும். கீழ் அடுக்கில் குலாப்ஜாமூன், ஜிலேபி, மக்கன் பேடா என்று சில இனிப்பு வகைகளும் இருக்கும்.

நுழைவாசலில் குங்குமம், விபூதி பூசிக் கொண்டு கொழுகொழுவென்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருப்பார். அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பலரும் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் கொஞ்சம் குண்டு முகத்துடன் இருப்பார்கள். பின்னாளில் என் தம்பியின் நண்பனும் இந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் என்று தெரிந்தது.

கல்லாவின் பின்புறம் முருகன், மீனாக்ஷி அம்மன், விநாயகர், லட்சுமி படங்களுக்கு மாலை போட்டு, மணக்க மணக்க ஊதுவத்தி ஏற்றப்பட்டிருக்கும்.

டேக் அவுட் என்றால் உள்ளே போய் ஆர்டர் செய்யலாம். அங்கு போய் ஆறிய இட்லி வேண்டாம், சூடான இட்லியும், நல்ல முறுகலான தோசையும் வேண்டும் என்றவுடன் கொஞ்ச நேரம் ஆகும் அது வரை வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த ஆர்டர் எடுக்க ஆரம்பித்து விடுவார் பார்சல் கட்டுபவர். பார்சல் கட்டுவதற்கு என்றே பேப்பர்களும், தொங்குகிற சணல் கயிறும், முதலிலேயே தயாராக வெட்டி வைக்கப்பட்ட வாழை இலைகளும் என்று டேபிளில் அடுக்கி வைத்திருப்பார்கள். பக்கத்தில் இருக்கும் கதவு வழியாக சமையல்கட்டுக்குள் போவதும் வருவதுமாய் வேலைக்காரர்கள். பென்சிலை காதில் சொருகிய பேரர்கள் ஆர்டரை கொடுப்பதும், பரிமாறுவதுமாய் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சாப்பிட்டு முடித்தவர்களின் இலையை அல்லது தட்டை எடுக்க சிறு பையன்கள்!

பார்சல் கட்டுமிடத்தில் ஒரு பெரிய அலுமினிய அண்டாவில் கொதிக்கிற சாம்பார், சில சட்னி வகையறாக்கள், இவைகளை கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுக்க என்று ஒருவர். சில நேரங்களில் சட்னி தீர்ந்து போய் பெரிய ஆட்டுக்கல்லில் துண்டுகளாக்கிய தேங்காய் சில்லுகள், இஞ்சி, சிறிது புளி, பச்சைமிளகாய், பொரிகடலை, கடலை போட்டு ஒருவர் அவசரஅவசரமாக சடுதியில் அரைக்க, அதை எடுத்துக் கொண்டு தாளிதம் பண்ணிக் கொடுக்க, சட்னிக்காக காத்துக் கொண்டிருந்தவர் மீண்டும் சாப்பாட்டை தொடர என்று வேடிக்கை பார்ப்பதே நன்றாக இருக்கும்.

சமையல்கட்டில் சூடான பெரிய தோசைக்கல்லில் தண்ணீரைத் தெளித்து ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்று புகையுடன் கூடிய சத்தம் வரும் பொழுது விளக்குமாறைக் கொண்டு சரக்சரக் என்று துடைக்க, முறுகலான தோசைக்கு கல்லும் ரெடியாக, மளமளவென்று இத்தூனுண்டு மாவில் மெல்லிய பெரிய பெரிய தோசைகளை இட்டு, தோசைக்கரண்டியை எண்ணையில் முக்கியெடுத்து மாவிலும், மாவை சுற்றியும் ஊத்த, சலசலவென்று பொரித்துக் கொண்டே தோசையும் தயாராக, முன் டேபிளுக்கும் வந்து சேர, அப்பாடா என் ஆர்டர் வந்து விட்டது என்று சந்தோஷமாக இருக்கும். தோசை வருவதற்குள், பேப்பரில் இலையை வைத்து, கொஞ்சம் தேங்காய் சட்னி அதன் மேல் ஒரு சிறிய இலை ,கொஞ்சம் வெங்காய கார சட்னி, அதன் மேல் ஒரு சிறிய இலை வைத்து, தோசையை வைத்து ஒரு சுருட்டு சுருட்டி, இரண்டு கார்னர்களையும் உள்ளே தள்ளி பார்சல் பண்ணி முடித்து விடுவார்.

சூடான இட்லி என்றால் இட்லி வேகும் வரை காத்திருக்க வேண்டும். அந்த பெரிய இட்லி கொப்பரையும், பூப்போன்ற இட்லியும்...வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தட்டுக்களிலிருந்து ஆவி பறக்க இட்லி தட்டை எடுத்து பரப்பி, அதன் மேல் தண்ணீர் தெளித்து ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து, லாவகமாக துணியை எடுத்து, இட்லியை அதே சூட்டில் பார்சல் பண்ண...

வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ஒரு நன்னாளில், காலை பதினோரு மணியளவில் அவர்கள் அறிமுகப்படுத்திய தக்காளி சாதமும், வெஜிடபிள் பிரியாணியும் மணக்கமணக்க விரைவில் அதைப்பற்றி ஒரே பேச்சாக கிளம்ப, நாங்களும் சுவைத்துப் பார்த்தோம். அப்பப்பா ...சீரகசம்பாவின் மணத்தில், அதன் ருசியில் மயங்கியவர்கள் பலர். அளவு குறைத்து இருந்தாலும் சுவை அதிகமாக அனைவரையும் கொள்ளை கொண்ட அந்த நாட்கள்...சுகமானாவை.

4 comments:

  1. good observation and narration.,if u can try,u will become story writter.,

    ReplyDelete
  2. Thank you very much, Dr.Santhilal dha.

    ReplyDelete
  3. இப்படியா எழுதறது!, படிச்ச உடனே பசிக்குது!! :)

    ReplyDelete
    Replies
    1. சரவணன் - உங்களுக்காவது பசிச்சா நாகலக்ஷ்மி, அன்னலக்ஷ்மி-ன்னு யாதாவது ஒரு ஹோட்டலுக்குப் போக முடியும். எனக்கு நினைத்து நினைத்துப் பார்த்தேன்- ன்னு பாடிக்கிட்டிருக்க வேண்டியது தான் :(

      Delete

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...