Saturday, August 24, 2013

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது சனிக்கிழமை ஒரு நாட் டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது, தவறாமல் கலந்து கொள்ளுங்கள் என்று கமிட்டி தலைவரின் மனைவி சொன்னார். நானும் ஈமெயில் பார்த்தேன், கண்டிப்பாக வருகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.

இன்று ஒரு நண்பரின் புதுமனைப்புகுவிழாவிற்கு போய் விட்டு அங்கிருந்து என் மகன் சிறிது நேரம் அவன் நண்பனுடன் விளையாட, அவன் நண்பனின் வீட்டிற்கும் போய் சிறிது நேரம் பேசி விட்டு அய்யோயோ மணி ஐந்தாகி விட்டதே, நிகழ்ச்சிக்குப் போக வேண்டுமே என்று அவர்களிடமும் நேரமிருந்தால் நீங்களும் கோவிலுக்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு கல்ச்சுரல்  சென்டர் போய் சேருவதற்குள் மணி ஐந்தே முக்கால் ஆகி விட்டது.

நாட்டிய நிகழ்ச்சி ஏற்கெனவே ஆரம்பித்து விட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போகும் பொழுது இரண்டாவது நிகழ்ச்சி ஆரம்பமாக நாங்களும் ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தோம்.

இந்த பரத நாட்டிய நிகழச்சியில் ஆறு மாணவிகள் ஆடினார்கள். மிக அழகாக உடையணிந்து, கூந்தல் அலங்காரங்கள், மேக்கப் என்று கண கச்சிதமாக இருந்தது ஒவ்வொரு நடன நிகழ்ச்சியும். மாணவிகள் ஒவ்வொருவரும் மிக அழகாக ஒருங்கிணைந்து ஆடியதைப் பார்க்க அவ்வளவு நன்றாக இருந்தது.

கோலாட்ட நடனம், அதற்கே உரிய அசைவுகளுடன், அடுத்தவர் கோலை தொட்டு ஆடியது, இரண்டு இரண்டு பேர் சேர்ந்து ஆடியது, சுற்றி சுற்றி ஆடியது என்று கண்ணை கவரும் விதத்தில் இருந்தது.

அதற்குப் பிறகு ஒரு கர்நாடக,மராட்டிய கிராமிய நடனம். மிகவும் எளிமையான அசைவுகளை கொண்டு கன கச்சிதமாக ஆடினார்கள்.

பஞ்சாபியரின் பாங்க்ரா நடனம் பார்ப்பவர்களையே ஆட வைக்கும் துள்ளலான பாடலுடன் கைகளை தூக்கி, கலர்கலரான ஆடையில் சுழன்று ஆடிய விதமும் பார்த்தவர்களை பரவசப்படுத்தியது.

கடைசியில் அவர்கள் ஆடிய கேரள மக்களின் களரி நடனமும் வியக்க வைத்தது. ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் கேடயமும் வைத்துக் கொண்டு மேடை முழுவதும் சுழன்று ஆடியது நிகழ்ச்சியின் ஹைலைட்.

ஒவ்வொருமுறை அவர்கள் வித்தியாசமாக ஆடிக் காட்டும் பொழுது, இவர்களுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்கும்.

விசேஷம் என்னவென்றால் இந்த மாணவிகள் ஒருவருக்கும் கண் பார்வை கிடையாது. 

அவர்களுடைய ஒவ்வொரு அசைவும், கை முத்திரைகளும் தேர்ந்த நடனக் கலைஞர்கள் ஆடியது போல் இருந்தது தான். கண் பார்த்து நடனம் ஆடுவதே கடினம், ஆனால், காதில் கேட்கும் இசை மட்டுமே அவர்களுடைய வழிகாட்டியாக இருந்து ஆறு மாணவிகளும் ஆடிய விதமும், முகத்தில் முடிந்த வரை காட்டிய பாவமும் அவர்களுக்கு இருக்கும் குறையை ஒரு பொருட்டாகாவே அவர்கள் எண்ணவில்லை என்றதை திண்ணமாக காட்டியது.

இவர்களிடம் இப்படி ஒரு குறை இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு நடனம்! சரியான இடைவெளியில், ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொள்ளாமல், நடனத்திலேயே சாகசங்கள் வேறு செய்து காட்டியது மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது.

பார்த்த அனைவருக்கும் அப்படி ஒரு வியப்பு இவர்கள் ஆடிய விதம். நிச்சயம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த ஆசான்களாக இருந்திருக்க வேண்டும். இந்த மாணவிகளும் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டு நினைவில் வைத்துக் கொண்டு ஆடியிருக்க வேண்டும் என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது!

இவர்கள் 'தீபா அகாடமி' என்று பெங்களூரில் இருக்கும் அமைப்பைச் சார்ந்தவர்கள். பெண்களுக்கான அதுவும் குறையுடைய பெண்களுக்கான அமைப்பு. அமெரிக்கா முழுவதும் இவர்கள் நிகழ்ச்சி நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் அவர்கள் அமைப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தாரளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இவர்களுடைய குழுவின் தலைவரும் கண் பார்வை அற்றவர்.


இவர்களுடன் வந்திருந்த இரண்டு மாணவிகள் மிக அருமையாக கதக் நடனம் ஆடினார்கள். என்ன பாந்தமான நடனம்! கைகளினாலும், முக பாவனைகளினாலும் அப்படி ஒரு அழகிய நடனம்! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

நல்ல வேளை, இந்த நிகழ்ச்சியை மிஸ் பண்ணவில்லை. அந்த மாணவிகளிடம் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு, அவர்கள் ஆசானையும் பாராட்டி விட்டு மன நிறைவுடன் வீட்டிற்கு வந்தோம்.

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா

என்று இவர்கள் பாடியது போல் இருந்தது. 
















Saturday, August 17, 2013

Water Tubing, Lake Luzerne , NY

பல நாட்களாக என் மகள், தண்ணீரில் மிதந்து கொண்டே போகும் காற்றடைத்த மிதவையில் போவதற்கு டிக்கெட் வாங்கி விட்டேன். இந்த கோடை விடுமுறையில் எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று சொல்ல, நாங்களும் பல வார விடுமுறைகளில் இன்று போகலாம், நாளை போகலாம்  என்று தீர்மானித்து ஒரு வழியாக ஒரு நன்னாளில் கிளம்பினோம். மாற்றுத்துணிகள், பழங்கள், குக்கீஸ் (ரொட்டிகள்) என்று ஒரு பொதியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். என் கணவரும் மறக்காமல் கேமரா சகிதம்!

டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து விட்டு, அட்ரஸையும் குறித்து வைத்துக் கொண்டு மதியம் 2 மணியளவில் கிளம்பினோம். மூன்று மணிக்குள் அங்கு போக வேண்டும். சரியாக ஒரு மணி நேரம் வீட்டிலிருந்து. இதுவரை நாங்கள் போகாத ஒரு ஏரி. நாங்கள் அடிக்கடி போகும் Lake George-க்குப் பக்கத்தில். வழியில் எல்லாம் rafting, tubing என்று பல அறிவிப்பு பலகைகள்.

எங்களை tubing அழைத்துச் செல்ல வேண்டிய அலுவலகத்தின் முன் நிற்கையில் சரியாக மூன்று மணி. உள்ளே சென்று எங்கள் டிக்கெட்டை சரிபார்த்த பிறகு எங்களைப் போல் வந்தவர்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் காத்திருங்கள், எல்லோரும் வந்தவுடன் போகலாம் என்று சொல்லிவிட்டார். மூன்று வகையான மிதவைகள்- ஒன்று வட்டவடிவமானது , இன்னொன்று கொஞ்சம் முதுகு சப்போர்ட்டுடன் , இன்னொன்று, செவ்வகமாக ஏதாவது சாப்பாடு, ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டு போகலாம் என்று சொன்னார்.

இதுவரை இந்த பகுதிக்கே வந்ததில்லை, நன்றாக இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது எனக்குத் தெரிந்த அமெரிக்கப் பெண்மணி அவருடைய் ஆண் நண்பருடன்! tubing முடித்து விட்டு வந்திருந்தார். அவருடைய கணவரை நான் தேட, ஆண் நண்பரை அறிமுகப்படுத்தினார்!!! ம்ம். அது அவரவர் விஷயம் என்றாலும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.

அதற்குள் என் மகனுக்குத் தாகம் எடுக்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வர மறந்து, அவசர அவசரமாக என் கணவர் கடைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்தார்.

கார் சாவியையும் அந்த அலுவலகத்தில் கொடுத்து விட்டுப் போகச் சொன்னார்கள். கேமரா எடுத்துக் கொண்டுப் போக முடியவில்லை என்று வருத்தம் என் கணவருக்கு. எனக்கும் தான் :(

ஒரு வழியாக அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, எங்களை பின்பக்கம் வருமாறு அழைத்து life jacket கொடுத்து அணியச் சொன்னார்கள். பிறகு, அனைவரும் அங்கிருந்த பஸ்ஸில் ஏறி அமர, இரண்டு வழிகாட்டிகளும்-(கைடுகள்  ), நடுத்தர வயது அம்மணி ஒருவர் பஸ்ஸை ஒட்டிக் கொண்டு வர, ஆரம்பமானது பயணம். அந்த பஸ்ஸின் மேலே அனைவருக்கும் வேண்டிய tubes கட்டி வைத்திருந்தார்கள்.

தார் சாலைகளின் வழியே போய் மண் சாலைகளில் குலுங்கி குலுங்கி, பக்கவாட்டில் சலசலக்கும் நீரோடையுடன், மரங்களின் நிழல்களின் வழியே, இப்படியும் ஒரு வழி இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே போய்க் கொண்டிருந்தோம்.

அதற்குள் வழிகாட்டிகளுள் ஒருவர் மலையின் உச்சிக்குப் போய் அங்கிருந்து நாம் கீழிறங்கி ஹட்சன் ஆற்றில் மிதந்து கொண்டு வருவோம். அப்படியே போனால், நியூயார்க் நகரத்திற்கே போய் விடலாம் என்று சொன்னார்!

ஒரு வழியாக ஆள் அரவமற்ற ஓரிடத்தில் நிறுத்தி இறங்கச் சொன்னார்கள். எங்களுடன் பதினான்கு பேர். ஒரு தாத்தா, பாட்டி தங்கள் பேரனுடன், ஒரு அம்மா, தன் இரு குழந்தைகளுடன், அதில் சின்னவன் அநியாயத்திற்கு கேள்விகள் கேட்டுக் கொண்டு பேசிக் கொண்டே வந்தான். கேட்க நன்றாக இருந்தது. ஒரு யுவனும், யுவதியும்:) இரு கல்லூரி மாணவிகள் - அதில் ஒருவர் சமீபத்தில் வெஜிடேரியன் ஆகி அதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கணவன் மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு வால் பையன் சகிதம்.

எங்களுடைய மிதவைகள் கொடுக்கப் பட்ட பிறகு, ஆற்றின் கரைக்குப் போகச் சொன்னார்கள். வழிகாட்டிகளுள் ஒருவர் முழங்கால் அளவுத் தண்ணீரில் நின்று கொண்டு மிதவையை எப்படி பிடித்துக் கொண்டு அதில் ஏறி உட்கார வேண்டும். எப்படி கைகளைத் துடுப்பாக பயன் படுத்த வேண்டும் என்று சொல்லி விட்டு, எல்லோரும் தண்ணீருக்குள் வாருங்கள் என்று சொல்ல,

நாங்களும் ஸ்ஸ்ஸ்ஸ் என்று சொல்லிக் கொண்டே சில்லென்ற தண்ணீரில் காலை மெதுவாக வைத்துக் கொண்டே உள்ளே இறங்கினோம். ஒரே கல், சிறு பாறைகள். அவர் ரெடி, ஒன் , டூ , த்ரீ என்று சொன்னவுடன் எல்லோரும் மிதவையில் உட்கார , ஹீ ஹீ, ஹா ஹா , ஓ ஓ என்று சொல்லிக் கொண்டே மிதக்க ஆரம்பித்தோம்.

எனக்குத் தண்ணீரைக் கண்டாலே கொஞ்சம் உதறல் தான். அனால் இந்தப் பயணம் சுகமாக இருந்தது. என் கணவர் ஆஹா, சூப்பர், ஆனந்தம் என்று சொல்லிக் கொண்டே எனக்கு முன்னால் அதிவேகமாக போய்க் கொண்டிருந்தார். என் மகளோ அவருக்கும் முன்னால். நானும் என் மகனும் சரியான நீரோட்டத்தில் இல்லை போலிருக்கிறது. கடைசியாக.
நல்ல வேளை, எனக்கும் பின்னால் சிலர் :)

எங்களுடைய வழிகாட்டி இரண்டு 'kayak' என்னும் சிறு படகுகள் போல இருக்கும். அதில் துடுப்பு போட்டுக் கொண்டே, என்னையும் என் மகனையும் இழுத்துக் கொண்டு நீரோட்டத்தில் சேர்த்து விட்டார்.

வால்பையன் கையால் தண்ணீரை தள்ளி விட்டுக் கொண்டே எல்லோருக்கும் முன்பாக. தாத்தா அவர் கனத்திற்கு ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு சுகமாக கண்களை மூடியபடி , யுவனும் யுவதியும் ஜாலியாக :) என் மகனும் குப்புறப்படுத்துக் கொண்டு ஏதோ ஒரு யோசனையாக ...

மேலே பார்த்தால் நீல நிற வானம் வெள்ளை மேகங்களுடன், இரு புறமும் அடர்ந்த மரங்கள், சுற்றிலும் பச்சைப்பசேல் மரங்களுடன் மலைகள், சலசலக்கும் தண்ணீரின் ஓசை - உள்ளம் கொள்ளை போனதே....

கண்ணை மூடிக் கொண்டு ஆற்று நீரின் ஓட்டத்தில் போய்க் கொண்டே இருந்தோம். இரண்டு அடி ஆழம் தான். தீடீரென்று நடுவில் இருக்கும் சுழற்சி, இடப்பக்கமாக மாறும், கண்ணைத்திறந்து பார்த்தால் வலப்பக்க சுழற்சியில் போய்க் கொண்டிருப்போம், நடுநடுவே மேலும் கீழும் ஆடியபடியே ...இப்படியே மாறி மாறி மிதந்து கொண்டிருந்தோம்.

இயற்கையோ, சிருஷ்டியோ என்று தோன்ற வைத்த பல தருணங்கள். ம்ம். யாரவது ஊருக்கு வந்தால் இங்கும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டே ...

திடீரென்றுப் பார்த்தால் நான் மட்டும் தனியாக எங்கோ போய்க் கொண்டிருப்பேன். வழிகாட்டியும் அவருடைய துடுப்பினால் தள்ளி விடுவார். இல்லை என்றால் அவருடைய படகை பிடித்துக் கொள்ளச் சொல்லி, என் கணவர் அருகே கொண்டு வந்து விட்டு விட்டுச் செல்வார் :)

நடுவில் இன்னொரு கும்பல் ஒன்றும் எங்களுடன் சேர்ந்து கொண்டது. அவர்கள் பீர் பாட்டில்களுக்கு என்று ஒரு மிதவை எடுத்து வந்திருந்தார்கள்!!! குடித்துக் கொண்டே மிதவையில்!!!!!

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் தண்ணீரில் மிதந்து கொண்டே வந்தோம். காலை தொங்கவிட்டபடி, கைகளை தண்ணீரில் அளைந்தபடி ..வாவ்!!! என்ன ஒரு அனுபவம் .

எதுவும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது தானே நியதி? ஆம், ஒரு கரையோரமாக நிறுத்தி அனைவரும் மிதவையை கொடுக்க, மீண்டும் பஸ்ஸில் ஏற்ற, அனைவரும் பஸ் ஏறித் திரும்பினோம்.

போகும் போது அந்த ஆற்றைப் பற்றி ஒரு சின்ன தகவல். வழிகாட்டிகள் தங்களைப் பற்றி ஒரு சின்ன தகவல். வரும் போது எப்படி இருந்தது இந்த பயணம் என்று ஒரு சிட் -சாட்டுடன் நன்றாக இருந்தது.

நனைந்த துணிகளை மாற்றிக் கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மணி ஆறரை.

நல்ல சூடான ரவா தோசை சாப்பிட்டு திருப்தியாக போனது அன்றைய தினம் :)










Thursday, August 8, 2013

போவோமா ஊர்கோலம் - மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை

ஆடி வெள்ளி என்றதும் உடனே என் நினைவிற்கு வருவது ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் கூட்டத்துடன் போகும் 4 மற்றும் 32...வரிசை பாண்டியன் போக்குவரத்து பஸ்களும், மஞ்சள் அல்லது சிவப்பு வண்ணச் சேலையில் தலைக்கு குளித்து, பூ வைத்துக் கொண்டு மஞ்சள் பூசிய முகத்துடன் கோவில்களுக்கு செல்லும் பெண்கள் கூட்டமும், ஆடி மாதக் கூழும், வெள்ளிக்கிழமைகளில் படைக்கும் பொங்கலும் தான்.

நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பொழுது இந்த ஆடி மாதம் வந்தாலே பஸ்ஸில் போவது பெரும்பாடாகி விடும்! ஆகஸ்ட் மாதம் இந்தியா போகும் வேளைகளில் அதிகாலையில் சென்னையில் இறங்கி விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் LR ஈஸ்வரியின் குரலில் கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா என்று காற்றில் படபடக்க கேட்டுக் கொண்டே பெரிய பெரிய தேவிகளின் கட்அவுட்டுக்கள் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருக்க, ஆள் அரவமில்லாத போக்குவரத்து அதிகமில்லாமல் இருக்கும் அந்த அதிகாலை சாலைகள் என்று இந்த ஆடி மாதம் பற்பல நினைவுகளை கொண்டு வரும்.

மாரியம்மன் கோவிலுக்குப் போவது என்றால் எங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குடும்பத்துடன், சமயங்களில் பாட்டி, பெரியம்மா என்று கும்பலாகவும் மாவிளக்கு, பொங்கல் வைக்க என்று போவதுண்டு.

ஒரு நல்ல நாள் என்றால் போதும் மதுரை மக்கள் கோவில்களுக்கு படையெடுத்து விடுவார்கள். விடுவார்களா ஆடி வெள்ளிகளை மட்டும்?

நாங்களும் கீழவாசலில் இருந்து பஸ் அல்லது ரிக்க்ஷாவில் போவோம். கோவில் வாசலை நெருங்க நெருங்க கூட்டமும், பொங்கல் வைத்த அடுப்பிலிருந்து புகையும், சாம்பிராணி மணமும் என்று ஒரு கலவையாக தெரிய, ம்ம்ம். இனிப்பு பொங்கல் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே போவோம்.

வெட்ட வெளியில் இருக்கும் இந்த கோவிலில் வாசலில் இருக்கும் வேப்ப மரக்கொத்தும், நுழையும் பொழுதே மக்கள் பொங்கல் வைப்பதையும் மாவிளக்கு போடுவதையும் பார்த்துக் கொண்டே மாரியம்மனை தரிசித்து விட்டு வலம் வருகையில் இருக்கும் சிறு சிறு தெய்வங்களையும், அரசமரத்துப் பிள்ளையார், நாக தெய்வங்களையும் வணங்கி விட்டு சிறிது நேரம் அமர்ந்திருப்போம். அங்கிருக்கும் ஒரு அம்மனுக்கு வெற்றிலையில் குங்குமம் வைத்து சாத்துவது மிகவும் பிரபலம்.

பொங்கல் வைத்து சாமி கும்பிடுபவர்கள் அரிசியை களைந்து, வெல்லத்தை பொடி செய்து,பொங்கி வரும் பொங்கல் பானையில் அம்மனை நினைத்துக் கொண்டே அரிசியை போட்டு, அவ்வப்போது விறகுகளை சரி செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அரிசி வெந்த பிறகு, வெல்லத்தை போட்டு, நெய்யையும் ஊற்றி இறக்கிய பிறகு, நெய்யில் வதக்கிய முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் பழத்தை போட்டு அதையும் பொங்கலுடன் கலந்து முடிக்க... இன்னொருவர் இலையில் வாழைப்பழம், தேங்காய், வெத்தலை, ஒண்ணேகால் ரூபாய், பூ , ஊதுவத்தி ஏற்றி பொங்கலையும் இலையில் படைத்து விட்டு அம்மனை வேண்டிக் கொண்ட பின், சுற்றி இருப்பவர்களுக்கு கொடுப்பார்கள். அவர்களும் குடும்பத்துடன் சாப்பிடுவார்கள். இருக்கிற இலையில் எல்லாமே நடக்கும். பிளாஸ்டிக் கழிவுகள் தெரியாத காலம் அது! கொஞ்சம் பொங்கலை அரசமரத்தடியில் நாய்க்கும், காகத்திற்கும் கூட வைப்பார்கள்.

மாவிளக்கு போட வந்தவர்களும் இப்படித்தான். ஊற வைத்த அரிசி மாவை வெயிலில் உலர்த்தி, உரலில் இடித்தோ, மிக்சியில் இடித்தோ, சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய், நெய் கலந்து, மஞ்சள் குங்குமம் வைத்து, நடுவில் குழி செய்து திரி போட்டு வீட்டிலிருந்தே எடுத்து வந்திருப்பார்கள். அதில் தீபம் ஏற்றி கும்பிட்டு அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மாவிளக்கு, அப்பிடியே சாப்பிடுவேனே என்று சொல்லலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் :)

சின்ன கோவில். கோவிலின் இலக்கணம் மாறாமல் வாசலில் கை ஏந்துபவர்கள் கூட்டம்.

எதிரில் தெரியும் தெப்பக்குளம் தண்ணீருடன் இருக்கும் பொழுது கொள்ளை அழகு. அதுவும் தெப்பத்திருவிழா அன்று ஜேஜே என்று இருக்கும்! எல்லாம் குழந்தைகளாக இருக்கும் வரை நன்கு அனுபவித்தோம். ஒரு வயதுக்குப் பிறகு கூட்டம் என்றாலே அலர்ஜி ஆகி விட்டது. என்ன பண்றது, பொண்ணா பொறந்தாச்சு. பையனா இருந்திருந்தா எந்த கூட்டத்திலயும் போயிட்டு வரலாம். எவ்வளவு நேரமானாலும் சுத்தலாம் :(


இந்த முறை ஊருக்குப் போயிருந்தபொழுது கோவிலில் சிறிது மாற்றம் தெரிந்தது. அரசின் மதிய உணவிற்கு டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருந்த கூட்டம் அதிகம்! மற்றபடி மக்களோடு மக்களாய் நாய்கள் கூட்டமும், ஈக்களும் எப்போதும் போல் மொய்த்துக் கொண்டிருந்தன. தெப்பக்குளத்தில் கூரைகள் வேயப்பட்டு புனரமைப்புகள் நடந்து கொண்டிருந்தது.

ஒரு காலை வேளையில் ராமேஸ்வரம் போக, சிறிது நேரம் தெப்பக்குளத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறு மக்கள் கூட்டம் நடைபயிற்சி செய்ய வந்திருந்தார்கள். சிலர் முறையாக காலில் ஷூ மாட்டிக் கொண்டு, பலரும் ஹவாய் சப்பல், செருப்பு, சிலர் காலில் ஒன்றுமே போடாமல்!!! கணவன் மனைவி ஜோடியாக, சிலர் தங்கள் குழந்தைகளுடன், பெரும்பாலும் ஆண்கள். தெப்பக்குளத்தைச் சுற்றி விரைந்து பேசிக் கொண்டே நடப்பவர்கள், அந்த அதிகாலையிலும் கைபேசியில் பேசிக் கொண்டே போகிறவர்கள், அமைதியாக போகிறவர்கள் என்று பல வகையான மனிதர்கள் நடமாட்டம். புழுதி கிளப்பிக் கொண்டு போகும் லாரிகளும், பஸ்களும் அந்த அதிகாலை வேளையில்!

நடையை முடித்து விட்டு வந்தவர்கள் திண்ணை மாதிரி இருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாட்டு நடப்பை பேசிக்கொண்டும், சைக்கிளில் விற்கும் அந்த ஜூஸ், இந்த ஜூஸ் என்று எதையாவது ஒன்றை குடித்துக் கொண்டும், தெப்பக்குளத்தின் உள்ளே தண்ணீர் இல்லாத நிலையில் குழுகுழுவாக கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் கூட்டம் என்று பரபரப்பாக இருக்கும் அந்த காலை நேரத்தை பார்க்க நன்றாக இருந்தது.



மதுரை மக்களின் எல்லை தெய்வம் மாரியம்மா!




மதுரை மண்ணின் ஒரு அடையாளம் மாரியம்மன் தெப்பக்குளம்!!!!










Friday, August 2, 2013

Hancock Shaker Village

மே மாதம் மூன்று நாள் வார விடுமுறையில் மழையில் இரண்டு நாட்கள் ஓடிவிட, மூன்றாவது நாள் வெயிலும் வந்துவிட, வீட்டிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவில் இருக்கும் இந்த Hancock Shaker Village என்ற அருங்காட்சியகத்திற்கு போவது என்று முடிவு செய்தோம். Albany, NY -ன் அழகே அதன் மலை சூழ்ந்த நீண்ட, மேடுபள்ளச்சாலைகளும், சாலைகளின் இருபுறங்களிலும் கொத்துகொத்தாக பச்சைமரங்களும் தான். அதுவும் மழை வேறு பெய்து மரங்கள் இன்னும் பச்சையாக, தெளித்து விட்ட சாலைகளும், சிலுசிலுவென்ற காற்றும், குளுகுளுவென்று வெயிலும் என்று ரம்மியமாக இருந்தது. வெயிலைப் பார்த்தவுடன் வெளியில் கிளம்பும்  மனிதர்கள், பைக்கில் வலம் வருபவர்கள், நீண்ட பிரயாணம் போகிறவர்கள் என்று லீவு நாட்களிலும் சாலைகள் பிஸியாக இருந்தது.

நாங்களும் வீட்டிலிருந்து அந்தா இந்தா என்று 12.30 மணிக்கு கிளம்பி, இயற்கை எழில் சூழ்ந்த மலைகளைப் பார்த்தவாறு நியூயார்க் மாநிலம் தாண்டி மாசசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து சேரும் பொழுது மதியம் 1.30ஆகி விட்டது. வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த மதிய உணவை முடித்து விட்டு, உள்ளே போக அனுமதி சீட்டு வாங்கும் பொழுது சரியாக 2 மணி. அங்கிருந்த வயதான அலுவலரும் சரியான நேரத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு உள்ளே போகும் வழிகளையும், வரைபடத்தையும் கொடுத்தார்.

உள்ளே நுழைந்ததும் எதிரே தெரியும் வட்ட வடிவ தானிய களஞ்சியம்/மாடுகளுக்குப் புல் போடும் இடம்- பார்க்கவே அழகாக இருந்தது. அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி 1800களில் Shakers என்ற இந்த அமைப்பினரின் அறிவார்ந்த கட்டிடக்கலை எப்படி ஆச்சரியமளிக்கும் விதத்தில் இருந்தது என்று கூறும் பொழுது ஆச்சரியமாகத் தான் இருந்தது. புற்களை வெளியில் இருந்து உள்ளே கொண்டு வர என ஒரு தனிப்பாதை, புல்லை நடுவில் அடுக்கி வைத்து அதை சுழலும் வகையில் கட்டி இருந்தார்கள்.மாடுகள் எளிதாக நுழையும் வகையில்- அவை உள்ளே வந்தவுடன் வசதியாக நிற்க மரப்பலகை, புல் மேய கழுத்தை மட்டுமே உள்ளே நுழையும் வகையில் செய்யப்பட்ட மரத்தடுப்புகள்,  சாணி போடுவதை கீழே இருக்கும் தளத்தில் இருக்கும் அண்டாக்களில் பிடிக்க வசதியாக, புல்லிலிருந்து வரும் வெப்பத்தை குறைக்க என்று பார்த்து பார்த்து அந்த வட்டவடிவ கட்டிடத்தை வடிவமைத்திருந்தார்கள்.

Shakers மரத்தினாலான பொருட்கள், இரும்பிலான பொருட்கள் செய்வதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். மூன்று மணியளவில் வழிகாட்டி ஒருவர் Shakers பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இவர்கள் இங்கிலாந்தில் Quakers என்று சொல்லப்பட்ட இனத்ததைச் சார்ந்தவர்கள். 

அமெரிக்காவிற்கு முதலில் நியூயார்க் வந்திறங்கி பிறகு ஆல்பனியில் தங்கி இருக்கிறார்கள். முதலில் ஒன்பது பேர் மட்டுமே இக்குழுவில் இருந்திருக்கிறார்கள். ஒரு பெண்ணே இதற்குத் தலைவியாகவும் இருந்திருக்கிறார்!!!!

அந்த காலத்திலேயே ஆண், பெண் இருபாலாரையும் சரிசமமாக நடத்தியிருக்கிறார்கள்!!! என்ன ஒன்று, திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வது மறுக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் விவரம் தெரிந்து பெரியவர்கள் ஆன பிறகு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு தான் இந்த அமைப்பில் சேர முடியும். ஆண்கள் தச்சு வேலை, இரும்புப் பட்டறை, உழவு என்று பார்க்க, பெண்கள் சமையல், குழந்தைகள் படிப்பு, தையல், உழவு என்று வேலைகளை பகிர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று இன்னும் பல அரிய தகவல்களையும் சொன்னார்.

அந்த வீட்டில் மட்டும் 200 பேர் வரை தங்கி இருந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் உண்ண , சமையல் செய்ய, உறங்க என்று பல வசதிகளுடன் அந்த காலத்திலேயே இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. செங்கற்களால் கட்டிய வீடுகள், பலருக்கும் சமைக்கும் வண்ணம் பெரிய பெரிய அடுப்புகள், வீடு முழுவது சூரிய வெளிச்சம் கிட்டும் வகையில் ஜன்னல்கள், ஆடு, மாடு, பன்றி, குதிரை,கோழிப் பண்ணைகள், பாலிலிருந்து அவர்களே வெண்ணெய், பாலாடைக்கட்டி தயாரிப்பது, தேன் தயாரிப்பது, தறி நெய்வது என்று அவர்களுக்குள்ளே ஒரு உலகம். வெளியிடத்தில் இவர்களுடைய தயாரிப்புகளை விற்று பணமும் சம்பாதித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட தனிமையான உலகம் இவர்களுடையது. யார் வேண்டுமென்றாலும் இந்த குழுவில் சேரலாம். இருக்கும் வரை இவர்களுடைய சட்டத்திட்டங்களுக்குப் படிந்து இருக்க வேண்டும். ஒரு காலத்தில் 4000 பேர் வரை இந்த அமைப்பில் இருந்ததாகவும், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரும் இருந்ததாகவும், உள்நாட்டுப் போர் முடியும் பொழுது இந்த இனமும் சிறிது சிறிதாக மறைந்து விட்டது எனவும் கூறினார்.

அவர்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடம், மருத்துவர், மருந்து மாத்திரைகள், பிரிட்ஜ் வசதி இல்லாத அந்த காலத்தில் பனிக்கட்டியை சேர்த்து வைத்து தங்கள் பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க ஒரு இடம், மரத்தினாலான பொருட்கள் செய்ய ஒரு இடம், பிரார்த்தனை செய்ய ஒரு கூடம் என்று நேர்த்தியாக கட்டப்பட்ட பல கட்டிடங்கள்!

மொத்தத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் இருந்த வாழ்க்கையை அறிந்த பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதை மக்கள் அறியும் வண்ணம் இன்றும் போற்றி வருவது வியப்பு தான்.

நம் நாட்டில் கூட இப்படி எத்தனையோ விந்தைகள் இருக்கும். அதை நாம் இப்படி போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவில்லை என்ற வருத்ததுடன் வீடு திரும்பினோம்.



அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...