Thursday, October 31, 2013

போவோமா ஊர்கோலம் - தீபாவளி நகர்வலம்

மதுரையில் கோலாகலமான கொலு ஆரம்பமாகும் போதே மீனாக்ஷி அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் வீதிகளில் தீபாவளி களை கட்ட ஆரம்பிக்கும். மக்களும் துணிகள், நகைகள் என்று ஆரம்பித்து தீபாவளி முதல் நாள் இரவு வரை எதையாவது வாங்க கடைகளுக்குப் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்!

மேலமாசி வீதி, டவுன்ஹால் ரோடு,  திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, அம்மன் சன்னதி, வெங்கலக்கடைத் தெருவில் ராஜ் மஹால், SRB சில்க்ஸ், கோ-ஆப்டெக்ஸ் துணிக்கடைகளின் வாசலில் பாவம் போல குழந்தைகளை வைத்துக் கொண்டு வெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இன்னும் இவ மட்டும் என்ன பண்ணிக்கிட்டிருக்கா என்று ஒருவித சலிப்புடன் சில ஆண்களும், இதாண்டா சாக்கு என்று சிலரும்,  சேலை மட்டும் வாங்கினால் போதுமா தோடு, ஹேர் கிளிப், பொட்டு என்று அம்மன் கோவிலுக்கும், புது மண்டபத்துக்கும் முண்டியடிக்க கிளம்பும் பெண்களும்- அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் பரவசம் இருக்கே!!! அடடா!!
 
மனைவி மனம் நோகாமல் இருக்க, அவளுக்குப் பிடித்தச் சேலைகளை வாங்க தவமாய் தவம் கிடப்பார்கள் தலைதீபாவளி கொண்டாடும் கணவன்மார்கள். சிலர் மனைவிக்குப் பிடித்தாலும் பட்ஜெட் இடிக்குதே என்று கையைப் பிசைந்து கொண்டு வேறு ஏதாவது பார்றா என்று கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். இப்படி சிரிப்பும் முறைப்புமாய் ஒரு பக்கம்.

கூட்டங்கூட்டமாக கைகளில் லத்தியுடன் ஆண், பெண் போலீஸ்காரர்களும், கூட்டத்தைக் கண்காணிப்பவர்களும் ஏம்ப்பா 7234 ஆட்டோ அங்க நிக்காதே, முன்னாடி போப்பா, சார் இன்னோவா காரைக் கொண்டு போய் அந்த பக்கம் நிறுத்துங்க என்று வண்டிக்கேற்ப, ஆளுக்கேற்ப அசரீரி மாதிரி குரல் கொடுத்து கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.

தீபாவளி நெருங்க நெருங்க நடைபாதைக் கடைகள் கூட்டமும், பேசியபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தெருவை அடைத்தவாறு போவோர்களும் என்று பெரிய ஜனத்திரளையே பார்க்கலாம்.

நடுவில் தெரிந்தவர்களைப் பார்த்து விட்டால் போதும் நீ என்ன வாங்கினே என்று நடு ரோட்டிலேயே பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டு சிரித்துப் பேசியபடியே போகும் இவர்களைப் பார்த்தால் நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

புது நகைகள் வாங்கும் மக்கள் கூட்டம் தெற்காவணிமூல வீதிக்கும், நடுவில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள இளநீரும் குடித்து விட்டு நகர்ந்து ஒரு வழியாக அப்பாடா இன்றைக்கு இது போதும் என்று முடிவெடுத்து எந்த ஹோட்டலுக்குப் போகலாம் என்று மனோரமா, துர்காபவன், மேலமாசி வீதி ஆரியபவன், முருகன் இட்லிக் கடை, சுப்ரீம், சபரீஷ், காலேஜ் ஹவுஸ், மாடர்ன் ரெஸ்டாரன்ட் என்று எங்கு இருக்கிறார்களோ பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து இன்னும் வாங்காத பொருட்களுக்கு இன்னொரு நாள் என்று முடிவெடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்கள் ஒரு வழியாக!

ஹோட்டல்களிலும் சாப்பிடுபவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே எப்படா நகருவார்கள் என்று பதவி பறிபோன அமைச்சரிடமிருந்து சீட்டை பிடுங்கிக் கொள்ள காத்திருப்பார்கள் சிலர். நிம்மதியாக சாப்பிட முடியாமல் அவதி அவதியாக அள்ளிக் கொட்டிக் கொண்டு வெளியேறுபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும். சர்வர்களும் கூட்டத்தைப் பார்த்தவுடன் எரிச்சலான முகபாவத்துடன் என்ன இருக்கு என்ற கேள்விக்கு எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முடியுமோ சொல்லி விட்டுப் போவார்கள். சில இடங்களில் சட்னி இருக்கும் சாம்பார் வர காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று காத்திருக்க வேண்டும்.

இப்படி கோவில்களுக்கும் திருவிழாக்களுக்கும் ஹோட்டல்களுக்கும் கடைகளுக்கும், மக்களுக்கும் பஞ்சமில்லாத மதுரையில் தீபாவளி முன் தினம் இருக்கும் பரப்பரப்பு இன்னுமொரு மகுடம். அநேகமாக எல்லா ஊர்களிலும் அப்படித் தான் இருக்கணும். ஆனால், மதுரை தான் நமக்கு ஸ்பெஷல் ஆயிற்றே, அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

முன்பு விளக்குத்தூணிலிருந்து தெற்குமாசி வீதி  வரை நடுரோட்டில் கடை பரப்பியது இன்று கீழவாசல், அரசமரம் என்று விரிந்திருக்கிறது. மழையில் பூத்த காளான்களாய் பட்டாசுக் கடைகள், செருப்பு, பாய், பிளாஸ்டிக் குடங்கள், சோப்பு டப்பாக்கள், ஸ்டிக்கர் பொட்டுக்கள், இத்யாதிகள் என்று அக்காவ் மூணு பத்து நாலு பத்து என்று நேரத்திற்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்,

விளக்குத்தூணைத் தாண்டி விட்டால் பிளாட்பார துணிக்கடைகள் வாயில் வந்த பெயரைச் சொல்லி அம்மா இங்க வாங்க, இங்க வாங்க இருநூறுபா சேலை நூறு நூறு, அய்யா பனியன், அண்ணே கைலி, அக்கா லேடீஸ் கர்ச்சீப் என்று மாறி மாறி குரல்கள் , மக்கள் கூட்டம் அலைஅலையாய் பேரம் பேசிக் கொண்டு கடைசி நிமிட ஷாப்பிங் முடித்துக் கொண்டிருக்கும்.

சிலர் வெறுமனே கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, சிலர் கையில் இளநீர், திகர்தண்டாவை குடிப்பது போல் பெண்களை நோட்டமிட்டுக் கொண்டு, கூட்டத்தில் இடித்துக் கொண்டே சிலர், பெண்கள் கழுத்தைச் சேலையால் மூடிக் கொண்டு நகைகளை திருடர்களிடமிருந்து காத்துக் கொண்டு நொடிக்கொருதரம் பணப்பை பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டும் போகும் கூட்டத்தை பெரியம்மா, பாட்டி வீட்டிலிருந்து பலமுறை கண்டதுண்டு.

கைகளில் துணிகள் வாங்கிய கட்டைப்பை, மஞ்சள் பை, பட்டாசுகள் என்று மனம் நிறைய மகிழ்ச்சியுடன் போகும் பலரையும் காண முடியும்.

விளக்குத்தூண், சின்னக்கடை ஏரியாக்களில் ணங்க ணங்க ணங்க ணங்கன்று நடுராத்திரியிலும் கொத்துப் பரோட்டோ சத்தமும், சால்னா வாசனையும், குஸ்கா, பிரியாணி என்று ராபியா மட்டன் ஸ்டால், அம்சவல்லி, சிம்மக்கல் கோனார் கடை என்று அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் கூட்டம் அலைமோதும். தூங்கா நகரம் !!!

நடுநடுவில் குருத்து, மாங்காய், பழங்கள் விற்கும் வண்டிகளும் அதை வாங்க அண்ணே எனக்கு ஒண்ணு , எனக்கு ரெண்டு என்று நீண்டிருக்கும் கைகளில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு பிசியாக வியாபாரம் செய்யும் வியாபாரிகள்!

இந்தக் கூட்டத்திலும் பேரம் பேசி வாங்கி விட்டோம் என்று பிளாஸ்டிக் குடங்களையும், டபராக்களையும் அள்ளிக் கொண்டுப் போகும் பெண்கள் பட்டாளம்.

தெற்கு மாசி வீதிக் கடைகளில் ஜொலிக்க ஜொலிக்க விளக்குகள், இனம் மதம் பாராமல் சுறுசுறு பிசினெஸ்! அந்தக் கூட்டத்தில் போய் விட்டு வர தனித் திறமையே வேண்டும்!

ஆர்யபவானில் லட்டு, பால்கோவா, முந்திரி இனிப்புகள், சோன்பப்டி என்று அதை வாங்க தள்ளுமுள்ளு கூட்டம். இந்தக் கூட்டம் எல்லாம் இப்போது டெல்லிவாலாவிலும், வளையக்காரத்தெரு முக்கில் இருக்கும் கடையிலும்! (பால்கோவா, சமோசா...நன்றாக இருக்கிறது ) ஆர்யபவன் கடை மூடி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இப்பொழுது கிருஷ்ணா, அடையார் ஆனந்த பவனிலும் கூட்டம்!

இப்படியே நடுநிசியைத் தாண்டி அதிகாலை வரை நடக்கும் இந்த வியாபாரம் மழையினால் அடிக்கடி பாதிப்படைந்தது உண்டு. ஆனாலும் குடை பிடித்துக் கொண்டும், மலையில் நனைந்து கொண்டும் ஜோரான வியாபாரம் அதுபாட்டுக்கு நடக்கும்.

பஸ், ரயில்வே நிலையங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தீபாவளிக்கு ஊருக்கு வருபவர்கள் கூட்டம் வேறு அலைக்களிக்கும். இப்போது எங்கு பார்த்தாலும் கார், பைக், ஆட்டோ என்று எங்கும் நெரிசல் நெரிசல் நெரிசல். சமயங்களில் மூச்சு விடக் கூட திணறுகிற மாதிரிக் கூட்டம்!

மேம்பாலத்தைத் தாண்டினால் அது ஒரு தனி உலகம். ஏகத்துக்கும் அண்ணாநகர், KK நகரிலும் கடைகள், ஹோட்டல்கள் , மால் என்று கலகலக்கிறது!

எப்படியோ விடிந்ததும் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்து, சாமி கும்பிட்டு, புதுத்துணி உடுத்தி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, பட்டாசு சத்தத்துடன் பலகாரங்கள் சாப்பிட்டு கோவில்களுக்கும், உறவு மற்றும் சொந்தகளைப் பார்க்கவும் என்று கிளம்பும் ஒரு கூட்டம்,


இல்லை இன்றும் தொல்லைக்காட்சி முன் தான் தவம் கிடப்பேன் என்று அடம் பிடிக்கும் ஒரு கூட்டம்,

இன்று என் தலைவர் படம் ரிலீசாகிறது , முதல் ஷோ பார்க்க வேண்டும் என்று அநியாயத்திற்கு காசு போட்டு, பாலாபிஷேகம், சூடம், மாலை என்று தெரியாத ஒருவருக்குப் படையல் செய்து தலைவர் காசு வாங்கி நடித்தப் படத்தை காசு கொடுத்துப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில் மக்களை அடித்துக் கொள்ளவே முடியாது.

அடுத்தவர் வீட்டுச் சுவற்றில் வெங்காய வெடி, தெருவில் தௌசண்ட் வாலா வெடிப்பேன் என்று பொடிப்பையன்கள் கூட்டம் ஆனந்தமாக கொண்டாடும் தினம் தான் இந்த தீபாவளி தினம்!

வயதிற்கேற்ற மாதிரி சீனி வெடி, லட்சுமி வெடி, வெங்காய வெடி, சரம், ராக்கெட் என்று ஊதுவத்தியை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் பயந்து பயந்து வெடி வைக்க,

சிறு குழந்தைகள் பொட்டுப் பட்டாசு, சுத்தியல் சகிதம் வலம் வர, அம்மா மடியில் உட்கார்ந்து பாம்பு பட்டாசு பார்த்துக் கண்கள் விரிய, சங்குச்சக்கரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்பு என்று இரவு வரை நீடிக்கும் இந்த நாள் ஒரு இனிய நாள். 'டபடப' வென்று சுற்றும் சங்குச்சக்கரம்  'படார்' என்று எதிர்பாராமல் வெடிக்கும் போது பயத்துடன் ஒதுங்கியும், மேலே போ மேலே போ என்று தான் சொல்லியதால் தான் புஸ்வாணம் மேலே போயிற்று என்று  கைகொட்டிச் சிரித்தும் குழந்தைகளும் பெரியவர்களும் கொண்டாடும் ஒரு அழகிய தினம்!


காலங்கள் மாறினாலும் நினைவுகள் மாறாத இனிய நாள்!

அனைவருக்கும் என் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!






Thursday, October 17, 2013

வட அமெரிக்காவில் இலையுதிர் காலம்

பள்ளி நாட்களில் புத்தகத்தில் படித்த, கேள்விப்பட்ட இயற்கையின் பருவசுழற்சி மாற்றங்களை இங்கே வந்த பின்னர்தான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது.கனடா, அமெரிக்காவின் வட மாநிலங்களிலும்,மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் முழுமையான பருவசுழற்சியைக் கண்டு களிக்கலாம்.

அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியிலிருந்து அக்டோபர் மாதம் வரை திரும்பிய திசை எல்லாம் இயற்கை அன்னை வாரி இறைத்த வண்ணக் கலவைகள் தீட்டிய ஓவியங்கள் மரங்கள், செடிகள், கொடிகள் என்று வஞ்சனையில்லாமல் வியாபித்திருக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

இந்தக் காலத்தில் குளிருமில்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் பருவநிலை 'குளுகுளு'வென்றிருக்கும். பல்வேறு ஜீவராசிகளும் பனிக்காலம் வருவதற்கு முன் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடித்தேடிச் சேகரிக்கும் காலமிது என்பதால் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும். அதிலும் சுறுசுறுப்பாய் பறந்து திரியும் பறவைகளின் இன்னிசைக் கீதமும் ஒர் இனிய கச்சேரிக்கு நிகரானது.

வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தவுடன், மரங்களும் தங்களைப் பனிக்காலத்திற்குத் தயார் செய்து கொள்ளும் முயற்சியாக இலைகளை உதிர்க்க ஆரம்பித்து விடும்.பச்சை நிற இலைகள் எல்லாம் மெல்ல மெல்ல இளம் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று மாறும் போது வண்ணக்கலவைகளாகப் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ள ஆரம்பிக்கும்.

வீடுகளைச் சுற்றியும், தெருக்களின் ஓரங்களிலும், சாலைகளின் அடர்ந்த மரங்களிலும், நீர் நிலைகளின் பின்புலத்திலும், மலைகளிலும் என்று ஓரிரு மாதங்கள் எங்குப் பார்த்தாலும் இயற்கை அன்னையின்  இத்தகைய வண்ண ஓவியங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

இந்த வர்ண ஜாலங்களைக் கண்டுகளிக்க ஏதுவாகப் பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது.

ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள், அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு!

இந்தப்  பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் மரங்களையும், மனிதர்களையும்  பார்த்து சொல்வது போல் இருக்கும்.
காலையில் கண் விழித்துப் பார்த்தால் மூடுபனியினால் போர்த்தப்பட்ட புல்வெளிகள், நீர்த்தெளித்து விட்டதைப் போல் சாலைகள், 'சில்'லென்ற அதிகாலைத் தென்றல், புகைமூட்டம் போல் இருக்கும் அடர்ந்த மூடுபனியில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மஞ்சள் நிறத்தில் 'தகதக'வென்று ஜொலிக்கும் தங்கச் சூரியன், சமயங்களில் காய்ந்த இலைகளை வாரி அணைத்து 'உய்உய்' என்று விசிலடிக்கும் காற்று, நான் மட்டும் உங்களுக்கு இளைத்தவனா என்று கருமேகங்கள் புடை சூழ, இடி மின்னலுடன் மழை, அதன் பின்னே தோன்றும் அழகிய வானவில், அந்நேரத்து வானத்தின் வர்ண ஜாலங்கள், அதன் பின்னணியில் வண்ண மரங்கள் என்று இந்த அழகு இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்காதோ என்று ஏங்க வைக்கும்.

பல தோட்டங்களில் கொத்துகொத்தாகக் காய்த்துத் தொங்கும் ஆப்பிள் பழங்களை நாமே பறித்து ருசி பார்த்து விலைக்கு வாங்கலாம். பெரிது பெரிதாக உருண்டோடி காய்த்திருக்கும் பூசணியை குடும்பம் குடும்பமாய் குழந்தைகளோடு பறித்து மகிழும் நிறைவான தருணங்கள், சாப்பிடும் அனைவரையுமே அடிமை ஆக்கி விடும் ஆப்பிள் சைடர் டோனட்ஸின் சுவை என்று இனிமையான காலம் !

வீடுகளின் முன் சேர்ந்திருக்கும் இலைகளின் மேல் புரண்டு விளையாடியும், ஒருவர் மேல் ஒருவர் இலைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆடும் குழந்தைகளுக்கு இந்தக் காலம் இன்னும் ஒரு பொற்காலம்!


'தளதள'வென்று பச்சை இலைகளுடன் இருந்த மரங்கள் வண்ணங்கள் மாறி இலைகள் உதிர்ந்து காட்சியளிக்கும் இலையுதிர்காலம் இயற்கையின் திருவிளையாடல்களில் ஒன்றே!

ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறி மாறி வந்தாலும் அதன் அழகு வெவ்வேறாக இருப்பது போல் பிரமிக்க வைக்கிறது!


இலையுதிர்காலம் என்பது ஒரு பருவ சுழற்சியின் முடிவு என்பதைக் காட்டிலும், அடுத்து வரப் போகும் புதிய துவக்கத்தின் அடி உரமாகவும், அதற்கான தியாகமாகவும் அமைகிறது....இயற்கை நமக்கு உணர்த்தும் இந்தச் சின்ன உண்மையைப் புரிந்து கொண்டால் மனிதம் தழைக்கும். புதிய தலைமுறைகள் புகழோடு வாழ முடியும்.

Sunday, October 13, 2013

கொலு தரிசனம்

விநாயகச் சதுர்த்தி முடிந்ததும் அடுத்து வரப்போகும் கொலுவிற்கான யோசனைகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக எத்தனை படிகள், எத்தனை பொம்மைகள், எந்த சுவாமி சிலையைச் சேர்ப்பது, கொலுவை பார்க்க வருகிறவர்களுக்கு என்ன கொடுப்பது என எல்லா திசையிலும் யோசனைகள் பறக்கும். வீடுகளிலேயே இந்த நிலமை என்றால் கோவிலைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல் விதவிதமாக சிந்தித்துக் காலத்திற்க்கேற்ற மாதிரி கொலுப்பொம்மைகளை வைத்து அலங்கரிப்பதில் அவரவருடையத்  தனித்தன்மை புலப்படும் நேரமிது.

என் சிறுவயதில் தெருக்கொலுக்கள் மிகவும் பிரபலம். எத்தனை முறை தான் அடுத்தவர் வைத்த கொலுக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது? நாமும் செய்தால் என்ன என்று அம்மாவிடம் மன்றாடி, எங்கேயோ கட்டிக் கொண்டிருந்த வீட்டின் முன் கொட்டியிருந்த மணலை அள்ளிக் கொண்டு வந்து பார்டர் கட்டி, ஒ ஓ! பூக்கள் வேண்டுமே என்று நடையாய் நடந்து நடனா தியேட்டர் பக்கம் போய் (அவ்வளவு தூரம் போனால் தான் மரங்களைப் பார்க்க முடியும் அந்தக் காலத்தில்) பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து, பார்டரை அழகு பண்ணி முடிய,

ஒரு பக்கம் மணலை குவித்து மலை மாதிரி செய்து நடுவில் ஒரு குகை, அதன் வழியே போகும் ரயில், ஓகே, மலை மேல் முருகனை அமர வைத்தாயிற்று. ம்ம்ம். பூங்கா வைத்தால் நன்றாக இருக்குமே. ஒரு பெஞ்ச், இரண்டு பேர் நடக்கிற மாதிரி, குழந்தைகள் விளையாடுகிற மாதிரி பொம்மைகள் வீட்டிலிருந்து கொலுவிற்கு வந்தாயிற்று!

கால், சிறகு உடைந்த பறவைப்  பொம்மைகள் எல்லாம் அன்று கொலுவில்!
ஒரு செட்டியார் பொம்மையைச் சுற்றி அரிசி, பருப்பு இத்யாதிகளுடன் ஒரு கடை :)

'டபடப' வென்று ஒரு சிறிய மோட்டார் படகு ஒரு கிண்ணத்தில் :) இன்னொரு கிண்ணத்தில் மீன், வாத்துப் பொம்மைகள். மறக்காமல் உண்டியல். இது தான் எங்கள் கொலு.

இதைப் பார்த்து உண்டியலில் காசும் போட்டுச் செல்வார்கள்!அது ஒரு காலம்!

பிறகு கோவில்களில் நடக்கும்கொலுக்களுக்குச் செல்ல ஆரம்பித்து அம்மன் தரிசனம் செய்து, அலங்காரங்களில் மனதைப் பறிக் கொடுத்தது இன்னுமொரு காலம்!

அமெரிக்காவில் வந்த பிறகும் இந்தப்  பாரம்பரியத்தை விடாமல் செய்து வரும் தோழிகளின் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டுக்கும் சென்று பார்த்து விட்டு வருவது இந்தக் காலம்!

வேலைக்கும்போய் விட்டு வந்து, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, தெரிந்த குடும்பங்களை அழைத்து மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு, பரிசுப் பொருட்கள், குழந்தைகளுக்குத் தனியாக என்று பார்த்துப் பார்த்து அவர்கள் செய்யும் வேலையில் இருக்கும் ஈடுபாடு ரொம்பவே நெகிழச் செய்யும்.

இது மட்டுமா? குழந்தைகளும், பெரியவர்களும் சுவாமிப் பாட்டுக்கள் பாடி, பொழுதை இன்னும் இனிமையாக்குவார்கள்.

வந்தவர்களுக்கு அருமையாக உணவும் வழங்கி காது, மனம், வயிறு என்று அனைத்தையும் குளிர வைக்கும் இந்நன்னாளில் குழந்தைகளும் ஆனந்தமாக கொலுக்களை கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு.

விதவிதமான பொம்மைகள், கிருஷணர் பிறப்பு, நர்த்தனம், கோபியர் லீலை, அறுபடை வீடு முருகன், தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மிகள், மும்மூர்த்திகள், விதவிதமான பிள்ளையார் சிலைகள், பனிக்காலம்,  குழந்தைகளை கவர டிஸ்னி பொம்மைகள், கிரிக்கெட், மறந்து போய்க் கொண்டிருக்கும் மாட்டு வண்டி, மரப்பாச்சி பொம்மைகள், இந்தியத் திருமணங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


இதையெல்லாம் கண்டுகொள்ள வாய்ப்பைத் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!



Friday, October 11, 2013

தெற்கு கிருஷ்ணன் கோவில்

'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்டாசி சனிக் கிழமைகளில் இன்னும் விஷேசமாய் இருக்கும். துளசி, பச்சைக் கற்பூரம், பூமாலைகள் மணக்க கோலாகலமாய் பூஜைகள் நடக்கும். என் சிறு வயதில் பாட்டி வீட்டிலிருந்து அடிக்கடி விஜயம் செய்த கோவில்களில் இதுவும் ஒன்று.

சென்ற முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கோவிலில் புதிதாக தங்கரதப் புறப்பாடு நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருப்பதாகவும், முடிந்தால் நீயும் செய்யலாம் என்று அக்கா சொல்லி இருந்ததால், என் மகளின் பிறந்த நாளை ஒட்டி கோவில் நிர்வாகத்திடம் நாள், நேரம் எல்லாம் கேட்டு விட்டு அப்படியே சிறிது எக்ஸ்ட்ரா பிரசாதத்திற்கும், ஹனுமாருக்கு வடைமாலைக்கும் சேர்த்துப் பணம் கட்டி விட்டு வந்தோம்.

ஒரு சனிக்கிழமை அன்று புறப்பாடு என்று முடிவாயிற்று. மாலையில் அர்ச்சனைக்கு வேண்டிய சாமான்கள் சகிதம் உறவினர்கள் சிலருடன் கோவிலுக்குப் போனோம். என் மகளுக்கு அந்தக் கோவில் புதிது! கும்பாபிஷேகம் முடிந்த கோபுரங்கள் 'பளிச்' என்று வண்ண மயமாக!

கோவில் வாசலில் பூ வியாபாரம், காலணிகளைப் பார்த்துக் கொள்பவர்கள், திருவோடு ஏந்தியவர்கள்!, கோவில் வாசலில் உடைக்கும் சிதறு தேங்காய்க்கு என்று எப்போதும் போல் ஒரு சிறு கூட்டம்!

கருப்பண்ணச்சாமியை கும்பிட்டு விட்டுக் கோவில் உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் நவக்கிரகங்களுக்கு அருகில் சுடச்சுட நெய் வழிய வெண்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள் என் கணவரின் நண்பர்கள் சிலர். எங்களை அந்த இடத்தில் எதிர்பார்க்காத அவர்களிடம் சென்று , என்ன எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன் நீங்களா, இங்கே எப்படி, எங்கே விஷ்வேஷ் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டுத் தொன்னையில் பொடித்துப் போட்ட மிளகு, வறுத்துப் போட்ட முந்திரி, கருவேப்பிலை, குழைய விட்ட அரிசியில்...என்று வாயில் வைத்தாலே கரையும் வெண்பொங்கலை கொடுக்க நானும் என் மகளும் அனுபவித்துச் சாப்பிட்டு விட்டு, ம்ம்ம்.. இன்னும் கொஞ்சம் கூட கொடுத்திருக்கலாம் என்று எங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களையும் சுவாமி புறப்பாட்டிற்கு அழைத்து விட்டு உள்ளே சென்றோம்.

கோவில் சுத்தமாகத் தூண்கள் எல்லாம் விபூதி, குங்குமம் என்று பக்தர்களால் அலங்கரிக்கப்படாமல் பார்க்க நன்றாக இருந்தது. வலப்பக்கத்தில் நாமம் போட்ட கணபதி !!!, நன்றாகத் தலையில் குட்டிக் கொண்டு, அப்படியே ஸ்ரீராமஜெயம், வெற்றிலை, வடை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய அபிமான ஹனுமார் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்க, அவரை வணங்கிச் சுற்றி வந்தோம். ஹனுமாரைச் சுற்றி வர இருக்கும் மிகவும் குறுகலான இடத்தில் இன்றும் என்னால் சுற்றி வர முடிகிறது என்று சந்தோஷமாக இருந்தது! அதை விட அவரைச் சுற்றி இருக்கும் சுவர்களில் எண்ணைப் பிசுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்க டபுள் சந்தோஷம்! எங்கள் முறை வந்து அர்ச்சனை, வடை மாலை பூஜைகள் முடிந்தவுடன்,

தங்கரதப் புறப்பாட்டை முடித்து விடலாம் என்று சொல்ல, மேலேறிக் கோவிலுக்குள் சென்றோம். அதற்குள் தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், லக்ஷ்மணர், சீதா தேவி, பள்ளிகொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணா, லட்டு கோபால், லக்ஷ்மி ஹயக்ரீவர், நரசிம்மர், கருடர் என்று சந்நிதிகளைச் சுற்றி வந்து விட்டோம்.


அழகிய புதிய ஜொலிக்கிற தங்கரதத்தில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவிகளுடன் மலர் அலங்காரத்தில் இருக்க, அர்ச்சகர்களும் கோத்திரம், நட்சத்திரம், பெயர்களைக் கேட்டு அர்ச்சனை செய்ய, என் தம்பிகளும் மாலை, பரிவட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டு அர்ச்சனையும் முடிய,

நாதஸ்வரம், தவில் இன்னிசை முழங்க தேர் புறப்பாடு பெருமாள், தாயார் சந்நிதி வழியாக அருமையாக நடந்தது. அனைத்து பூஜைகளும் மனநிறைவுடன் நடக்க, சந்நிதிகளை வலம் வந்து பிறகு பூக்கள் , தீர்த்தம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள உட்கார, அதற்குள் பிரசாதம் கேட்டு ஒரு கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

அம்மாவும் வடை, சக்கரைப் பொங்கல் பிரசாதங்களை கோவிலுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பிக்க கூட்டம் திடீரென்று அதிகமாகி விட்டது :(

ஒரு வழியாக அதை முடித்து விட்டு வந்திருந்த உறவினர்களுக்கும் கொடுத்து விட்டு, நிமிர்ந்தால் பூஜை செய்த அர்ச்சகர்களுக்கு, தவில், நாதஸ்வரம், தீவட்டி எடுத்து வந்தவர், அவர், இவர் என்று கோவில் வாசலில் இருப்பவர் வரை வரிசையாகப் பணம் கேட்டு நொச்சு. அன்பாக கொடுப்பதை வாங்கிக் கொள்ளாமல் அடாவடியாக கேட்டதால் கொஞ்சம் தாராளமாகவே கொடுக்கும் எனக்கு எரிச்சல் தான் வந்தது.



அதே போல், புறப்பாடு செய்பவர்கள் நிம்மதியாகத் தங்கரதம் இழுக்க முடியவில்லை. அன்று ஏகப்பட்ட பூஜைகள் என்று நல்ல கூட்டம். நான் நீ என்று அவர்களும் சேர்ந்து ஓராயிரம் கைகள் வந்து விழுந்து ரதம் இழுக்க, பாவம் ரதம்! ஒரே இழுபறியாகி கடைசியில் கூட்டத்திற்குப் பயந்து நாங்கள் ஒதுங்க வேண்டியதாகி விட்டது!

இதையெல்லாம் கோவில் நிர்வாகம் கவனித்தால் தேவலை. காசு வாங்குவதோடு கடமை முடிந்து விட்டது என்று அலவலகத்தில் ஒதுங்கி இராமல், கோவிலுக்குள் நடப்பதையும் கண்டு கொண்டால் நலம்.

ஹரி ஓம் !!!!



Tuesday, October 8, 2013

திக்...திக்...திக்...4

ஜனவரி மாதம், 2000 வருடம்.

அமெரிக்காவில் யூட்டா மாநிலத்திலிருந்து நியூயார்க்கிற்கு வேலை நிமித்தமாக குடும்பத்துடன் இடம் பெயரவேண்டிய சூழ்நிலை. கடும் பனிமழைக் காலம். விமான வசதி இருந்தும் பல மாநிலங்களை கடந்து போகும் ஒரு அனுபவம் நன்றாக இருக்குமே என்று காரிலேயே கிட்டத்தட்ட 2,200 மைல்கள் போவது என்று முடிவாயிற்று. ஒரே நெடுஞ்சாலை தான். அதனால் பிரச்சினை இருக்காது என்று பல சாமான்களையும் மூட்டைக்கட்டி அனுப்பி விட்டு, தேவையானது மட்டுமே காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களிடமும் விடைபெற்று ஒரு நல்ல நாளில் புறப்பட்டோம்.

முதலில் யூட்டாவிலிருந்து வயோமிங் என்ற மாநிலம் வழியே ஆரம்பமானது பயணம். வயோமிங் ஒரு கிராமம் போலத்தான். நிறைய ஆடு, மாடு, குதிரைப்பண்ணைகளும், விளைநிலங்களும் தான் பார்க்க முடிந்தது. பனிக்காலத்தில் என்ன விளைச்சல் இருக்க முடியும்? தெருவில் ஊர்ந்து செல்லும் வாகனங்களைத் தவிர ஒரு ஜனமும் பார்க்க முடியாது!

அப்படியே ஒரு வழியாக அழகான கொலராடோ மாநிலத்தை வந்தடைந்தோம். ஜனவரி மாதம் வெள்ளைப்பனி போர்த்திய மலைகள் தான் எங்கு பார்த்தாலும். தேசிய நெடுஞ்சாலையில் எங்களுடன் பெரிய,பெரிய கனரக வாகனங்களும் சில கார்களும் மட்டும் தான் பயணித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் பனிமழையும் கொட்டிக் கொண்டிருக்க, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்கும் அன்று இரவு தங்குவதற்கும் நல்ல இடமாகப் பார்த்து இருந்து விட்டோம். நல்ல குளிர் வேறு.

அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்து மீண்டும் பயணம் தொடர, நெப்ரஸ்கா மாநிலம் வந்து சேர்ந்தோம். சாலைகள் முழுவதும் பனிக்கொட்டி அது உறைந்து கார் வழுக்கிக் கொண்டு போனது. எங்களைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எந்த உயிரினமும் இல்லை. நானும் என் மகளும் காரின் பின் சீட்டில். ஒழுங்காத்தானே போய்க்கிட்டிருந்துச்சு என்று நினைக்கும் பொழுதே 'சர்'ரென்று ஒரு வழுக்கல்! என்ன ஆகிறது என்று நினைப்பதற்குள் என் கணவரும் சீட்பெல்ட் போட்டுக்கோ என்றவுடன் ஒரு பதட்டம். black ice-ன் மேல் கார் போனால் அவ்வளவு தான்! ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று மட்டும் உணர முடிந்தது.

என் மகளோ நடக்கும் விபரீதம் எதுவும் தெரியாமல் படங்கள் வரைந்து கொண்டிருந்தாள். மெதுவாக என் கணவரிடம் பார்த்துப் போங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வண்டி 'விர்'ரென்று யூ-டர்ன் அடித்து எதிர் திசையில் போக ஆரம்பித்தது.

எங்கள் இருவருக்கும் திக்...திக்...திக்...என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதிர்த்தாற்போல் ஏதாவது வண்டி வந்தால் நாங்கள் அம்பேல். அந்த ஐஸாகிப் போன சாலையில் பிரேக் போட்டால் பெரிய விபத்து நடக்கும் கார் எங்காவது முட்டிப் போய் நிற்கட்டும் என்று என் கணவரும் கார் போன போக்கில் விட, அப்போது பார்த்து தான் ஒரு பெரிய ட்ரக்கும் வெகுதூரத்தில் தெரிய என்ன செய்வது என்று தெரியாமல் நான் கடவுளை வேண்ட, என் கணவரும் அவருக்கு இருக்கும் பதட்டத்தை வெளியில் காண்பிக்காமல் கடவுள் விட்ட வழி என்றிருக்க, ட்ரக்கும் அருகில் தெரிய,என்னென்னவோ நினைவுகள். அய்யோ யாரும் தெரியாத ஊரில் ஏதாவது ஆகி விட்டால் என்று என் மகளை பார்த்துக் கண்கலங்கி நான் உட்கார்ந்திருக்க,

ஷன நேரத்தில் எங்கள் கார் பழையபடி தானகவே சரியான பாதையில் போக ஆரம்பிக்க, என்ன நடக்கிறது, எப்படி நடந்தது என்று ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை - ஏதோ ஒன்று நடக்க இருந்து அதிலிருந்து நாங்கள் மீண்டதே பெரிய விஷயம். மனதிற்குள்ளே கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு, உடனே அடுத்து வந்த ஊரில் போய் இறங்கி, கார் மெக்கானிக் கடைக்குப் போக, பதட்டத்துடன் நாங்கள் வருவதையும், அந்நியர்களாக இருப்பதையும் பார்த்து என்ன ஏது என்று விவரம் கேட்டு, வண்டியில் அதிக சாமான்கள் இருப்பதையும் வண்டிச்சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால் தான் வண்டி இப்படி ஆடிப் போய் விட்டது, சாலைகளும் பனியினால் உறைந்து போயிருக்கிறது, பத்திரமாக போங்கள் என்று காசு வாங்காமல்  சரி பண்ணி கொடுத்த பிறகு தான் போன உயிர் திரும்ப வந்தது.

அப்புறம் போட்ட திட்டப்படி பல இடங்களிலும் நிறுத்தி சுற்றிப் பார்த்து விட்டு ஐந்து நாட்கள் ஓட்டிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம் :)

அதை இன்றும் நினைத்தால் திக்...திக்...திக்...
































அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...