Tuesday, October 8, 2013

திக்...திக்...திக்...4

ஜனவரி மாதம், 2000 வருடம்.

அமெரிக்காவில் யூட்டா மாநிலத்திலிருந்து நியூயார்க்கிற்கு வேலை நிமித்தமாக குடும்பத்துடன் இடம் பெயரவேண்டிய சூழ்நிலை. கடும் பனிமழைக் காலம். விமான வசதி இருந்தும் பல மாநிலங்களை கடந்து போகும் ஒரு அனுபவம் நன்றாக இருக்குமே என்று காரிலேயே கிட்டத்தட்ட 2,200 மைல்கள் போவது என்று முடிவாயிற்று. ஒரே நெடுஞ்சாலை தான். அதனால் பிரச்சினை இருக்காது என்று பல சாமான்களையும் மூட்டைக்கட்டி அனுப்பி விட்டு, தேவையானது மட்டுமே காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களிடமும் விடைபெற்று ஒரு நல்ல நாளில் புறப்பட்டோம்.

முதலில் யூட்டாவிலிருந்து வயோமிங் என்ற மாநிலம் வழியே ஆரம்பமானது பயணம். வயோமிங் ஒரு கிராமம் போலத்தான். நிறைய ஆடு, மாடு, குதிரைப்பண்ணைகளும், விளைநிலங்களும் தான் பார்க்க முடிந்தது. பனிக்காலத்தில் என்ன விளைச்சல் இருக்க முடியும்? தெருவில் ஊர்ந்து செல்லும் வாகனங்களைத் தவிர ஒரு ஜனமும் பார்க்க முடியாது!

அப்படியே ஒரு வழியாக அழகான கொலராடோ மாநிலத்தை வந்தடைந்தோம். ஜனவரி மாதம் வெள்ளைப்பனி போர்த்திய மலைகள் தான் எங்கு பார்த்தாலும். தேசிய நெடுஞ்சாலையில் எங்களுடன் பெரிய,பெரிய கனரக வாகனங்களும் சில கார்களும் மட்டும் தான் பயணித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் பனிமழையும் கொட்டிக் கொண்டிருக்க, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்கும் அன்று இரவு தங்குவதற்கும் நல்ல இடமாகப் பார்த்து இருந்து விட்டோம். நல்ல குளிர் வேறு.

அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்து மீண்டும் பயணம் தொடர, நெப்ரஸ்கா மாநிலம் வந்து சேர்ந்தோம். சாலைகள் முழுவதும் பனிக்கொட்டி அது உறைந்து கார் வழுக்கிக் கொண்டு போனது. எங்களைத் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எந்த உயிரினமும் இல்லை. நானும் என் மகளும் காரின் பின் சீட்டில். ஒழுங்காத்தானே போய்க்கிட்டிருந்துச்சு என்று நினைக்கும் பொழுதே 'சர்'ரென்று ஒரு வழுக்கல்! என்ன ஆகிறது என்று நினைப்பதற்குள் என் கணவரும் சீட்பெல்ட் போட்டுக்கோ என்றவுடன் ஒரு பதட்டம். black ice-ன் மேல் கார் போனால் அவ்வளவு தான்! ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று மட்டும் உணர முடிந்தது.

என் மகளோ நடக்கும் விபரீதம் எதுவும் தெரியாமல் படங்கள் வரைந்து கொண்டிருந்தாள். மெதுவாக என் கணவரிடம் பார்த்துப் போங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வண்டி 'விர்'ரென்று யூ-டர்ன் அடித்து எதிர் திசையில் போக ஆரம்பித்தது.

எங்கள் இருவருக்கும் திக்...திக்...திக்...என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதிர்த்தாற்போல் ஏதாவது வண்டி வந்தால் நாங்கள் அம்பேல். அந்த ஐஸாகிப் போன சாலையில் பிரேக் போட்டால் பெரிய விபத்து நடக்கும் கார் எங்காவது முட்டிப் போய் நிற்கட்டும் என்று என் கணவரும் கார் போன போக்கில் விட, அப்போது பார்த்து தான் ஒரு பெரிய ட்ரக்கும் வெகுதூரத்தில் தெரிய என்ன செய்வது என்று தெரியாமல் நான் கடவுளை வேண்ட, என் கணவரும் அவருக்கு இருக்கும் பதட்டத்தை வெளியில் காண்பிக்காமல் கடவுள் விட்ட வழி என்றிருக்க, ட்ரக்கும் அருகில் தெரிய,என்னென்னவோ நினைவுகள். அய்யோ யாரும் தெரியாத ஊரில் ஏதாவது ஆகி விட்டால் என்று என் மகளை பார்த்துக் கண்கலங்கி நான் உட்கார்ந்திருக்க,

ஷன நேரத்தில் எங்கள் கார் பழையபடி தானகவே சரியான பாதையில் போக ஆரம்பிக்க, என்ன நடக்கிறது, எப்படி நடந்தது என்று ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை - ஏதோ ஒன்று நடக்க இருந்து அதிலிருந்து நாங்கள் மீண்டதே பெரிய விஷயம். மனதிற்குள்ளே கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு, உடனே அடுத்து வந்த ஊரில் போய் இறங்கி, கார் மெக்கானிக் கடைக்குப் போக, பதட்டத்துடன் நாங்கள் வருவதையும், அந்நியர்களாக இருப்பதையும் பார்த்து என்ன ஏது என்று விவரம் கேட்டு, வண்டியில் அதிக சாமான்கள் இருப்பதையும் வண்டிச்சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால் தான் வண்டி இப்படி ஆடிப் போய் விட்டது, சாலைகளும் பனியினால் உறைந்து போயிருக்கிறது, பத்திரமாக போங்கள் என்று காசு வாங்காமல்  சரி பண்ணி கொடுத்த பிறகு தான் போன உயிர் திரும்ப வந்தது.

அப்புறம் போட்ட திட்டப்படி பல இடங்களிலும் நிறுத்தி சுற்றிப் பார்த்து விட்டு ஐந்து நாட்கள் ஓட்டிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம் :)

அதை இன்றும் நினைத்தால் திக்...திக்...திக்...
































3 comments:

  1. 2200 மைல்கள், ஐந்து நாட்கள்..... பனி, மழையோடு ஒரு கார் சறுக்கு அனுபவம். :)

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றும் கூட :)

      Delete
  2. படிக்கும் பொது எங்களுக்கும் திக்...திக்...திக்...

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...