Sunday, October 13, 2013

கொலு தரிசனம்

விநாயகச் சதுர்த்தி முடிந்ததும் அடுத்து வரப்போகும் கொலுவிற்கான யோசனைகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக எத்தனை படிகள், எத்தனை பொம்மைகள், எந்த சுவாமி சிலையைச் சேர்ப்பது, கொலுவை பார்க்க வருகிறவர்களுக்கு என்ன கொடுப்பது என எல்லா திசையிலும் யோசனைகள் பறக்கும். வீடுகளிலேயே இந்த நிலமை என்றால் கோவிலைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல் விதவிதமாக சிந்தித்துக் காலத்திற்க்கேற்ற மாதிரி கொலுப்பொம்மைகளை வைத்து அலங்கரிப்பதில் அவரவருடையத்  தனித்தன்மை புலப்படும் நேரமிது.

என் சிறுவயதில் தெருக்கொலுக்கள் மிகவும் பிரபலம். எத்தனை முறை தான் அடுத்தவர் வைத்த கொலுக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது? நாமும் செய்தால் என்ன என்று அம்மாவிடம் மன்றாடி, எங்கேயோ கட்டிக் கொண்டிருந்த வீட்டின் முன் கொட்டியிருந்த மணலை அள்ளிக் கொண்டு வந்து பார்டர் கட்டி, ஒ ஓ! பூக்கள் வேண்டுமே என்று நடையாய் நடந்து நடனா தியேட்டர் பக்கம் போய் (அவ்வளவு தூரம் போனால் தான் மரங்களைப் பார்க்க முடியும் அந்தக் காலத்தில்) பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து, பார்டரை அழகு பண்ணி முடிய,

ஒரு பக்கம் மணலை குவித்து மலை மாதிரி செய்து நடுவில் ஒரு குகை, அதன் வழியே போகும் ரயில், ஓகே, மலை மேல் முருகனை அமர வைத்தாயிற்று. ம்ம்ம். பூங்கா வைத்தால் நன்றாக இருக்குமே. ஒரு பெஞ்ச், இரண்டு பேர் நடக்கிற மாதிரி, குழந்தைகள் விளையாடுகிற மாதிரி பொம்மைகள் வீட்டிலிருந்து கொலுவிற்கு வந்தாயிற்று!

கால், சிறகு உடைந்த பறவைப்  பொம்மைகள் எல்லாம் அன்று கொலுவில்!
ஒரு செட்டியார் பொம்மையைச் சுற்றி அரிசி, பருப்பு இத்யாதிகளுடன் ஒரு கடை :)

'டபடப' வென்று ஒரு சிறிய மோட்டார் படகு ஒரு கிண்ணத்தில் :) இன்னொரு கிண்ணத்தில் மீன், வாத்துப் பொம்மைகள். மறக்காமல் உண்டியல். இது தான் எங்கள் கொலு.

இதைப் பார்த்து உண்டியலில் காசும் போட்டுச் செல்வார்கள்!அது ஒரு காலம்!

பிறகு கோவில்களில் நடக்கும்கொலுக்களுக்குச் செல்ல ஆரம்பித்து அம்மன் தரிசனம் செய்து, அலங்காரங்களில் மனதைப் பறிக் கொடுத்தது இன்னுமொரு காலம்!

அமெரிக்காவில் வந்த பிறகும் இந்தப்  பாரம்பரியத்தை விடாமல் செய்து வரும் தோழிகளின் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டுக்கும் சென்று பார்த்து விட்டு வருவது இந்தக் காலம்!

வேலைக்கும்போய் விட்டு வந்து, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, தெரிந்த குடும்பங்களை அழைத்து மஞ்சள், குங்குமம், வெத்தலை, பாக்கு, பரிசுப் பொருட்கள், குழந்தைகளுக்குத் தனியாக என்று பார்த்துப் பார்த்து அவர்கள் செய்யும் வேலையில் இருக்கும் ஈடுபாடு ரொம்பவே நெகிழச் செய்யும்.

இது மட்டுமா? குழந்தைகளும், பெரியவர்களும் சுவாமிப் பாட்டுக்கள் பாடி, பொழுதை இன்னும் இனிமையாக்குவார்கள்.

வந்தவர்களுக்கு அருமையாக உணவும் வழங்கி காது, மனம், வயிறு என்று அனைத்தையும் குளிர வைக்கும் இந்நன்னாளில் குழந்தைகளும் ஆனந்தமாக கொலுக்களை கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு.

விதவிதமான பொம்மைகள், கிருஷணர் பிறப்பு, நர்த்தனம், கோபியர் லீலை, அறுபடை வீடு முருகன், தசாவதாரம், அஷ்ட லக்ஷ்மிகள், மும்மூர்த்திகள், விதவிதமான பிள்ளையார் சிலைகள், பனிக்காலம்,  குழந்தைகளை கவர டிஸ்னி பொம்மைகள், கிரிக்கெட், மறந்து போய்க் கொண்டிருக்கும் மாட்டு வண்டி, மரப்பாச்சி பொம்மைகள், இந்தியத் திருமணங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.


இதையெல்லாம் கண்டுகொள்ள வாய்ப்பைத் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!



6 comments:

  1. வளர்ந்த குழந்தைகளின் பொம்மை விளையாட்டு @ கொலு!

    ReplyDelete
  2. Your blog recapped me my old school days...we used make a city with school, temples, church, railway stations, bus stand, roads, cinema theaters...etc with thermocoal and charts with the help of my mom....miss those days...thanks for sharing your experience

    ReplyDelete
  3. Thanks for sharing!
    S V
    Lansing, MI

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...