Sunday, November 17, 2013

சுவாமியே சரணம் ஐயப்பா !

கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம் என்றால் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிந்து விரதம் ஆரம்பிக்கும் மாதமும் கூட.
துளசி மாலை, காவி, கருப்பு, மஞ்சள் என்று பக்தர்கள் ஆடையணிந்து பயபக்தியுடன் உலா வரும் நாட்களில் முருகன், ஐயப்ப பக்திப் பாடல்கள் முழங்கும் காலமும் கூட.
அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தும் ஐயப்பனின் பக்திப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
K.J.ஜேசுதாஸ்-ன் தாலாட்டும் காந்தக்குரல், செவிகளை வருடும் ஆர்ப்பாட்டமில்லாத இசை, அமைதியாக அமர்ந்து கேட்க,
பாடல் முடிவடையும் போது உடலும் ஷாவசனம் செய்தது போல் சில்லென்று, மனமும் அமைதியாகி இருக்கும்.
இந்தப் பாடலின் தமிழ் அர்த்தம் அறிய ...


Monday, November 11, 2013

திக்...திக்...திக்... 5

டிசம்பர் மாதம், 2005 வருடம்.

குடும்பத்துடன் ப்ளோரிடா போய் நண்பர்களையும், டிஸ்னி உலகத்தையும் பார்த்து விட்டு வருவது என்று தீர்மானித்து கிறிஸ்துமஸ் நாளன்று அதிகாலையில் விமான நிலையத்தில் காத்திருந்தோம். என் மகனுக்கு நினைவு தெரிந்து  முதல் விமானப் பயணம்.

குழந்தைகளும் இந்த விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கும் ஒரே குஷி. அதிகாலை ஐந்தரை மணிக்கே விமான நிலையத்தில் ஆஜர். டிக்கெட் சரிபார்த்த பிறகு மொத்தமே 15-20 பேர் போகும் ஒரு சிறிய விமானத்தில் பயணம். அதுவே வேடிக்கையாகத் தான் இருந்தது. விமானியும் எடையைச் சமனாக்க  குழந்தைகளையும் பயணிகளையும் மாற்றி உட்கார வைத்தார்.

நானும் என் மகனும், என் மகளும் என் கணவரும் என்று உட்கார , ஒரு வழியாக விமானமும் மேலே பறக்க ஆரம்பித்தது. எழும்பிய விமானம் ஒரு சைடாக வளைந்து வட்டமிட, குழந்தைகளும் வீடு தெரிகிறதா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே வர, இன்னொரு சைடில் மீண்டும் ஒருமுறை வட்டமிட, இதே தொடர்ந்து கொண்டே இருந்தது. முதலில் பார்க்கும் பொழுது, ஹை! வீடு தெரிகிறது, கோவில் தெரிகிறது, மால் கூட தெரிகிறது என்று மகிழ்ந்த நாங்கள் திருப்பித் திருப்பி அதே காட்சி தெரிந்தவுடன் சரி, வேறு விமானத்திற்கு தான் வழி விடுகிறார்களோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே,

ஆகாயத்தில் இருபக்கமும் மாறி மாறி வளைந்து மீண்டும் மீண்டும் வட்டமிட, ஒரே தலை சுற்றல். பரிதாபத்துடன் குழந்தைகளும் எங்கே வாயை திறந்தால் வாந்தி வந்து விடுமோ என்று கணவரைப் பார்க்க, அவரும் ஒன்றும் புரியவில்லையே என்று சைகையினால் சொல்ல, அதற்குள் விமானப் பணிப்பெண்ணும் சிறிது பொறுத்திருங்கள் என்று எங்கோ தவறு நடக்கிறது என்று தெரிந்தும் எல்லோரையும் சமாதானப்படுத்த,

விமானத்தில் இருக்கும் அனைவருமே என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்கமலங்க முழிக்க, எதிர்பாராத விதமாகச் சடுதியில் விமானம் 'தடக்'கென்று தரையை முட்ட, விமானத்தின் ஆட்டத்தால் நாங்களும் மேலும் கீழும் போய் தலையில் சிறிது அடிப்பட்டுப் பேசக்கூட முடியாத நிலையில் விட்டால் போதும் என்று கீழே பார்த்தால் தீயணைப்பு வண்டிகளும், போலீஸ்கார்களும் சூழ, எதையும் கண்டு கொள்ளும் மன நிலையில் இல்லாமல் அனைவரும் பதட்டத்துடன் இறங்க, அனைவரையும் கவனமாக இறக்கி ஆசுவாசப்படுத்த, நார்மல் நிலைக்கு வர சிறிது நேரம் ஆகிற்று.

என்னடா இருந்து இருந்து குழந்தைகளுடன் ஆசையாக ஆரம்பித்த பயணம் இப்படி ஆயிற்றே என்று என்ன தான் நடந்தது இனி எப்படி ப்ளோரிடா போவது என்று கேட்க கவுண்டருக்குப் போனால் அவனவன் கிறிஸ்துமஸ் நாளன்று குடும்பத்துடன் இருக்கணுமே என்ற கவலையில் ஒரே குழப்பம் அங்கு.

எங்கள் முறை வந்த பொழுது ஏன் இப்படி ஆயிற்று என்று கேட்க, அங்கிருந்த பெண்மணி, விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு, வண்டியை இறக்க விமானி கடும் முயற்சி செய்து உங்களை எல்லாம் காப்பாற்றியிருக்கிறார் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அந்த வீடியோவை காண்பிக்கிறேன் என்று பார்த்தால் - நாங்கள் இருந்த விமானத்தின் முன் சக்கரங்கள் விமானம் டேக் ஆப் ஆன பிறகு உள்ளே செல்லாமல் பாதி மடங்கிய நிலையில் மாட்டியபடியே இருக்க, வேறு வழியில்லாமல் nose dive செய்து இறக்கியிருக்கிறார்கள்.

மனக்கண்ணில் மேலும் கீழும் ஆடிய விமானம், தலையில் அடிப்பட்டு 'அவுச் அவுச்' என்று வரிசையாக மக்கள் அலறியது-  அதைப் படமாக பார்க்கும் பொழுது தான் நடந்த நிகழ்ச்சியின் அபாயம் புரிந்தது.  நீங்கள் உயிருடன் திரும்ப வந்ததே பெரிய விஷயம் என்று சொல்லும் பொழுது முதுகுத்தண்டில் சில்லென்று ஒரு சிலிர்ப்பு! அட நாராயணா!

உயிருடன் அனைத்துப் பயணிகளையும் காப்பாற்றிய அந்த விமானி தான் அன்று கடவுளாகத் தெரிந்தார்.

பிறகு அடுத்த விமானத்தில் பறந்து ப்ளோரிடா போய் விட்டு வந்தாலும் இந்த திக்...திக்...திக் நிமிடங்கள் மட்டும் மறக்க முடியவில்லை.





Thursday, November 7, 2013

மண் வாசனை

இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குப் போயிருந்த பொழுது அம்மாவிடம் அத்தைகளைப் பார்க்க வேண்டும் (அப்பாவின் பெரியம்மா, சித்தி மகள்கள்) என்று சொல்ல அவரும் நானும் பார்த்துப் பேசி ரொம்ப  நாளாச்சு போகலாம் என்று கிளம்பி விட்டோம்.

சில அத்தைகள் இன்று உயிருடன் இல்லை :( பாட்டியைப் பார்க்க அடிக்கடி  அவர்கள் வந்து போன நாட்கள் எல்லாம் இனிமையான நினைவுகள். பெரியவர்களுடன் மனந்திறந்து அவர்களுடைய நல்லது கெட்டதுகளைச் சொல்லி அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட காலமும் கூட.

முதலில் பார்க்கப் போன அத்தை என் சிறுவயதில் கம்பீரமாக இருப்பார். நல்ல செல்வாக்குடன் இருந்தவர். நூல் வியாபாரம் செய்தவர்கள். அவருடைய மகள் என் அக்காவின் வயது. அவர்கள் வீட்டில் இருக்கும் தராசு என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். கல், பேப்பர் என்று கையில் எதைக் கிடைத்தாலும் எடையைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். மாவுக்கு அரைக்க அரிசியும்,  உளுந்தும் ஊற வைத்திருப்பார்கள் அதை இரண்டையும் கலந்து என்று ரொம்பவும் படுத்தியதால் அவருக்கு என்னைக் கண்டால் கொஞ்சம் உதறலாகத் தான் இருந்திருக்க வேண்டும் அப்போது!  இப்படி அவரை மட்டுமல்ல எங்கள் வீட்டில் குடியிருந்த இன்னொரு அத்தையையும் நன்றாகவே படுத்தியிருக்கிறேன் :)

இன்று நடை தளர்ந்து, கண் பார்வை மங்கலாகி, பேச்சில், செயலில் இருந்த கம்பீரம் குறைந்து எனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது அவரை அப்படிப் பார்க்க. அவருடைய மகள்களைப் பார்த்துப் பேசி விட்டு வந்தோம். என் மகளிடம் அந்த அத்தை எப்படி இல்லாம் இருப்பாள் என்று சொல்லிக் கொண்டே அடுத்த தெருவில் இருக்கும் அவருடைய அக்காவைப் பார்க்கக் கிளம்பினோம்.

இந்த அத்தை வீட்டு விருந்தில் தான் முதன் முதலில் இட்லியுடன் சமான் அவுன்டி என்று நாங்கள் சொல்லும் ஆட்டிறைச்சிக் குழம்பு சாப்பிட்டு என் நாக்கு அடிமையானது ! அதையும் சொல்லிக் கொண்டே அவர் வீடு வந்து சேர்ந்தோம். வயதாயிருந்தாலும் அவர் பேச்சு வழக்கு இன்னும் மாறவே இல்லை.

நாங்கள் போன பொழுது இரண்டும் மருமகள்களும், அவர்களுடைய குழந்தைகளும் என்று வீடு 'கலகல'வென்று இருந்தது.  மாமியார் தனியாக அடுப்பு வைத்துக் கொண்டு சமைத்துச் சாப்பிட, இரண்டு மருமகள்களும் தங்கள் அறையில் தனித்தனி அடுப்பு வைத்துக் கொண்டு. ஆனால், வீடு முழுவதும் வளைய வந்து கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன அறையில் கட்டில், அடுப்பு, தண்ணீர் குண்டா, மின் விசிறி  என்று ஒரு வித ஆச்சரியத்துடனே என் மகள் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு பேத்தி கையில் மருதாணி வைத்துக் கொண்டு வந்து காண்பித்துப் போனாள் . சின்ன வாண்டுகள் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாட்டி, பாட்டி என்று வந்து போன பேரக்குழந்தைகளைப் பார்த்து எப்படி இந்தச் சின்ன வீட்டில் மூன்று அடுப்புகள் , ஒரு சிறிய அறையிலேயே ஒரு குடும்பம் , மூன்று குடும்பங்கள் இந்த வீட்டில் ஒன்றுமே புரியவில்லை . இப்படி எல்லாம் வாழ முடியும் , மக்கள் வாழ்கிறார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்தாள் என் மகள் . சரி, இப்போதைக்கு இந்த இரண்டு அத்தைகளைப் பார்த்தது போதும்  என்று சிறு வயது சேட்டைகளைப் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த சில தினங்களில், இன்னொரு அத்தையைப் பார்க்கப் போனோம். அவர் வீடு கூடலழகர் கோவிலின் சொர்க்கவாசலுக்கெதிரில் ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய குடியிருப்பில். கிட்டத்தட்ட ஏழெட்டு குடியிருப்புகள். அவர்களை எல்லாம் கடந்து என் அப்பாவின் சித்தி வீட்டுக்குள் நுழைந்தோம். நான் பார்த்த வீடு இன்று இரு குடியிருப்புகளாக மாறி விட்டிருந்தது. ஒரு அத்தை மகளை மாமாவிற்குத் திருமணம் செய்து கொடுத்த வீட்டிற்குப் போனோம். முன்பு தறி போட்டிருந்த இடம். இப்போது தறி இல்லை. மாமாவிற்கும் உடம்பில் தெம்பு இல்லை. என் மகளோ மின்விசிறியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் . அக்காவும் ஒன் பொண்ணு ஒன்னை மாதிரியே இருக்கா .சின்ன வயசில ஒன்னைப் பார்த்தது மாதிரியே இருக்கு என்று என் மகளிடம் பேசிக் கொண்டே இட்லி ரெடி ஆகிறது இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொல்ல, நானும் அதெல்லாம் வேண்டாம் உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்தேன் அதுவே போதும் உட்கார்ந்து பேசுங்கள் என்று சொல்ல அவரும் வந்ததற்கு கொஞ்சம் பாலாவது குடிங்கள் என்று டம்ளர்களில் குடுக்க, சிரித்துக் கொண்டே பேசி விட்டு,

அடுத்த குடியிருப்பில் இருந்த இன்னொரு அத்தையைப் பார்க்க கிளம்பினோம். அவருடைய பேரன், பேத்திகள் MCA படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். எப்படி இருந்த அத்தை , சர்க்கரை நோய் வந்து ஆள் மெலிந்து பாதியாகி, கண் பார்வை, கம்பீரமெல்லாம் குறைந்து பார்க்கவே வருத்தமாக இருந்தது.

அவருக்கு எதிர்பாராமல் நாங்கள் வந்ததில் மிக்க சந்தோஷம். எப்படிம்மா இருக்கே, பொண்ணு என்ன படிக்கிறா என்று கேட்டு விட்டு அவளுடனும் பேசினார்.

சிறிது நேரம் சுற்றம் பற்றி பேசி விட்டு வெளியில் வரும் போது அவர்களைப் பார்த்த திருப்தி இருந்தாலும் வயோதிகம் எப்படி இருந்த ஆட்களை எல்லாம் எப்படி புரட்டிப் போட்டு விடுகிறது நாளை எனக்கும் இந்த கதி தான் என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

சொந்த வீட்டில் வசதிகள் குறைவாக இருந்தாலும் வந்தவர்களை மனமாற வரவேற்று அன்புடன் உபசரிக்கிறார்கள், அவர்களிடம் இருந்த பாசாங்கில்லாத உண்மையான அன்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படி எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று நம்பவே முடியவில்லை என்று ஊர் வந்து சேரும் வரை சொல்லிக் கொண்டே இருந்தாள் என் மகள்.

பணம், இருக்கும் இடம் மகிழ்ச்சியை நிர்மாணிப்பது இல்லை என்ற போதும் இவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்த பொழுது மகள் சொன்ன அந்த நிமிடம் என் மகனுக்கும் இதைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,

சில வருடங்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு வழியாக அத்தைகளைப் பார்த்த திருப்தியுடன் ஊருக்குத் திரும்பினேன்.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...