Thursday, November 7, 2013

மண் வாசனை

இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குப் போயிருந்த பொழுது அம்மாவிடம் அத்தைகளைப் பார்க்க வேண்டும் (அப்பாவின் பெரியம்மா, சித்தி மகள்கள்) என்று சொல்ல அவரும் நானும் பார்த்துப் பேசி ரொம்ப  நாளாச்சு போகலாம் என்று கிளம்பி விட்டோம்.

சில அத்தைகள் இன்று உயிருடன் இல்லை :( பாட்டியைப் பார்க்க அடிக்கடி  அவர்கள் வந்து போன நாட்கள் எல்லாம் இனிமையான நினைவுகள். பெரியவர்களுடன் மனந்திறந்து அவர்களுடைய நல்லது கெட்டதுகளைச் சொல்லி அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட காலமும் கூட.

முதலில் பார்க்கப் போன அத்தை என் சிறுவயதில் கம்பீரமாக இருப்பார். நல்ல செல்வாக்குடன் இருந்தவர். நூல் வியாபாரம் செய்தவர்கள். அவருடைய மகள் என் அக்காவின் வயது. அவர்கள் வீட்டில் இருக்கும் தராசு என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். கல், பேப்பர் என்று கையில் எதைக் கிடைத்தாலும் எடையைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். மாவுக்கு அரைக்க அரிசியும்,  உளுந்தும் ஊற வைத்திருப்பார்கள் அதை இரண்டையும் கலந்து என்று ரொம்பவும் படுத்தியதால் அவருக்கு என்னைக் கண்டால் கொஞ்சம் உதறலாகத் தான் இருந்திருக்க வேண்டும் அப்போது!  இப்படி அவரை மட்டுமல்ல எங்கள் வீட்டில் குடியிருந்த இன்னொரு அத்தையையும் நன்றாகவே படுத்தியிருக்கிறேன் :)

இன்று நடை தளர்ந்து, கண் பார்வை மங்கலாகி, பேச்சில், செயலில் இருந்த கம்பீரம் குறைந்து எனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது அவரை அப்படிப் பார்க்க. அவருடைய மகள்களைப் பார்த்துப் பேசி விட்டு வந்தோம். என் மகளிடம் அந்த அத்தை எப்படி இல்லாம் இருப்பாள் என்று சொல்லிக் கொண்டே அடுத்த தெருவில் இருக்கும் அவருடைய அக்காவைப் பார்க்கக் கிளம்பினோம்.

இந்த அத்தை வீட்டு விருந்தில் தான் முதன் முதலில் இட்லியுடன் சமான் அவுன்டி என்று நாங்கள் சொல்லும் ஆட்டிறைச்சிக் குழம்பு சாப்பிட்டு என் நாக்கு அடிமையானது ! அதையும் சொல்லிக் கொண்டே அவர் வீடு வந்து சேர்ந்தோம். வயதாயிருந்தாலும் அவர் பேச்சு வழக்கு இன்னும் மாறவே இல்லை.

நாங்கள் போன பொழுது இரண்டும் மருமகள்களும், அவர்களுடைய குழந்தைகளும் என்று வீடு 'கலகல'வென்று இருந்தது.  மாமியார் தனியாக அடுப்பு வைத்துக் கொண்டு சமைத்துச் சாப்பிட, இரண்டு மருமகள்களும் தங்கள் அறையில் தனித்தனி அடுப்பு வைத்துக் கொண்டு. ஆனால், வீடு முழுவதும் வளைய வந்து கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன அறையில் கட்டில், அடுப்பு, தண்ணீர் குண்டா, மின் விசிறி  என்று ஒரு வித ஆச்சரியத்துடனே என் மகள் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு பேத்தி கையில் மருதாணி வைத்துக் கொண்டு வந்து காண்பித்துப் போனாள் . சின்ன வாண்டுகள் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாட்டி, பாட்டி என்று வந்து போன பேரக்குழந்தைகளைப் பார்த்து எப்படி இந்தச் சின்ன வீட்டில் மூன்று அடுப்புகள் , ஒரு சிறிய அறையிலேயே ஒரு குடும்பம் , மூன்று குடும்பங்கள் இந்த வீட்டில் ஒன்றுமே புரியவில்லை . இப்படி எல்லாம் வாழ முடியும் , மக்கள் வாழ்கிறார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்தாள் என் மகள் . சரி, இப்போதைக்கு இந்த இரண்டு அத்தைகளைப் பார்த்தது போதும்  என்று சிறு வயது சேட்டைகளைப் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த சில தினங்களில், இன்னொரு அத்தையைப் பார்க்கப் போனோம். அவர் வீடு கூடலழகர் கோவிலின் சொர்க்கவாசலுக்கெதிரில் ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய குடியிருப்பில். கிட்டத்தட்ட ஏழெட்டு குடியிருப்புகள். அவர்களை எல்லாம் கடந்து என் அப்பாவின் சித்தி வீட்டுக்குள் நுழைந்தோம். நான் பார்த்த வீடு இன்று இரு குடியிருப்புகளாக மாறி விட்டிருந்தது. ஒரு அத்தை மகளை மாமாவிற்குத் திருமணம் செய்து கொடுத்த வீட்டிற்குப் போனோம். முன்பு தறி போட்டிருந்த இடம். இப்போது தறி இல்லை. மாமாவிற்கும் உடம்பில் தெம்பு இல்லை. என் மகளோ மின்விசிறியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் . அக்காவும் ஒன் பொண்ணு ஒன்னை மாதிரியே இருக்கா .சின்ன வயசில ஒன்னைப் பார்த்தது மாதிரியே இருக்கு என்று என் மகளிடம் பேசிக் கொண்டே இட்லி ரெடி ஆகிறது இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொல்ல, நானும் அதெல்லாம் வேண்டாம் உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்தேன் அதுவே போதும் உட்கார்ந்து பேசுங்கள் என்று சொல்ல அவரும் வந்ததற்கு கொஞ்சம் பாலாவது குடிங்கள் என்று டம்ளர்களில் குடுக்க, சிரித்துக் கொண்டே பேசி விட்டு,

அடுத்த குடியிருப்பில் இருந்த இன்னொரு அத்தையைப் பார்க்க கிளம்பினோம். அவருடைய பேரன், பேத்திகள் MCA படித்து நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். எப்படி இருந்த அத்தை , சர்க்கரை நோய் வந்து ஆள் மெலிந்து பாதியாகி, கண் பார்வை, கம்பீரமெல்லாம் குறைந்து பார்க்கவே வருத்தமாக இருந்தது.

அவருக்கு எதிர்பாராமல் நாங்கள் வந்ததில் மிக்க சந்தோஷம். எப்படிம்மா இருக்கே, பொண்ணு என்ன படிக்கிறா என்று கேட்டு விட்டு அவளுடனும் பேசினார்.

சிறிது நேரம் சுற்றம் பற்றி பேசி விட்டு வெளியில் வரும் போது அவர்களைப் பார்த்த திருப்தி இருந்தாலும் வயோதிகம் எப்படி இருந்த ஆட்களை எல்லாம் எப்படி புரட்டிப் போட்டு விடுகிறது நாளை எனக்கும் இந்த கதி தான் என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

சொந்த வீட்டில் வசதிகள் குறைவாக இருந்தாலும் வந்தவர்களை மனமாற வரவேற்று அன்புடன் உபசரிக்கிறார்கள், அவர்களிடம் இருந்த பாசாங்கில்லாத உண்மையான அன்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படி எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று நம்பவே முடியவில்லை என்று ஊர் வந்து சேரும் வரை சொல்லிக் கொண்டே இருந்தாள் என் மகள்.

பணம், இருக்கும் இடம் மகிழ்ச்சியை நிர்மாணிப்பது இல்லை என்ற போதும் இவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்த பொழுது மகள் சொன்ன அந்த நிமிடம் என் மகனுக்கும் இதைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,

சில வருடங்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு வழியாக அத்தைகளைப் பார்த்த திருப்தியுடன் ஊருக்குத் திரும்பினேன்.

5 comments:

  1. mihavum arumai Swarna... Entha kalvi than naam pillayakalku kuduka vendiyathu. This is the education we need to give to our children. The virtues needed for life is not academic marks but kindness, humbleness, hospitality, tolerance towards difficulty/poverty/scarcity, respect for elders, empathy... I am touched to see your mind thoughts.... If we raise our children like this, I am sure they will be like the branches of banyan holding the old tree (parents)

    ReplyDelete

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...