Sunday, December 29, 2013

சென்னையில் ஒரு மழைக்காலம்

போன வருடம் இதே நாளில் ஊருக்குச் சென்று வந்த படங்களைப் பார்த்து விட்டு அதே நினைவுடன் தூங்கியதாலோ என்னவோ காலையில் எழும் பொழுது எங்கிருக்கிறோம் என்று ஓர் சிறு குழப்பம். இந்த மாதிரிச் சமயங்களில் எப்பொழுதும் ஊரில் இருப்பது போலவே இருக்கும். சிறு புன்முறுவலுடன் மனம் அசை போட,

போன வருட டிசம்பரில் புயல் காரணமாக மழை கொட்டிக் கொண்டிருக்க சென்னையில் விமானம் இறங்குவதில் தாமதம். தரையிறங்கியவுடன் பெட்டிகள் மழையில் நனைந்து எந்த கோலத்தில் வரப் போகின்றனவோ என்ற கவலை. அதிகாலை 1.30 மணி.

தம்பி வந்து நீண்ட நேரம் காத்திருப்பானே என்று யோசித்துக் கொண்டே  மக்கிப் போன வாசனை வரும் என்று எதிர்பார்க்க இப்பொழுது விமான நிலையத்தில் நடந்து கொண்டிருக்கும் புதுப்புது கட்டிட வேலைகளின் காரணமாக வளைந்து வளைந்து சிறு குப்பைகளை நடந்து பாஸ்போர்ட் , என்ன என்ன நாட்டுக்குள் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்ற அறிவிப்புப் பத்திரம் என கையில் வைத்துக் கொண்டு  நீண்ட வரிசையில் ஐக்கியமானோம் நானும் என் மகளும்.

பாதி தூக்கத்தில் எழுந்த மாதிரி அனைவரின் முகங்களும். குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

வெளிநாட்டவர்களுக்கான வரிசை, இந்தியர்களுக்கான வரிசை என்று நான்கு வரிசைகள். கல்லூரி மாணவர்கள் போல் தெரிந்த அசட்டையாக ஏனோ தானோவென்று மேல் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு நின்ற வெளிநாட்டவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது ம்ம்ம்...இந்த மாணவர்கள் நிறைய கற்றுக் கொண்டு ஊர் திரும்புவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்த பொழுது ஒரு கடுவன் பூனை அதிகாரி அர்த்த சாமத்தில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து உட்கார வைத்து வேலை வாங்குவது போல் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
போட்டோவையும், முகத்தையும் பார்க்கும் போது தெரிந்த ஒரு மத்திய அரசு அதிகாரித்தனம் ! ஸ்டாம்ப் பண்ணும் போது அவர் அடிக்கிறதைப் பார்த்தால் ஒரு அலட்சியம். ம்ம்ம்...அரசு அதிகாரிகள் என்றால் இப்படித் தான் என்ற தோரணையில். எப்படியோ இவர்களை எல்லாம் கடந்து பெட்டிகளை எடுக்க வந்த இடத்தில் மேடம் ஹெல்ப் வேண்டுமா என்று பவ்யமாக ஊழியர்கள். இல்ல, நானே எடுத்துக்கிறேன் என்றவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஒரு வழியாக பெட்டிகளும் வந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் ஏதோ தங்கக்கட்டிகள், போதை மருந்து கடத்துபவர்களைப் போல் படப்படப்புடன் நோட்டமிட்டு கொண்டிருக்க, அவர்களையும் தாண்டி சிங்காரச் சென்னையின் 'குளுகுளு' மழைக்காற்றைச் சுவாசிக்க ம்ம்ம் அந்த சுகமே அலாதி தான்!
பழகிய மொழி பேசும் மனிதர்கள், கண்கலங்கி உறவினர்களை அனுப்ப வந்தவர்கள், ஆவலுடன் மகிழ்ச்சியாக வரவேற்க வந்த நண்பர்கள், குடும்பங்கள், பெயர் அட்டைகளைத் தூக்கி கொண்டு வரவேற்கும் வண்டி  ஓட்டுனர்கள், தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கூட்டம் என்று பலவிதப் பட்ட மனிதர்கள் பல வித உணர்ச்சிகள் பொங்க !!!

தம்பியும் எங்களைப் பார்த்தவுடன்  கையசைத்து விட்டுப் பெட்டிகளை  எண்ணி விட்டாயா, என் மகளைப் பார்த்து நல்லா வளர்ந்துட்டே, உங்கம்மா மாதிரியே இருக்கே  பேசிக் கொண்டே சாப்பிடலாமா என்று கேட்டு விமானநிலையத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வாடகைக்காருக்குத் தொலை பேசி அவனுடைய காரையும் எடுக்க மழைச் சாரலில் நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

விமானநிலையம் நிறைய மாறி விட்டது! எப்பொழுதும் கையேந்திபவன் ஸ்டைலில் ஒரு இட்லிக்கடை- இட்லி, சட்னி, சாம்பார் மிக நன்றாக இருக்கும் அது இப்பொழுது மிஸ்ஸிங் L அந்த நடு இரவிலும் கலகலவென்றிருந்தது அந்த இடம்!

பொதுவாக ஆகஸ்ட் மாதம் வரும் பொழுதெல்லாம் அதிகாலையில் வந்து இறங்குவோம். வெளியில் வந்தவுடன் விடிய ஆரம்பிக்கும் நிலையில் LR ஈஸ்வரியின் குரலில் ஏதாவதொரு மாரியாத்தா பாடல் ஒலிக்க சீரியல் விளக்குகளுடன் பெரிய பெரிய கருமாரியம்மன் அலங்காரங்களைக் கடந்து தெருவில் நடைபாதை ஓரமாக படுத்திருப்பவர்களையும், தள்ளுவண்டிகளையும், நாய்கள் கூட்டத்தையும் என்று பலரையும் கடந்து போயிருக்கிறோம்.

இப்பொழுது மழை வந்து தெருவோரக் காட்சிகள் எல்லாம் மிஸ்ஸிங். நேராக தி.நகரில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு வழிதேடிச் செல்ல, நடுவில் ரோந்து போகும் போலீஸ் காரும் எங்கே இந்தநேரத்தில் என்று டிரைவரைக் கேட்க, அதற்குள் தம்பியின் காரும் வர, ஹோட்டல் பெயரைச் சொன்னவுடன் அவர்களே வழியும் சொல்லி பத்திரமாக போங்க என்று சொல்லவும், பரவாயில்லையே ரோந்து எல்லாம் போறாங்களே என்று வியந்து கொண்டே வந்து சேர்ந்தோம். நாட்டு நடப்பைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார் டிரைவர். ஹ்ம்ம். பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்! கல்லூரிப் படிப்பு முடித்ததாக சொன்னார்!

ஹோட்டலில் ஒரு சிறு பையன் துறுதுறுவென பெட்டிகளை எடுத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்து விட்டு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு செட்டிலாகும் போதே மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பாவம் தம்பிக்குத் தான் பெங்களூரிலிருந்து காரோட்டி வந்து எங்களுக்காக காத்திருந்ததில் பயங்கர அசதி. தம்பி சிறிது நேரத்தில் தூங்கி விட, நானும் மகளும் பேசிக் கொண்டே தூங்கி விட்டோம்.

'டான்' என்று காலை ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்து நாங்கள் இருவரும் எழுந்து விட்டோம். ஜன்னல் வழியே வெளியில் பார்த்தால் ஒரே அமைதி. கொஞ்ச நேரம் UNO கார்டு விளையாடி விட்டு குளித்து முடித்து ஆறு மணிக்கே ஊரைச் சுற்ற தயாராகி விட்டோம். புரண்டு படுத்த என் தம்பியும் என்ன இது இப்படி ரெடியாகி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று சொல்ல, நீ தூங்கு என்று சொல்லி விட்டு, எப்போது காலை உணவு என்று வரவேற்பு அறைக்குப் போன் போட , அவரும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் ரெடியாகி விடும் என்று சொல்ல, மகளும் வெளியில் போய் விட்டு வரலாமா என்று கேட்க , அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சரியான நேரத்திற்கு கீழிறங்கிச் சாப்பிடச் சென்றோம்.

அப்போது தான் சுடச்சுட வடை, இட்லி, பூரி, மசால் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டி,வெண்ணெய் , கார்ன்ப்ளேக்ஸ் , பால் இருக்க, நல்ல சுவையான காலை உணவு. மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே இரு வெள்ளைக்காரர்களும் சாப்பிட வர சூடான காபியும் எடுத்துக் கொண்டு கிளம்ப, தம்பியும் வந்து சேர்ந்தான். அவனும் சாப்பிட்டு முடிக்க சிறிது நேரம் அறையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மழையில் எப்படி தி.நகர் போவது என்று யோசிக்க, தம்பியும் நான் உங்களை சென்னை சில்க்ஸ் அருகில் இறக்கி விட்டு விட்டு என் வேலைகளையும் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அதிகாலையில் இறக்கி விடும் போது கடைகள் திறக்கக் கூட இல்லை. கூட்டமில்லாத தி.நகர் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மப்பும் மந்தாரமுமாக எந்நேரத்திலும் மழை  வந்து கொட்டலாம் என்று ரமணன் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வானம் தயாராக!

கடை வாசலில் வேலை செய்யும் ஆட்களும் கடைத்திறப்பிற்காக காத்திருந்தார்கள். சிறிது நேரம் நடப்போமே என்று நடந்து விட்டு வரும் போது கடைகள் எல்லாம் திறந்து பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்க வாடிக்கையாளர்களும் இருந்தார்கள். கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமானோம்.

வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது வாங்க, இந்த பக்கம் போங்க அந்த பக்கம் போங்க என்று சொல்வதோடு சரி. புதிதாக தங்க, வைர ஷோரூம்கள் திறந்திருக்கோம். சும்மாவாச்சும் பாருங்க என்றவர்களிடம் எதுவும் வாங்கப் போவதில்லை என்றாலும் அனத்தியதால் நாங்களும் போய் ஒன்று விடாமல் போட்டுப் பார்த்து நிம்மதியாகி ரொம்ப நன்றி என்று சொல்லி விட்டு, துணிகளை எடுத்துக் கொண்டு போத்தீஸ், GRT முடித்து விட்டு வெளியில் வரும் போது தூறல் ஆரம்பித்து விட்டது. மதிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது!

மழைத் தூறலில் நடப்பது சுகமாக இருந்தாலும் உடம்புக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்தில் ஒதுங்கி ஒதுங்கிப் போக வேண்டியிருந்தது!

இந்தத் தெருவில் ஒரு கடையில் பெங்காலி இனிப்புகள், சமோசா சூப்பராக இருக்கும். கடை எந்தப் பக்கம் என்று தெரியாமல் சிறிது நேரம் அலைந்து விட்டு மழை அதிகமானவுடன் ஒரு காபிக் கடையில் ஒதுங்கினோம். ரத்னா கபே போக முடியவில்லையே என்ற நினைத்துக் கொண்டே பளிச்சென்று பூச்சூடி கடைகளுக்கு வந்தப் பெண்கள், குழந்தைகள், அவர்கள் துணைக்கு ஆண்கள், நடைபாதையோரக் கடைகளில் வெள்ளரி, மாங்காயைச் சீவி மிளகாய்ப் பொடியைத் தூவி விற்றுக் கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். வாங்கிச் சாப்பிடலாம் போல இருந்த ஆசையை அடக்கி விட்டு சிறிது தூரம் போனால் ஒரு பாலத்தின் கீழ் பலாப்பலச் சுளைகளை நேர்த்தியாக வெட்டி எடுப்பதையும், தேங்காயை அழகாக நறுக்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது தூரத்தில் பெண் காவலர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று. நாங்க தான் ஒன்று விடாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோமே!

காய்கறி, பழங்கள் விற்கும் கடைகளையும், திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி என்று அந்த தெருவில் மட்டும் இரண்டு மூன்று கடைகள். பிரியாணி கடைகளுக்கே உரிய அமைப்பு, முன் வரிசை முட்டை வரவேற்க, பரட்டோ மாஸ்டர் மாவை பிசைந்து அடுப்புடனும், மாவுடனும் மல்டி டாஸ்கிங் பண்ணிக் கொண்டிருக்க, அவர்களையும் கடந்து போனோம்.

மழை நீர் சாலைகளில் ஒதுங்கி அதனுள் நடந்து போகும் கூட்டம், பல விதமான சிறு கடைகள் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே கேள்விகளையும் கேட்டுக் கொண்டு வந்த மகளுடன் சாலையோரக் கடைகளில் பொருட்களையும் வாங்கிக் கொண்டே போனது நன்றாக இருந்தது.

மழை தீவிரமானவுடன் ஆட்டோவில் ஏறி பாண்டி பஜாருக்குப் போனோம். அங்கு இறங்க முடியாத அளவிற்குத் தண்ணீர் வெள்ளம்! சிறிது நேரம் அங்கும் சில கடைகளுக்குச் சென்று விட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம். நடுநடுவில் தம்பியும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தான்.

வந்தவுடன் மதிய உணவிற்குச் சொல்லி விட்டு காத்திருக்க, தம்பியும் வந்து சேர்ந்தான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மாலை நேரம் நெருங்க மெதுவாகத் தூக்கம் வருவது போல் இருக்க, பக்கத்தில் பெருமாள் கோவிலுக்குப் போகலாம் என்று கிளம்பி விட்டோம். மழை இல்லையென்றால் நன்கு நடந்து சுற்றிப் பார்த்திருக்கலாம். கோவிலின் முன் கமகமக்கும் பூக்கடைகள். பூக்களை வாங்கி கொண்டு சுவாமி தரிசனம் முடிந்து பழங்கள் வாங்கலாம் என்று அருகிலிருந்த பழக்கடைக்குச் சென்றோம்.

சீதாப்பழம், சப்போட்டா, வாஷிங்டன் ஆப்பிள் , ரெட் ஆப்பிள் கூட இருக்கு மேடம் என்றவரைச் சிரித்துக் கொண்டே கடந்து விதவிதமான வாழைப் பழங்களை 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருந்த மகளும் மலை வாழைப்பழம் கிடைக்குமா என்று கேட்க, மதுரையில் பாட்டியிடம் சொல்லி வாங்கலாம் என்று சொல்லி விட்டுப் பிடித்த பழங்களை வாங்கிக் கொண்டு நடையை கட்டினோம்.

அங்கிருந்த விதவிதமான வாழைப்பழங்கள், தெருவில் நாங்கள் கண்ட காட்சிகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள், இளம் பெண்களைப் பற்றியும் வாய் ஓயாமால் பேசிக் கொண்டே வந்தாள்.



நாங்கள் பழங்கள் சாப்பிட்டு விட்டுத் தூங்க ஆயத்தமாக தம்பியும் இரவு உணவை முடிக்க, தாய் நாட்டில் இருந்த திருப்தி, பயணம் செய்த களைப்பு, அடுத்த நாளிலிருந்து கோவில்களுக்குப் போகப் போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பு, காணாத மழை, சொந்தங்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆனந்தம், 2013 வருடப்பிறப்பு  நெருங்கும் நாள் என்று எல்லாம் ஒரு இன்ப மயமாக அன்றைய தினம் மறக்க முடியாத நாளாகி விட்டது.



அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Wednesday, December 18, 2013

நினைத்தாலே இனிக்கும் - புட்டும், ஆப்பமும்

புட்டு பிடிக்காது என்று இந்தக் கால குழந்தைகள் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் என் வயதையொத்தவர்கள் சொன்னால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த உணவைச் சாப்பிடத் தவறி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அரசமரம் சாந்தி ஸ்டோர்ஸ் வாசலில் அதிகாலை 6.30 மணிக்கு இரண்டு பெரிய அலுமினிய டபராக்களில் கோதுமை மற்றும் அரிசி மாவு புட்டு கொண்டு வருபவருக்காக அவருக்கு முன்னே காத்திருக்கும் கூட்டம், டபராக்களைப் பார்த்ததும் 'அபிராமி அபிராமி' என்று ஆனந்தப்படும் கமலைப் போல வரிசைக்கு முண்டியடிக்கும்.

அப்பொழுது காமராஜர் சாலையில் இருந்து ஆவினில் பால் வாங்கிக் கொண்டு அப்படியே காலைச் சிற்றுண்டிக்காக வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்க வருவார்கள்.

புட்டு விற்பவரும் இரண்டு டபராக்களையும் இறக்கி விட்டு பேப்பர், அளந்து போட காசுக்கேற்றவாறு காப்படி, அரைப்படி என்று சிறு ஆழாக்குகள், கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு வரிசையாக பேப்பரில் போட்டுக் கட்டிக் கொடுப்பார்.

அப்போதெல்லாம் அரிசி புட்டு தான் பிடிக்கும். அது கிடைக்கவில்லை யென்றால் தான் கோதுமை புட்டு வாங்குவது வழக்கம்.

'பொலபொல'வென்று உதிரியாகப் புட்டு, தேங்காய்ப்பூ இருக்கும் ஆனா இருக்காது மாதிரி கலந்து வெல்லமும் சேர்ந்த அதன் சுவை இன்றும் தித்திக்கிறது, நினைக்கையிலே :)

அதே போலத்தான் தெரு முக்கில் விற்கும் அப்பமும். காலையில் ஆறுமணிக்கே விறகு அடுப்பு, அப்பத்திற்க்கென்றே குழித்தட்டு, அதை மூட என்று மண்சட்டிகள் பார்க்கவே அழகாக இருக்கும்.

ஒரு சட்டியில் முன் தினம் ஆட்டிய ஆப்பமாவில் கருப்பட்டி கலந்து, வெண்ணெய் வேண்டும் என்பவர்களுக்குச் சிறிது சிறிதாக உருட்டிய வெண்ணெயை ஒரு தட்டில் வைத்து, பேப்பரோ , வாழை இலையையோ நீளவாக்கில் வெட்டி என்று அவருடைய கடையை ஆரம்பிக்கும் போதே எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சொல்லி விட்டுப்  போவோர்களும், என்னைப் போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அங்கிருந்தே இருந்து வாங்கிப் போவோர்களும் என்று ஒரு சிறு கூட்டம்.

ஆப்பம் விற்பவர் ஒரு பலகையில் அமர்ந்து கொண்டு ஆப்பம் ஊற்றி மூடி, சில நிமிடங்களுக்குப் பிறகு வெந்த ஆப்பம் மேல் வெண்ணை உருண்டையைப் போட்டு ஓரங்கள் மொறுமொறுவென்று ஆகி வாயில் வைத்தால் இனிப்பான, சுவையான ஆப்பம் வீடு வந்து சேர்வதற்குள் காலியாகி விடும்.

இன்றும் மதுரையில் சில தெருக்களில் இந்த வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், நடக்கப் பழகி பேச்சு வந்தவுடனே  பள்ளிக்குப் போக வேண்டிய  குழந்தைகளுக்குத் தான் பொறுமையாக இதையெல்லாம் சாப்பிட நேரம் இருப்பதில்லை.

Friday, December 6, 2013

லதா புராணம் 29 - 68

முகநூல் புராணங்கள் :)

நீயா நானா-வில் விவாதிப்பதற்கு நல்ல விஷயங்கள் இல்லை போலிருக்கு!

ஆண்களுக்கு மீசை தேவையா ரேஞ்சில் போய்க்கிட்டு இருக்கு!

சிங்கம் பார்ட் -3 - சிங்கங்கள் அதிரி புதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க

மீசை அரசியல் பயங்கரமா இருக்கு!

வருங்காலத்தில் யாரும் நான் மீசை வச்ச ஆம்பளை-ன்னு மறந்தும் கூட டயலாக் சொல்ல முடியாது, எழுதவும் முடியாது

லதா புராணம் #30



நேரத்தை ஒரு மணி நேரம் பின்னோக்கி வைக்க நேற்றிலிருந்து ஒரே குழப்பம்!

பசிக்கிறது ஆனால் நேரத்தைப் பார்த்தால் மதிய நேரம் கூட இல்லை.

இப்படியே இரவும் வந்து சீக்கிரமே தூக்கமும் வந்து விட்டது.

விடிகாலையில் எப்பொழுதும் போல் எழுந்திருந்துப் பார்த்தால் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது தூங்க ! ஹையா!!!!

வீட்டிலுள்ள கடிகாரங்களின் நேரத்தை சரி செய்து விட்டேன்.

ஆனால், உடல் கடிகாரம் தான் ஒத்துழைக்காமல் சதி செய்கிறது!

லதா புராணம் #31


பல நாட்கள் தீபாவளி விடுமுறையில் சென்றிருந்த சூரியனார் இனிப்புகள் உண்டு ஆனந்தத்தில் உள்ளேன் ஐயா என்று வசீகரிக்கவும் அவர் அழகில் மயங்கி வெளியில் வந்து பார்த்தவுடன் தான் அவருடைய விஷமம் புரிந்தது!!!

முகத்தில் அறைந்த குளிர்காற்று, அட லூசுப் பெண்ணே, பனிக்காலம் என்று மறந்தனையோ என்று சிரித்துக் கொண்டே சில்லிட கேட்கவும் தான் ...

நிஜத்திற்கு வந்தேன்

லதா புராணம் #32


இன்றும் வானத்தில் வசீகரா, Mr.Surya !

நேற்று வரை பச்சைப்பசேல் என்று இருந்த புல்வெளிகள் மாவு தெளித்தாற் போல் காலைப் பனியுடன்!

பூமாதேவி சொன்னாள் நம்பாதே, அந்தக் கள்ளனை

லதா புராணம் #33


என்ன தான் பளபள-ன்னு உடுத்தி,
தோள்ல பையை போட்டு
நகைக் கடைக்கு வந்தாலும்
அந்த இத்தூனுண்டு பர்ஸ்-க்கு
அடிச்சுக்குறவங்கள என்னன்னு சொல்றது ???

லதா புராணம் #34



உள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே --TMS 'கணீர்' குரலில் உருகி,

கேட்பவரையும் உருக வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நாள் முழுவதும் முருகன் பாடல்கள் தான்

லதா புராணம் #35



பள்ளி நாட்களில் திருப்பள்ளியெழுச்சி என்பது எவ்வளவு கடினம் என்பதை

வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் உணர முடியும் .

அலாரம் வைக்காமலே எழுந்திருக்கும் இவர்கள்

அம்மாவிடம் வந்து எழுந்திரு என்றால், அதே ஐந்து நிமிட பல்லவியை அம்மா சொல்லும் போது மட்டும்

கடுப்பாவது ஏனோ?

லதா புராணம் #36



கையால் பிசைந்து உருட்டி சாப்பிடும் சுகம்

முள்கரண்டியில் நாசூக்காக சாப்பிடுவதில் இல்லை

லதா புராணம் #37



குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிற

குழைந்த சாதத்தில் நெய் விட்டு பருப்பு போட்டு மேலாக்க ரசம் ஊத்தி கமகம-ன்னு இருக்கிற

அந்த சாப்பாட்டில இருக்கிற ருசி வேற எதுலயுமே கிடையாது. யம் யம் யம் ...

மைண்ட் வாய்ஸ் - இப்படி டேஸ்ட் பார்த்தே குழந்தை ஒல்லியாவும் ஊட்டி விடுறவங்க குண்டாவும் ஆயிடறாங்க

லதா புராணம் #38



இஞ்சிப் பால் குடிக்காமலே

இடை மெலிந்து

ஒய்யார நடைபோட்ட

ஒல்லிக்குச்சி தேவதைகள்

ஒரே நாளில்

குண்டு பூசணிக்காயாய் ....

.
.
.

குளிர்கால அங்கிகளின் உபயம்

லதா புராணம் #40


கண்ணுக்குக் குளிர்ச்சியாய்

வண்ண ஓவியங்களாய்

வீதிகளை அலங்கரித்து

ஜொலித்தவள் ...

இலைகள் உதிர்ந்து

கிளைகள் விறைத்து

பொலிவிழந்து

கருவாச்சிக் காவியமாய் ...

லதா புராணம் #41


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு
வா வா என்று
சொல்ல மாட்டேன்
போக மாட்டேன் ...

என்று அடம் பிடித்து இலைகள் உதிர்ந்த மரங்களின் வழியே

என் முன்னே பவனி வருகிறார், Mr.Surya

லதா புராணம்#42


ஒரு ஹிந்திக்காரன் இன்னொரு ஹிந்திக்காரனைப் பார்த்தா ஹிந்தியில பேசிக்கிறான் .

ஒரு மல்லு இன்னொரு மல்லுவைப் பார்த்த மலையாளத்தில பறையறான்.

ஒரு தெலுகுக்காரான் இன்னொரு தெலுங்கனைப் பார்த்தா தெலுங்கில் மாட்லாடுறான்

சில கொம்பு மொளைச்ச தமிழர்கள் மட்டும்

தமிழ்-ல எப்படி இருக்கீங்க-னு கேட்டா , I am fine, How are you? -னு பீட்டர் விடறது.

ஏன் ஏன் ஏன் தமிழ் -ல பேசினா குறைஞ்சா போய்டுவீங்க ???

உங்களை எல்லாம் ...

லதா புராணம் #43
      


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

'ஆல்பனி' மலை மீது எதிரொலிக்கும்

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

லதா புராணம் #44



V வடிவில் குடும்பங்களாக பல வண்ணப் பறவைகள்

GPS இல்லாமலே

நகரம் விட்டு நகரம்

நாடு விட்டு நாடு

கண்டம் விட்டு கண்டம்

வானில் பறக்கும் காட்சி

சொல்லாமல் சொல்லும்

குளிர்காலம் வந்து விட்டது என்று ...

லதா புராணம் #45


நேற்றிரவு வாயு பகவானுக்கும்,

வருண பகவானுக்கும்

நடந்த யுத்த கலவரத்தைப் பார்த்து

இன்று காலை

அச்சத்தில் சூரிய பகவான்

லதா புராணம் #46


வருண பகவான், சூரிய பகவான், வாயு பகவான், அக்கினி பகவான் --சரி.

பனிக்கு எந்த பகவான்?

லதா புராணம் #47


அதிகாலையில் சூரியனைத் தேடினால்

அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக -னு

பாடலாம் அப்படி கருமேகங்களுக்கிடையில் பளிச்சென்று அழகு முகம் காட்டிச்

சந்திரன் காலை வணக்கம் சொல்ல

சூரிய விடியலுக்காக காத்திருக்கிறேன்

லதா புராணம் #48


நீல நிற வானில்

சிறகுகளை விரித்து

தனிக்காட்டு ராஜாவாய்

வலம் வரும்

உள்ளங்கவர் கள்வன்

ஆதித்யன் !

லதா புராணம் #49


அனைவரின் முகங்களிலும்
திருப்தியையும்,
மகிழ்ச்சியையும்
தரும் கிழமைகளில்
சிறப்புடையது

வெள்ளிக்கிழமை !!!

லதா புராணம் #50


சூடா டீ வேணும்-னு கேட்டு வாங்கி

ஊதி ஊதி ஆத்தி

குடிப்பதில் தான் சுகமே!!!

--இணையத்தில் படித்தது 


அம்மா எழுந்திரு

அம்மா பசிக்குது

லீவு நாட்களில் நான் கேட்கும்

சுப்ரபாதம் !







கரண்டியும் கையுமாகவே

காட்சி தருகிறேன் போல ...


லதா புராணம் #51


சில நாட்களுக்கு

கூட்டுக்குத் திரும்பி

தாய்ப் பறவையின்

சிறகுகளில் ...

லதா புராணம் #52


கண்ணைக் கூசவைக்கும்

சூரியன்

உப்பளமா என்று யோசிக்க வைக்கும்

பனிக்குவியல்

உடல் ஊடுருவ காத்திருக்கும்

கடுங்குளிர் ...


இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் :)


லதா புராணம் #53


புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது ...

லதா புராணம் #54
நித்தின் : இன்னைக்கு என்ன சட்னி, அம்மா?

நான்: வெங்காய சட்னி!!

நித்தின்: எது, எனக்கு ரொம்ப பிடிக்குமே, அதுவா???

நான்: ஆமா, அதே தான். அந்த மிக்ஸி-ய எடு.

நித்தின்: எங்கே இருக்கு?

நான்: அங்கே தாண்டா ...

நித்தின்: எங்கே??(அவன் கண் முன்னால் தான் இருந்தது )

நான்: டேய், அது தாண்டா, கண்ணு முன்னாடியே இருக்கு. தெரியலையா???

நித்தின்: oh !! Mom this is called blender in அமெரிக்கா. Dont say 'mixie ', okay ???

நான்: சுட்டுப் போட்டாலும் blender-னு வாயில வராது. நான் mixie-ன்னு சொன்னா நீ தான் அது blender-னு புரிஞ்சுக்கணும், சரியா ?

ஹ்ம்ம்...

அம்மைக்குப் பாடம் சொல்லும் சுப்பையா

லதா புராணம் #55
நேற்றிரவிலிருந்து தன் மனக்குமுறலை
கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது
வானம் !!!

லதா புராணம் #56
காலையில் இருந்தே

வெறிச்சென்றிருக்கிறது

வீடும், மனமும் ...

தென்றல் 'அவள்'

சென்று விட்டதாலோ???



லதா புராணம் #58
பலருக்கும் நாளைய ராசி - செலவு

என்று இருக்க வேண்டும்

Enjoy ThanksGiving week sale

லதா புராணம் # 59
புத்தம் புது காலை

பொன்னிற வேளை ...

வானில்

செங்கதிர்களை பரப்பி

ஆதவன்

லதா புராணம் #60
காலை தவத்தை

கலைத்தால்

கடும் சாபத்துக்கு உள்ளாக நேரிடும்

காத்திருந்தார்கள் ...

கண்மணிகள்

லதா புராணம் #61
பேந்த பேந்த முழித்து,

காதலியிடம் காதலைச் சொல்ல முடியாமல்

வாய் வரை வந்து பின் மௌனியாகி ...

தவித்த தெத்துப்பல் மைக் மோகன், முரளி, இப்போ யார்?
.
.
மைண்ட் வாய்ஸ் - ஹிக்கும் ! ரொம்ப அவசியம்.

லதா புராணம் #62
 
மயக்கமாகவும்

கலக்கமாகவும்

குழப்பமாகவும்

இன்றைய கதிரவன் !

லதா புராணம் #63
அழகென்ற சொல்லுக்கு முருகா ...
.
.
.
.
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா ...
.
.
.
.
மனிதன் சக்திக்கு எட்டாத உருவமே முருகா ...




--TMS தானும் உருகி நம்மையும் உருக வைக்கிறார் !!!



லதா புராணம் #64
கதிரவனைப் பார்த்து

காலை விடும் தூது ...

இன்று மதியத்திற்குப் பிறகு

வானில் வலம் வருவார் போல

லதா புராணம் #65
உலகிலேயே அதிக முறை நடித்துக் காட்டப்பட்ட நாடகம் - வயித்து வலி

#பள்ளி குழந்தைகள்

படித்ததில் பிடித்தது

ஹி ஹி ஹி ஹி! நானும் அப்படித் தான் ஒரு காலத்தில் ...
மலையின் பின்னணியில்
'தக தக' தங்க
சூரிய உதயம் !

இனிய காலைக் காட்சி
இந்த பனிக் காலத்தில் !

அபிராமி, அபிராமி!!

லதா புராணம் #66
'சில்'லென்று

கன்னங்கள் சிவக்க

முத்தமிட்டுச் சென்றது

பனிக்கால குளிர் தென்றல்

லதா புராணம் #67
மழையா ?

பனியா ?

பனிமழையா ?

பட்டிமன்ற விவாதம்

'வான்' டிவி- யில்

லதா புராணம் #68
       
   
            

Sunday, December 1, 2013

திக்....திக்...திக் ...6

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.

அம்மா, நான், என் மகள் என்று மூன்று தலைமுறையும் ஷாப்பிங் போய் விட்டு வரலாம் என்று மதியம் மூன்று மணியளவில் கிளம்பினோம். என் மகள் பின் சீட்டில் அமர, அம்மாவும் நானும் முன்னால் அமர்ந்து கொண்டோம். வெட்டிக் கதைகளைப் பேசி சிரித்துக் கொண்டே மால் இருக்கும் இடத்தின் அருகில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த போக்குவரத்தில் ஐக்கியமானோம்.

நல்ல இடைவெளி விட்டு என் முன்னால் ஒரு கார் போய்க் கொண்டிருக்க, 'டமால்' என்ற சத்தத்தில் எங்கள் கார் ஒரு தூக்கு தூக்கிப் போட்டது. எங்கிருந்தோ ஒரு கார் எங்களை இடித்து விட்டுச் 'சர்'ரென்று டயர் வெடித்து சிறிது தூரத்தில் போய் நிற்க, பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஸ்தம்பித்து முன்னாடியும் பின்னாடியும் பார்க்க...

சில நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பதட்டத்துடன் என் மகளைப் பார்த்து உனக்கு ஒன்றும் இல்லையே என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க அவளும் அம்மா, உனக்கு ஒன்றும் இல்லையே என்று என்னைத் திருப்பிக் கேட்க, மிரண்டு போய் உட்கார்ந்திருந்த அம்மாவிடம், அம்மா உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பயத்துடன் நான் கேட்க, அம்மாவும் மெதுவாக கழுத்து தான் வலிக்கிற மாதிரி இருக்கு என்று அதிர்ச்சியுடன் சொல்ல ...

அதற்குள் பெட்ரோல் வாசனை வேறு. சரி, இறங்கிப் போய் பார்க்கலாம் என்றால் நடுரோட்டில் இரண்டு பக்கமும் வண்டிகள் 'ஐயோ பாவம்' என்று எங்களைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்று கொண்டிருந்தது.

பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் மெதுவாக வேறு பாதையில் போக ஆரம்பிக்க, ஒரு வயதானப் பெண்மணி மெதுவாக என்னை நோக்கி வர, இந்த வயசில நீ வெளியே வரலைன்னு யாரு அழுதா, ராகுகாலம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே நானும் இறங்க, என் வண்டிச்சக்கரம் உடைந்து எனக்குப் பின்னால் இருந்த கதவு முழுவதும் சொட்டையாகி எனக்கு வந்த கோபத்திற்கு ஓங்கி அந்தப் பெண்மணியைப் போட்டு ...

I am sorry, I am sorry , I din't see you என்று சொல்லும் பொழுது கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நகத்தைக் கடித்துக் கொண்டே நடு வீதியில் நிற்க, கல்லூரியில் படிக்கும் இளைஞன் அவர் வண்டியை ஓரத்தில் நிறுத்தி தீயணைப்பு வண்டிக்கும்,  காவல்துறைக்கும் போன் செய்தபடியே நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

தான் பகுதி நேரத் தீயணைப்பு வீரர் என்றும் சிறிது நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே(5 நிமிடத்திற்குள்) 'சொய்ங் சொய்ங்' என்று  இரண்டு மூன்று தீயணைப்புவண்டிகளும்,  போலீஸ் கார்களும், அவசர மருத்துவ சேவை வண்டிகளும் என்று ஹாலிவுட் பட ஸ்டைலில் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்!

என்னிடம் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று ஒருவர்கேட்கும் பொழுதே நான் என் அம்மாவை கவனியுங்கள் அவர் தான் கழுத்து வலிக்கிறது என்று சொன்னவுடன் அம்மாவிடம் கழுத்தை அசைக்காமல் அப்படியே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி விட்டு, ஒரு காலரையும் மாட்டி ஸ்ட்ரெட்சரில் அவசர சிகிச்சை வண்டிக்குள் அழைத்துச் சென்று விட்டார்கள். என் மகளிடமும் இன்னொரு மருத்துவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் அவள் பற்களுக்கான dental braces போட்டிருந்ததால் அவளுக்கும் சில டெஸ்டுகள் செய்தார்கள்.

அதற்குள் போலீஸ் வந்து விசாரிக்க, நானும் தேமே -ன்னு இந்த லேன்ல போயிட்டு இருந்தேன். எங்கிருந்தோ இருந்து சடார்-னு வந்த அந்த வண்டி இடிச்சிருச்சு என்று சொல்ல, அந்தப்  பெண்மணியும் நான் இந்தக் காரை கவனிக்கவில்லை எப்படி இது நடந்தது என்று தெரியவில்லை என்று படபடப்புடன் சொல்லவும், அவர் ஒன்றும் பயப்படாதீர்கள். நீங்கள் இரண்டு லேன்-களை  கடந்து வந்திருக்கிறீர்கள் என்று அவர் செய்த தப்பைச் சொல்லி விட்டு, இருவரும் உங்கள் இன்சூரன்ஸ், லைசென்ஸ் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டுச் சென்று விட்டார்.

என் மகள் பாட்டியுடன் இருக்க, நான் என் கணவரை அழைக்க, அவரும் இப்பத் தான் போனீங்க அதுக்குள்ள என்ன என்று கேட்க, ம்ம் உங்க ஆசைக்கார் 'டமால்' ஆயிடுச்சு. வந்து எங்களை கூட்டிட்டுப் போங்க என்றவுடன் அவரும் பதட்டமாகி மகனுடன் வந்து சேர்ந்தார்.

 நானும் அதே சூட்டில் இன்சூரன்ஸ் கம்பெனியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல, அவர்களும் அந்த பெண்மணியின் தகவல்களையும் வாங்கிக் கொண்டார்கள். அவருடைய லைசென்சில் அவருடைய வயதும் என் அம்மாவின் வயது என்று தெரிந்தவுடன் அவர் மேல் எனக்குப் பரிதாபம் வந்து விட்டது. இந்த வயதிலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருப்பார் போலிருக்கு. பக்கத்து ஊரில் இருந்து வந்திருக்கிறார்.

தீயணைப்பு வீரர்கள் வந்து எங்கள் இரண்டு வண்டியையும் எடுத்துக் கொண்டுப் போக towing கம்பெனியிலிருந்து ஆட்கள் வருவார்கள், உள்ளே இருக்கும் சாமன்களை அப்புறப்படுத்தி விடுங்கள் என்று சொல்ல, ஒரு வழியாக இந்தக் காரிலிருந்து என் கணவர் வண்டிக்கு எல்லாம் போக...

உடைந்த கண்ணாடித் துண்டுகளை தீயணைப்பு வீரர்கள் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டார்கள். நானும் போலீசிடம் இருந்து ரிப்போர்ட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். அந்தப் பெண்மணி மீண்டும் வந்து 'I am really sorry , hope your mom feels better' என்று சொல்லி விட்டு என்னருகிலேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்த கோபம் எனக்கு அப்போது இல்லை. அவரைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருந்தது.

ஒரு வழியாக ஆம்புலன்சில் என் அம்மாவுடன் நான் செல்ல, வரிசையாகப் பல டெஸ்டுகள் செய்துகொண்டே 'உய்ங் உய்ங்' என்ற சத்தத்துடன் சுழல்விளக்கு சுழல ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தோம்.

எமெர்ஜென்சி என்றவுடன் ஒரு பதட்டம். பெயர் என்ன, என்ன நடந்தது லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் கேள்விகள். உடனே, எக்ஸ்-ரே, ஸ்கேன் என்று ரூம் மாறி மாறி ஒரு வழியாக முடிந்தாலும் வீட்டுக்குப் போக முடியவில்லை. இன்னும் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்து விட்டுத் தான் அனுப்புவோம் என்று சொல்ல என் அம்மாவிடம், என்ன அமெரிக்க ஆஸ்பத்திரி பிடிச்சிருக்கா , இதைத் தான் பார்க்காம இருந்த இப்ப இதையும் பார்த்துட்ட என்று சொல்லி சிரித்துக் கொண்டே அங்கிருக்கும் நர்சுகளும் வந்து எல்லாம் நார்மல் போகலாம் என்றவுடன் வீட்டுக்கு வந்து சேரும் பொழுது இரவாகி விட்டது.

என் கணவருக்கு அவருடைய விருப்பமான கார் இப்படியாகி விட்டதே என்று கவலை.  எனக்கு பிரச்னையில்லாமல் நாங்கள் உயிருடன் திரும்பி வந்தோமே  என்று திருப்தி. அன்று என் மகன் மட்டும் எங்களுடன் வந்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது.

இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து உங்கள் யாருக்கும் சேதம் இல்லாதது மிக்க மகிழ்ச்சி. ஆஸ்பத்திரி செலவு முழுவதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், கவலை வேண்டாம் என்று சொல்லி இரண்டு நாள் வாடகைக் காருக்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு சண்டை போட்டு முறையாகச் சேர வேண்டிய பணம் வாங்கி வண்டி வாங்குவதற்குள் ஒரு வழியாகி விட்டது.

இன்றும் அந்த இடத்தை கடந்து செல்கையில் 'திக் திக் திக்' தான்!


அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...