Sunday, December 29, 2013

சென்னையில் ஒரு மழைக்காலம்

போன வருடம் இதே நாளில் ஊருக்குச் சென்று வந்த படங்களைப் பார்த்து விட்டு அதே நினைவுடன் தூங்கியதாலோ என்னவோ காலையில் எழும் பொழுது எங்கிருக்கிறோம் என்று ஓர் சிறு குழப்பம். இந்த மாதிரிச் சமயங்களில் எப்பொழுதும் ஊரில் இருப்பது போலவே இருக்கும். சிறு புன்முறுவலுடன் மனம் அசை போட,

போன வருட டிசம்பரில் புயல் காரணமாக மழை கொட்டிக் கொண்டிருக்க சென்னையில் விமானம் இறங்குவதில் தாமதம். தரையிறங்கியவுடன் பெட்டிகள் மழையில் நனைந்து எந்த கோலத்தில் வரப் போகின்றனவோ என்ற கவலை. அதிகாலை 1.30 மணி.

தம்பி வந்து நீண்ட நேரம் காத்திருப்பானே என்று யோசித்துக் கொண்டே  மக்கிப் போன வாசனை வரும் என்று எதிர்பார்க்க இப்பொழுது விமான நிலையத்தில் நடந்து கொண்டிருக்கும் புதுப்புது கட்டிட வேலைகளின் காரணமாக வளைந்து வளைந்து சிறு குப்பைகளை நடந்து பாஸ்போர்ட் , என்ன என்ன நாட்டுக்குள் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்ற அறிவிப்புப் பத்திரம் என கையில் வைத்துக் கொண்டு  நீண்ட வரிசையில் ஐக்கியமானோம் நானும் என் மகளும்.

பாதி தூக்கத்தில் எழுந்த மாதிரி அனைவரின் முகங்களும். குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

வெளிநாட்டவர்களுக்கான வரிசை, இந்தியர்களுக்கான வரிசை என்று நான்கு வரிசைகள். கல்லூரி மாணவர்கள் போல் தெரிந்த அசட்டையாக ஏனோ தானோவென்று மேல் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு நின்ற வெளிநாட்டவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது ம்ம்ம்...இந்த மாணவர்கள் நிறைய கற்றுக் கொண்டு ஊர் திரும்புவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் முறை வந்த பொழுது ஒரு கடுவன் பூனை அதிகாரி அர்த்த சாமத்தில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து உட்கார வைத்து வேலை வாங்குவது போல் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
போட்டோவையும், முகத்தையும் பார்க்கும் போது தெரிந்த ஒரு மத்திய அரசு அதிகாரித்தனம் ! ஸ்டாம்ப் பண்ணும் போது அவர் அடிக்கிறதைப் பார்த்தால் ஒரு அலட்சியம். ம்ம்ம்...அரசு அதிகாரிகள் என்றால் இப்படித் தான் என்ற தோரணையில். எப்படியோ இவர்களை எல்லாம் கடந்து பெட்டிகளை எடுக்க வந்த இடத்தில் மேடம் ஹெல்ப் வேண்டுமா என்று பவ்யமாக ஊழியர்கள். இல்ல, நானே எடுத்துக்கிறேன் என்றவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஒரு வழியாக பெட்டிகளும் வந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் ஏதோ தங்கக்கட்டிகள், போதை மருந்து கடத்துபவர்களைப் போல் படப்படப்புடன் நோட்டமிட்டு கொண்டிருக்க, அவர்களையும் தாண்டி சிங்காரச் சென்னையின் 'குளுகுளு' மழைக்காற்றைச் சுவாசிக்க ம்ம்ம் அந்த சுகமே அலாதி தான்!
பழகிய மொழி பேசும் மனிதர்கள், கண்கலங்கி உறவினர்களை அனுப்ப வந்தவர்கள், ஆவலுடன் மகிழ்ச்சியாக வரவேற்க வந்த நண்பர்கள், குடும்பங்கள், பெயர் அட்டைகளைத் தூக்கி கொண்டு வரவேற்கும் வண்டி  ஓட்டுனர்கள், தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கூட்டம் என்று பலவிதப் பட்ட மனிதர்கள் பல வித உணர்ச்சிகள் பொங்க !!!

தம்பியும் எங்களைப் பார்த்தவுடன்  கையசைத்து விட்டுப் பெட்டிகளை  எண்ணி விட்டாயா, என் மகளைப் பார்த்து நல்லா வளர்ந்துட்டே, உங்கம்மா மாதிரியே இருக்கே  பேசிக் கொண்டே சாப்பிடலாமா என்று கேட்டு விமானநிலையத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வாடகைக்காருக்குத் தொலை பேசி அவனுடைய காரையும் எடுக்க மழைச் சாரலில் நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

விமானநிலையம் நிறைய மாறி விட்டது! எப்பொழுதும் கையேந்திபவன் ஸ்டைலில் ஒரு இட்லிக்கடை- இட்லி, சட்னி, சாம்பார் மிக நன்றாக இருக்கும் அது இப்பொழுது மிஸ்ஸிங் L அந்த நடு இரவிலும் கலகலவென்றிருந்தது அந்த இடம்!

பொதுவாக ஆகஸ்ட் மாதம் வரும் பொழுதெல்லாம் அதிகாலையில் வந்து இறங்குவோம். வெளியில் வந்தவுடன் விடிய ஆரம்பிக்கும் நிலையில் LR ஈஸ்வரியின் குரலில் ஏதாவதொரு மாரியாத்தா பாடல் ஒலிக்க சீரியல் விளக்குகளுடன் பெரிய பெரிய கருமாரியம்மன் அலங்காரங்களைக் கடந்து தெருவில் நடைபாதை ஓரமாக படுத்திருப்பவர்களையும், தள்ளுவண்டிகளையும், நாய்கள் கூட்டத்தையும் என்று பலரையும் கடந்து போயிருக்கிறோம்.

இப்பொழுது மழை வந்து தெருவோரக் காட்சிகள் எல்லாம் மிஸ்ஸிங். நேராக தி.நகரில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு வழிதேடிச் செல்ல, நடுவில் ரோந்து போகும் போலீஸ் காரும் எங்கே இந்தநேரத்தில் என்று டிரைவரைக் கேட்க, அதற்குள் தம்பியின் காரும் வர, ஹோட்டல் பெயரைச் சொன்னவுடன் அவர்களே வழியும் சொல்லி பத்திரமாக போங்க என்று சொல்லவும், பரவாயில்லையே ரோந்து எல்லாம் போறாங்களே என்று வியந்து கொண்டே வந்து சேர்ந்தோம். நாட்டு நடப்பைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார் டிரைவர். ஹ்ம்ம். பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்! கல்லூரிப் படிப்பு முடித்ததாக சொன்னார்!

ஹோட்டலில் ஒரு சிறு பையன் துறுதுறுவென பெட்டிகளை எடுத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்து விட்டு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு செட்டிலாகும் போதே மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பாவம் தம்பிக்குத் தான் பெங்களூரிலிருந்து காரோட்டி வந்து எங்களுக்காக காத்திருந்ததில் பயங்கர அசதி. தம்பி சிறிது நேரத்தில் தூங்கி விட, நானும் மகளும் பேசிக் கொண்டே தூங்கி விட்டோம்.

'டான்' என்று காலை ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்து நாங்கள் இருவரும் எழுந்து விட்டோம். ஜன்னல் வழியே வெளியில் பார்த்தால் ஒரே அமைதி. கொஞ்ச நேரம் UNO கார்டு விளையாடி விட்டு குளித்து முடித்து ஆறு மணிக்கே ஊரைச் சுற்ற தயாராகி விட்டோம். புரண்டு படுத்த என் தம்பியும் என்ன இது இப்படி ரெடியாகி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று சொல்ல, நீ தூங்கு என்று சொல்லி விட்டு, எப்போது காலை உணவு என்று வரவேற்பு அறைக்குப் போன் போட , அவரும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் ரெடியாகி விடும் என்று சொல்ல, மகளும் வெளியில் போய் விட்டு வரலாமா என்று கேட்க , அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சரியான நேரத்திற்கு கீழிறங்கிச் சாப்பிடச் சென்றோம்.

அப்போது தான் சுடச்சுட வடை, இட்லி, பூரி, மசால் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டி,வெண்ணெய் , கார்ன்ப்ளேக்ஸ் , பால் இருக்க, நல்ல சுவையான காலை உணவு. மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே இரு வெள்ளைக்காரர்களும் சாப்பிட வர சூடான காபியும் எடுத்துக் கொண்டு கிளம்ப, தம்பியும் வந்து சேர்ந்தான். அவனும் சாப்பிட்டு முடிக்க சிறிது நேரம் அறையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மழையில் எப்படி தி.நகர் போவது என்று யோசிக்க, தம்பியும் நான் உங்களை சென்னை சில்க்ஸ் அருகில் இறக்கி விட்டு விட்டு என் வேலைகளையும் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி அதிகாலையில் இறக்கி விடும் போது கடைகள் திறக்கக் கூட இல்லை. கூட்டமில்லாத தி.நகர் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மப்பும் மந்தாரமுமாக எந்நேரத்திலும் மழை  வந்து கொட்டலாம் என்று ரமணன் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வானம் தயாராக!

கடை வாசலில் வேலை செய்யும் ஆட்களும் கடைத்திறப்பிற்காக காத்திருந்தார்கள். சிறிது நேரம் நடப்போமே என்று நடந்து விட்டு வரும் போது கடைகள் எல்லாம் திறந்து பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்க வாடிக்கையாளர்களும் இருந்தார்கள். கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமானோம்.

வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது வாங்க, இந்த பக்கம் போங்க அந்த பக்கம் போங்க என்று சொல்வதோடு சரி. புதிதாக தங்க, வைர ஷோரூம்கள் திறந்திருக்கோம். சும்மாவாச்சும் பாருங்க என்றவர்களிடம் எதுவும் வாங்கப் போவதில்லை என்றாலும் அனத்தியதால் நாங்களும் போய் ஒன்று விடாமல் போட்டுப் பார்த்து நிம்மதியாகி ரொம்ப நன்றி என்று சொல்லி விட்டு, துணிகளை எடுத்துக் கொண்டு போத்தீஸ், GRT முடித்து விட்டு வெளியில் வரும் போது தூறல் ஆரம்பித்து விட்டது. மதிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது!

மழைத் தூறலில் நடப்பது சுகமாக இருந்தாலும் உடம்புக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்தில் ஒதுங்கி ஒதுங்கிப் போக வேண்டியிருந்தது!

இந்தத் தெருவில் ஒரு கடையில் பெங்காலி இனிப்புகள், சமோசா சூப்பராக இருக்கும். கடை எந்தப் பக்கம் என்று தெரியாமல் சிறிது நேரம் அலைந்து விட்டு மழை அதிகமானவுடன் ஒரு காபிக் கடையில் ஒதுங்கினோம். ரத்னா கபே போக முடியவில்லையே என்ற நினைத்துக் கொண்டே பளிச்சென்று பூச்சூடி கடைகளுக்கு வந்தப் பெண்கள், குழந்தைகள், அவர்கள் துணைக்கு ஆண்கள், நடைபாதையோரக் கடைகளில் வெள்ளரி, மாங்காயைச் சீவி மிளகாய்ப் பொடியைத் தூவி விற்றுக் கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். வாங்கிச் சாப்பிடலாம் போல இருந்த ஆசையை அடக்கி விட்டு சிறிது தூரம் போனால் ஒரு பாலத்தின் கீழ் பலாப்பலச் சுளைகளை நேர்த்தியாக வெட்டி எடுப்பதையும், தேங்காயை அழகாக நறுக்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது தான் தெரிந்தது தூரத்தில் பெண் காவலர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று. நாங்க தான் ஒன்று விடாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோமே!

காய்கறி, பழங்கள் விற்கும் கடைகளையும், திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி என்று அந்த தெருவில் மட்டும் இரண்டு மூன்று கடைகள். பிரியாணி கடைகளுக்கே உரிய அமைப்பு, முன் வரிசை முட்டை வரவேற்க, பரட்டோ மாஸ்டர் மாவை பிசைந்து அடுப்புடனும், மாவுடனும் மல்டி டாஸ்கிங் பண்ணிக் கொண்டிருக்க, அவர்களையும் கடந்து போனோம்.

மழை நீர் சாலைகளில் ஒதுங்கி அதனுள் நடந்து போகும் கூட்டம், பல விதமான சிறு கடைகள் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே கேள்விகளையும் கேட்டுக் கொண்டு வந்த மகளுடன் சாலையோரக் கடைகளில் பொருட்களையும் வாங்கிக் கொண்டே போனது நன்றாக இருந்தது.

மழை தீவிரமானவுடன் ஆட்டோவில் ஏறி பாண்டி பஜாருக்குப் போனோம். அங்கு இறங்க முடியாத அளவிற்குத் தண்ணீர் வெள்ளம்! சிறிது நேரம் அங்கும் சில கடைகளுக்குச் சென்று விட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம். நடுநடுவில் தம்பியும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டே இருந்தான்.

வந்தவுடன் மதிய உணவிற்குச் சொல்லி விட்டு காத்திருக்க, தம்பியும் வந்து சேர்ந்தான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மாலை நேரம் நெருங்க மெதுவாகத் தூக்கம் வருவது போல் இருக்க, பக்கத்தில் பெருமாள் கோவிலுக்குப் போகலாம் என்று கிளம்பி விட்டோம். மழை இல்லையென்றால் நன்கு நடந்து சுற்றிப் பார்த்திருக்கலாம். கோவிலின் முன் கமகமக்கும் பூக்கடைகள். பூக்களை வாங்கி கொண்டு சுவாமி தரிசனம் முடிந்து பழங்கள் வாங்கலாம் என்று அருகிலிருந்த பழக்கடைக்குச் சென்றோம்.

சீதாப்பழம், சப்போட்டா, வாஷிங்டன் ஆப்பிள் , ரெட் ஆப்பிள் கூட இருக்கு மேடம் என்றவரைச் சிரித்துக் கொண்டே கடந்து விதவிதமான வாழைப் பழங்களை 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருந்த மகளும் மலை வாழைப்பழம் கிடைக்குமா என்று கேட்க, மதுரையில் பாட்டியிடம் சொல்லி வாங்கலாம் என்று சொல்லி விட்டுப் பிடித்த பழங்களை வாங்கிக் கொண்டு நடையை கட்டினோம்.

அங்கிருந்த விதவிதமான வாழைப்பழங்கள், தெருவில் நாங்கள் கண்ட காட்சிகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள், இளம் பெண்களைப் பற்றியும் வாய் ஓயாமால் பேசிக் கொண்டே வந்தாள்.



நாங்கள் பழங்கள் சாப்பிட்டு விட்டுத் தூங்க ஆயத்தமாக தம்பியும் இரவு உணவை முடிக்க, தாய் நாட்டில் இருந்த திருப்தி, பயணம் செய்த களைப்பு, அடுத்த நாளிலிருந்து கோவில்களுக்குப் போகப் போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பு, காணாத மழை, சொந்தங்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆனந்தம், 2013 வருடப்பிறப்பு  நெருங்கும் நாள் என்று எல்லாம் ஒரு இன்ப மயமாக அன்றைய தினம் மறக்க முடியாத நாளாகி விட்டது.



அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...