Thursday, December 4, 2014

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...

ஒவ்வொரு வருடமும் பெரிய கார்த்திகை அன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவிலும், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோபுரமும் அதிக அளவில் மனதில் வலம் வரும்.

தீபாவளிக்குப் பிறகு வரும் கார்த்திகை மாதம் தீபஒளியுடன் வலம் வருவது மட்டுமில்லாமல் முருகன், ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து பயபக்தியுடன் விரதம் ஆரம்பிக்கும் இனிய காலமும், எங்கும் பக்திப் பாடல்கள் ஒலிக்க மனதை மயக்கும் தெய்வீகமான காலைப் பொழுதுகளும் கூட!

இம்மாத திங்கட்கிழமைகளில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது போல் முருகன் இருக்கும் கோவில்கள் எல்லாம் முருக பக்தர்களால் நிரம்பி வழியும். திருப்பரங்குன்றம், அழகர் கோவில், மேலமாசிவீதி முருகன் கோவில்களுக்கு குடும்பம் குடும்பமாக தூக்குச்சட்டிகளில் பால் எடுத்துக் கொண்டுச் செல்லும் பக்தர்களையும் காண முடியும்.

கார்த்திகை மாத திங்கட்கிழமை மாலை நேரங்களில் வாசல் தெளித்து கோலமிட்டு, மண்விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டு வாசலை அலங்கரித்து விளக்கேற்றும் வைபவம் பலருக்கும் இனிமையான ஒன்றாக இருந்திருக்கும். தீபஒளியில் ஜொலிக்கும் வீடுகள் தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டு யார் வீட்டில் அதிக விளக்குகள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து எந்த வீட்டில் அழகான டிசைனில் வைத்திருக்கிறார்கள் என்று வரை பார்க்க ஆவலாய் இருக்கும்.

பாட்டியுடன் அடிக்கடி சென்ற கோவில்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. படித்த கல்லூரியும், வேலை பார்த்த இடமும், சில வருடங்கள் வாழ்ந்த வீடும் கோவிலின் அருகில் இருந்ததால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட!

இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல் அப்போது இல்லா விட்டாலும் சிறு வயதில் திருப்பரங்குன்றம் செல்வது ஏதோ மதுரையிலிருந்து வெகு தொலைவிற்குப் பயணம் செய்வது போல் இருந்தது.

மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கூட்டத்துடன் வரும் பேருந்துகளைத் தவிர்த்து கூட்டம் அதிகமில்லாத பஸ்சில் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டே குடும்பத்துடன் சென்ற காலங்கள் எல்லாம் இனியவை!

வழியில் கண்டிப்பாகத் தெரிந்தவர் குடும்பம் ஒன்றாவது ஏறிக் கொள்ள பேச்சுத் துணையுடன் பிஸியாக இருக்கும் தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலைய நிறுத்தங்களில் ஏறும் கூட்டத்தினரையும் சுமந்து கொண்டு போகும் பஸ்சில் பயணிப்பதே சுகமாக இருக்கும். அன்று குடியிருப்புகள் குறைவான மீனாக்ஷி மில், ஆண்டாள்புரம், பைக்காரா தாண்டியவுடன் மரங்களுடன் கூடிய பசுமலை ஏரியா, தியாகராஜர் காலனி, கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை நிலங்கள், தியாகராஜர் பொறியியல் கல்லூரி என்று ஒரு வழியாக கோவிலை வந்தடையும் பொழுது நிறுத்தத்தின் எதிரே அழகே உருவாய் மலைக்கு அடியில் நிற்கும் வேலைச் சுமந்த கோபுரம் மனதை கொள்ளை கொள்ளும்!

வெங்காயத்தாமரை நிறைந்த குளம், வெயிலுக்குகந்த அம்மன் கோவில், போலீஸ் ஸ்டேஷன், அதைச் சுற்றியிருக்கும் குடிசை வீடுகள், ரோட்டில் திரியும் ஆடு, மாடு, எருமை, கோழிகள், ஜட்டியுடன் மூக்கு ஒழுகிக் கொண்டே திரியும் குழந்தைகள், குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே சாவகாசமாக நடந்து செல்லும் பெண்கள், பீடி குடித்துக் கொண்டே நடு ரோட்டில் நின்று உரக்க பேசிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்று கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் ரசிக்கத்தக்க காட்சிகள் ஏராளம்!

இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும் வெட்டிவேர், கதிர்பச்சையின் மணம் கோவிலுக்குள் நுழையும் பொழுதே தெய்வீகமாக இருக்கும். பெண்கள் தவறாமல் வாங்கித் தலையில் சூடிக் கொள்வார்கள். முருக பக்தர்களோடு ஐயப்ப பக்தர்களும் சேர்ந்து கோவில்களில் 'ஜேஜே' என்று கூட்டமாக இருக்கும்.

பஸ் நிறுத்தத்திலிருந்து கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் அபிஷேகத்திற்குப் பால், அர்ச்சனைக்குத் தேங்காய், பழத்தட்டு, பூக்கள், பூமாலைகள் விற்றுக் கொண்டு கடைகள் பரபர' வென்றிருக்கும். அர்ச்சனைத் தட்டு வாங்கி அங்கேயே செருப்பும் போட்டு விட்டு படியேறும் போதே யாரவது ஒருவர் 'நங்'கென்று சிதறு தேங்காய் உடைக்க, அதைப் பொறுக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைத் தாண்டி உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் கருப்பண்ணசாமியை தரிசித்துவிட்டுத் திரும்பினால் வெண்ணை உருண்டைகளை விற்பவர், காளிக்கு வெண்ணை சாத்துங்க, வேண்டியதெல்லாம் நடக்கும், குறைகள் நீங்கும் என்று சொல்லியே விற்றுக் கொண்டிருப்பார். அதை வாங்கி பயபக்தியுடன் சாத்திவிட்டு (இப்பொழுது விடுவதில்லை என்று நினைக்கிறேன்) கோவிலுக்குள் போகுமுன் விநாயகர், துர்க்கை அம்மனையும் வணங்கி விட்டு, வழியில் இருக்கும் எலுமிச்சம் பழ விளக்குகளை கவனமாக கடந்து ஜொலிக்கும் கோவில் கடைகளை பார்த்துக் கொண்டே அர்ச்சனை சீட்டையும் வாங்கிக் கொண்டு தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே, பைசா வருமா, பழம் வருமா என்று திருநாமம் பூசிக்கொண்டு பக்தர்களை பார்த்துக் கொண்டே இருக்கும் யானையையும், குரங்குகள் கூட்டத்தையும் கடந்து சில படிகள் ஏறி கோவில் குளத்திற்குப் போகும் கூட்டம்.

வழியில் குருகுலத்தில் வருங்காலப் பட்டர்கள் கோரஸாக சுலோகங்களை மனனம் செய்து கொண்டிருப்பார்கள். கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். பெரிய மரம் ஒன்றின் நிழலில் நடந்து கொண்டே அந்த மலைக்கோவிலின் குளத்திற்குப் போய் மீன்களுக்குப் பொரி வாங்கித் தூவி விட, மீன் கூட்டம் துள்ளிக் குதித்து கொண்டு அதைச் சாப்பிட, சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பதும் எனக்குப் பிடித்தமான ஒன்று!

மூல சன்னிதானத்திற்குப் போக படிகளில் ஏறி முருகனின் சந்நிதியின் இடப்பக்கம் காத்திருக்க வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து முருகனை விரைவாகவோ காத்திருந்தோ பார்க்கலாம். அதிகக் கூட்ட நேரங்களில் மக்கள் வியர்க்க  விறுவிறுக்க முண்டியடித்துக் கொண்டு அச்சிறிய இடத்தில் நீ முந்தி நான் முந்தி என்று இடித்துக் கொண்டு செல்வதும் உண்டு! இந்தக் கோவில் மலையை குடைந்து கட்டியிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. முருகனின் வேலை மட்டும் எடுத்து அபிஷேகம் செய்வார்கள். எல்லோருடைய அபிஷேகப்பாலையும் கலந்து அரோகரா கோஷத்துடன் அபிஷேகம் செய்ய, மலையில் குடைந்த சந்நிதானம் தீப ஒளியில் அழகாக ஜொலிக்க பக்தர்களும் மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். அபிஷேகப் பால் சந்தனம், விபூதி வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அலங்காரத்துடன் வீற்றிருக்கும் துர்கை, விநாயகர், பெருமாள், சத்யக்ரீஸ்வரரையும் வணங்கி விட்டுப் படிகளில் இறங்கும் வழியில் தேவி அன்னபூரணியின் தரிசனமும் உண்டு. தனியாக அம்பாளுக்கு இருக்கும் சந்நிதானத்தில் தரிசனம் செய்து விட்டு, மீண்டும் படிகளில் ஏறி அங்கிருக்கும் நடராஜர், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஆசியுடன் படிகளில் இறங்க, உற்சவ மூர்த்தி வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் மண்டபம்.

நவக்கிரகங்களும், தனியாளாக அமர்ந்திருக்கும் சனி பகவானையும் தரிசித்து விட்டுத் திரும்புகையில் மயிலிறகால் ஒரு வயதானவர் சாமரம் வீச சுகமாக இருக்கும். அவருக்கு கொஞ்சம் காணிக்கையும் கொடுத்து விட்டு அகத்தியர், தன்வந்திரி, மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் முருகனையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் ஆற அமர உட்காருவோம்.

பிறந்த குழந்தையை முதன் முதலில் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்பவர்களும், நேர்த்திக்கடனை முடிப்பவர்களும் என பலரும் மாவிளக்கு பூஜை செய்து கொண்டிருப்பார்கள். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு மாவிளக்கு மாவு, தேங்காய், பழம் கொடுப்பார்கள். நெய்யில் ஊறிய பச்சரிசி மாவு, வெல்லத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு, அபிஷேகப் பாலை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து முடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறிது பாலை எடுத்துக் கொண்டு, கோவில் ஸ்டாலில் விற்கும் அப்பம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே அப்பா, அம்மா, பாட்டி கைப்பிடித்து மீண்டும் வீடு வந்து சேர, அன்றைய நாள் இனிதான ஒன்றாக இருக்கும் !


சிறு வயதில் குடுகுடுவென ஏறிய கோவில் இன்றோ கொஞ்சம் மூச்சு வாங்குகிறது!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

ஆல்பனி மலை மீது எதிரொலிக்கும்...






































































.

Sunday, November 30, 2014

அன்புள்ள அப்பா...

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும் அதே குழப்பம் எனக்கும். புகுந்த வீட்டில் மாமியார் கிடையாது. மாமனாரை எப்படி அழைப்பது? சரி, சம்பிரதாயப்படி மாமா அல்லது பாவா என கூப்பிடுவது என்று நினைத்திருந்தேன்.

கணவரின் அண்ணிகள் மாமனாரை அப்பா என்று அழைப்பதை பார்த்து எனக்கு ஒரே கவலை. என் அப்பாவை விட 20 வயது மூத்தவர். அவ்வளவு வயதான மனிதரைப் போல் எங்கள் குடும்பத்தில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. எனக்கு தாத்தா மாதிரி இருக்கிறார். இவரைப் போய் எப்படி அப்பா என்று அழைப்பது? அதுவுமில்லாமால் என் அப்பாவைத் தவிர யாரையும் அப்பா என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

ஆனா, என்ன பண்றது?

அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னம்மா, எப்படி இருக்கே? வேலை எல்லாம் எப்படிபோகுது? உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்கும் பொழுது பதில் சரியாகச் சொல்லி முடிக்க ஒரு குழப்பத்துடன் மாமா, பாவா... கடைசியில் மைண்ட் வாய்சில் அப்பா என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.

இதில் கணவருக்கு மிக்க வருத்தம். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகள்கள் அப்பா என்று கூப்பிடுவது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அண்ணிகளும் அப்படித் தானே கூப்பிடுகிறார்கள்? நீயும் அப்படியே கூப்பிட்டால் நன்றாக இருக்கும். அண்ணிகள் என் அம்மாவையும் அம்மா என்று தான் அழைத்தார்கள் என்றார்.

நானும், என் அப்பாவைத் தவிர யாரையும் என்னால் மனதார அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது. உதட்டளவில் அப்பா  என கூப்பிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நீங்கள் என் அப்பாவை என்ன அப்பா என்றா கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு விட்டு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். well, எனக்கு என் நியாயம்!

திருமணம் முடிந்த நான்கைந்து மாதங்களில் எங்களுடன் வந்து தங்க மாமனாரை மச்சினர் வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தோம். மச்சினர் வீட்டின் மாடியில் ஆபிஸ் இருந்ததால் அங்கு வேலை செய்ய வருபவர்கள், பிசினஸ் ஆட்கள் என்று பலருடனும் பேசி நன்கு நேரத்தைப் போக்கியவர். மாலையில் வாக்கிங் சென்று ஒரு பேக்கரி கடையில் அவர் வயதையொத்த நண்பர்களுடன் பேசி விட்டு அவருக்குப் பிடித்த சமோசா , கேக் என்று மாலைப் பொழுதுகளை போக்கி விட்டு இருந்தவருக்கு எங்கள் வீட்டில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

நான் என்ன செய்ய முடியும்? பார்க்க எனக்குத் தான் வருத்தமாக இருந்தது.

என் ஆரம்ப கால சமையல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் வேறு அவருக்கு :(`

அரசியல் என்று பேச்சு வந்தால் காங்கிரஸ் தான் என்று மாமனார் ஆரம்பிக்க, உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்தியா உருப்படற மாதிரி தான் என்று அரிவாள் சுத்தியல் எடுக்காத குறையாக மகனுக்கும் அவருக்கும் வாக்குவாதம். குடும்ப பிசினஸ் பற்றி பேச்சு வந்தால் அதற்கும் ஒரே கலவரம். சரி, நீங்க வேலைக்கு கிளம்புங்க . காலணா பெறாத விஷயத்துக்கெல்லாம் இப்பிடியா? எப்ப பாரு வெட்டி பேச்சு பேசிக்கிட்டு என்று கணவரை அவசரஅவசரமாக வெளியில் அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

இவன் இப்படித்தாம்மா! ஆ ஊன்னா கோபம் வந்துடும்(ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்ங்கறது இது தான் போல ... ) நீ தான் நல்ல வார்த்தை சொல்லி அவன் கோபத்தை குறைக்கணும். (ம்ம்ம். அதுக்கு நான் தான் உங்களுக்கு கெடைச்சேனா ??)

ஓரிரு நாட்கள் அப்பாவிடம் பாராமுகம் தொடரும். அச்சமயங்களில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மகள் என்று ஒருத்தி இருந்திருந்தால் அவர் நிலைமை இப்படி இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி டீ போட்டு வைப்பது, கீரை வாங்குவது , வீட்டு வேலைக்காரம்மா வந்தால் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைப்பது என்று வேலைகளை அவர் செய்த போது எனக்குப் பதறி விட்டது. என் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவு தான்! நீங்கள் செய்யாதீர்கள் .....அப்பா(மைண்ட் வாய்சில்) என்று சொன்னாலும் காலையில் எழுந்திருக்க என்னால் முடியவில்லை. கருவுற்றிருந்த நேரம். மார்னிங் சிக்னஸ் :(

அவரோ, நீ சின்ன பொண்ணு. உன் உடம்பை பார்த்துக்க என்று சொல்லி மேலும் கில்ட்டியாக்க...எனக்கு மேலும் தர்ம சங்கடம். நீங்க சீக்கிரம் எந்திரிக்கணும், உங்க அப்பா பாவம்! எல்லா வேலையையும் செய்றது எனக்கு கஷ்டமா இருக்கு என்றவுடன் இவர் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டார்.

ஒரு வழியாக காலையில் நான் எழ ஆரம்பித்ததும் பால்காரர், அப்பா இல்லியாம்மா? அவர் தான கொஞ்ச நாளா வந்தாரு? ஊருக்குப் போய் விட்டாரா என்று கேட்க, வேலைக்கார அம்மாவோ, அப்பாருட்ட நான் சொல்லி இருந்தேனே என்று சொல்லும் பொழுது அவர் என் மாமனார் என்று சொன்னால் இவர்கள் என்னை தப்பாக நினைத்து விடுவார்கள் போலிருக்கே! என சிறிது அச்சம். பின்னே, எந்த வீட்டில் மாமனார் வேலை செய்வார்?
எனக்குத் தெரிந்து இல்லை. மெதுவாக அவர் மேல் எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மாலையில் வாக்கிங் முடிந்து வரும் போது எனக்கும்சேர்த்து சமோசா, கேக் கொண்டு வந்து கொடுக்க .. என் அப்பா மாதிரி அவரும் என்னை மகள் போல் நடத்த...என்னைச் சுற்றி இருந்த ஒருவித இறுக்கம் மெல்ல தளர்ந்து நானும் சகஜமாக இருக்க ஆரம்பித்தேன். அவருடைய பழங்கதைகளைச் சொல்லுங்கள் என்று அவருடைய தனிமையை என்னால் முடிந்த வரையில் கலகலப்பாக்க முயற்சித்தேன்.

அவர் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்ல, கெட்ட விஷயங்கள் என்று அவரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். மதுரையில் அவர்கள் வீட்டுச் சொத்து எங்கெல்லாம் எவ்வளவு இருந்தது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இப்பொழுது உங்களிடம் என்ன இருக்கிறது? போன கதைகளை ஏன் பேசி வெறுப்பேற்றுகிறீர்கள் என்று நெற்றிக்கண் திறக்க கோபக்கனலுடன் அப்பாவுக்கு எதிராக மகன் நிற்கும் போதெல்லாம், நான் தானே அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்? உங்களுக்கென்ன வேலை? அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினால் அவருக்கும் நன்றாக இருக்கும் என்று கணவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறேன்.

பழைய நினைவுகள் தரும் சுகத்தைப் போல் வேறு எதுவுமில்லை என்று தினமும் மாலையில் அவருடன் பேசுவது , டிவி பார்ப்பது என்று எனக்கும் பொழுது போனது.

குடும்பத்தில் நடந்த பல விஷயங்களைக் கூறினார். கணவரிடம் இப்படி எல்லாம் நடந்ததா என்று கேட்கும் பொழுது அவர் பதறிக் கொண்டே உனக்கு எப்படித் தெரியும் என கேட்க . ம்ம்ம். ஓப்லா வீட்டு ரகசியம் இப்ப எனக்கும் தெரியுமே என்று அவரை கலவரப்படுத்த எனக்கும் அவையெல்லாம் தோதாக இருந்தது.

மனைவியை இழந்த துயரம், அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இன்று வரை மகன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் என அவர் கலங்கியபடி சொல்லும் பொழுது எனக்கும் வேதனையாகி விட்டது.

மூத்த மகனை இழந்த சோகம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு மனதுக்கு விரும்பாத நிகழ்வுகள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் அதனால் உடல்பாதிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் என்னிடம் கூறுங்கள் என்று சொல்லும் பொழுது கூட, நீயோ இன்னும் சிறிது நாளில் கைக்குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்கள் அனைவரும் வேலை செய்கிறீர்கள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைம்மா என்று சொல்லும் பொழுது உண்மையாகவே என் கண்கள் கலங்கி விட்டது.

மனைவியை இழந்த கணவரின் நிலைமை மிகவும் கொடுமையானது போல!

என் குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை அவருக்கு என்று பேசும் பொழுது புரிந்து கொண்டேன். தம்பிகள், அப்பா, அம்மா வரும் பொழுது அன்பாக பேசுவார்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் மகாராணி என்று அழைத்து தன் மகன் ஒருவழியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான் என்ற மனநிறைவுடன் அவரின் விருப்பபடி யாருக்கும் தொந்தரவு தராமல் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

அன்பு தாத்தாவின் அறிமுகம் என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் என்றுமே எனக்கு உண்டு. அட்லீஸ்ட் மகளுடன் இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றாவது இருக்கிறது. மகனின் பல குணங்கள் தன் அப்பாவை நினைவுறுத்துகிறது என்று கணவர் கூறும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்.

யாருக்கும் தீங்கு நினைக்காத, பணத்தின் மேல் பற்றில்லாத, தனக்கு தீங்கிளைத்தவர்களையும் மன்னிக்கும் நல்ல பண்பான அமைதியான மனிதர்.

பழகிய சிறிது நாட்களில் என்னையும் அறியாமல் 'அப்பா' என்று சொல்ல வைத்த பெருமையுடன் அவரின் சகாப்தமும் முடிந்தது !






Tuesday, November 4, 2014

Woodstock , NY

இலையுதிர்கால வார விடுமுறையில் ஏதாவது ஒரு மலைப்பகுதிக்குச் செல்லலாம் என நினைத்து வீட்டிலிருந்து தெற்கே ஒரு மணிநேர தொலைவில் உள்ள Woodstock என்ற ஊருக்குச் சென்றோம்.

Woodstock-ஓவியர்களுக்கும், ஓவியக்கூடங்களுக்கும், கைவினைப்பொருள் வல்லுநர்களுக்கும், இசை விழாக்களுக்கும் புகழ் பெற்ற ஒரு குக்கிராமம் என்று கூடச் சொல்லலாம். இங்கு நடந்த இசைவிழாவால் இவ்வூர் மிக்க பிரபலமடைந்தது என கேள்விப்பட்டேன். குறுகலான தெருக்களில் சிறுசிறு கடைகள், நூலகம், போலீஸ், தீயணைப்பு நிலையங்கள்... என்று அழகு மிளிரும் ஊர். இம்மாதிரி சிற்றூர்கள் நகரங்களை விட அமெரிக்காவின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. வழியெங்கிலும் விளைநிலங்கள், சிற்றூர்களில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சிகள், வண்ண வண்ண இலைகளுடன் மரங்கள் அடர்ந்த மலைகள் என்று ரசித்துக் கொண்டே போக முடியும் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான இடமும் கூட!

நாங்கள் சென்ற அன்று அதிகக் குளிருமில்லாமல் வெயிலுமில்லாமல் 'குளுகுளு'வென்றிருந்தது. கார் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தோம். குழந்தைகளுடன் குதூகலமாக செல்லும் குடும்பங்கள், கணவன், மனைவி, காதலனுடன் கைகளை கோர்த்துக் கொண்டு காதலி , நண்பர்களுடன் வந்தவர்கள் என்று அனைவரும் வண்டியைத் தொலைவில் நிறுத்தி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கோடை முடிவடைந்ததை ஒட்டி பல கடைகளிலும் தள்ளுபடி விற்பனை வேறு! வேடிக்கை பார்த்துக் கொண்டே சில பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதும் சுகம். உணவகங்களில் மிதமான ஒலியில் பாடல்கள் இசைக்க, கண்ணாடி கோப்பைகளில் மதுவை பருகி ருசித்தபடி உரக்கப் பேசி சிரித்துச் சாப்பிடும் மக்கள் கூட்டம்! தெருக்களில் பீட்ஸா , சாண்ட்விட்ச், பழங்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். என்ன தான் வீட்டிலிருந்து சாப்பிட்டு விட்டு வந்தாலும் இவற்றையெல்லாம்  பார்த்தவுடன் மகனும் எனக்குப் பீட்ஸா வாங்கிக் கொடுத்தால் டோனட் வாங்கிக் கொடுக்கத் தேவை இல்லை என்று பேரம் பேச, வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

முதலில் கண்ணில் பட்ட கடையில் நான் நுழைய, மகள் என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நினைவுடன் அவளுக்காக சில பொருட்களை வாங்கிக் கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்கும் விஜயம் செய்ய, மகனோ நிழலில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டான். அவ்வப்போது அப்பாவிடம் ஏன் எங்கு போனாலும் அம்மா ஷாப்பிங் செய்கிறாள் என்று கேட்டது காதில் விழுந்தாலும் என் வேலையை நான் பார்த்துக் கொண்டே தானிருந்தேன்.


விதவிதமான வடிவங்களில் மெழுகுகள், நகைகள், ஆடைகள் , தேநீர் குடுவைகள் என்று பல கடைகள். எனக்குப் பிடித்த பேக்கரி ஒன்றில் நல்ல கூட்டம். அவர்கள் விற்கும் கேக் வகையறாக்கள் நல்ல சுவையுடன் இருக்கும். அங்கு 1968-ல் நடந்த உலகப்புகழ் பெற்ற இசை நிகழ்ச்சி சம்பந்தமாக பல படங்கள் இருக்கும். பண்டிட் ரவிசங்கர் படத்தையும் முதல் முறை வந்த போது பார்த்ததாக ஞாபகம். இப்போது வேறு சில படங்களை மாட்டியிருந்தார்கள். சில 'ஹிப்பி'களும் அங்கே இருந்தார்கள்! முதன் முதலில் இங்கு தான் ஒருவர் எங்களைப் பார்த்தவுடன் புத்தர் கோவிலுக்கு வந்தீர்களா என்று கேட்டு , அடடா! அப்படி ஒன்று இங்கு இருக்கிறதா என்ன? எங்கே என அவரிடமே விவரங்கள் கேட்டு பிரமாண்ட அந்த கோவிலையும் தரிசித்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.

அதே தெருவில் பாண்டிச்சேரி , மீராபாய் என்ற இரு கடைகளிலும் நம்மூர் கைவினைப்பொருட்கள், யோகா, தியானம், ஸ்ரீ அரவிந்தர், கடவுள்கள் பற்றிய புத்தகங்கள், சுவாமி சிலைகள் என்றுகிடைக்கிறது. இந்தியர்கள் என்றவுடன் ஒரு சிநேக சிரிப்பு. செல்ல குசல விசாரிப்பு!

வழியில் ஒரு ஹிப்பி கும்பல் தங்களை மறந்து 'புகைத்துக்' கொண்டிருந்தார்கள்!

மீண்டும் வந்த வழியே திரும்பும் பொழுது மறக்காமல் பீட்ஸா ஆர்டர் பண்ண, அங்கிருந்தவரும் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ஆல்பனி என்றதும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தனக்குச் சிவகுமார் என்று ஒரு சவுத் இந்திய நண்பன் இருப்பதாகவும், தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார். பீட்ஸா நன்றாக இருக்கு என்று மகனும் சாப்பிட்டுக் கொண்டே வர,

அருகிலிருக்கும் மாதாகிரி என்ற தியான மையத்திற்குச் சென்றோம். ஸ்ரீஅரவிந்தர், அன்னை மேல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்படும் இந்த இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தியானம் செய்து விட்டு வரலாம். அங்கிருக்கும் அமெரிக்கர்கள் அடிக்கடி பாண்டிச்சேரி விசிட் செய்பவர்கள். நன்றாக அன்புடன் பேசுவார்கள். அருகிலிருக்கும் நகரங்களில் இருந்தும் பலர் வந்து செல்கிறார்கள். ஒரு சிறிய அறையில் ஸ்ரீஅரவிந்தர், அன்னை படங்களை வைத்து நாற்காலிகளையும் போட்டு வைத்திருக்கிறார்கள். என் கணவர் சிறிது நேரம் தியானம் செய்ய நாங்களும் அமைதியாக இருந்தோம்.

அப்பப்பா! வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது தான் எவ்வளவு கடினமான வேலை!!!

சிலுசிலுவென்ற காற்று, உறுத்தாத வெயில், அழகான மலைகள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மகனும், நானும் சிறிது நேரம் வெளியில் அமர்ந்திருந்தோம்.

சரி, பதினைந்து நிமிட தொலைவில் இருக்கும் புத்த மடாலயம் செல்லலாம் என்று கிளம்பி வழியைத் தவற விட்டு, அங்கேயும் இங்கேயும் கேட்டுக் கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். வழியைத் தவற விடுவதிலும் ஒரு வசதி. உள்ளூர் சாலைகளில், ஆள்அரவமற்ற தெருக்களில், பெரிய பெரிய வீடுகளில் தங்கியிருப்பவர்களையும், அழகிய பழங்காலத்து வீடுகளையும் பார்த்துக் கொண்டே வரலாம். எப்படித்தான் இப்படித் தனியாக ஒதுங்கி இருக்கிறார்களோ என்றுயோசிக்க வைக்கும்! வீடுகள் ஒவ்வொன்றும் ஏக்கர் பரப்பில் இருக்கிறது.  வீட்டுக்குள் என்ன நடந்தாலும் வெளியில் தெரிவதற்கு சான்ஸே இல்லை!  மக்கள் புடைசூழ வாழ்ந்து பழகி விட்டதால் இவர்களுக்கு ஒன்று என்றால் எப்படி வெளி உலகத்தைத் தொடர்பு கொள்வார்கள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது!

சிறிது தொலைவில் மலை மீது திபெத்திய புத்த மடலாயம் அதற்கே உரிய கோபுர அழகுடன் தெரிய நிம்மதி ஆயிற்று. இது வடஅமெரிக்காவின் மிகப் பெரிய மடாலயம் என்றும் மலைகளும், ஆறு, ஏரி, குளங்களும் சூழ இருக்கும் இந்த இடத்தைத் தலைமை புத்தகுரு தேர்ந்தெடுத்ததாகவும் முதல்முறை அங்குச் சென்றிருந்த பொழுது நிர்வாகிகளுள் ஒருவரான ஓர் அமெரிக்கப் பெண்மணி கூறினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. வண்ண வண்ணத் துணிகளாலான கொடிமரங்கள் மலைகள் சூழ அந்த இடம் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. பல அமெரிக்கர்களும், சில ஆசியர்களும் வந்திருந்தார்கள். அனைவர் முகங்களிலும் ஒரு வித அமைதி அல்லது என் பிரமை?
கோவில் முழுவதும் சிவப்பு, மஞ்சள், நீலம் என்று வண்ணக் கலவையாகக் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தீப ஒளியில் விளக்குகள் ஜெகஜோதியாக மின்ன தியான நிலையில் பிரமாண்ட புத்தர்! அவர் எதிரே அமர்ந்து தியானம் செய்ய குஷன் நாற்காலிகள் நேர்த்தியான வரிசையில்! அங்கு நிலவிய மௌனமே அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி விடும் போல!

புத்தரின் காலடியில் தற்போதைய மட நிர்வாகியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. லக்ஷ்மி, விஷ்ணு, சிவன் வடிவில் பல புத்தர்கள்! அலங்காரங்களோ மனதையும் கண்களையும் கொள்ளைகொள்ளும் விதத்தில்! துறவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்கிறார்கள். அவர்களுடைய இசைக்கருவிகளும் கேட்பதற்கு வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மலர்கள், சர்க்கரை, அரிசி இன்னும் பல பிரசாதங்கள் கிண்ணங்களில் அழகாக வைக்கப்பட்டிருந்தது.

வெளியில் மந்திரங்கள் எழுதிய உருளைகளை உருட்டி விட்டு வந்தோம். வார இறுதியில் கோவிலில் தொண்டு செய்ய கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். தியான வகுப்புகளும் அங்கிருந்து தங்கி மனம் இளைப்பாறவும் வசதிகள் இருக்கிறது. அதற்கென்று தனிக் கட்டணமும் வசூலிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த காடுகள், மலைகள் நிறைந்த சூழ்நிலையில் அங்கிருப்பது நிச்சயம் மன அமைதியைத் தரலாம்.

அமைதியான சூழலில் சிறிது நேரம் அங்கே அமர்ந்து என் கணவர் தியானம் செய்ய, நானும் மகனும் வெளியில் வந்து அங்கிருந்த வயதான புத்தத் துறவியுடன் பேசிக் கொண்டிருந்தோம். ஹிந்தி தெரியுமா என்று அவர் எங்களை கேட்க, ஹ்ம்ம், நம்பள பார்த்தா ஹிந்தி பேசுற மூஞ்சி மாதிரியா இருக்குதுன்னு கேட்க ஆசை தான். ஒரு அசட்டு சிரிப்புடன் சிரித்துக் கொண்டே ஹிந்தி நஹி மாலும், தோடா தோடா என்று மேஜர் சுந்தரராஜன் ஸ்டைலில் ஆங்கிலத்திலும் சொல்ல, உங்களைப் பார்த்தால் ஹிந்திக்காரர்கள் மாதிரி இருக்கிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? இப்பிடித்தான் ஊர்ல பலரும் நெனச்சுக்கிட்டு ஹிந்தியில பேசி கொல்றாய்ங்க...ம்ம்ம்!

இந்தியாவில் எந்தப் பகுதி என்று எங்களை கேட்க, மதுரை, தமிழ்நாடு என்றவுடன், ஓ! சென்னை, பாண்டிச்சேரிசென்றிருக்கிறேன். தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார் அந்த வயதான துறவி! (ஹ்ம்ம். தோசை பிடிக்கும்னு சொன்ன இரண்டாவது நபர் இவர்! ) பனாரஸ் பல்கலையில் சம்ஸ்க்ருதம் படித்தாகவும், நான்குவகையான புத்த பிரிவில், இவர்கள் கர்மபா என்ற பிரிவைச் சார்ந்தவர்கள், தலாய்லாமா வேறொரு பிரிவைச் சார்ந்தவர் என்றும் சாந்தமாக சிரித்துக் கொண்டே பேசினார். இந்த மடத்திற்கு தலாய்லாமாவும் ஒரு முறை வந்திருக்கிறார்.

சிங்களத்தில் இருப்பவர்கள் எந்த பிரிவு என்று கேட்க நினைத்து விட்டு விட்டேன்.

அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வர,  கணவரும் படங்கள் எடுத்து முடித்து விட, வீடு நோக்கிப் புறப்பட்டோம் 






























Thursday, October 30, 2014

Halloween Day

கனடாவிலும் அமெரிக்காவிலும் மற்றுமொரு பிரபலமான நாள் அக்டோபர் 31.

இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும் நாளாக ஆரம்பித்து கால சுழற்சியில் இன்று மிட்டாய், சாக்லேட் கிடைக்கும் இனிப்பான நாள் என்று குழந்தைகளும், பார்ட்டி கொண்டாட இன்னுமொரு நாள் என பெரியவர்களும் கார்ப்பரேட் கடைகளின் சித்தாந்தத்தில் உழலும் நாளாகி விட்டது இந்த மாதக்கடைசியன்று வரும் Halloween Day!

இலையுதிர் காலத்தின் தொடக்கமாக அக்டோபர் மாதம் முதலே பெரும்பாலான வீடுகளில் பெரிய பெரிய பூசணிக்காய்கள், காய்ந்த மக்காச்சோள இலைகளை வைத்தும், வீட்டின் முன் வயற்காட்டில் பறவைகளை விரட்ட வைத்திருக்கும் பொம்மைகளை கொண்டு அலங்கரித்தும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிலந்தி வலை,பேய் உருவங்கள், எலும்புக் கூடு, கல்லறை, ஆரஞ்சு வண்ண விளக்குகள் என்றும் வீட்டின் முன் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.


அந்தி சாய்ந்தவுடன் குழந்தைகள் சிலர் மிக அழகாகவும், சிலர் மிகவும் கோரமாகவும் உடையணிந்து கொண்டு வீட்டுக்கு வீடு சென்று trick or treat  என சொல்ல, பெரும்பாலும் சாக்லேட்ஸ் கொடுக்கிறார்கள். சிலர் காசும் கொடுப்பதுண்டு.

முதல் வருடம் மகளுடன் சென்று ஒரு பை நிறைய சாக்லேட்ஸ் கொண்டு வந்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு தான் தெரிந்தது சில குழந்தைகள் பல மாதங்களுக்கு தங்களுக்கு வேண்டிய இனிப்புக்களை சேகரிப்பார்கள் என்று! பிறகு ஏன் டென்டல் இன்சூரன்ஸ் பில் ஏறாது?

குழந்தைகள் நண்பர்களுடன் வீடு வீடாக போய் விட்டு வருவதும் உண்டு. இந்த நாளில் வீட்டை அலங்கரித்து பார்ட்டி கொண்டாடுபவர்கள் பலர்! பெரியவர்களும் இந்த நாளுக்கென பிரயேத்திகமாக விற்கும் உடைகளை போட்டுக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். பப்களில் இதற்கென தனி அலங்காரங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. குடிமகன்களுக்கும் கொண்டாட்டம்!

அன்றைய தினத்தை பள்ளிகளிலும் நன்கு கொண்டாடுகிறார்கள். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைகள் வரை  அத்தினத்தின் கொண்டாட்டங்களை காணலாம்.
ஆசிரியர்களும் வேடமிட்டு குழந்தைகளுடன் ஊர்வலம் போக குழந்தைகள் குஷியாக என எல்லா வயதினரும் கொண்டாடும் ஒரு தினம்!

அமெரிக்காவில் எந்த ஒரு தினத்தையும் லாப நோக்கில் பார்த்து அந்த நாளுக்குரிய உண்மையான நோக்கம் மறைந்து வியாபாரமே முன்னிற்கிறது. மக்களும் அதற்குப் பழகி விட்டார்கள்!

பார்ட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் பூசணிக்காய் நிறத்தில்.  சாக்லேட்ஸ், உடைகள், அலங்காரங்கள், கார்டுகள் என்று கடைகளிலும் குழந்தைப் பட்டாளங்கள் கூட்டம். இந்தப் பரவசம் எல்லாம் கொண்டு வந்த சாக்லேட் மூட்டையை பிரித்து போட்டு தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டவுடன் போய் விடும். அடுத்த நாள் பள்ளிக்கும், வேலைக்கும் எப்போதும் போல போக வேண்டியது தான்:(

காவல் துறையினரும் இருட்டில் குழந்தைகளைத் தனியாக அனுப்ப வேண்டாம், குழந்தைகள் கொண்டு வரும் இனிப்புகள், பழங்களை பெற்றோர் ஒரு முறை பார்த்து விட்டு அவர்களுக்கு கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். சில சைக்கோக்கள் பழங்களில் ஊசி வைத்துக் கொடுப்பதும், இனிப்புகளில் குழந்தைகளுக்கு ஒவ்வாத மருந்துகளை சேர்த்துக் கொடுப்பதும் கேட்கவே கலக்கமாகத் தான் இருக்கிறது!

தெருக்கள் முழுவதும் சாக்லேட் பைகளுடன் அலங்கரித்துக் கொண்டு ஓடித்திரியும் குழந்தைகளை காண்பதும் இனிமையான அனுபவம்!

ட்ரிக் ஆர் ட்ரீட் ??



Monday, October 13, 2014

Back to School ...

என் குழந்தைகளின் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் பெற்றோர்களுக்கான 'Back to School night' நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அவ்வருடத்தில் குழந்தைகள் படிக்கப் போகும் பாடங்கள், அவர்கள் செய்ய வேண்டியது என்ன, பெற்றோர்களுக்கு அதிலிருக்கும் பங்கு என்று ஒவ்வொரு ஆசிரியரும் கூறுவதைக் கேட்டு விட்டு காலை முதல் மாலை வரை பள்ளியில் நடக்கும் வெவ்வேறு வகுப்புகளுக்கு குழந்தைகள் செல்வதை பெற்றோர்களும் உணர்ந்து கொண்டு பெற்றோர்களுக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்டுக் கொள்ளும் அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட !

இந்த வருடமும் மாலை ஆறரை மணிக்குத் தான் இந்நிகழ்ச்சி ஆரம்பம் என்றாலும் கார் பார்க்கிங் பிரச்சினையைத் தவிர்க்க சீக்கிரமே சென்று விட்டேன். என்னைப் போலவே பலரும் வந்து காத்திருந்தார்கள். Parent Teacher Asso. கார்டு வாங்கிக் கொண்டு மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வந்ததும் மணியடிக்கும் முன் அவரவர் home room-க்குச் சென்று அமர வேண்டும், அப்படியே பெற்றோர்களும் செய்ய வேண்டும் என்று அங்கு போய் உட்கார, வகுப்பிலிருந்த ஆசிரியரும் அனைவருக்கும் அவர்கள் குழந்தைகள் கையால் எழுதிய அவர்களுடைய schedule-ஐ எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதில் விவரமாக எந்த வகுப்புகள் எந்த ரூமிற்குப் போக வேண்டும், பள்ளியின் வரைபடம் என்று அனைத்து தகவல்களும் இருந்தது.

சிறிது நேரத்தில் வகுப்புக்களில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி வழியாக பள்ளி முதல்வர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று தங்கள் குழந்தைகளின் வகுப்பறைகளையும், ஆசிரியர்களையும் பார்த்து விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு மாணவர்கள் படிப்பில் பெற்றவர்களும் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் மணியடித்தவுடன் அவனுடைய ஆங்கில வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பு முழுவதும் ஆங்கில புத்தகங்கள்! மெல்லிய குரலில் அழகாக பேசிய ஆசிரியையும் இந்த வருடம் என்ன என்ன படிக்க போகிறோம், நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் இந்தப் புத்தகங்களை படிக்கலாம் என்று ஒரு ஆறு புத்தகங்களை காண்பித்தார். மாணவர்களின் மார்க்குகள் எல்லாம் ஹோம்வொர்க, வகுப்பில் அவர்களின் பங்களிப்பு, அசைன்மெண்ட், தேர்வுகள் அடிப்படையில் என்று ஒவ்வொன்றையும் விரிவாகச் சொல்லி கூடவே அவருடைய ஈமெயில், போன் நம்பரையும் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் குழந்தைக்குப் பாடம் புரியவில்லை என்றால் மாலை பள்ளி முடிந்ததும் இருந்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். நீங்களும் அவர்களுடன் பேசுங்கள் என்று சொல்லி முடிக்கும் போது அடுத்த வகுப்புக்குச் செல்ல மணியடிக்க நாங்களும் அந்த அறையைத் தேடிப் போனோம்.

நல்ல வேளை , கணிதம் காலையிலேயே இருக்கிறது. அந்த ஆசிரியையும் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய மறப்பது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. அது தொடர்ந்தால் தான் பிரச்னை. அது மட்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே எட்டாம் வகுப்பு கணிதம் படிக்கலாம். அதே போல் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கணிதம் படிக்கலாம். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். ஏழாம் வகுப்பு கணிதமே படிக்கட்டும். எட்டாம் வகுப்பு கணிதம் படித்தாலும் ஏழாம் வகுப்பு தேர்வையும் அவர்கள் எழுத வேண்டும் என்று ஒரு ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக் காண்பித்தார். இந்த டீச்சர என் பையன் ஈசியா சமாளிச்சிடுவான்னு நினைத்துக் கொண்டேன் :)

அடுத்தது, டெக்னாலஜி வகுப்பு. அதற்கு மாடியிலிருந்து இறங்கி கொஞ்சம் நடக்க வேண்டும்! வகுப்பறைகளுக்குச் செல்ல மாணவர்களுக்கு நான்கு நிமிடங்கள் கொடுக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களை லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு அடுத்த வகுப்பிற்குப்  போய் விட வேண்டும். அடிக்கடி வகுப்புகளுக்குத் தாமதமாக சென்றால் ஹால் பிரின்சிபாலை பார்க்க வேண்டும் :( கஷ்டம் தான் பசங்களுக்கு!

அந்த ஆசிரியர் சிரித்த முகத்துடன் 'கலகல' வென்று பேசினார். இன்னும் சிறிது நாளில் மாணவர்கள் தாங்கள் செய்த ராக்கெட்டை விடப் போவதைப் பற்றி வேடிக்கையுடன் சொன்னார். அவர்களுக்கு நானோ-டெக் பற்றிய ப்ராஜெக்ட் இருக்கிறது என்றும்கூறினார். ஆவலுடன் இருக்கிறேன்! நான்  என்ஜினியரிங் படிக்கும் போது இருந்த மெக்கானிக்கல் லேபின் சூழல் அந்த வகுப்பில்! நிச்சயம் என் மகனுக்குப் பிடித்த வகுப்பாக இருக்கும் என்று தோன்றியது. நிறைய கணினிகள். மாணவர்கள் வரைந்த மெக்கானிக்கல் டிராயிங் சுவர் முழுவதும்! பல சுவாரசியமான விஷயங்கள் மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில்- கிராபிக்ஸ், CAD , ரோபோடிக்ஸ்... என்று.

அவர் வகுப்பு முடிந்தவுடன் ஆடிட்டோரியத்தில் பேண்ட், ஆர்க்கெஸ்ட்ரா பற்றிய விரிவான விளக்கம். மாணவர்கள் தங்கள் ஃப்ரீ டைமில் ப்ராக்டிஸ் செய்ய வேண்டி இருக்கும். இந்த வருடத்தில் வரப்போகிற மியூசிக் ப்ரோக்ராம் தினங்கள் என்று ஒரு லிஸ்ட்டையும் கொடுத்தார்கள்! என்னுடைய பள்ளிக்கால பாட்டு வகுப்பு நினைவிற்கு வந்து அந்த ஆசிரியருக்கு நாங்கள் கொடுத்த தொல்லைகள் நினைவிற்குவர சிரித்துக் கொண்டேன்.

மீண்டும் மாடியேறி அவனுடைய ஜெர்மன் வகுப்புக்குள் நுழைந்தால் மொத்தமே 10-12 மாணவர்கள் தான் இருப்பார்கள் போலிருக்கு.மற்றவர்கள் எல்லாம் ஃப்ரெஞ்ச் , ஸ்பானிஷ் எடுத்திருக்கிறார்கள். என் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் ஜெர்மன் மேல் இப்படி ஒரு லவ்வோ? வார்த்தைகளை கடித்து இழுத்துப் போட்டுப் பேசுகிறார்கள்!!!சுவிஸ் , ஜெர்மனி நாட்டுக் கொடிகள், அந்த நாடுகளின் பிரபலமான இடங்கள், காலெண்டர் மேல் ஜெர்மன் மொழியாக்கம் என்று எதிலும் ஜெர்மன் மயமாக இருந்தது! அந்த ஆசிரியையும் என் மகளுக்கு வகுப்பு எடுத்தவர். அவரும் ஜெர்மனில் எங்களை வரவேற்றார். அது சரி, அவர் எப்படி சொல்லி இருந்தாலும் அது எனக்கு ஜெர்மன் போலவே இருந்தது :(

அது முடிந்ததும் மியூசிக் தியரி வகுப்பு. வகுப்பில் கிடார், கீபோர்டு அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த வகுப்பில் மாணவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்கப்படும், எவ்வளவு நேரம் வீட்டில் ப்ராக்டிஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல, அப்படியெல்லாம் என் மகன் ஒன்றும் ரெகுலரா பண்றா மாதிரி தெரியலையே, இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆசிரியரும் என் மகனை சரியான வால் பையன் , படு சுட்டி ஆனால் கொஞ்சம் சேட்டை செய்கிறான் என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சொல்லி விட்டார். ம்ம்ம். அவனிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு ...

அடுத்த social studies வகுப்பிற்கு மீண்டும் மாடியேறிச் சென்றேன்! நல்ல துடிப்பான ஆசிரியர். ஏற்கெனவே மகனும் தனக்குப் பிடித்த ஆசிரியர் என்று சொல்லி இருந்தான். மாணவர்களை நன்கு அறிந்த ஆசிரியர் போல் தெரிந்தார். வகுப்பில் சிவில் வார், மார்டின் லூதர் கிங், ப்ரெசிடெண்ட் படங்கள் சுவர் முழுவதும், புத்தகங்கள் அலமாரிகளில்! நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் , நிதின் நன்றாக வகுப்பில் நடக்கும் டிஸ்கஷனில் பேசுவான், நன்றாகப் படிக்கிறான் என்று சொல்லிக்கொண்டே என் மகன் மறந்து போய் வைத்து விட்டு வந்த அவனுடைய ஸ்வெட்ஷர்ட்டை எடுத்துக் கொடுத்தார்!
இந்த வருடம் உலகில் நடக்கும் போர்களைப் பற்றியும் படிக்கப் போவதாக கூறினார். மாணவர்களுக்கு இன்றைய உலகில் தங்களைச் சுற்றி நடக்கும் செய்திகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ம்ம்ம். இந்தியாவில் கூட பாட முறையில் காலத்திற்க்கேற்றாவாறும் உண்மையான வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றியது!

இதற்குள் மணி ஒன்பதை நெருங்க போதுமடா சாமி, ஆளை விடுங்கப்பா என்ற ரேஞ்சில் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும். கடைசி வகுப்பு சயின்ஸ். வாரம் ஒரு முறை லேப் இருக்கும். அன்றைய லேப் வேலைகளை மறக்காமல் அன்றே செய்ய சொல்லுங்கள் என்று லேப் டீச்சரும் வகுப்பில் என்ன படிக்கப் போகிறார்கள் என்று ஆசிரியரும் சொல்லும் பொழுது பெற்றோர்கள் கண்களில் விட்டா போதும் என்று தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது!!!

நடுநடுவில் இந்திய நண்பர்கள், குழந்தைகளின் நண்பர்களின் பெற்றோர்கள் என்று பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

அனைத்து வகுப்புகளிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி,டச் ஸ்க்ரீன் போர்டு, ப்ரொஜெக்டர், அறை முழுவதும் புத்தகங்கள், சுவர்களில் அந்தந்த வகுப்பைச் சார்ந்த படங்கள், குறிப்புகள், மாணவர்கள் அமர இருக்கைகள் என்று கூலாக இருந்தது. ஆசிரியர்களும் 'சிக்'கென்று ரெடிமேட் புன்னகையுடன் டிப்டாப்பாக இருந்தார்கள்! குரலை உயர்த்திப் பேசாமல் எப்படி இவர்கள் மாணவர்களை கையாளுகிறார்கள் என்று மலைப்பாக இருந்தது!

ஆசிரியர்கள் அனைவரும் மகளுக்கும் வகுப்பு எடுத்தவர்கள். ஞாபகமாக அவளைப் பற்றி விசாரித்தார்கள். அனைவரும் சொன்னது சச் எ டார்லிங் கேர்ள், வெரிநைஸ் கேர்ள் , நல்ல படிப்பாளி ..கேட்க மிகவும் நன்றாக இருந்தது. மகன் என்ன பாடுபடுத்துவானோ !

ஒரு வழியாக அனைத்தும் முடிந்து, அலுவலகத்திற்குப் போய் ஆன்லைன் id வாங்கிக் கொண்டேன். மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு, ஹோம்வொர்க் , தேர்வுகள் பற்றிய நிலவரங்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் பார்த்து விடலாம்!

ஆசிரியர்கள்வீட்டுப்பாடத் தகவல்களை வெப்சைட்டில் அன்றன்றே போட்டுவிடுவோம். எங்களுக்கு வீட்டுப் பாடம் இல்லை என்று உங்கள் குழந்தைகள் கூறினாலும் நீங்கள் சென்று பார்த்து விடலாம் :) அவர்களின் ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட்டும் ஆன்லைனில் இருக்கும் என்று அனைத்து தகவல்களும் தெரிந்து விட்டது. என் மகனைப் போன்ற குழந்தைகளுக்கு இது அனர்த்தமாக தெரிந்தாலும் என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! :)

சில வகுப்புகள் மீண்டும் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது! ஒரு வழியாக அனைத்தும் முடிந்து டிராஃபிக் நெரிசலில் மீண்டு வீடு வந்து சேரும் பொழுது இரவு 9.45 மணி.

எப்படி இருந்தது என்று கேட்ட மகனிடம் நன்றாக இருந்தது, எல்லா ஆசிரியர்களிடமும் பேசி விட்டேன். உன்னைப் பற்றியும் சொல்லி விட்டேன் என்றேன் சிரித்துக் கொண்டே! ம்ம்ம். ஏற்கெனவே எல்லோரும் சதாசர்வ காலமும் உன் அக்கா நல்ல படிப்பாளி என்று வெறுப்பேற்றுகிறார்கள். இப்போது நீ வேற பேசிட்டு வந்திருக்கே இனி கொஞ்சம் கவனமா தான் இருக்கணும் என்றான் நொந்து கொண்டே ! சரி, சரி ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததில எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது நான் போய் தூங்கணும் என்றவுடன், இப்படித்தானே எனக்கும் இருக்கும் என்றானே பார்க்கலாம்!

பள்ளியில் இருக்கும் நூலகம், உடற்பயிற்சிக்கூடம், கான்டீன், வகுப்புகள், ஆசிரியர்களைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. துள்ளித் திரிந்த பள்ளி நாட்கள் மீண்டும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

வேலைக்குச் செல்பவர்களுக்குப் பள்ளிக்குச் செல்ல ஆசை.

பள்ளிக்குச் செல்பவர்களுக்கோ வேலைக்குச் செல்ல ஆசை!

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போலும்!







Wednesday, September 3, 2014

அயல்நாட்டில் ஒரு சந்திப்பு

வட அமெரிக்காவில் வாழும் என் தாய்மொழி பேசும் மக்கள் அனைவரும் சந்தித்து பேசி மகிழ ஒரு மாநாடு அதுவும் வெர்ஜினியா மாநிலத்தில் என்றவுடன் எப்படியாவது போயே தீருவது என்று கலிஃபோர்னியா போகவிருந்த திட்டத்தையும் மாற்றி அந்த நாளுக்காகக் காத்திருந்தோம்.

மாநாடு நாள் நெருங்க, நெருங்க ரகு திருக்கொண்டா தலைமையில் கார்த்திக் திருக்கொண்டா மற்றும் DC மெட்ரோ குடும்பங்கள் பலவும் மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள், அழைப்பிதழ்கள், நினைவுப்பரிசு என பல நாட்கள் இணையம், ஃபோன் மூலம் கடுமையாகத் திட்டமிட்டு ஒரு வழியாக பள்ளி ஒன்றில் நானூற்று ஐம்பது பேர் வரை பங்கு கொள்ள வசதியாக இடத்தையும் முடிவு செய்தார்கள்.

மெட்ரோ ஏரியாவில் இருந்தவர்கள் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் வந்து தங்கி இருக்குமாறு அந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபேஸ்புக் மூலமாக அழைப்பிதழும், தங்கள் வருகையை தெரியப்படுத்த வேண்டிய கடைசி நாளும் வடஅமெரிக்கா வாழ் சௌராஷ்டிரா மக்களுக்கு தெரியப்படுத்தியும் ஆயிற்று.

நாம் தான் மண்ணின் மணம் மறந்தவர்கள் இல்லையே? தினமும் அதே pinned post பார்த்தாலும் கடைசி நாள் வரை காத்திருந்து பதில் சொன்னவர்களும், பார்த்தவுடன் வருகிறோம் என்று சொன்னவர்களும், கடைசி நிமிடத்தில் வர விரும்பினவர்களும் என ஒரு வழியாக பெரியவர்கள், குழந்தைகள் என்று நானூற்று இருபத்தைந்து பேர் வரை வந்து விட்டதாகவும் தெரிய வர, அத்துடன் அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள் :)

நண்பர் சீனிவாசனும் அவர்களுடன் வந்து தங்குமாறு அன்புடன் அழைத்திருந்தார். கார்த்திக் ஒப்லா மேரிலாண்டில் இருந்தது கூடுதல் போனஸ்! ஆக அவர்களையும் பார்த்த மாதிரி ஆயிற்று, அமெரிக்காவில் இருக்கும் பிற சௌராஷ்டிரா உடன்பிறப்புக்களையும் பார்த்த மாதிரி ஆகி விடும் என்று இரு நாட்கள் முன்பே கிளம்பி கார்த்திக் வீட்டிற்குச் சென்று விட்டோம்.

ஒரு நாள் முழுவதும் கால் வலிக்க ஒன்பது மைல் நடந்து தலைநகரைச் சுற்றோ சுற்று என்று சுற்றி, வளைத்து வளைத்துப் படங்கள் எடுத்துக் கொண்டும், ஆசை தீர வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்த்ததும் என இனிமையாக கழிந்தது.

அடுத்த நாள் வெளியே எங்கும் வர மாட்டேன். நேற்று நடந்த நடையில் களைப்பாகி விட்டேன் என்று மகன் கொடி தூக்கிப் போராட்டம் செய்யாத குறையாக சொல்லவும் அன்றைய நாள் வீட்டிலேயே குழந்தைகள் விளையாட, நாங்களும் நிதானமாக பொழுதை களித்தோம். மாலையில் குழந்தைகள் கோல்ஃப் விளையாடப் போக, நியூஜெர்சியிலிருந்து சதீஷின் குடும்பமும் வந்து சேர, கலகலவென்று மதுரை நண்பர்கள், உறவினர்கள் என்று பேசி இனிதே அன்றைய பொழுதும் போனது.

மறுநாள் அதிகாலையில் ஒவ்வொரு குடும்பமாய் மாநாடு செல்லத் தயாராக, ஏதோ கல்யாணத்திற்குச் செல்வது போல் பட்டுப் புடவை சரசரக்க, மதுரை மல்லி மணமணக்க, தங்க,வைர நகை அலங்காரங்களுடன் வீட்டை விட்டு கிளம்பும் போது காலை 8.30. வெயிலும் போக்குவரத்து நெரிசலும் மதுரையை நினைவுறுத்த ஒரு மணி நேர சாலைப் பயணத்தில் வெர்ஜினியா மாநிலம் வந்து சேர்ந்தோம்.

மாநாடு நடந்த இடத்தின் வாசலிலேயே சிவா, சுப்பிரமணியன், ரமேஷ்பாபு அவர்கள் தத்தம் கேமராக்களுடன் வரும் குடும்பங்களை கிளிக்கிக் கொண்டிருக்க, குழந்தைகள் பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம், கற்கண்டு உபசரித்து விழாவிற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் சிரித்த முகத்துடன் வரவேற்று ரிஷப்ஷன் மேஜைக்குச் செல்லுமாறு சொல்ல, அங்கு மேல்நிலைப் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் ஒவ்வொரு குடும்பத்தின் அடையாள எண்ணைக் கூறியவுடன் முன்பே தயாரித்து வைத்திருந்த பெயர்கள் எழுதிய பேட்ஜ், மாநாட்டிற்கு வருபவர்களின் விவரங்களுடன் குடும்ப படங்கள், சௌராஷ்டிரா சமையல் குறிப்புகள், பாட்டி அம்மாக்கள் பயன்படுத்திய பேச்சு வழக்குகள் ,பழமொழிகள் ஆகியவற்றை தொகுத்து ஒரு புத்தகமாக வந்திருந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுத்தார்கள்.

உள்ளே சென்றால் மிக்ஷிகனில் இருந்து ஒரு பஸ்சில் வந்திருந்தவர்களில் நண்பர்கள் பலரும் இருக்க, பள்ளித்தோழி ஆஷாவுடன் பேசி அக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டதும், மதுரை, சேலம், திருச்சி, கும்பகோணம் என்று பல ஊர்களில் இருந்து வந்திருந்த மக்களை ஒரே இடத்தில் பார்த்துப் பேசியதும் மகிழ்ச்சியான அனுபவம்.

உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். ஆ! ஃ பேஸ்புக்கில் தான் என்று சிலருடனும், உங்கள் மகன் அருமையாக புல்லாங்குழல் வாசிக்கிறான் என்று அவனிடம் சிலரும், நீங்கள் அருமையாக படங்கள் எடுக்கிறீர்கள் என்று கணவரிடமும், நீங்கள் TCE ஆ, நானும் தான் எந்த வருஷம், ஓ! என் தம்பி செட், எனக்கு ஜூனியர், நீங்கள் எனக்கு சீனியர் என்று ஒரு மினி TCE alumini கூட்டத்துடனும் பேசிக் கொண்டிருந்ததில் மதுரைக்கே சென்ற உணர்வு.

சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, பெரியவர்களை கொண்டு விளக்கேற்றி , சிறு குழந்தைகள் கடவுள் வாழ்த்து பாடி முடிக்க, ரகு திருக்கொண்டாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. முதல் நிகழ்ச்சியாக, குடும்பங்கள் அறிமுகம் செய்து கொள்ள, நேரமின்மை காரணமாக ஐம்பது குடும்பங்கள் மட்டுமே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஃப்ளோரிடாவிலிருந்து வந்திருந்த திருமதி.சாந்தி அவர்கள் அந்த காலத்தில் சௌராஷ்டிரா பெண்கள் கட்டும் முறைப்படி சேலை அணிந்திருந்தது பலருக்கும் பிடித்திருந்தது :)

அடுத்த நிகழ்ச்சியாக பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்து கடுமையாக உழைத்து எப்படி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கித் திருமணமும் முடித்து அவர்களும் தங்கள் குழந்தைகளுடன் இன்றும் தாய்மொழியை மறக்காமல் இருக்கிறார்கள், அயல்நாட்டில் குழந்தைகளை வளர்க்கும் பொழுது எதிர் கொள்ளும் பிரச்னைகள், அதிலிருந்து மீள்வது எப்படி என்று சுவையான தகவல்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் cafeteriaவில்  நடந்து கொண்டிருந்தது. அங்கு அவர்கள் புதுப்புது டிசைன்களில் ஆர்ட் வேலைகள் என்று பிஸியாக இருக்க, பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

நடுவில் இளைப்பாறிக் கொள்ள தேநீரும், காபியும் என்று சிறிது நேரம் ஒரு மினி கூட்டம் அங்கு சேர்ந்து கொண்டு உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன், நீங்கள்..

இருபது வருஷத்துக்கு முன்னே பார்த்தது ரொம்பவே மாறீட்டீங்க என சுவாரசியமான பேச்சுக்கள் தொடர ...மீண்டும் கலகலப்பு :)

பெண்களுக்காக ஒரு நிகழ்ச்சி- குழந்தை வளர்ப்பு, வேலைக்குச் செல்வது பற்றியும் உரையாடல்கள் தொடர்ந்தது. பலரும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் தங்கள் வேலையைத் தொடர்ந்தது அதில் வந்த பிரச்னைகளை கையாண்டது பற்றி பேசினார்கள். பலருக்கும் உபயோகமாக இருந்திருக்கலாம்.

மேல்நிலைப்பள்ளி, கல்லூரி வயது குழந்தைகள் தங்களுக்குள் பேசி சுபர்ணா தயாரித்திருந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்திருந்த பதிலைக் கொண்டு ஒரு panel discussion அருமையாக இருந்தது. அதில் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது வளரும் குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும்.

மனதை நெருடிய ஒரு விஷயம் - குழந்தைகள் பலரும் தங்களை ஹிந்துக்கள் என்று சொல்ல விருப்பப்படவில்லை என்பதாக இருந்தது. கண்டிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேச வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டியது. மிகவும் வருத்தமான விஷயமும் கூட!

சௌராஷ்டிரா வார்த்தை விளையாட்டு அனைவரும் மகிழும் வண்ணம் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தது. மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி தாய்மொழியில் பல வார்த்தைகளை மறந்து விட்டதை நினைத்து வெட்கமாகவும், சோகமாகவும் இருந்தது.

அசோக் காம்பியராக தன் ஜோக்குகளால் மக்கள் சோர்ந்து விடாமல் நிகழ்ச்சிகளை கொண்டு சென்றது பாராட்டுக்குரியது !

அதற்குள் மதிய நேரமும் நெருங்கி விட அனைவரையும் சாப்பிடும் இடத்திற்குப் போகுமாறு கேட்டுக் கொண்டார்கள். அங்கே சைவ, அசைவ உணவுகள் அவரவரே எடுத்துக் கொள்ளும் வகையில் மிக அற்புதமாக பிரித்து வைத்து எந்த வித நெரிசலும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டது பாராட்டுக்குரியது! இதன் பின்னால் பலரின் கடும் உழைப்பை பார்க்க முடிந்தது.

அங்கு நண்பர்களுடன் படத்தை எடுத்துக் கொண்டும், இணையம் வழியாக பலமுறை பார்த்தும், பேசியிருந்தும் நேரில் பார்த்து...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே ரேஞ்சில் பலரும் புளங்காகிதமாக பேசிக் கொண்டிருக்க நேரம் சென்றதே தெரியவில்லை.


மீண்டும் மதிய நேர நிகழ்ச்சிகள். சுதர்சன் PHL (Palkar Helpline ) என்று உலகில் பல பகுதிகளில் வாழும் சௌராஷ்டிரா மக்களின் முழு ஆதரவுடனும், முக்கியமாக அமெரிக்காவில் உள்ளவர்களின் பங்களிப்பு எவ்வாறு கடைநிலை சௌராஷ்டிரா மக்களுக்கு உதவியாக இருக்கிறது, அதன் தொண்டுகள், பயன்பெற்றவர்கள் என்று சிறு தொகுப்பாக பேசியதும், மதுரையில் சௌராஷ்டிரா டிரஸ்ட் சொத்துக்கள் அழியும் நிலையில் இருப்பதும் அதைக் காப்பது பற்றி திரு.சிவப்பிரசாத் அவர்கள் பேசிய உரைகள் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.

DC மெட்ரோ அன்பர்களின் நாடகம் ஒன்று அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

நடுவில் தேநீரும், சமோசாவும் என்று சிறிது நேரம் மீண்டும் மக்களுடன் பேசிக்கொண்டு, பெண்கள் மாலை நேர மேக்கப், உடைகள் அணிந்து கொண்டு வலம் வர ...

கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. முதலில் TMS அய்யா அவர்களின் பேரன் பாட்டு பாட, பெண்குழந்தைகளின் அழகிய நடனம் , அதைத் தொடர்ந்து மகேஷ் அவர்கள் என் கணவரை கேட்டுக் கொள்ள, அவரும் ஹார்மோனிக்காவில் ஒரு அழகிய தமிழ் பாடலை இசைக்க, முடிவில் ஒரு அழகான நடனத்துடன் இனிதே நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியின்இறுதியாக நன்றியுரை முடிந்தவுடன் இட்லி, வெண்பொங்கல், பூரி, காரட் ஹல்வா, வடை , சன்னா மசாலா, சாம்பார், சட்னிகளுடன் இரவு உணவும் தயாராக இருக்க மக்கள் கூட்டம் மெதுவாக நகர...

சாப்பாடு முடிந்தவுடன் அனைவரிடமும் விடை பெற்று மக்கள் கூட்டம் கலைய, கலையரங்கு மற்றும் சாப்பிட்ட இடங்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சுத்தம் செய்ய ...அடுத்த முறை மிக்ஷிகனில் சந்திப்போம் என்றுஅனைவரும் புறப்பட ...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் தாய் மொழியில் பேசி, கேட்க ஒரு நிறைவான நாளை அளித்த பலரின் நேரமும் உழைப்பும் பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்திற்கு நாங்கள் ஆயத்தமாக வெளியில் வந்த பொழுது தான் பகலில் இடியுடன் மழை பெய்திருப்பதும் இரவிலும் மழை எங்களைத் தொடர்ந்ததுமாய் வீடு வந்து சேர்ந்து இரவு இரண்டு மணி வரை வாய் ஓயாமல் பேசி சிரித்து மகிழ்ந்ததுமாய் அந்த நாள் ஒரு ஆனந்தமான நாள்!


படங்கள்  : மகேஷ் சுட்டி , சிவா சொட்டல்லு , விஷ்வேஷ் ஒப்லா 

Wednesday, August 20, 2014

கனா காணும் காலங்கள் - 2

காலையில் பள்ளிக்குச் செல்லவும், சாப்பிட்டு எடுத்துச் செல்ல உணவுகளை தயார் செய்யவுமே அம்மாவுக்குச்  சரியாக இருக்கும்.  அம்மா பொறுமையாக எங்களுக்குப் பின்னல் போட்டு முடித்து அன்றலர்ந்த மலர்களைச்  சூடி அழகு பார்ப்பார்.  பாட்டியும் அம்மாவிற்கு உதவியாக எங்களை பள்ளிக்கு அனுப்புவதில் மும்முரமாய் இருப்பார்!

பள்ளி விட்டு மாலை வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் வரை விளையாடலாம்.  ஐந்து மணிக்கு ரேடியோவில் வரும் பாடல்களையும் கேட்கத் தவறியதில்லை. ஆறு மணியானவுடன் முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இது கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது!

ஆரம்ப பள்ளி நாட்களில் சிலேட்டில் நம்பர்களையும், அ, ஆ என்று பலமுறை எழுதி வரச் சொல்வார்கள். கடல் குச்சியை வைத்து எழுதினால் எழுத்துக்கள் அவ்வளவு அழகாக வரும். கணக்குப் பாடம் அம்மா வந்தவுடன் நானும், அக்காவும் பண்ண ஆரம்பிப்போம். அவள் வேகமாக போட்டு விடுவாள். அவள் சிலேட்டிலிருந்து நான் காப்பியடிக்க, அம்மா தலையில் குட்டு வைக்க...என்று பல மாலைகள்! சிலேட்டில் எழுதிய வீட்டுப் பாடங்களை அழியாமல் எடுத்துச் செல்வதே பெரிய விஷயமாக இருந்தது அந்நாட்களில்!

வீட்டுப் பாடம் முடித்தவுடன் மீண்டும் வெளியில் போய் விளையாடலாம். மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத சிறு தெருவில் அம்மாக்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் விளையாட என்று தெருவே ஆனந்தமயமாக இருக்கும். டிவிக்கு முன்பான பொற்காலம் அது !

பெண் குழந்தைகள் இரு குழுவாக, பூ பறிக்க வருகிறோம், பூ பறிக்க வருகிறோம் என்று ஒரு குழு அடுத்த குழுவைப் பார்த்துப் பாடிக் கொண்டே வர, அவர்களைத் தொடர்ந்து, அடுத்த குழுவும், எந்தப் பூவை பறிக்கிறோம், எந்தப் பூவை பறிக்கிறோம் என்று பாடிக் கொண்டே அவர்கள் முன்னே வர, ரோஜாப்பூவை பறிக்கிறோம், ரோஜாப்பூவை பறிக்கிறோம் என்று கத்திப் பாடிக்கொண்டே என்று சிறிது நேரம் விளையாடுவோம். சில நேரங்களில், ஒருவர், கலர் கலர் வாட் கலர் என்று கேட்க, வாயில் வந்த கலரைச் சொன்னவுடன் அந்த நிறத்தில் கண்ணில் பட்டதை ஓடிப் போய்த் தொட வேண்டும். இல்லையேல் அவுட்.

இதைத் தவிர சொட்டங்கல்லு, பம்பர ஆட்டம், கிட்டி புல்லு, தட்டாமாலை, சோழிகளை உருட்டி விளையாடும் தாயம், பரமபத விளையாட்டு, கபடி கபடி என்று மூச்சு விடாமல் நரம்பு புடைக்க விளையாடியது என்று ஓடியாடித் துள்ளித் திரிந்த காலம்! வயது, ஏழை, பணக்கார்கள் என எவ்வித வித்தியாசங்களும் தெரியாமல் நாங்கள் social skills வளர்த்தது அப்படித்தான்!

ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்குப் போன பின்பு, நாங்கள் தனியாக பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தோம். எங்களுடன் வந்த சீனியர் மாணவிகளும் மேல்நிலைப் பள்ளிக்குப் போய்விட்டார்கள். பள்ளிக்குப் போகும் வழியில் நாடார் பள்ளியின் எதிர்புறம் ஒரு கட்டை வண்டியில் வயதானவர் ஒருவர் ஜவ்வு கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பார். ஐந்து பைசாவிற்கு கேட்டால் அதை இழுத்து இழுத்து உடைத்து தருவார். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். பத்து பைசாவிற்கு, நெய்யில் தோய்த்து தருவார். அது இன்னும் சூப்பராக இருக்கும். அவர் அழுக்காக, பீடி குடித்துக் கொண்டே இருப்பார். மிட்டாய் மேலேயும் ஈ எனக்கென்ன என்று மொய்த்துக் கொண்டிருக்கும். அண்ணே, அஞ்சு காசுக்கு மிட்டாய் கொடுங்க என்று வாங்கிச் சாப்பிட்டதெல்லாம் தப்பாக தெரியவில்லை அப்போது!

அவரைத் தாண்டி போனால் ஒரு அம்மா சிறு, சிறு கூடைகளில் வேக வைத்த சோளக்கருது, ஆள்வள்ளிக்கிழங்கு, சர்க்கரை கிழங்கு, வேகவைத்த பலாக் கொட்டை, அடுப்பில் சுட்ட பலாக் கொட்டை, சிறு படிகளில் ஐந்து அல்லது பத்து பைசாவிற்கு கடுக்காய்ப் பழம், இலந்தைப் பழம், நவ்வாப்பழம், அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், கொடுக்காப்புளி, புளி உருண்டை(ம்ம் புளிப்ப்பாக இருக்கும்) வைத்து விற்றுக் கொண்டிருப்பார். சின்ன கரியடுப்பில் சோளக்கருது வாட்டிக் கொண்டிருப்பார். வீட்டில் தினமும் வாங்கிச் சாப்பிட என்று கொடுக்கும் காசில் பள்ளி முடித்து விட்டு வரும் பொழுது சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டே போனதும்...

அது ஒரு கனாக்காலம்!

திங்கட்கிழமைகளில் வெள்ளைச் சீருடையும், மற்ற நாட்களில் வெள்ளை மற்றும் நீலச்சீருடையும் கண்டிப்பாக அணிய வேண்டும். நன்றாக தலையில் எண்ணை வைத்து நீலநிற ரிப்பன் கட்டி பின்னல் போட்டு, ரோஜா/பெங்களூர் பூ/ டிசம்பரில் வயலெட் நிறப் பூ என்று பூச்சூடி பள்ளிக்கு அனுப்புவார் அம்மா. மீ பர்ஸ்ட், மீ செகண்ட் என்று நாங்கள் மூவரும் தலைப்பின்னலுக்குச் சண்டை போட்டு காத்திருப்போம். அம்மா தலை வார வார தூக்கம் சொக்கும் அந்த காலை வேளையிலும்! அவர் இறுக்கமாக போட்ட பின்னல் பள்ளி விட்டு வந்த போதிலும் கலையாமல் இருக்கும்!

நேரமாகிவிட்டது என்று பள்ளிக்கு ஓட்டம். இல்லையென்றால், சுடுமணலில் முட்டி போட வைத்து விடுவார்கள்! அபராதமும் உண்டு. பள்ளி மணியடிப்பதற்கு முன்பே சென்று விடுவதால் அடி வாங்கிய அனுபவம் இல்லை. காலையில் சீக்கிரமே போய் வேப்பங்கொட்டையை பொறுக்கி ஒரு கூடையிலும், நெட்டிலிங்கம் மரத்திலிருந்து கருப்பு நிறத்தில் விழும் கொட்டைகளைப் பொறுக்கி இன்னொரு கூடையிலும் போட வேண்டும். தினமும் கடமையாக சர்ச்சுக்குப் போய் உள்ளே நுழைந்தவுடன் மனம் முருகனையே நினைக்கும். சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு ஒரு மூலையில் சுவற்றிலே சங்கு வைத்து அதில் இருக்கும் நீரை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பயபக்தியுடன் வகுப்புக்களுக்குச் செல்வோம்.

தினமும் காலையில் பிரேயர் நடக்கும். வரிசையாக எல்லா வகுப்பினரும், அவர்களின் ஆசிரியைகளும் நிற்க, மேடையில் ஒரு மாணவி பிரேயர் சொல்ல, நாங்கள் அதைத் திரும்பச் சொல்ல முடிந்தவுடன் ஏசப்பர் பாடலை ஒலிபரப்ப, மாணவிகள் தத்தம் வகுப்பிற்குத் திரும்பிக் கொண்டிருப்பார்கள்.


இடைவேளையின் போது பள்ளியிலேயே நொறுக்குத் தீனிகள் விற்பார்கள். முறுக்கு, மாங்கா சீசனில் வட்டமாக நறுக்கிய மாங்காயை உப்பு மற்றும் சிவப்பு மிளகாய்தூளில் ஊற வைத்தது, கடலை மிட்டாய், ஜீரா ஊறிய தேன் மிட்டாய், கமர்கட், நெல்லிக்காய், அரை நெல்லிக்காய் என்று வாயில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரங்கள்.

பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் வழியில் பள்ளி வாசலில் பலவிதமான நொறுக்குத் தீனிகள் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும்! தள்ளு வண்டியில் ஒருவர் ஐஸ்கட்டியை துருவி, அதன் மேல் கலர் கலராக சர்க்கரைத் தண்ணீரை ஊற்றித் தருவார். ஒரு உறிஞ்சலில் கலர் போய் விடும். அதையும் விடுவதில்லை. அடுத்த நாளே, தொண்டை கட்டிக் கொள்ளும் இல்லையென்றால் இருமல் வந்து விடும். ஆனாலும், ஆசை யாரை விட்டது?

ஸ்டேட் ஐஸின் பால் ஐஸ் பத்து பைசாவிற்கு கிடைக்கும். வாயில் வைத்தால் பால் மணத்துடன் இனிப்பான ஐஸ் தொண்டையில் கரையும். பெயர் தெரியாத ஐஸ் கம்பெனி வண்டிக்காரனிடமிருந்து ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் கிடைக்கும். அந்த வயதில் எல்லாமே பிடித்திருந்தது. :)

வரும் வழியில் பாட்டி ஒருவர் குழிப்பணியாரம் சுட்டு விற்றுக் கொண்டிருப்பார். அதையும் விட்டு வைத்ததில்லை. இப்படி எதையாவது சாப்பிட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்வதுமாய் -


ம்ம்ம் ...அழியாத கோலங்களாய் அக்கால நினைவுகள் ...


(தொடரும்)












Saturday, August 2, 2014

யக்ஷகானா - ஒரு இனிய மாலை அனுபவம் ...

இன்று மாலை ஆல்பனி ஹிந்து கல்ச்சுரல் சென்டரில் யக்ஷகானா 'ஸ்ரீ கிருஷ்ணா பாரிஜாத நரகாசுர மோக்ஷா' நாட்டிய நாடகம் காணும் ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 

வார ஆரம்பத்தில் கோவிலிலிருந்து ஈமெயில் வந்த போதே இந்த நிகழ்ச்சியைத் தவற விடக் கூடாது என்று நினைத்திருந்தேன். 

இந்தக் குழுவை கன்னட மக்கள் சார்பில் அழைத்து வந்திருந்தார்கள். கன்னடம் புரியாதவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ப்ரொஜெக்டரில் ஆங்கில மொழியாக்கத்தில் நாடகத்தின் கதாபாத்திரங்கள் பேசுவதின் சாராம்சத்தைப் போட்டது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நாடகத்தை ரசிக்கவும் செய்ய வைத்தது நல்ல ஐடியா.

அரங்கில் நுழையும் பொழுதே கணீரென்ற குரலுடன் ஒருவர் பாடிக் கொண்டிருக்க சத்யபாமா தன் அந்தப்புரத்துத் தோழி ஒருவரிடம் கிருஷ்ணர் பாரிஜாதப் பூவை ருக்மிணிக்கு மட்டும் எப்படி கொடுத்தார்? என்னை மதிக்கவில்லை என்று புலம்புவதைப் போன்ற வசனங்களுடன் ஆடிக் கொண்டே பின்னணியில் மிருதங்கம், பாடல் என்று அரங்கத்தையே கட்டிப் போட்டிருந்தார்கள்.

அந்தபுரத்துத் தோழி பகவான் கிருஷ்ணனை சந்தித்து சத்யபாமாவின் நிலையை எடுத்துக் கூறி பாமாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூற வருமாறு அழைக்கும் காட்சியில் அவளும், கண்ணனும், அவளுடைய கணவனும் பேசுவது போல் அமைந்த காட்சிகள் மெதுவாக நாடகத்தின் மையப்பகுதியை நோக்கி அழகாக நகர்த்திச் சென்றார்கள்.

கிருஷ்ணன் தோழனிடம் பாமாவிற்கு என்னாயிற்று, என் மேல் அவளுக்கென்ன கோபம் என கேட்டுக் கொண்டே கதவைத் திறக்குமாறு பாமாவை கெஞ்சும் காட்சிகள் வேடிக்கையாகவும், பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க வகையிலும் அமைத்திருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நரகாசுரன் தேவலோகத்தை ஆட்கொள்ளுவதும் அவரிடமிருந்து தேவர்களை காத்துத் தருமாறு தேவேந்திரன் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டுவதும் பின் பாமாவும் கிருஷ்ணருடன் தேவலோகம் சென்று நரகாசுரனை கொன்று பாமாவிற்கு பாரிஜாத மரத்தையும் காண்பிப்பது போல் அமைத்திருந்த காட்சிகளில் ...

அவர்களின் முகபாவங்கள், கால் சலங்கையுடன் சுழன்று ஆடும் காட்சிகள்,  கைகளின் மூலம் அவர்கள் செய்த பாவங்கள், கணீர் வசனங்கள்-கன்னடத்தில் இருந்தாலும் ஆங்கில மொழியாக்கத்தின் உதவியுடன் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. பாமா மற்றும் அவர் தோழியின் உடை, நகை அலங்காரங்கள் , கதகளி ஸ்டைலில் கிருஷ்ணர், நரகாசுரன், இந்திரன் கதாப்பாத்திரங்களின் உடைகள், ஒலி ஒளியமைப்புகள், மிருதங்கம் மற்றும் பாகவதரின் குரலுடன் ஒரு அழகிய தெருக்கூத்தை கண்முன்னே கொண்டு வந்து அரங்கில் இருந்த அனைவரையும் ரசிக்க வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் அக்குழுவின் சார்பில் பேசியவர் இக்கலையை வரும் சந்ததியினர்களுக்காக பலருக்கும் கற்றுத் தருவதாகவும், அமெரிக்காவில் சின்மயா மிஷன் மூலம் பல குழந்தைகளும் கற்றுக் கொள்வதாகவும், நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறினார்.

குழுவிற்கு எங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வந்தோம். அக்குழுவின் அமைப்பாளர் சென்னையில் ஆறு வருடங்கள் மயிலாப்பூரில் இருந்ததாகவும் தமிழில் பேசத் தெரியும் என்று எப்படி கதக், கதகளி, மோகினியாட்டம் கலந்து தெருக்கூத்து ஸ்டைலில் விடிய விடிய நடக்கும் நாட்டிய நாடகங்களைப் பற்றி பேசியதும் நன்றாக இருந்தது.

கன்னட நண்பர்களுக்கு நாங்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்தது குறித்து மிக்க சந்தோஷம். அனைவரும் வந்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

ஒரு அழகான மாலைப்பொழுது இனிமையாக கழிந்ததில் மிகவும் மகிழ்ச்சி எனக்கும், கணவருக்கும். சப் டைட்டிலை படித்து கதையை ஓரளவுக்குப் புரிந்து கொண்ட மகனுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு புதிய அனுபவம்.

இந்திய கலாச்சாரத்தின் சாராம்சங்களை இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்வது அவ்வளவு எளிதன்று. அதுவும் இந்தியாவைத்  தவிர வெளியிடங்களில். ஆனால் தெருக்கூத்துக்களை பாதுக்காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட மக்கள் இருப்பதும் அமெரிக்காவிற்கு அவர்களை அழைத்து வந்து இந்நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்துவதும் மிகவும் பாராட்டுக்குரியது.

குத்தாட்டம், கொலைவெறி பிடித்த ஆடல், பாடல்கள் என்று சீரழிந்து கொண்டிருக்கும் காலத்தில் சிறுவயதில் பாட்டிகளுடன் கண்டுகளித்த வில்லுப்பாட்டு, சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சி மீண்டும் நினைவுறுத்தியது.

குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் அருமையான கருத்துக்களை தெருக்கூத்துக்களின் மூலம் கேட்ட காலங்கள் எல்லாம் ...ம்ம்ம்.

(படங்களை டபுள்-கிளிக் செய்து பார்க்கவும்)

படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா



Wednesday, July 23, 2014

இம்மையில் நன்மை தருவார் கோவில்

 இன்று கோவிலில் பிரதோஷ பூஜை நடப்பதை ஈமெயிலில் பார்த்தவுடன் அம்மாவுடன் கோவிலுக்குச் சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தன.


பிரதோஷத்திற்கு மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குள் முண்டியடித்து கூட்டத்துக்குள் சென்றாலும் சுவாமி அபிஷேகங்களை பார்க்க முடிவதில்லை. அவ்வளவு கூட்டம்! சரியென்று சன்னதி வெளியில் நின்று கண்ணாடி வழியே சிறிது நாட்கள் பார்த்து திருப்திபட்டுக் கொண்டோம். கூட்டம் அதிகமாக, நாங்கள் வரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அம்மாவும் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

மேலமாசி வீதியிலிருந்து சற்று உள்ளே இருக்கும் தெருவில் அப்பாவின் சித்தி வீட்டுக்குப் பல முறை இக்கோவிலைத் தாண்டி சென்றிருந்தாலும் முதன் முறை சென்ற பொழுது இவ்வளவு அமைதியான, அழகான பழைய கோவில், இங்கு இருப்பது எப்படி தெரியாமல் போனது என்று தான் தோன்றியது! முதன் முறை இங்கு சென்றது ஒரு பிரதோஷ நாளன்று தான்.

'கிணிங்கிணிங்' மணி சத்தத்துடன் சைக்கிள்களும், ஆட்டோ , பைக் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும், கடைகளுக்குச் செல்லும் கூட்டமும் 'ஜேஜே' என்று பரபரப்பான இரைச்சலான தெருவில் இருக்கிறது கோவில்.

விசாலமான கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே சுவாமி சன்னதி. நுழைவாயிலின் இடப்பக்கத்தில் கணபதிக்கு ஒரு சன்னதி. ருத்ரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அபிஷேகமும் சிறப்பாக நடக்க, முதன்முறையாக மிக அருகில் நின்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கண்டுகளித்த பூஜை நேரங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.

சுவாமியை வலம் வருகையில் அம்மன், பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் என்று பரந்த வெளியில். அரசமரமும், வில்வமரமும் பார்த்ததாக ஞாபகம். அன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனையும் செய்தோம். நல்லா கும்பிட்டுக்கோங்க. அப்பத்தான் நல்லா படிக்க முடியும்னு சொன்னவுடனே கண்ணை இறுக்க மூடிட்டு வேண்டியதும் ஞாபகமிருக்கிறது*:) happy 
 
பிரதோஷ நாட்களில் இக்கோவிலின் நினைவு மீண்டும் மதுரைக்கே அழைத்துச் சென்று விடுகிறது!



http://www.youtube.com/watch?v=ObmIP88GY_Q


Friday, July 18, 2014

கனா காணும் காலங்கள் - 1

இன்று ஃபேஸ்புக்கில் நான் படித்த மேல்நிலைப்பள்ளி அறுபதாவது ஆண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடுவதாக சுபா மேடம் செய்தி அனுப்பி இருந்தார்கள். அவரும் அப்பள்ளியில் படித்தவர்.

பள்ளி நாட்களில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் துள்ளித் திரிந்த காலங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்!

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த பொழுது நான் படித்த பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 'பல வருடங்களுக்கு' முன் பள்ளி சென்ற நினைவுகள் மீண்டும் மனதில் எழ ...!

அது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம். கூரை வேய்ந்த இடத்தில் நடந்த வகுப்புகள் நாங்கள் படிக்கும் காலத்திலேயே கட்டிடமாக உருவெடுத்தது. வெளி நாட்டினரின் பணஉதவியால் மதிய உணவு சில குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.பெரியபெரிய வேப்பிலை, நெட்டிலிங்கம் மரங்களும், பெரணிச் செடிகளும், பல வகையான குரோட்டன்ஸ் செடிகளும், அரைநெல்லிக்காய், முருங்கை மரங்களும் ஒரு பெரிய நாவல் மரமும் புடை சூழ இருந்த பள்ளி வளாகம் அது.

பள்ளியிலேயே கன்னியாஸ்திரீகள் தங்கும் மடமும் அவர்களுக்காக சமையல் கூடமும், மாடுகள் கட்டி வைத்த தொழுவமும், ஒரு தேவாலயமும் இருந்தது. அழகிய ரோஜா தோட்டத்தையும் நன்கு பராமரித்து வைத்திருப்பார்கள். நடுவே நீல வண்ண உடையில் மாதா கையில் ஏசுவுடன் இருக்கும் ஒரு சிலையும் அங்கே இருந்தது.

பள்ளிகளுக்கே உரிய பெரிய நீல வண்ணம் அடித்த கேட். அங்கு தாமதமாக வரும் மாணவியரை பிடித்து தண்டனை கொடுக்க கையில் பிரம்புடன் வெள்ளை உடையணிந்த கண்ணாடி போட்ட வயதான ஒரு கன்னியாஸ்திரீ! பார்த்தாலே பயமாக இருக்கும் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கத்தில் இருக்கும் அறைவாசலில் ஒரு சின்ன மணி. பக்கத்தில் ஒரு கரும்பலகை. அந்த ரூமைத் தாண்டிப் போனால் அரை கிளாஸ் மாணவியருக்கான இடம். ஆங்கில மீடியம் வகுப்புகளில் கலர் கலராக பூ, பழம், காய்கறிகள் படங்கள் சுவர் முழுவதும் தொங்கி கொண்டிருக்கும். தமிழ் மீடியத்தில் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வலது கையால் அசிர்வதிக்கிற ஏசுவின் படம் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் இருக்கும். அதன் பின்னால் சாக்பீஸ் வைத்திருப்பார்கள். அதன் பால் போன்ற நிறமும், கரும்பலகையில் ஆசிரியைகள் எழுதும் பொழுது மாவுமாவாக கீழே விழும் துருவலும், முதல் வரிசையில் உட்கார்ந்தால் தலை மேல் விழுந்து வெள்ளை முடியாக இருப்பதை பார்த்து ஒருவொருக்கொருவர் சிரித்துக் கொண்டதும்...


ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


நானும் என் அக்காவும் சிறு வயதிலிருந்தே ஒரே வகுப்பில் படித்தோம். அக்கா தனியாக போக பிடிக்காமல் அடம் பிடித்ததாகவும், நான் வீட்டில் அதிக சேட்டை பண்ணிக் கொண்டிருந்ததால்!!!! அவளுக்குத் துணையாக அனுப்பியதாகவும், பிறகு அவளுடனே தொடர்ந்து பள்ளிப் போக ஆரம்பிக்க, ஆசிரியைகளும் என்னை பள்ளியில் சேர்த்து விடலாம் என்று சொல்ல, இப்படியாகத்தான் என் ஆரம்ப பள்ளிக்காலம் ஆரம்பித்திருக்கிறது. என் தங்கையும் அங்கு தான் படித்தாள்.

எங்கள் தெருவில் இருந்த சீனியர் மாணவிகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வோம். நடந்து போனால் பள்ளிக்குப் போக குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களாவது ஆகும். தெருவே அடைத்துக் கொள்கிற மாதிரி மாணவிகள் எல்லோரும் சேர்ந்து போக, வழியில் மற்ற மாணவிகளும் சேர்ந்து கொள்வார்கள். மங்களேஸ்வரி அம்மன் கோவிலில் ஒரு கும்பிடும் உண்டு.

பழையகுயவர்பாளையத்தில் ஆண்கள் நாடார் பள்ளியைத் தாண்டி ரோட்டோரமாக நடந்து போவோம். அப்போது தெரு மிகவும் அகலமாக இருந்தது. பெரிய பெரிய மரங்களும் இருந்தன. இன்றிருப்பது போல் அவ்வளவு ஜன நடமாட்டமும் வண்டிகளும் கிடையாது. இப்போது தெரு குறுகியது போல் உள்ளது. வழி நெடுக சிறிய, பெரிய, பல குடியிருப்புகளைக் கொண்ட வீடுகள். குச்சி, மச்சி வீடுகள். குழாயடியில் நன்கு துலக்கிய பளபளக்கும் பித்தளை, அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்கள். பிறகு, பளிச் என்ற நிறத்துடன் பிளாஸ்டிக் குடங்கள் என உருமாறி விட்டது

பட்டுநூல்காரர், செட்டியார், நாடார், கிறிஸ்தவர், அத்து பல்கார் என்று சௌராஷ்ட்ரமும், தமிழும் கலந்து பேசும் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என்று ஒரு கதம்பமாக குடும்பங்கள் இருக்கும் தெருக்களை கடந்து போவோம்.

நாடார் பள்ளிக்கு எதிரில் வீட்டின் மாடியில், சேமியா காயப் போட்டிருப்பார்கள். பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பாயசம் தவிர வேறு எதற்கும் சேமியா சேர்க்காத காலம்! நெசவு நெய்பவர்கள் வெளியில் நூலைப் போட்டு சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வாசலில் வத்தல், அரிசி, வடாகம், அப்பளம் என்று எதையாவதைப் போட்டு காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தலை முடியை காய வைத்துக் கொண்டோ, பின்னலைப் போட்டுக் கொண்டோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் ஒண்ணுக்குப் போய்க் கொண்டிருக்கும். தெரு நாய்கள் இங்கேயும் அங்கேயும் சுற்றிக் கொண்டிருக்கும்-இப்படி பல காட்சிகளை தினமும் கடந்து சென்றிருக்கிறோம்.

எங்கள் பள்ளிக்கு பாலரெங்கபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ராம் தியேட்டர் பக்கத்திலிருந்தெல்லாம் படிக்க வந்தார்கள். மதிய நேரத்தில் சுடச்சுட அம்மா கொண்டு வந்து சாதத்தை கையில் உருட்டி கொடுக்க, நாங்களும் எங்கள் தெரு மாணவிகளும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவோம். மோதிர அப்பளத்தை விரலில் மாட்டிக் கொண்டு, ஒவ்வொரு கவளமாக சாப்பிட்டு முடிக்க, மதிய வகுப்புகள் ஆரம்பமாகும். அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவெடுத்துக் கொண்டு வருவார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை. பெற்றோருக்கும் நேரமில்லை! பள்ளிகளும் அனுமதிப்பதில்லை. சாப்பிட்டு முடித்த பின் மீதமிருக்கும் தண்ணீரை மணலில் கொட்டி அது காணாமல் போவதை பார்த்து ஆனந்தப்பட்டதெல்லாம்...




ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


Thursday, July 17, 2014

லதா புராணம் 176-185

- என் முகநூல் பக்கங்களில் இருந்து....

காலையில் ஆர்ப்பாட்டத்துடன் முதல்வர் பதவி 

ஏற்க வந்த AAP AK போல் 

ஒளி வட்டத்துடன் உலா வந்தாய் !

மதியமே பனியாய் பொழிந்து 

தெருவில் போராட்டம் நடத்திய AAP AK போல் 

மக்களை அலைக்கழித்தாய்!

மாலைக் குளிரில்

பதவியைத் தூக்கி எறிந்து

மக்களின் நம்பிக்கைகளை

உறைய வைத்த AAP AK போல்

உறைபனியும் ஆனாய்!

போதும் உன் அரசியல் விளையாட்டு !

உன்னுடன் 'மோதி'ப் பார்க்க யாரால் இயலும்???



லதா புராணம் #176



நதிகளும் 

பெண் பெயர்களை

சுமப்பதாலோ என்னவோ

கயமைப் பேய்கள்

அதையும்

விட்டு வைப்பதில்லை !

லதா புராணம் #177



சூடான தோசைக் கல்லுல 

பொடிசா நறுக்குன வெங்காயத்தைத் தூவி

அதுக்கு மேலே ரவா தோசை மாவை தெளிச்சு விட்டு

ஒரு சுத்து எண்ணைய ஊத்தி 

அது 'ஜிவுஜிவு'ன்னு மாவோட சேர்ந்து வெந்ததும் 

அப்பிடியே ஒரு பாதியா மடிச்சு

இலைத்தட்டு மேலே வச்சு

ஓரத்தில மொருமொருன்னு இருக்கிற தோசைய கிள்ளி

தேங்காய் சட்னியில பொரட்டி

சாம்பார்ல தோச்சு

அப்பிடியே சாப்பிடுவேனே!!!! 

லதா புராணம் #178



இனிப்பைக் கண்டவுடன் 

மான் போல் துள்ளும் 

உள்ளம். 

இனிப்பை உண்டவுடன் 

நாவில் தோன்றும் 

இன்பம்.

இனிப்பான செய்தியைக்

கேட்டவுடன்

உவகை கொள்ளும்

இந்நாள் ஓர் 'இனிய' நாள்!

லதா புராணம் #179




மதுரை வெயிலுக்கு 

ஹீட்டரை மாற்றிப் புலரும் காலை வேளையில்,

அந்தக் குளிரிலும் 'புஸ்சு புஸ்சு' வென்று ஓடிக்கொண்டு 

போகும் மக்களைப் பார்க்கும் பொழுது

வரும் உணர்ச்சி சொல்ல வைக்கும்

அட காட்டான்களா! இந்தக் குளிரிலும் ஓடணுமா என்று !!!!

லதா புராணம் #180



பனிமேகங்களிடம் 

சிக்கி

'பரிதி' 

பரிதவிப்பு 

லதா புராணம் #181



அடக் கடவுளே! 

மார்ச் மாதம் ஆரம்பிக்கப் போகிறது

இன்னும் ஜனவரி மாதிரி 

குளிரும், பனியும்! 

போலர் வோர்ட்டெக்ஸ்-அ நெனச்சா ...

போதும் போதும் -- இது மேற்கில் !

இன்னும் ஏப்ரல் கூட வரல

வெயில் காந்துது

அதுக்குள்ளே தண்ணீர் பிரச்னை வேற 

அக்னி நட்ச்சத்திரத்தை நெனச்சா ...

போதும் போதும் -- இது கிழக்கில் !

-இயற்கையின் திருவிளையாடல்கள் 

லதா புராணம் #182



உன்னைத் தொலைத்து 

விட்டதாக நினைத்து

உன் நினைவுகளில் 

வாழ்கின்ற எங்களை 

விட்டுச் செல்ல 

மனமில்லாமல்

மீண்டும் வந்தனையோ?

-Polar Vortex 

லதா புராணம் #183



நீல வானில் 

'தகதக'வென 

ஜொலிக்கும் 

கதிரவனின் 

திவ்ய தரிசனத்தில் 

குளிர்காலைப் பொழுது!

-வாழ்வு தொடங்குமிடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே ...

லதா புராணம் #184



தட்டில் சுவையான போளியல் 

தரையில் எடை பார்க்கும் எந்திரம் 

நடுவில் நான்!

இங்கி பிங்கி பாங்கி ...

லதா புராணம் #185


அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...