Monday, April 14, 2014

மீனாக்ஷி எனும் அருள் மங்கையின் தூங்கா நகரம் ...

மதுரையில பிறந்துட்டு மீனாக்ஷிய பார்க்காம போனா மனசு ஒத்துக்குமா இல்ல நிம்மதியாத் தான் இருக்க முடியுமா???

ஊருக்குப் புறப்பட சில தினங்களே இன்னுமிருக்க ஐயப்ப, செவ்வாடை, முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்குமே என்று காரணங்களைச் சொல்லி ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு மேல் கோவிலுக்குப் போனால் நிம்மதியாக, அமைதியாக கண் குளிர அம்மனை தரிசித்து விட்டு வரலாம் என்று ஒரு நன்னாள் இரவில் புறப்பட்டோம்.

அம்மன் சன்னதி வாசலில் அவ்வளவு கூட்டம்! தப்பு கணக்கு போட்டு விட்டோமோ?

செருப்பு டோக்கனை வாங்கிக் கொண்டு கேமரா இருக்கா, செல்போன் இருக்கா என்று கேட்டு விட்டு செக்யூரிட்டி கதவு வழியாக உள்ளே விட்டார்கள். மதம் எனும் விஷம் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து பொல்லாத சதிகளுக்கு பயந்து இப்படி ஒரு நிலைமை வந்திருப்பது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

'கம்'மென்று மல்லிகை, பிச்சிப் பூ, கொழுந்து, செவ்வந்தி மாலைகளின் வாசனையை முகர்ந்து கொண்டே பிள்ளையாரையும், முருகனையும் தரிசித்து விட்டு, ஜெகஜோதியாக இருந்த வளையல்கடைகளையும், குட்டி யானையையும் கடந்து விபூதி பிள்ளையார் தலையில் விபூதியை பூசி,

முகத்தில் அடிக்கிராற்போல் சிவப்பும், வெள்ளை வர்ணமும் அடித்த தெப்பக்குள படிகளில் சீடை, முறுக்கு தின்று கொண்டே வீட்டு விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் நடுத்தர வயதினர்களையும், சமீபத்தில் திருமணமாகி புது தாலி மெருகு குறையாமல் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இளம் தம்பதியர்களையும், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களையும், செல்போனில் கோபுரத்தை படம் எடுப்பது போல் இளம்பெண்களை 'கண்காணித்து' கொண்டிருந்தவர்களையும் பார்த்துக் கொண்டே,

நீரில்லாமல் வறண்ட குளத்தில் பொற்றாமரை...ம்ம்ம் குளம் நிரம்பியிருந்தால் பார்க்க அழகாக இருந்திருக்கும் என்று நினைத்தவாறே கோபுரங்களின் அழகை ரசித்துக் கொண்டே ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி உள்ளே சென்றோம்.

அன்று மலையத்வஜ பாண்டியனின் மகள் அலங்காரம் பற்றி கேட்கவே வேண்டாம். மதுரைக்கே படி அளப்பவள்! அழகு சுந்தரியாக பல வித மலர்களைச் சூடிக் கொண்டு தீப விளக்கொளியில் அருமையான தரிசனம்!

குங்குமத்தை வாங்கிக் கொண்டு, காசு தேறுமா தேறாதா என்று பார்த்துக் கொண்டிருந்தவரையும், கூட்டத்தை சமாளிக்க காவல் காத்துக் கொண்டிருந்தவர்களையும், பெரிய்ய்ய்ய்ய்ய உண்டியலையும் கடந்து முக்குறுணி விநாயகரை கும்பிட்டுக் கொண்டே இருக்கும் பொழுதே சன்னதி மூடப் போறாங்க என்றவுடன் மொத்த ஜனமும் சுந்தரேஸ்வரரை பார்க்க ஓட்டம்.

இத்தனை நேரத்திற்குப் பிறகும் திருவிழா போலக் கூட்டம் அங்கே! கோவில் மணிகள் 'ணங் ணங்' என்றடிக்க இதுவரை கண்டிராத இரவு பூஜை. அடிச்சு பிடிச்சு பார்த்த பரவசத்தில் வெளியே வரும் பொழுது ஒருவர் பால் தூக்குச் சட்டியை கொடுத்து அம்மன் சன்னதியில் பள்ளியறை பூஜை நடக்க போகிறது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்.

ஆஹா, கரும்பு தின்ன கசக்குமா என்ன??? அதற்குள் ஒரு பட்டர் பூமாலைக் கூடைகள் ஏந்தி வர, இன்னுமொருவர் சடாரி, விளக்குகள் என்று சன்னதி வாசலில் நிற்க, தீவட்டி முன்னே செல்ல, யானை, நாதஸ்வரம், தவில், உற்சவமூர்த்தி சுந்தரேஸ்வரருடன் சன்னதியை வலம் வந்து அம்மன் சன்னதிக்குள் நுழைய ஏற்கெனவே ஒரு கூட்டம் இடம் போட்டு உட்கார்ந்திருந்தது. நீங்க முன்னாடி போங்கம்மா என்றவுடன் பாலை அய்யரிடம் கொடுத்து விட்டு ஆவலுடன் அடுத்து என்ன பூஜையோ என்று பார்த்தால், அம்மன் அணிந்திருந்த மாலைகளை எடுத்து விட்டு புது மல்லிகை, பிச்சிப்பூ, இன்னும் அதிவாசனை தரும் மலர்களுடன் அம்மன் உற்சவசிலைக்கு சில பூஜைகள்.

உற்சவ மூர்த்திகள் பள்ளியறை சன்னதியில் வைக்கப்பட்டு வேதங்கள் முழங்க, நைவேத்தியங்கள், பல வித தீபாரதனைகள் என்று என் வாழ்வில் கண்டிராத பூஜையை கண்டதில் எனக்கும் மகளுக்கும் பேரானந்தம்!!

பக்திப் பரவசமாய் கூட்டம்! பலரும் பாடல்களைப் பாடிக் கொண்டே!

இரவு பூஜைக்கு வந்திருந்த அனைவரையும் வேறு வாசல் வழியே அனுப்பி தொன்னையில் பிரசாதமும் கொடுத்து ஒரு வழியாக வெளியில் வரும் பொழுது இரவு பத்தரைக்கு மேல் இருக்கும்!

அம்மன் சன்னதி வந்து காலணிகளை போட்டுக் கொண்டு ஹோட்டல் மனோரமாவில் சூடாக பால் குடித்து விட்டு குப்தா ஸ்டோர்ஸில் சில சாமான்களையும் வாங்கிக் கொண்டு அந்த நேரத்திலும் புத்துணர்வோடு இருந்த மதுரை மக்களை பார்த்துக் கொண்டே வீடு வந்து சேரும் பொழுது இரவு 11:30க்கும் மேல்.

போலீஸ் பாதுகாப்பு மிக நன்றாக இருந்தது! கிட்டத்தட்ட நள்ளிரவைத் தொடும் நேரம். ஆனால், கோவிலைச் சுற்றி இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை!

லேட்டா கோவிலுக்குப் போனாலும் லேட்டஸ்ட் பூஜையை பார்த்த திருப்தியுடன் ஊருக்கு வந்து சேர்ந்தோம்!


படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா 

2 comments:

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...