Friday, July 18, 2014

கனா காணும் காலங்கள் - 1

இன்று ஃபேஸ்புக்கில் நான் படித்த மேல்நிலைப்பள்ளி அறுபதாவது ஆண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடுவதாக சுபா மேடம் செய்தி அனுப்பி இருந்தார்கள். அவரும் அப்பள்ளியில் படித்தவர்.

பள்ளி நாட்களில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் துள்ளித் திரிந்த காலங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்!

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த பொழுது நான் படித்த பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 'பல வருடங்களுக்கு' முன் பள்ளி சென்ற நினைவுகள் மீண்டும் மனதில் எழ ...!

அது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம். கூரை வேய்ந்த இடத்தில் நடந்த வகுப்புகள் நாங்கள் படிக்கும் காலத்திலேயே கட்டிடமாக உருவெடுத்தது. வெளி நாட்டினரின் பணஉதவியால் மதிய உணவு சில குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.பெரியபெரிய வேப்பிலை, நெட்டிலிங்கம் மரங்களும், பெரணிச் செடிகளும், பல வகையான குரோட்டன்ஸ் செடிகளும், அரைநெல்லிக்காய், முருங்கை மரங்களும் ஒரு பெரிய நாவல் மரமும் புடை சூழ இருந்த பள்ளி வளாகம் அது.

பள்ளியிலேயே கன்னியாஸ்திரீகள் தங்கும் மடமும் அவர்களுக்காக சமையல் கூடமும், மாடுகள் கட்டி வைத்த தொழுவமும், ஒரு தேவாலயமும் இருந்தது. அழகிய ரோஜா தோட்டத்தையும் நன்கு பராமரித்து வைத்திருப்பார்கள். நடுவே நீல வண்ண உடையில் மாதா கையில் ஏசுவுடன் இருக்கும் ஒரு சிலையும் அங்கே இருந்தது.

பள்ளிகளுக்கே உரிய பெரிய நீல வண்ணம் அடித்த கேட். அங்கு தாமதமாக வரும் மாணவியரை பிடித்து தண்டனை கொடுக்க கையில் பிரம்புடன் வெள்ளை உடையணிந்த கண்ணாடி போட்ட வயதான ஒரு கன்னியாஸ்திரீ! பார்த்தாலே பயமாக இருக்கும் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கத்தில் இருக்கும் அறைவாசலில் ஒரு சின்ன மணி. பக்கத்தில் ஒரு கரும்பலகை. அந்த ரூமைத் தாண்டிப் போனால் அரை கிளாஸ் மாணவியருக்கான இடம். ஆங்கில மீடியம் வகுப்புகளில் கலர் கலராக பூ, பழம், காய்கறிகள் படங்கள் சுவர் முழுவதும் தொங்கி கொண்டிருக்கும். தமிழ் மீடியத்தில் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வலது கையால் அசிர்வதிக்கிற ஏசுவின் படம் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் இருக்கும். அதன் பின்னால் சாக்பீஸ் வைத்திருப்பார்கள். அதன் பால் போன்ற நிறமும், கரும்பலகையில் ஆசிரியைகள் எழுதும் பொழுது மாவுமாவாக கீழே விழும் துருவலும், முதல் வரிசையில் உட்கார்ந்தால் தலை மேல் விழுந்து வெள்ளை முடியாக இருப்பதை பார்த்து ஒருவொருக்கொருவர் சிரித்துக் கொண்டதும்...


ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


நானும் என் அக்காவும் சிறு வயதிலிருந்தே ஒரே வகுப்பில் படித்தோம். அக்கா தனியாக போக பிடிக்காமல் அடம் பிடித்ததாகவும், நான் வீட்டில் அதிக சேட்டை பண்ணிக் கொண்டிருந்ததால்!!!! அவளுக்குத் துணையாக அனுப்பியதாகவும், பிறகு அவளுடனே தொடர்ந்து பள்ளிப் போக ஆரம்பிக்க, ஆசிரியைகளும் என்னை பள்ளியில் சேர்த்து விடலாம் என்று சொல்ல, இப்படியாகத்தான் என் ஆரம்ப பள்ளிக்காலம் ஆரம்பித்திருக்கிறது. என் தங்கையும் அங்கு தான் படித்தாள்.

எங்கள் தெருவில் இருந்த சீனியர் மாணவிகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வோம். நடந்து போனால் பள்ளிக்குப் போக குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களாவது ஆகும். தெருவே அடைத்துக் கொள்கிற மாதிரி மாணவிகள் எல்லோரும் சேர்ந்து போக, வழியில் மற்ற மாணவிகளும் சேர்ந்து கொள்வார்கள். மங்களேஸ்வரி அம்மன் கோவிலில் ஒரு கும்பிடும் உண்டு.

பழையகுயவர்பாளையத்தில் ஆண்கள் நாடார் பள்ளியைத் தாண்டி ரோட்டோரமாக நடந்து போவோம். அப்போது தெரு மிகவும் அகலமாக இருந்தது. பெரிய பெரிய மரங்களும் இருந்தன. இன்றிருப்பது போல் அவ்வளவு ஜன நடமாட்டமும் வண்டிகளும் கிடையாது. இப்போது தெரு குறுகியது போல் உள்ளது. வழி நெடுக சிறிய, பெரிய, பல குடியிருப்புகளைக் கொண்ட வீடுகள். குச்சி, மச்சி வீடுகள். குழாயடியில் நன்கு துலக்கிய பளபளக்கும் பித்தளை, அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்கள். பிறகு, பளிச் என்ற நிறத்துடன் பிளாஸ்டிக் குடங்கள் என உருமாறி விட்டது

பட்டுநூல்காரர், செட்டியார், நாடார், கிறிஸ்தவர், அத்து பல்கார் என்று சௌராஷ்ட்ரமும், தமிழும் கலந்து பேசும் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என்று ஒரு கதம்பமாக குடும்பங்கள் இருக்கும் தெருக்களை கடந்து போவோம்.

நாடார் பள்ளிக்கு எதிரில் வீட்டின் மாடியில், சேமியா காயப் போட்டிருப்பார்கள். பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பாயசம் தவிர வேறு எதற்கும் சேமியா சேர்க்காத காலம்! நெசவு நெய்பவர்கள் வெளியில் நூலைப் போட்டு சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வாசலில் வத்தல், அரிசி, வடாகம், அப்பளம் என்று எதையாவதைப் போட்டு காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தலை முடியை காய வைத்துக் கொண்டோ, பின்னலைப் போட்டுக் கொண்டோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் ஒண்ணுக்குப் போய்க் கொண்டிருக்கும். தெரு நாய்கள் இங்கேயும் அங்கேயும் சுற்றிக் கொண்டிருக்கும்-இப்படி பல காட்சிகளை தினமும் கடந்து சென்றிருக்கிறோம்.

எங்கள் பள்ளிக்கு பாலரெங்கபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ராம் தியேட்டர் பக்கத்திலிருந்தெல்லாம் படிக்க வந்தார்கள். மதிய நேரத்தில் சுடச்சுட அம்மா கொண்டு வந்து சாதத்தை கையில் உருட்டி கொடுக்க, நாங்களும் எங்கள் தெரு மாணவிகளும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவோம். மோதிர அப்பளத்தை விரலில் மாட்டிக் கொண்டு, ஒவ்வொரு கவளமாக சாப்பிட்டு முடிக்க, மதிய வகுப்புகள் ஆரம்பமாகும். அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவெடுத்துக் கொண்டு வருவார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை. பெற்றோருக்கும் நேரமில்லை! பள்ளிகளும் அனுமதிப்பதில்லை. சாப்பிட்டு முடித்த பின் மீதமிருக்கும் தண்ணீரை மணலில் கொட்டி அது காணாமல் போவதை பார்த்து ஆனந்தப்பட்டதெல்லாம்...




ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


2 comments:

  1. கதை முடிந்தது ஆனால் இறுதி வரை தங்கள் படித்த பள்ளியின் பெயரை குறிப்பிடவில்லை .

    இருப்பினும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது, இது தூய மரியன்னை ஆண்கள் உயர்நிலை பள்ளிக்கு எதிரில் இருக்கும் பள்ளி போல் தெரிகிறது ...

    ReplyDelete
    Replies
    1. கதைய நீங்களா முடிச்சுகிட்டா எப்படி?

      Delete

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...