Saturday, August 2, 2014

யக்ஷகானா - ஒரு இனிய மாலை அனுபவம் ...

இன்று மாலை ஆல்பனி ஹிந்து கல்ச்சுரல் சென்டரில் யக்ஷகானா 'ஸ்ரீ கிருஷ்ணா பாரிஜாத நரகாசுர மோக்ஷா' நாட்டிய நாடகம் காணும் ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 

வார ஆரம்பத்தில் கோவிலிலிருந்து ஈமெயில் வந்த போதே இந்த நிகழ்ச்சியைத் தவற விடக் கூடாது என்று நினைத்திருந்தேன். 

இந்தக் குழுவை கன்னட மக்கள் சார்பில் அழைத்து வந்திருந்தார்கள். கன்னடம் புரியாதவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ப்ரொஜெக்டரில் ஆங்கில மொழியாக்கத்தில் நாடகத்தின் கதாபாத்திரங்கள் பேசுவதின் சாராம்சத்தைப் போட்டது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நாடகத்தை ரசிக்கவும் செய்ய வைத்தது நல்ல ஐடியா.

அரங்கில் நுழையும் பொழுதே கணீரென்ற குரலுடன் ஒருவர் பாடிக் கொண்டிருக்க சத்யபாமா தன் அந்தப்புரத்துத் தோழி ஒருவரிடம் கிருஷ்ணர் பாரிஜாதப் பூவை ருக்மிணிக்கு மட்டும் எப்படி கொடுத்தார்? என்னை மதிக்கவில்லை என்று புலம்புவதைப் போன்ற வசனங்களுடன் ஆடிக் கொண்டே பின்னணியில் மிருதங்கம், பாடல் என்று அரங்கத்தையே கட்டிப் போட்டிருந்தார்கள்.

அந்தபுரத்துத் தோழி பகவான் கிருஷ்ணனை சந்தித்து சத்யபாமாவின் நிலையை எடுத்துக் கூறி பாமாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூற வருமாறு அழைக்கும் காட்சியில் அவளும், கண்ணனும், அவளுடைய கணவனும் பேசுவது போல் அமைந்த காட்சிகள் மெதுவாக நாடகத்தின் மையப்பகுதியை நோக்கி அழகாக நகர்த்திச் சென்றார்கள்.

கிருஷ்ணன் தோழனிடம் பாமாவிற்கு என்னாயிற்று, என் மேல் அவளுக்கென்ன கோபம் என கேட்டுக் கொண்டே கதவைத் திறக்குமாறு பாமாவை கெஞ்சும் காட்சிகள் வேடிக்கையாகவும், பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க வகையிலும் அமைத்திருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நரகாசுரன் தேவலோகத்தை ஆட்கொள்ளுவதும் அவரிடமிருந்து தேவர்களை காத்துத் தருமாறு தேவேந்திரன் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டுவதும் பின் பாமாவும் கிருஷ்ணருடன் தேவலோகம் சென்று நரகாசுரனை கொன்று பாமாவிற்கு பாரிஜாத மரத்தையும் காண்பிப்பது போல் அமைத்திருந்த காட்சிகளில் ...

அவர்களின் முகபாவங்கள், கால் சலங்கையுடன் சுழன்று ஆடும் காட்சிகள்,  கைகளின் மூலம் அவர்கள் செய்த பாவங்கள், கணீர் வசனங்கள்-கன்னடத்தில் இருந்தாலும் ஆங்கில மொழியாக்கத்தின் உதவியுடன் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. பாமா மற்றும் அவர் தோழியின் உடை, நகை அலங்காரங்கள் , கதகளி ஸ்டைலில் கிருஷ்ணர், நரகாசுரன், இந்திரன் கதாப்பாத்திரங்களின் உடைகள், ஒலி ஒளியமைப்புகள், மிருதங்கம் மற்றும் பாகவதரின் குரலுடன் ஒரு அழகிய தெருக்கூத்தை கண்முன்னே கொண்டு வந்து அரங்கில் இருந்த அனைவரையும் ரசிக்க வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் அக்குழுவின் சார்பில் பேசியவர் இக்கலையை வரும் சந்ததியினர்களுக்காக பலருக்கும் கற்றுத் தருவதாகவும், அமெரிக்காவில் சின்மயா மிஷன் மூலம் பல குழந்தைகளும் கற்றுக் கொள்வதாகவும், நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறினார்.

குழுவிற்கு எங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வந்தோம். அக்குழுவின் அமைப்பாளர் சென்னையில் ஆறு வருடங்கள் மயிலாப்பூரில் இருந்ததாகவும் தமிழில் பேசத் தெரியும் என்று எப்படி கதக், கதகளி, மோகினியாட்டம் கலந்து தெருக்கூத்து ஸ்டைலில் விடிய விடிய நடக்கும் நாட்டிய நாடகங்களைப் பற்றி பேசியதும் நன்றாக இருந்தது.

கன்னட நண்பர்களுக்கு நாங்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்தது குறித்து மிக்க சந்தோஷம். அனைவரும் வந்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

ஒரு அழகான மாலைப்பொழுது இனிமையாக கழிந்ததில் மிகவும் மகிழ்ச்சி எனக்கும், கணவருக்கும். சப் டைட்டிலை படித்து கதையை ஓரளவுக்குப் புரிந்து கொண்ட மகனுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு புதிய அனுபவம்.

இந்திய கலாச்சாரத்தின் சாராம்சங்களை இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்வது அவ்வளவு எளிதன்று. அதுவும் இந்தியாவைத்  தவிர வெளியிடங்களில். ஆனால் தெருக்கூத்துக்களை பாதுக்காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட மக்கள் இருப்பதும் அமெரிக்காவிற்கு அவர்களை அழைத்து வந்து இந்நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்துவதும் மிகவும் பாராட்டுக்குரியது.

குத்தாட்டம், கொலைவெறி பிடித்த ஆடல், பாடல்கள் என்று சீரழிந்து கொண்டிருக்கும் காலத்தில் சிறுவயதில் பாட்டிகளுடன் கண்டுகளித்த வில்லுப்பாட்டு, சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சி மீண்டும் நினைவுறுத்தியது.

குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் அருமையான கருத்துக்களை தெருக்கூத்துக்களின் மூலம் கேட்ட காலங்கள் எல்லாம் ...ம்ம்ம்.

(படங்களை டபுள்-கிளிக் செய்து பார்க்கவும்)

படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா



No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...