Thursday, October 30, 2014

Halloween Day

கனடாவிலும் அமெரிக்காவிலும் மற்றுமொரு பிரபலமான நாள் அக்டோபர் 31.

இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும் நாளாக ஆரம்பித்து கால சுழற்சியில் இன்று மிட்டாய், சாக்லேட் கிடைக்கும் இனிப்பான நாள் என்று குழந்தைகளும், பார்ட்டி கொண்டாட இன்னுமொரு நாள் என பெரியவர்களும் கார்ப்பரேட் கடைகளின் சித்தாந்தத்தில் உழலும் நாளாகி விட்டது இந்த மாதக்கடைசியன்று வரும் Halloween Day!

இலையுதிர் காலத்தின் தொடக்கமாக அக்டோபர் மாதம் முதலே பெரும்பாலான வீடுகளில் பெரிய பெரிய பூசணிக்காய்கள், காய்ந்த மக்காச்சோள இலைகளை வைத்தும், வீட்டின் முன் வயற்காட்டில் பறவைகளை விரட்ட வைத்திருக்கும் பொம்மைகளை கொண்டு அலங்கரித்தும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிலந்தி வலை,பேய் உருவங்கள், எலும்புக் கூடு, கல்லறை, ஆரஞ்சு வண்ண விளக்குகள் என்றும் வீட்டின் முன் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.


அந்தி சாய்ந்தவுடன் குழந்தைகள் சிலர் மிக அழகாகவும், சிலர் மிகவும் கோரமாகவும் உடையணிந்து கொண்டு வீட்டுக்கு வீடு சென்று trick or treat  என சொல்ல, பெரும்பாலும் சாக்லேட்ஸ் கொடுக்கிறார்கள். சிலர் காசும் கொடுப்பதுண்டு.

முதல் வருடம் மகளுடன் சென்று ஒரு பை நிறைய சாக்லேட்ஸ் கொண்டு வந்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு தான் தெரிந்தது சில குழந்தைகள் பல மாதங்களுக்கு தங்களுக்கு வேண்டிய இனிப்புக்களை சேகரிப்பார்கள் என்று! பிறகு ஏன் டென்டல் இன்சூரன்ஸ் பில் ஏறாது?

குழந்தைகள் நண்பர்களுடன் வீடு வீடாக போய் விட்டு வருவதும் உண்டு. இந்த நாளில் வீட்டை அலங்கரித்து பார்ட்டி கொண்டாடுபவர்கள் பலர்! பெரியவர்களும் இந்த நாளுக்கென பிரயேத்திகமாக விற்கும் உடைகளை போட்டுக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். பப்களில் இதற்கென தனி அலங்காரங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. குடிமகன்களுக்கும் கொண்டாட்டம்!

அன்றைய தினத்தை பள்ளிகளிலும் நன்கு கொண்டாடுகிறார்கள். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைகள் வரை  அத்தினத்தின் கொண்டாட்டங்களை காணலாம்.
ஆசிரியர்களும் வேடமிட்டு குழந்தைகளுடன் ஊர்வலம் போக குழந்தைகள் குஷியாக என எல்லா வயதினரும் கொண்டாடும் ஒரு தினம்!

அமெரிக்காவில் எந்த ஒரு தினத்தையும் லாப நோக்கில் பார்த்து அந்த நாளுக்குரிய உண்மையான நோக்கம் மறைந்து வியாபாரமே முன்னிற்கிறது. மக்களும் அதற்குப் பழகி விட்டார்கள்!

பார்ட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் பூசணிக்காய் நிறத்தில்.  சாக்லேட்ஸ், உடைகள், அலங்காரங்கள், கார்டுகள் என்று கடைகளிலும் குழந்தைப் பட்டாளங்கள் கூட்டம். இந்தப் பரவசம் எல்லாம் கொண்டு வந்த சாக்லேட் மூட்டையை பிரித்து போட்டு தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டவுடன் போய் விடும். அடுத்த நாள் பள்ளிக்கும், வேலைக்கும் எப்போதும் போல போக வேண்டியது தான்:(

காவல் துறையினரும் இருட்டில் குழந்தைகளைத் தனியாக அனுப்ப வேண்டாம், குழந்தைகள் கொண்டு வரும் இனிப்புகள், பழங்களை பெற்றோர் ஒரு முறை பார்த்து விட்டு அவர்களுக்கு கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். சில சைக்கோக்கள் பழங்களில் ஊசி வைத்துக் கொடுப்பதும், இனிப்புகளில் குழந்தைகளுக்கு ஒவ்வாத மருந்துகளை சேர்த்துக் கொடுப்பதும் கேட்கவே கலக்கமாகத் தான் இருக்கிறது!

தெருக்கள் முழுவதும் சாக்லேட் பைகளுடன் அலங்கரித்துக் கொண்டு ஓடித்திரியும் குழந்தைகளை காண்பதும் இனிமையான அனுபவம்!

ட்ரிக் ஆர் ட்ரீட் ??



Monday, October 13, 2014

Back to School ...

என் குழந்தைகளின் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் பெற்றோர்களுக்கான 'Back to School night' நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அவ்வருடத்தில் குழந்தைகள் படிக்கப் போகும் பாடங்கள், அவர்கள் செய்ய வேண்டியது என்ன, பெற்றோர்களுக்கு அதிலிருக்கும் பங்கு என்று ஒவ்வொரு ஆசிரியரும் கூறுவதைக் கேட்டு விட்டு காலை முதல் மாலை வரை பள்ளியில் நடக்கும் வெவ்வேறு வகுப்புகளுக்கு குழந்தைகள் செல்வதை பெற்றோர்களும் உணர்ந்து கொண்டு பெற்றோர்களுக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்டுக் கொள்ளும் அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட !

இந்த வருடமும் மாலை ஆறரை மணிக்குத் தான் இந்நிகழ்ச்சி ஆரம்பம் என்றாலும் கார் பார்க்கிங் பிரச்சினையைத் தவிர்க்க சீக்கிரமே சென்று விட்டேன். என்னைப் போலவே பலரும் வந்து காத்திருந்தார்கள். Parent Teacher Asso. கார்டு வாங்கிக் கொண்டு மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வந்ததும் மணியடிக்கும் முன் அவரவர் home room-க்குச் சென்று அமர வேண்டும், அப்படியே பெற்றோர்களும் செய்ய வேண்டும் என்று அங்கு போய் உட்கார, வகுப்பிலிருந்த ஆசிரியரும் அனைவருக்கும் அவர்கள் குழந்தைகள் கையால் எழுதிய அவர்களுடைய schedule-ஐ எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதில் விவரமாக எந்த வகுப்புகள் எந்த ரூமிற்குப் போக வேண்டும், பள்ளியின் வரைபடம் என்று அனைத்து தகவல்களும் இருந்தது.

சிறிது நேரத்தில் வகுப்புக்களில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி வழியாக பள்ளி முதல்வர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று தங்கள் குழந்தைகளின் வகுப்பறைகளையும், ஆசிரியர்களையும் பார்த்து விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு மாணவர்கள் படிப்பில் பெற்றவர்களும் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் மணியடித்தவுடன் அவனுடைய ஆங்கில வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பு முழுவதும் ஆங்கில புத்தகங்கள்! மெல்லிய குரலில் அழகாக பேசிய ஆசிரியையும் இந்த வருடம் என்ன என்ன படிக்க போகிறோம், நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் இந்தப் புத்தகங்களை படிக்கலாம் என்று ஒரு ஆறு புத்தகங்களை காண்பித்தார். மாணவர்களின் மார்க்குகள் எல்லாம் ஹோம்வொர்க, வகுப்பில் அவர்களின் பங்களிப்பு, அசைன்மெண்ட், தேர்வுகள் அடிப்படையில் என்று ஒவ்வொன்றையும் விரிவாகச் சொல்லி கூடவே அவருடைய ஈமெயில், போன் நம்பரையும் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் குழந்தைக்குப் பாடம் புரியவில்லை என்றால் மாலை பள்ளி முடிந்ததும் இருந்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். நீங்களும் அவர்களுடன் பேசுங்கள் என்று சொல்லி முடிக்கும் போது அடுத்த வகுப்புக்குச் செல்ல மணியடிக்க நாங்களும் அந்த அறையைத் தேடிப் போனோம்.

நல்ல வேளை , கணிதம் காலையிலேயே இருக்கிறது. அந்த ஆசிரியையும் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய மறப்பது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. அது தொடர்ந்தால் தான் பிரச்னை. அது மட்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே எட்டாம் வகுப்பு கணிதம் படிக்கலாம். அதே போல் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கணிதம் படிக்கலாம். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். ஏழாம் வகுப்பு கணிதமே படிக்கட்டும். எட்டாம் வகுப்பு கணிதம் படித்தாலும் ஏழாம் வகுப்பு தேர்வையும் அவர்கள் எழுத வேண்டும் என்று ஒரு ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக் காண்பித்தார். இந்த டீச்சர என் பையன் ஈசியா சமாளிச்சிடுவான்னு நினைத்துக் கொண்டேன் :)

அடுத்தது, டெக்னாலஜி வகுப்பு. அதற்கு மாடியிலிருந்து இறங்கி கொஞ்சம் நடக்க வேண்டும்! வகுப்பறைகளுக்குச் செல்ல மாணவர்களுக்கு நான்கு நிமிடங்கள் கொடுக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களை லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு அடுத்த வகுப்பிற்குப்  போய் விட வேண்டும். அடிக்கடி வகுப்புகளுக்குத் தாமதமாக சென்றால் ஹால் பிரின்சிபாலை பார்க்க வேண்டும் :( கஷ்டம் தான் பசங்களுக்கு!

அந்த ஆசிரியர் சிரித்த முகத்துடன் 'கலகல' வென்று பேசினார். இன்னும் சிறிது நாளில் மாணவர்கள் தாங்கள் செய்த ராக்கெட்டை விடப் போவதைப் பற்றி வேடிக்கையுடன் சொன்னார். அவர்களுக்கு நானோ-டெக் பற்றிய ப்ராஜெக்ட் இருக்கிறது என்றும்கூறினார். ஆவலுடன் இருக்கிறேன்! நான்  என்ஜினியரிங் படிக்கும் போது இருந்த மெக்கானிக்கல் லேபின் சூழல் அந்த வகுப்பில்! நிச்சயம் என் மகனுக்குப் பிடித்த வகுப்பாக இருக்கும் என்று தோன்றியது. நிறைய கணினிகள். மாணவர்கள் வரைந்த மெக்கானிக்கல் டிராயிங் சுவர் முழுவதும்! பல சுவாரசியமான விஷயங்கள் மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில்- கிராபிக்ஸ், CAD , ரோபோடிக்ஸ்... என்று.

அவர் வகுப்பு முடிந்தவுடன் ஆடிட்டோரியத்தில் பேண்ட், ஆர்க்கெஸ்ட்ரா பற்றிய விரிவான விளக்கம். மாணவர்கள் தங்கள் ஃப்ரீ டைமில் ப்ராக்டிஸ் செய்ய வேண்டி இருக்கும். இந்த வருடத்தில் வரப்போகிற மியூசிக் ப்ரோக்ராம் தினங்கள் என்று ஒரு லிஸ்ட்டையும் கொடுத்தார்கள்! என்னுடைய பள்ளிக்கால பாட்டு வகுப்பு நினைவிற்கு வந்து அந்த ஆசிரியருக்கு நாங்கள் கொடுத்த தொல்லைகள் நினைவிற்குவர சிரித்துக் கொண்டேன்.

மீண்டும் மாடியேறி அவனுடைய ஜெர்மன் வகுப்புக்குள் நுழைந்தால் மொத்தமே 10-12 மாணவர்கள் தான் இருப்பார்கள் போலிருக்கு.மற்றவர்கள் எல்லாம் ஃப்ரெஞ்ச் , ஸ்பானிஷ் எடுத்திருக்கிறார்கள். என் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் ஜெர்மன் மேல் இப்படி ஒரு லவ்வோ? வார்த்தைகளை கடித்து இழுத்துப் போட்டுப் பேசுகிறார்கள்!!!சுவிஸ் , ஜெர்மனி நாட்டுக் கொடிகள், அந்த நாடுகளின் பிரபலமான இடங்கள், காலெண்டர் மேல் ஜெர்மன் மொழியாக்கம் என்று எதிலும் ஜெர்மன் மயமாக இருந்தது! அந்த ஆசிரியையும் என் மகளுக்கு வகுப்பு எடுத்தவர். அவரும் ஜெர்மனில் எங்களை வரவேற்றார். அது சரி, அவர் எப்படி சொல்லி இருந்தாலும் அது எனக்கு ஜெர்மன் போலவே இருந்தது :(

அது முடிந்ததும் மியூசிக் தியரி வகுப்பு. வகுப்பில் கிடார், கீபோர்டு அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த வகுப்பில் மாணவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்கப்படும், எவ்வளவு நேரம் வீட்டில் ப்ராக்டிஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல, அப்படியெல்லாம் என் மகன் ஒன்றும் ரெகுலரா பண்றா மாதிரி தெரியலையே, இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆசிரியரும் என் மகனை சரியான வால் பையன் , படு சுட்டி ஆனால் கொஞ்சம் சேட்டை செய்கிறான் என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சொல்லி விட்டார். ம்ம்ம். அவனிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு ...

அடுத்த social studies வகுப்பிற்கு மீண்டும் மாடியேறிச் சென்றேன்! நல்ல துடிப்பான ஆசிரியர். ஏற்கெனவே மகனும் தனக்குப் பிடித்த ஆசிரியர் என்று சொல்லி இருந்தான். மாணவர்களை நன்கு அறிந்த ஆசிரியர் போல் தெரிந்தார். வகுப்பில் சிவில் வார், மார்டின் லூதர் கிங், ப்ரெசிடெண்ட் படங்கள் சுவர் முழுவதும், புத்தகங்கள் அலமாரிகளில்! நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் , நிதின் நன்றாக வகுப்பில் நடக்கும் டிஸ்கஷனில் பேசுவான், நன்றாகப் படிக்கிறான் என்று சொல்லிக்கொண்டே என் மகன் மறந்து போய் வைத்து விட்டு வந்த அவனுடைய ஸ்வெட்ஷர்ட்டை எடுத்துக் கொடுத்தார்!
இந்த வருடம் உலகில் நடக்கும் போர்களைப் பற்றியும் படிக்கப் போவதாக கூறினார். மாணவர்களுக்கு இன்றைய உலகில் தங்களைச் சுற்றி நடக்கும் செய்திகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ம்ம்ம். இந்தியாவில் கூட பாட முறையில் காலத்திற்க்கேற்றாவாறும் உண்மையான வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றியது!

இதற்குள் மணி ஒன்பதை நெருங்க போதுமடா சாமி, ஆளை விடுங்கப்பா என்ற ரேஞ்சில் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும். கடைசி வகுப்பு சயின்ஸ். வாரம் ஒரு முறை லேப் இருக்கும். அன்றைய லேப் வேலைகளை மறக்காமல் அன்றே செய்ய சொல்லுங்கள் என்று லேப் டீச்சரும் வகுப்பில் என்ன படிக்கப் போகிறார்கள் என்று ஆசிரியரும் சொல்லும் பொழுது பெற்றோர்கள் கண்களில் விட்டா போதும் என்று தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது!!!

நடுநடுவில் இந்திய நண்பர்கள், குழந்தைகளின் நண்பர்களின் பெற்றோர்கள் என்று பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

அனைத்து வகுப்புகளிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி,டச் ஸ்க்ரீன் போர்டு, ப்ரொஜெக்டர், அறை முழுவதும் புத்தகங்கள், சுவர்களில் அந்தந்த வகுப்பைச் சார்ந்த படங்கள், குறிப்புகள், மாணவர்கள் அமர இருக்கைகள் என்று கூலாக இருந்தது. ஆசிரியர்களும் 'சிக்'கென்று ரெடிமேட் புன்னகையுடன் டிப்டாப்பாக இருந்தார்கள்! குரலை உயர்த்திப் பேசாமல் எப்படி இவர்கள் மாணவர்களை கையாளுகிறார்கள் என்று மலைப்பாக இருந்தது!

ஆசிரியர்கள் அனைவரும் மகளுக்கும் வகுப்பு எடுத்தவர்கள். ஞாபகமாக அவளைப் பற்றி விசாரித்தார்கள். அனைவரும் சொன்னது சச் எ டார்லிங் கேர்ள், வெரிநைஸ் கேர்ள் , நல்ல படிப்பாளி ..கேட்க மிகவும் நன்றாக இருந்தது. மகன் என்ன பாடுபடுத்துவானோ !

ஒரு வழியாக அனைத்தும் முடிந்து, அலுவலகத்திற்குப் போய் ஆன்லைன் id வாங்கிக் கொண்டேன். மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு, ஹோம்வொர்க் , தேர்வுகள் பற்றிய நிலவரங்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் பார்த்து விடலாம்!

ஆசிரியர்கள்வீட்டுப்பாடத் தகவல்களை வெப்சைட்டில் அன்றன்றே போட்டுவிடுவோம். எங்களுக்கு வீட்டுப் பாடம் இல்லை என்று உங்கள் குழந்தைகள் கூறினாலும் நீங்கள் சென்று பார்த்து விடலாம் :) அவர்களின் ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட்டும் ஆன்லைனில் இருக்கும் என்று அனைத்து தகவல்களும் தெரிந்து விட்டது. என் மகனைப் போன்ற குழந்தைகளுக்கு இது அனர்த்தமாக தெரிந்தாலும் என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! :)

சில வகுப்புகள் மீண்டும் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது! ஒரு வழியாக அனைத்தும் முடிந்து டிராஃபிக் நெரிசலில் மீண்டு வீடு வந்து சேரும் பொழுது இரவு 9.45 மணி.

எப்படி இருந்தது என்று கேட்ட மகனிடம் நன்றாக இருந்தது, எல்லா ஆசிரியர்களிடமும் பேசி விட்டேன். உன்னைப் பற்றியும் சொல்லி விட்டேன் என்றேன் சிரித்துக் கொண்டே! ம்ம்ம். ஏற்கெனவே எல்லோரும் சதாசர்வ காலமும் உன் அக்கா நல்ல படிப்பாளி என்று வெறுப்பேற்றுகிறார்கள். இப்போது நீ வேற பேசிட்டு வந்திருக்கே இனி கொஞ்சம் கவனமா தான் இருக்கணும் என்றான் நொந்து கொண்டே ! சரி, சரி ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததில எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது நான் போய் தூங்கணும் என்றவுடன், இப்படித்தானே எனக்கும் இருக்கும் என்றானே பார்க்கலாம்!

பள்ளியில் இருக்கும் நூலகம், உடற்பயிற்சிக்கூடம், கான்டீன், வகுப்புகள், ஆசிரியர்களைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. துள்ளித் திரிந்த பள்ளி நாட்கள் மீண்டும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

வேலைக்குச் செல்பவர்களுக்குப் பள்ளிக்குச் செல்ல ஆசை.

பள்ளிக்குச் செல்பவர்களுக்கோ வேலைக்குச் செல்ல ஆசை!

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போலும்!







அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...