Sunday, November 30, 2014

அன்புள்ள அப்பா...

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும் அதே குழப்பம் எனக்கும். புகுந்த வீட்டில் மாமியார் கிடையாது. மாமனாரை எப்படி அழைப்பது? சரி, சம்பிரதாயப்படி மாமா அல்லது பாவா என கூப்பிடுவது என்று நினைத்திருந்தேன்.

கணவரின் அண்ணிகள் மாமனாரை அப்பா என்று அழைப்பதை பார்த்து எனக்கு ஒரே கவலை. என் அப்பாவை விட 20 வயது மூத்தவர். அவ்வளவு வயதான மனிதரைப் போல் எங்கள் குடும்பத்தில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. எனக்கு தாத்தா மாதிரி இருக்கிறார். இவரைப் போய் எப்படி அப்பா என்று அழைப்பது? அதுவுமில்லாமால் என் அப்பாவைத் தவிர யாரையும் அப்பா என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

ஆனா, என்ன பண்றது?

அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னம்மா, எப்படி இருக்கே? வேலை எல்லாம் எப்படிபோகுது? உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்கும் பொழுது பதில் சரியாகச் சொல்லி முடிக்க ஒரு குழப்பத்துடன் மாமா, பாவா... கடைசியில் மைண்ட் வாய்சில் அப்பா என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.

இதில் கணவருக்கு மிக்க வருத்தம். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகள்கள் அப்பா என்று கூப்பிடுவது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அண்ணிகளும் அப்படித் தானே கூப்பிடுகிறார்கள்? நீயும் அப்படியே கூப்பிட்டால் நன்றாக இருக்கும். அண்ணிகள் என் அம்மாவையும் அம்மா என்று தான் அழைத்தார்கள் என்றார்.

நானும், என் அப்பாவைத் தவிர யாரையும் என்னால் மனதார அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது. உதட்டளவில் அப்பா  என கூப்பிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நீங்கள் என் அப்பாவை என்ன அப்பா என்றா கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு விட்டு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். well, எனக்கு என் நியாயம்!

திருமணம் முடிந்த நான்கைந்து மாதங்களில் எங்களுடன் வந்து தங்க மாமனாரை மச்சினர் வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தோம். மச்சினர் வீட்டின் மாடியில் ஆபிஸ் இருந்ததால் அங்கு வேலை செய்ய வருபவர்கள், பிசினஸ் ஆட்கள் என்று பலருடனும் பேசி நன்கு நேரத்தைப் போக்கியவர். மாலையில் வாக்கிங் சென்று ஒரு பேக்கரி கடையில் அவர் வயதையொத்த நண்பர்களுடன் பேசி விட்டு அவருக்குப் பிடித்த சமோசா , கேக் என்று மாலைப் பொழுதுகளை போக்கி விட்டு இருந்தவருக்கு எங்கள் வீட்டில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

நான் என்ன செய்ய முடியும்? பார்க்க எனக்குத் தான் வருத்தமாக இருந்தது.

என் ஆரம்ப கால சமையல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் வேறு அவருக்கு :(`

அரசியல் என்று பேச்சு வந்தால் காங்கிரஸ் தான் என்று மாமனார் ஆரம்பிக்க, உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்தியா உருப்படற மாதிரி தான் என்று அரிவாள் சுத்தியல் எடுக்காத குறையாக மகனுக்கும் அவருக்கும் வாக்குவாதம். குடும்ப பிசினஸ் பற்றி பேச்சு வந்தால் அதற்கும் ஒரே கலவரம். சரி, நீங்க வேலைக்கு கிளம்புங்க . காலணா பெறாத விஷயத்துக்கெல்லாம் இப்பிடியா? எப்ப பாரு வெட்டி பேச்சு பேசிக்கிட்டு என்று கணவரை அவசரஅவசரமாக வெளியில் அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

இவன் இப்படித்தாம்மா! ஆ ஊன்னா கோபம் வந்துடும்(ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்ங்கறது இது தான் போல ... ) நீ தான் நல்ல வார்த்தை சொல்லி அவன் கோபத்தை குறைக்கணும். (ம்ம்ம். அதுக்கு நான் தான் உங்களுக்கு கெடைச்சேனா ??)

ஓரிரு நாட்கள் அப்பாவிடம் பாராமுகம் தொடரும். அச்சமயங்களில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மகள் என்று ஒருத்தி இருந்திருந்தால் அவர் நிலைமை இப்படி இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி டீ போட்டு வைப்பது, கீரை வாங்குவது , வீட்டு வேலைக்காரம்மா வந்தால் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைப்பது என்று வேலைகளை அவர் செய்த போது எனக்குப் பதறி விட்டது. என் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவு தான்! நீங்கள் செய்யாதீர்கள் .....அப்பா(மைண்ட் வாய்சில்) என்று சொன்னாலும் காலையில் எழுந்திருக்க என்னால் முடியவில்லை. கருவுற்றிருந்த நேரம். மார்னிங் சிக்னஸ் :(

அவரோ, நீ சின்ன பொண்ணு. உன் உடம்பை பார்த்துக்க என்று சொல்லி மேலும் கில்ட்டியாக்க...எனக்கு மேலும் தர்ம சங்கடம். நீங்க சீக்கிரம் எந்திரிக்கணும், உங்க அப்பா பாவம்! எல்லா வேலையையும் செய்றது எனக்கு கஷ்டமா இருக்கு என்றவுடன் இவர் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டார்.

ஒரு வழியாக காலையில் நான் எழ ஆரம்பித்ததும் பால்காரர், அப்பா இல்லியாம்மா? அவர் தான கொஞ்ச நாளா வந்தாரு? ஊருக்குப் போய் விட்டாரா என்று கேட்க, வேலைக்கார அம்மாவோ, அப்பாருட்ட நான் சொல்லி இருந்தேனே என்று சொல்லும் பொழுது அவர் என் மாமனார் என்று சொன்னால் இவர்கள் என்னை தப்பாக நினைத்து விடுவார்கள் போலிருக்கே! என சிறிது அச்சம். பின்னே, எந்த வீட்டில் மாமனார் வேலை செய்வார்?
எனக்குத் தெரிந்து இல்லை. மெதுவாக அவர் மேல் எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மாலையில் வாக்கிங் முடிந்து வரும் போது எனக்கும்சேர்த்து சமோசா, கேக் கொண்டு வந்து கொடுக்க .. என் அப்பா மாதிரி அவரும் என்னை மகள் போல் நடத்த...என்னைச் சுற்றி இருந்த ஒருவித இறுக்கம் மெல்ல தளர்ந்து நானும் சகஜமாக இருக்க ஆரம்பித்தேன். அவருடைய பழங்கதைகளைச் சொல்லுங்கள் என்று அவருடைய தனிமையை என்னால் முடிந்த வரையில் கலகலப்பாக்க முயற்சித்தேன்.

அவர் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்ல, கெட்ட விஷயங்கள் என்று அவரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். மதுரையில் அவர்கள் வீட்டுச் சொத்து எங்கெல்லாம் எவ்வளவு இருந்தது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இப்பொழுது உங்களிடம் என்ன இருக்கிறது? போன கதைகளை ஏன் பேசி வெறுப்பேற்றுகிறீர்கள் என்று நெற்றிக்கண் திறக்க கோபக்கனலுடன் அப்பாவுக்கு எதிராக மகன் நிற்கும் போதெல்லாம், நான் தானே அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்? உங்களுக்கென்ன வேலை? அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினால் அவருக்கும் நன்றாக இருக்கும் என்று கணவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறேன்.

பழைய நினைவுகள் தரும் சுகத்தைப் போல் வேறு எதுவுமில்லை என்று தினமும் மாலையில் அவருடன் பேசுவது , டிவி பார்ப்பது என்று எனக்கும் பொழுது போனது.

குடும்பத்தில் நடந்த பல விஷயங்களைக் கூறினார். கணவரிடம் இப்படி எல்லாம் நடந்ததா என்று கேட்கும் பொழுது அவர் பதறிக் கொண்டே உனக்கு எப்படித் தெரியும் என கேட்க . ம்ம்ம். ஓப்லா வீட்டு ரகசியம் இப்ப எனக்கும் தெரியுமே என்று அவரை கலவரப்படுத்த எனக்கும் அவையெல்லாம் தோதாக இருந்தது.

மனைவியை இழந்த துயரம், அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இன்று வரை மகன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் என அவர் கலங்கியபடி சொல்லும் பொழுது எனக்கும் வேதனையாகி விட்டது.

மூத்த மகனை இழந்த சோகம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு மனதுக்கு விரும்பாத நிகழ்வுகள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் அதனால் உடல்பாதிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் என்னிடம் கூறுங்கள் என்று சொல்லும் பொழுது கூட, நீயோ இன்னும் சிறிது நாளில் கைக்குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்கள் அனைவரும் வேலை செய்கிறீர்கள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைம்மா என்று சொல்லும் பொழுது உண்மையாகவே என் கண்கள் கலங்கி விட்டது.

மனைவியை இழந்த கணவரின் நிலைமை மிகவும் கொடுமையானது போல!

என் குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை அவருக்கு என்று பேசும் பொழுது புரிந்து கொண்டேன். தம்பிகள், அப்பா, அம்மா வரும் பொழுது அன்பாக பேசுவார்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் மகாராணி என்று அழைத்து தன் மகன் ஒருவழியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான் என்ற மனநிறைவுடன் அவரின் விருப்பபடி யாருக்கும் தொந்தரவு தராமல் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

அன்பு தாத்தாவின் அறிமுகம் என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் என்றுமே எனக்கு உண்டு. அட்லீஸ்ட் மகளுடன் இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றாவது இருக்கிறது. மகனின் பல குணங்கள் தன் அப்பாவை நினைவுறுத்துகிறது என்று கணவர் கூறும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்.

யாருக்கும் தீங்கு நினைக்காத, பணத்தின் மேல் பற்றில்லாத, தனக்கு தீங்கிளைத்தவர்களையும் மன்னிக்கும் நல்ல பண்பான அமைதியான மனிதர்.

பழகிய சிறிது நாட்களில் என்னையும் அறியாமல் 'அப்பா' என்று சொல்ல வைத்த பெருமையுடன் அவரின் சகாப்தமும் முடிந்தது !






7 comments:

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...