Thursday, December 4, 2014

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...

ஒவ்வொரு வருடமும் பெரிய கார்த்திகை அன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவிலும், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோபுரமும் அதிக அளவில் மனதில் வலம் வரும்.

தீபாவளிக்குப் பிறகு வரும் கார்த்திகை மாதம் தீபஒளியுடன் வலம் வருவது மட்டுமில்லாமல் முருகன், ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து பயபக்தியுடன் விரதம் ஆரம்பிக்கும் இனிய காலமும், எங்கும் பக்திப் பாடல்கள் ஒலிக்க மனதை மயக்கும் தெய்வீகமான காலைப் பொழுதுகளும் கூட!

இம்மாத திங்கட்கிழமைகளில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது போல் முருகன் இருக்கும் கோவில்கள் எல்லாம் முருக பக்தர்களால் நிரம்பி வழியும். திருப்பரங்குன்றம், அழகர் கோவில், மேலமாசிவீதி முருகன் கோவில்களுக்கு குடும்பம் குடும்பமாக தூக்குச்சட்டிகளில் பால் எடுத்துக் கொண்டுச் செல்லும் பக்தர்களையும் காண முடியும்.

கார்த்திகை மாத திங்கட்கிழமை மாலை நேரங்களில் வாசல் தெளித்து கோலமிட்டு, மண்விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டு வாசலை அலங்கரித்து விளக்கேற்றும் வைபவம் பலருக்கும் இனிமையான ஒன்றாக இருந்திருக்கும். தீபஒளியில் ஜொலிக்கும் வீடுகள் தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டு யார் வீட்டில் அதிக விளக்குகள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து எந்த வீட்டில் அழகான டிசைனில் வைத்திருக்கிறார்கள் என்று வரை பார்க்க ஆவலாய் இருக்கும்.

பாட்டியுடன் அடிக்கடி சென்ற கோவில்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. படித்த கல்லூரியும், வேலை பார்த்த இடமும், சில வருடங்கள் வாழ்ந்த வீடும் கோவிலின் அருகில் இருந்ததால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட!

இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல் அப்போது இல்லா விட்டாலும் சிறு வயதில் திருப்பரங்குன்றம் செல்வது ஏதோ மதுரையிலிருந்து வெகு தொலைவிற்குப் பயணம் செய்வது போல் இருந்தது.

மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கூட்டத்துடன் வரும் பேருந்துகளைத் தவிர்த்து கூட்டம் அதிகமில்லாத பஸ்சில் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டே குடும்பத்துடன் சென்ற காலங்கள் எல்லாம் இனியவை!

வழியில் கண்டிப்பாகத் தெரிந்தவர் குடும்பம் ஒன்றாவது ஏறிக் கொள்ள பேச்சுத் துணையுடன் பிஸியாக இருக்கும் தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலைய நிறுத்தங்களில் ஏறும் கூட்டத்தினரையும் சுமந்து கொண்டு போகும் பஸ்சில் பயணிப்பதே சுகமாக இருக்கும். அன்று குடியிருப்புகள் குறைவான மீனாக்ஷி மில், ஆண்டாள்புரம், பைக்காரா தாண்டியவுடன் மரங்களுடன் கூடிய பசுமலை ஏரியா, தியாகராஜர் காலனி, கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை நிலங்கள், தியாகராஜர் பொறியியல் கல்லூரி என்று ஒரு வழியாக கோவிலை வந்தடையும் பொழுது நிறுத்தத்தின் எதிரே அழகே உருவாய் மலைக்கு அடியில் நிற்கும் வேலைச் சுமந்த கோபுரம் மனதை கொள்ளை கொள்ளும்!

வெங்காயத்தாமரை நிறைந்த குளம், வெயிலுக்குகந்த அம்மன் கோவில், போலீஸ் ஸ்டேஷன், அதைச் சுற்றியிருக்கும் குடிசை வீடுகள், ரோட்டில் திரியும் ஆடு, மாடு, எருமை, கோழிகள், ஜட்டியுடன் மூக்கு ஒழுகிக் கொண்டே திரியும் குழந்தைகள், குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே சாவகாசமாக நடந்து செல்லும் பெண்கள், பீடி குடித்துக் கொண்டே நடு ரோட்டில் நின்று உரக்க பேசிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்று கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் ரசிக்கத்தக்க காட்சிகள் ஏராளம்!

இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும் வெட்டிவேர், கதிர்பச்சையின் மணம் கோவிலுக்குள் நுழையும் பொழுதே தெய்வீகமாக இருக்கும். பெண்கள் தவறாமல் வாங்கித் தலையில் சூடிக் கொள்வார்கள். முருக பக்தர்களோடு ஐயப்ப பக்தர்களும் சேர்ந்து கோவில்களில் 'ஜேஜே' என்று கூட்டமாக இருக்கும்.

பஸ் நிறுத்தத்திலிருந்து கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் அபிஷேகத்திற்குப் பால், அர்ச்சனைக்குத் தேங்காய், பழத்தட்டு, பூக்கள், பூமாலைகள் விற்றுக் கொண்டு கடைகள் பரபர' வென்றிருக்கும். அர்ச்சனைத் தட்டு வாங்கி அங்கேயே செருப்பும் போட்டு விட்டு படியேறும் போதே யாரவது ஒருவர் 'நங்'கென்று சிதறு தேங்காய் உடைக்க, அதைப் பொறுக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைத் தாண்டி உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் கருப்பண்ணசாமியை தரிசித்துவிட்டுத் திரும்பினால் வெண்ணை உருண்டைகளை விற்பவர், காளிக்கு வெண்ணை சாத்துங்க, வேண்டியதெல்லாம் நடக்கும், குறைகள் நீங்கும் என்று சொல்லியே விற்றுக் கொண்டிருப்பார். அதை வாங்கி பயபக்தியுடன் சாத்திவிட்டு (இப்பொழுது விடுவதில்லை என்று நினைக்கிறேன்) கோவிலுக்குள் போகுமுன் விநாயகர், துர்க்கை அம்மனையும் வணங்கி விட்டு, வழியில் இருக்கும் எலுமிச்சம் பழ விளக்குகளை கவனமாக கடந்து ஜொலிக்கும் கோவில் கடைகளை பார்த்துக் கொண்டே அர்ச்சனை சீட்டையும் வாங்கிக் கொண்டு தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே, பைசா வருமா, பழம் வருமா என்று திருநாமம் பூசிக்கொண்டு பக்தர்களை பார்த்துக் கொண்டே இருக்கும் யானையையும், குரங்குகள் கூட்டத்தையும் கடந்து சில படிகள் ஏறி கோவில் குளத்திற்குப் போகும் கூட்டம்.

வழியில் குருகுலத்தில் வருங்காலப் பட்டர்கள் கோரஸாக சுலோகங்களை மனனம் செய்து கொண்டிருப்பார்கள். கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். பெரிய மரம் ஒன்றின் நிழலில் நடந்து கொண்டே அந்த மலைக்கோவிலின் குளத்திற்குப் போய் மீன்களுக்குப் பொரி வாங்கித் தூவி விட, மீன் கூட்டம் துள்ளிக் குதித்து கொண்டு அதைச் சாப்பிட, சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பதும் எனக்குப் பிடித்தமான ஒன்று!

மூல சன்னிதானத்திற்குப் போக படிகளில் ஏறி முருகனின் சந்நிதியின் இடப்பக்கம் காத்திருக்க வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து முருகனை விரைவாகவோ காத்திருந்தோ பார்க்கலாம். அதிகக் கூட்ட நேரங்களில் மக்கள் வியர்க்க  விறுவிறுக்க முண்டியடித்துக் கொண்டு அச்சிறிய இடத்தில் நீ முந்தி நான் முந்தி என்று இடித்துக் கொண்டு செல்வதும் உண்டு! இந்தக் கோவில் மலையை குடைந்து கட்டியிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. முருகனின் வேலை மட்டும் எடுத்து அபிஷேகம் செய்வார்கள். எல்லோருடைய அபிஷேகப்பாலையும் கலந்து அரோகரா கோஷத்துடன் அபிஷேகம் செய்ய, மலையில் குடைந்த சந்நிதானம் தீப ஒளியில் அழகாக ஜொலிக்க பக்தர்களும் மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். அபிஷேகப் பால் சந்தனம், விபூதி வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அலங்காரத்துடன் வீற்றிருக்கும் துர்கை, விநாயகர், பெருமாள், சத்யக்ரீஸ்வரரையும் வணங்கி விட்டுப் படிகளில் இறங்கும் வழியில் தேவி அன்னபூரணியின் தரிசனமும் உண்டு. தனியாக அம்பாளுக்கு இருக்கும் சந்நிதானத்தில் தரிசனம் செய்து விட்டு, மீண்டும் படிகளில் ஏறி அங்கிருக்கும் நடராஜர், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஆசியுடன் படிகளில் இறங்க, உற்சவ மூர்த்தி வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் மண்டபம்.

நவக்கிரகங்களும், தனியாளாக அமர்ந்திருக்கும் சனி பகவானையும் தரிசித்து விட்டுத் திரும்புகையில் மயிலிறகால் ஒரு வயதானவர் சாமரம் வீச சுகமாக இருக்கும். அவருக்கு கொஞ்சம் காணிக்கையும் கொடுத்து விட்டு அகத்தியர், தன்வந்திரி, மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் முருகனையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் ஆற அமர உட்காருவோம்.

பிறந்த குழந்தையை முதன் முதலில் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்பவர்களும், நேர்த்திக்கடனை முடிப்பவர்களும் என பலரும் மாவிளக்கு பூஜை செய்து கொண்டிருப்பார்கள். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு மாவிளக்கு மாவு, தேங்காய், பழம் கொடுப்பார்கள். நெய்யில் ஊறிய பச்சரிசி மாவு, வெல்லத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு, அபிஷேகப் பாலை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து முடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறிது பாலை எடுத்துக் கொண்டு, கோவில் ஸ்டாலில் விற்கும் அப்பம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே அப்பா, அம்மா, பாட்டி கைப்பிடித்து மீண்டும் வீடு வந்து சேர, அன்றைய நாள் இனிதான ஒன்றாக இருக்கும் !


சிறு வயதில் குடுகுடுவென ஏறிய கோவில் இன்றோ கொஞ்சம் மூச்சு வாங்குகிறது!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

ஆல்பனி மலை மீது எதிரொலிக்கும்...






































































.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...