Friday, February 27, 2015

ஊரு விட்டு ஊரு வந்து ...

வாவ்!!! நாட்கள் மாதங்களாய், வருடங்களாய் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது! மதுரையை விட்டு வந்த இந்த பதினேழு வருடங்கள் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை! பல வருடங்களுக்கு முன் வாழ்வில் காணாத குளிரில் நடுங்கிக் கொண்டே டொரோண்டோவில் வந்திறங்கிய அந்நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது!

மதுரையில் பிறந்து வளர்ந்து என் வீடு, என் மக்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து வந்த எனக்கு எப்போது தான் மேற்குலகத்தை பார்ப்பது? படித்து மட்டுமே பார்த்த இடங்களை எப்போது கண்டுகளிப்பது ?? என்பது கனவாகவே இருந்து வந்தது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் மாண்ட்ரியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து அவர்களும் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்றவுடன் கைக்குழந்தையை  வைத்துக் கொண்டு முடியுமா, முடியாதா என்று அந்த ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. வேலை கிடைத்து கனடாவிற்கு போகப் போகிறோம் என்றவுடன் வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைவேறப்போகிறது என்ற நினைவே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்குப்பிறகு இரு மாதங்களில் மகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருச்சி பயணம் , கனடா செல்ல விசா வாங்க கோயம்புத்தூர் பயணம், அலுவலில் இருந்து ஐந்து வருட விடுமுறையில் செல்வதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி வாங்க சென்னை பயணம் எனஅலைந்த அலைச்சலில் வெளிநாடு செல்வதைப் பற்றிய எண்ணங்களோ அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களைப் பற்றியோ எதுவும் நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு வேலைகள் என்னை ஆக்கிரமித்திருந்தது.

மதுரையை விட்டு கிளம்பிய அவ்விரவில் தான் மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. கண்ணீருடன் வழியனுப்ப வந்த சொந்தங்களை விட்டுப் பிரிகிற உணர்வா? குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறோம் என்ற பயமா? வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற கலக்கமா? கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றின பயம் அன்று தான் தெரிந்தது. ஆனாலும் மனதில் கொஞ்சம் தைரியம். எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் திரும்பி வந்தால் வேலை இருக்கிறது என்ற நினைவே சிறிது ஆதரவாக இருந்தது. கணவரும் மகளும் அருகில் இருக்கும் போது எதற்கு மனதை குழப்பிக் கொள்ள வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும் தயக்கமும் கலக்கமும் கூடவே இருந்ததென்னவோ உண்மை.

விமான நிலையத்தில் அப்பா, அம்மா, தம்பிகள், தங்கை, அக்கா என்று அனைவரையும் பிரியும் பொழுது தப்பு செய்து விட்டோமோ என்று அழுத அழுகையில் குழந்தையும் மிரண்டு விட்டது. முதல் முறை விமானப்பயணம் வேறு மனதில் திகிலை கொடுக்க, குழந்தையும் மிரட்சியுடனே இருந்தாள். லண்டன் வரை ஒகே பயணம். அங்கிருந்து டொரோண்டோ எப்படா வரும் என்றாகி விட்டது. மகளுக்கோ பயணம் ஒத்துக் கொள்ளவில்லை. அவளுக்கும் தாத்தா, பாட்டியை பிரிந்த சோகம். சொல்ல தெரியவில்லை.

கையை பிசைந்து சாப்பிட்டுப் பழகி விட்டு ஃபோர்க், ஸ்பூன் பார்த்தவுடன் ஒரு அந்நியம். பிரட்,  இலை தழைகளைப் பார்த்தவுடன் வந்த பசியும் ஓடி விட்டது. காரசாரமாக உண்ட நாக்கிற்கு உப்பு மட்டும் போட்டு சுட்ட மீனை கண்டதும் வராத வாந்தியும் உவ்வே...என்னை பார்த்து மகளுக்கும், அவளைப் பார்த்து எனக்கும் என்று...

டொரோண்டோ வந்து விட்டது என்று பைலட் சொன்னவுடன் அப்பாடா என்றிருந்தது! வெளியில் வந்தவுடன் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் மனநிலையில் இருந்தேன் நான். இது ஒரு அந்நிய தேசம் என்ற நினைவு முதலில் உறுத்தியது. ஆங்கிலம் தான் பேசினார்கள் என்றாலும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. பிப்ரவரி 28 டொராண்டோவில் வந்திறங்கிய அந்த இரவில் பலவிதமான குழப்பமான எண்ணங்கள். கனவு நிறைவேறி விட்டது என்று ஆனந்தப்படுவதா, புது இடம் பிடிக்குமா, இந்த வாழ்க்கை முறை ஒத்து வருமா என்று புரிந்தும் புரியாமலும் குளிரில் நினைவுலகத்துக்கு வந்த போது வண்ண மயமாக இருந்த நகரம் ஆனந்தத்தை தந்தது. இரவில் விளக்கொளியில் மின்னிய நகரங்களைப் பார்த்த பொழுது கனவு மாதிரியே இருந்தது.

கணவரின் நண்பர் தினேஷ் எங்களுக்காக காத்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் அப்பாடா மதுரை நண்பர் இருக்கிறார் என்ற எண்ணமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. வானுயர்ந்த கட்டடங்கள், வண்ண விளக்குகளுடன் ஜொலித்த நகரம் அதுவரை நான் காணாத ஒன்று. டர்பன் போட்ட சீக்கிய டாக்ஸி டிரைவர்கள், பல தமிழ், இந்திய முகங்கள் அச்சம் மெல்ல மெல்ல என்னை விட்டுச் செல்வது போல் உணர்ந்தேன்.

தினேஷின் காரில் நான் குழந்தையுடன் ஏறிக் கொள்ள, பெட்டிகளுடன் கணவர் வாடகைக்காரில் தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம் GPS வசதிகளும் கிடையாது. அட்ரஸ் தெரியுமா என்று தினேஷ் கேட்டவுடன் தான் பிறந்த வீடு, புகுந்த வீடு , இப்பொழுது இந்த முகவரியையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணமும் வந்தது. அவருடன் தாய்மொழியில் பேசிக் கொண்டு அடிக்கடி கணவரின் காரும் பின்தொடர்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்து சேர்ந்தோம். முகவரி தேடி அங்குமிங்கும் சுற்றி அலைந்து பசி மற்றும் களைப்புடன் அபார்ட்மெண்ட் வந்து சேர , குழந்தையும் நன்கு விழித்திருந்தாள்.

கம்பெனியே ஒரு அபார்ட்மெண்ட் பார்த்து வீட்டில் சுவாமி படம், விளக்கு வைத்து கோலம் போட்டிருப்பதை கண்டவுடன் மனதில் ஒரு நிம்மதி. பிரிட்டிஷ் ஏர்லைனில் சென்னையிலிருந்து புறப்படும் போது நம்மூர் சாப்பாடு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கொடுத்த எதுவும் பிடிக்கவில்லை. மகளும் நானும் பசியில் துவண்டிருந்தோம்.

ராம், கோயம்புத்தூர்காரர். சாதம், பீன்ஸ், தயிர் எடுத்துக் கொண்டு வந்து குழந்தையுடன் வருகிறீர்கள் என்று சொன்னார்கள். அதான் சமைத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் பேசி விட்டுச் சென்றார்.  மதுரையிலிருந்து மதியும், முருகேசன் என்பவரும் அவருடன் தங்கியிருப்பதாக சொன்னவுடன் அப்பாடா, பேசுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைவே ஆறுதலாக இருந்தது. பசியுடன் இருந்த மகளுக்குத் தயிர் சாதம் கொடுத்தவுடன் அவளும் தூக்கத்திலிருந்து கொஞ்சம் தெளிவானாள். 

வீட்டைச் சுற்றிப் பார்த்து ...நான்கு பர்னர் கொண்ட ஸ்டவ், சுடு தண்ணீர், குளிர் தண்ணீர், பாத்ரூமில் டப், வெஸ்டெர்ன் டாய்லெட், பெரிய்ய  ஃபிரிட்ஜ் இத்யாதிகளைப் பார்த்து  வியப்பும் கலக்கமாகவே இருந்தது. பழக்கமே இல்லாத வெஸ்டர்ன் டாய்லெட்டை கண்டு மகள் மிரள...மெதுவே எனக்குள்ளும் மகளை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்ற பயம் வந்து விட்டது. சதாசர்வ காலமும் தாத்தா, பாட்டி பெரியம்மா, சித்தி, மாமாக்கள் என்று வளர்ந்து விட்டு அவளை நினைத்து தான் பெருங்கவலையாக இருந்தது. 

அந்த இரவில் இனி ஒளிரப் போகும் நாட்கள் எப்படி இருக்குமோ என்று ஒரு தயக்கத்துடன் நினைத்த மாதிரியே வந்து விட்டோம் என்று பெருமையாக இருந்தாலும் விடை தெரியாத பல கேள்விகள் மனதில்! அமைதியாக உறங்கிக்  கொண்டிருந்த நகரில் மூன்று உயிர்கள் எதிர்காலத்தை நினைத்து மனப்போராட்டத்துடன் விடியலுக்காக காத்திருந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் ...







No comments:

Post a Comment

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...