Friday, April 10, 2015

மதுரை - இராமேஸ்வரம் 1

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் 

ஊருக்குச் சென்றிருந்த பொழுது குழந்தைகளுடன் இராமேஸ்வரத்திற்கும், தனுஷ்கோடிக்கும் செல்வது என்று முடிவு செய்து ஒரு நன்னாளில் அதிகாலையில் ஐந்து மணிக்கே காரையும் வரச் சொல்லி விட்டோம். காரும் 'டான்' என்று சொன்ன நேரத்திற்கு வந்து விட்டது. தூக்க கலக்கத்தில் இருந்த குழந்தைகளுடன் காரில் ஏறி நேராக மாரியம்மன் தெப்பக்குளத்திற்குச் சென்று விடியும் வரையில் காத்திருந்தோம். தண்ணீர் இல்லாவிட்டாலும் அங்கிருந்த அமைதியில் தெப்பக்குளம் அழகாகவே 'பளிச்'சென்றிருந்தது. சமீபத்தில் தான் வண்ணம் அடித்திருப்பார்கள் போல!

தெப்பத்திருவிழா, மாரியம்மன் கோவில், அருகிலேயே நான் படித்த பள்ளி பல நினைவுகள் என்னுள் ...

பல ஆண்கள் மற்றும் சில பெண்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி நடைப்பயிற்சியில் தீவிரமாக இருந்தார்கள். சிலர் கால்களில் செருப்பு கூட இல்லாமல் நடந்து கொண்டிருக்க, சிலர் 'ஹவாய்' சப்பலுடன்! ஒரிருவர் மட்டும் ஷூ போட்டுக் கொண்டு காதில் ஹெட்ஃபோனுடன் பாட்டுக் கேட்டுக் கொண்டே மெதுவாக நடக்க, கணவன் மனைவி மாதிரி தெரிந்தவர்கள்,சக நண்பர்களுடன் வந்தவர்கள் மட்டும் பேசிக் கொண்டேநடக்க, தனியாக ஏதோவொரு யோசனையில் சிலர் நடந்து கொண்டு என்று மக்கள் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அனைவருமே குண்டாக இருப்பது போல் எனக்குத் தோன்றியது :)  விடிந்தவுடன் கிரிக்கெட் விளையாட கையில் பேட்டுடன் இளைஞர்கள் பட்டாளம் வந்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

ரம்மியமான காலைப் பொழுதில் சூரியன் எழும் வரை அமைதியாக இருந்த சாலை சிறிது நேரத்தில் லாரி, கல்லூரி, பள்ளி பேருந்துகளின் வரவால் தன்  இயல்புக்கு திரும்ப, நாங்களும் கோவிலைப் பார்த்து கும்பிட்டு விட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். குழந்தைகள் இருவரும் உறக்கத்தில்!

ஒருகாலத்தில் அகலமாக தோன்றிய சாலைகள் எல்லாம் குறுகி விட்டது போல் ஓர் பிரமை. வெற்றிடமாக இருந்த வீடுகளில் மச்சி, குச்சி வீடுகள்! தெப்பக்குளத்திலிருந்து திருப்புவனம் செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புகள் அலங்கரித்த காலத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். தண்ணீரை காணாமல் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றில் மணலை அள்ளி மேடும் பள்ளமுமாக இருப்பதை பார்க்கவே வருத்தமாக இருந்தது. செங்கல் சூளைகள் அதிகமிருந்த பகுதியில் இன்று ஒரு சில சூளைகள் மட்டுமே தெரிந்தது! மாட்டு வண்டிகளும், லாரிகளும் செங்கற்களுடன் சாலையை வலம் வந்தால், வீடுகளின் ஆக்கிரமிப்போ வழியெங்கும்!

சாலையின் ஓரத்தில் அசை போட்டுக் கொண்டு மாடுகளும், நடந்து கொண்டும், உட்கார்ந்தபடி நாய்களும், சிறு வாலைச் சுருட்டியபடி குடும்பம்குடும்பமாக பன்றிகளும், சுவர்களில் கவர்ச்சிகரமான சினிமா போஸ்டர்களும், குப்பை மேடுகளும் என்று மதுரைக்கே உரிய 'அழகுடன்' இருப்பதில் காலங்கள் கடந்தும் வளர்ச்சி அடையாத மதுரை, வருத்தமாகத் தான் இருந்தது.

விரகனூர் கடந்து திருப்புவனம் செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புகள் இருந்த இடங்கள் உருமாறி வண்ண வண்ண விளம்பரங்களுடன் வீட்டு மனைகளாக கூறு போடப்பட்டிருந்தது. அதற்காகவே பிரயேத்தியமாக தார் சாலைகள் போட்டிருந்தார்கள். வழியெங்கும் கூடவே வந்த வைகையில் ஓரிடத்தில் கூட தண்ணீர் கண்ணில் படவே இல்லை.

பரமக்குடி வந்தவுடன் அக்மார்க் காலை பரபரப்புடன் இருந்த சாலை ஓரத்து காபி கடை முன்னே பூ விற்பவரை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். மணக்க மணக்க மல்லிகைப் பூ :) தூங்கிக் கொண்டிருந்த கணவரும் காபி சாப்பிட இறங்க, குழந்தைகள் இருவரும் இன்னும் தூக்கத்தில்.

காபிக்கடையின் முன்னே பெரிய எண்ணைச்சட்டியில் 'சொய்ங் சொய்ங்' என்று வடை மாவை போட்டெடுக்கும் வாசம் மூக்கைத்துளைக்க, சாப்பிட வேண்டும் போல் ஆசை இருந்தாலும்...ஏனோ சாப்பிடவில்லை. ஏழு மணிக்குள் உளுந்த வடை, பருப்பு வடை, அப்பம் எல்லாம் போட்டு ரெடியாக! கடைக்கு வருபவர்களும் காபியோ, டீயோ சொல்லி விட்டு வடையை எடுத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே ஊர்க்கதையை பேசுவதை பார்க்க ஆனந்தமாக இருந்தது. சாலைகளில் புழுதி பறக்கச் செல்லும் வாகனங்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பஸ்களும் இஷ்டத்திற்கு வழியில் நிறுத்திக் கொண்டிருந்தார்கள். ஹார்ன் அடித்துக் கொண்டே செல்லும் ஆட்டோக்கள், பைக்கில் வலம் வரும் இளைஞர்கள், சைக்கிள் கூட்டங்கள், காய்கறிகளை ஏற்றிக் கொண்டுச் செல்லும் டெம்போ லாரிகள், ஸ்கூல் பஸ் என்று பார்க்க ஒரே கலவரமாக இருந்தது. மக்கள் தத்தம் வேலையை பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்!
தேவிப்பட்டினம் 

ஒரு வழியாக ராமநாதபுரம் வந்து சேரும் பொழுது பசியில் குழந்தைகள் எங்கே இருக்கிறோம். ஆர் வீ தேர் எட்? என்ற வழக்கமான கேள்வியுடன் எழுந்திருக்க, அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டோம். உணவும் நன்றாகவே இருந்தது. காலை ஒன்பது மணி தான் என்றாலும் அதிக வெயிலுடன் 'கசகச'வென்றிருந்தது.

அந்த சுனாமி பிளேஸ் வந்துருச்சா?? என்று தனுஷ்கோடியை பார்க்கும் ஆர்வத்தில் குழந்தைகள். இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு, தூங்காம வேடிக்கை பார்த்துட்டே வாங்க, சொல்லிவிட்டு நான் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டேன். நண்பர் முருகனும் குடும்பத்துடன் தேவிப்பட்டினத்தில் சேர்ந்து கொள்வதாகச் சொன்னவுடன் அங்கு சென்று விட்டோம்.

பளீரென்ற வெளிச்சத்தில் கடல் கண்களை கூச செய்தது. அன்று முஹூர்த்த நாள் போல. கோவிலிலும், தோஷ நிவர்த்திக்கு வந்த கூட்டமும் என்று அந்த இடம் 'கலகல'வென்றிருந்தது. பெற்றோர்களுடன் பெண்களும், ஆண்களும் பரிகாரம் செய்து கொண்டிருந்தார்கள். கடலில் நவக்கிரகங்களை அன்று தான் பார்த்தேன். அர்ச்சகர்கள் மந்திரங்களைஓதிக் கொண்டு பூஜை செய்து கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாக, சுற்றி வர நடைபாதை கட்டி இருந்தார்கள். சிறிது நேரம் அங்கு நின்று அமைதியான கடலை ரசித்துக் கொண்டிருந்தோம். பரிகாரம் முடித்தவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த இடம் இன்னும் கொஞ்சம் கூட சுத்தமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது!

மேள தாளங்கள் முழங்க, சீர் வரிசையுடன் ஒரு சிறு கூட்டம். குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்தவோ என்னவோ. கிராமத்து விழா மாதிரி இருந்தது. அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில் செல்வி, முருகன் குடும்பமும் வர, இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டோம்.

இராமேஸ்வரத்தை நெருங்கும் வழியெங்கும் கடலும் பயணித்தது குதூகலமாக இருந்தது.  வழியில் சில உப்பளங்கள். மண்டபம் அருகே Glass boatல் போகலாம் என்ற போர்டை பார்த்தவுடன் ஏதோ ஒரு ஆசையில் காசை கொடுத்து விட்டு எங்கள் இரு குடும்பத்தையும் ஏற்றிச் செல்ல வந்த அந்த படகைப் பார்த்தவுடன் பயம் வந்து விட்டது. லைஃப் ஜாக்கெட் எல்லாம் கிடையாது. அதுபாட்டிற்கு அலையில் ஆடிக் கொண்டே இருக்க, உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடலில் சிறிது தூரம் வரை பயந்து கொண்டே சவாரி செய்தோம். கடற்பாசிக்காக பல இடங்களில் வலைகள் விரித்து வைத்திருந்தார்கள்.  கடற்பாசியையும் எடுத்து காண்பித்தார்.  அங்கிருந்து தெரிந்த நீண்ட பாலம் மலைக்க வைத்தது!

கிளாஸ் போட்னு சொன்னாங்களே என்றவுடன், ஓட்டிக் கொண்டு வந்தவரும் உங்க காலை கொஞ்சம் நகர்த்தி பாருங்க, கிளாஸ் இருக்கும். கடல் தண்ணி தெரியுதா?ன்னு கேட்கவும்... அடி ஆத்தீ, இதுக்குப் பேர் தான் கண்ணாடி படகா? :)'தளக் தளக்' என்று அலைகளுடன் ஆடிக் கொண்டே சென்ற படகு, ஒரு சுற்று சுற்றி விட்டு கரையில் எங்களை கொண்டு வந்து சேர்த்து விட்டவுடன் தான் எனக்கெல்லாம் பயம் விட்டது. உச்சி வெயிலில் ஒரு வயதான மீனவர் படகில் வருவதை பார்க்க அவர்கள் வாழ்க்கையை நினைத்தாலே கவலையாக இருந்தது. வெயிலில் உழைக்கும் அவரின் உடம்பும், துடுப்பு போடும் வலுவான கரங்களும்  சொல்லாமல் சொல்லிற்று ஆயிரம் உணர்வுகளை!

மீண்டும் காரில் பயணம் தொடர, கம்பீரமான பாலத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ரயில் கடந்து செல்லும் பாலத்தை பார்க்க பிரமிப்பாக இருந்தது. பெரிய படகு செல்ல வழிவிடும் வகையில் கட்டி இருந்த பாலம் ஒரு இன்ஜினியரிங் மார்வெல் தான்!

நீல நிறத்தில் வானமும். நீலமும் , பச்சையுமாக கடலும், அழகாக அணிவகுத்து நின்றிருந்த மீன்பிடி படகுகளும், அலைகளும் மனதை கொள்ளை கொண்டது. நல்ல வெயில்! உப்புக் காற்று! இரண்டு டால்பின்கள் துள்ளிக் குதித்து கடலில் செல்வதை குழந்தைகளும் ரசித்துப் பார்த்தார்கள். Seaworldல் பார்த்ததற்கும் சுதந்திரமாக அதன் உலகில் உலா வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அழகான மீன்கள்!

படங்கள் எடுத்து முடித்து விட்டு, ராம ஈஸ்வரத்தை பற்றி எங்களுக்குத் தெரிந்த தகவல்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டே ஒரு வழியாக கோவிலை வந்தடைந்தோம்.



படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா

































































அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...