Thursday, July 23, 2015

அது ஒரு கனா காலம்...

கல்லூரிப் படிப்பு முடிந்து இருபத்தைந்து வருடங்கள் எப்படித் தான் ஓடோடி விட்டது? படிக்க வேண்டுமே என்ற கவலையைத் தவிர வேறொன்றையும் அறியா பருவம் அது! வாழ்க்கையின் மேடு பள்ளங்களை, நல்லது கெட்டதுகளை இன்றும் கற்றுக் கொண்டிருக்கும் இதே வேளையில் அக்கால நினைவுகள் தரும் சுகம் என்றுமே இனிமையானைவ!

வியர்த்து விறுவிறுக்க பயத்துடன் வாழ்வின் முதல் இண்டர்வியூ, கல்லூரி முதல்வருடன்! அட்மிஷன் முடிந்து வெளியில் வரும் பொழுது அப்பா, அம்மா முகத்தில் அவர்கள் வாழ்வில் சாதித்து விட்ட சாதனை! இருக்காதா பின்னே?? பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் திருமணம், பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் திருமணம் என்று பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் கடமையை முடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் குப்பா வீட்டுப் பெண்கள் (அக்காவும், நானும் ) முதன்முதலில் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்கள் என்ற பெருமிதத்தில் என் பெற்றோர்கள்!

அதுவரை பெண்கள் பள்ளியில் படித்து விட்டு முதன்முதலில் ஆண்-பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கப் போகும் கல்லூரியில் படிக்கப் போகிறோம் என்ற ஆவல் எனக்கு! அம்மாவுக்கோ பெருங்கவலை. கல்லூரியில் நன்கு படித்து எந்த வம்பு தும்பிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் பெண்கள் இருக்க வேண்டுமே என்று அந்த நொடியிலிருந்து அறிவுரைகள்! பயப்படாதேம்மா, நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது என்று சொன்ன போதும் அவர் ஒருவித தவிப்பில் தான் இருந்தார். தேவையில்லாம யார் கூடவும் பேசாதே என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும் அது எனக்கான அறிவுரை என்று எனக்கு நன்றாகவே புரிந்தது :) எங்களுக்காக அதிகாலையில் எழுந்து காலை, மதிய உணவு என்று பார்த்து பார்த்து பண்ணியதும், படிக்கிற பிள்ளைகள் என்று வீட்டு வேலை அனைத்தையும் அம்மாவே 'மாங்குமாங்'கென்று செய்ததும் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது இப்போது L

வீட்டின் அருகில் இருக்கும் சீனியர்களிடமிருந்து கல்லூரிக்கு எந்த பஸ், நேரம் என்று தெரிந்து வைத்துக் கொண்டாயிற்று. அவர்களே கல்லூரி பஸ் டிக்கெட்டும் முதல் நாளுக்காக கொடுத்து விட்டார்கள்! பள்ளிக்கு எட்டரை மணிக்கு கிளம்புவதே பெரிய போராட்டம். இப்போது கல்லூரிக்கோ ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும். வீட்டிலிருந்து இருபது-இருபத்தைந்து நிமிட நடை. வேர்த்து ஒழுக விறுவிறுவென்று மாணவர்கள் பலருடன் நடந்து பஸ்நிறுத்தத்தில் காத்திருக்கும் வேறு சில மாணவிகளைப் பார்த்தவுடன் தான் அப்பாடா, கல்லூரி பஸ் இன்னும் போகவில்லை என்ற நிம்மதி கிடைக்கும். ஒவ்வொரு நிறுத்தத்தில் இருந்தும் ஆசிரியர்களையும் மாணவிகளையும் ஏற்றிக் கொண்டு ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க உதவிய ஆபத்பாந்தவன்! அந்த கட்டை வண்டியில் வரக்கூடாது டவுன்பஸ்சில் தான் வர வேண்டும் என்ற சீனியர்களின் கட்டளை எரிச்சலைத் தான் தந்தது L
கல்லூரியில் முதல் நாள்! படபடப்புடன் ஒரு அரங்கில் காத்திருந்தோம். கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் பேசினார்கள். எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஏனோ, ஒருவித பயத்துடனே இருந்தேன். அவரவர் வகுப்பிற்குச் சென்ற பொழுது என்னுடன் பள்ளியில் படித்த தோழிகள், அக்கா என்று அனைவருமே ஒரே வகுப்பில் இருந்தது ஆறுதலான விஷயம். காலையில் ஆரம்பித்த வகுப்புகள் மாலை வரை நீண்டு எப்படா முடியும் என்றிருந்தது! முதல் வருடம் முழுவதும் கடைசி பெஞ்ச் இல்லையென்றால் அதற்கு முந்தின பெஞ்ச் :)

முதலாம் ஆண்டில் பல வகுப்புகளும் எனக்குப் பிடித்திருந்தது, இயற்பியலைத் தவிர :( புதிதாக சிவில் & மெக்கானிக்கல் அறிமுகம். இஞ்சினியரிங் டிராயிங் போல ஒரு அறுவையை நான் பார்த்ததில்லைL முதலாம் ஆண்டு முழுவதும் கூட படித்த மாணவிகளைத் தவிர லேபில் ஒரு சில மாணவர்கள் அறிமுகமானார்கள். அதிக பேச்சில்லை யாருடனும். ராகிங் காரணமாக வகுப்பை விட்டு வெளியில் செல்ல பயம். பிரேக் நேரத்திலும், மதிய உணவு நேரத்திலும் திகிலுடன் போய் வந்து கொண்டிருந்தோம். யார் சீனியர், யார் பிற வகுப்பு மாணவர்கள் என்று தெரியவே பல மாதங்கள் ஆனது! ஆனாலும், தெனாலி கமல் போல், எவனை பார்த்தாலும் பயம் தான் :(

எப்படியோ முதாலம் ஆண்டு முடிந்து எந்த பிராஞ்ச் என்று தெரிந்தவுடன் நிம்மதியாக இருந்தது. இனி இந்த மாணவர்களுடன் தான் மூன்று வருடங்கள். கணினியியல் துறை அப்போது தான் ஆரம்பித்திருந்த நேரம்! அதற்கென கட்டடம் உருவாகிக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் மெக்கானிக்கல் வகுப்புகள் நடக்கும் இடத்தில் எங்கள் வகுப்பும்! வேறு வினை :( மீண்டும் பயத்துடனே வகுப்புக்கு வருவதும் போவதுமாய் ...சீனியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி அதனாலாயே நண்பர்கள் சிலர் என்றானாது. பாரி வள்ளல்கள்! அவர்களின் புத்தகங்கள், நூலக டோக்கன்கள் என்று கேட்காமலே கிடைத்தது :)

எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் லேபுகள் பிடித்திருந்தது. பல வகுப்புகள் பிடித்திருந்தாலும், சில வகுப்புகள் வெண்பொங்கல் சாப்பிட்ட எஃபெக்ட் தான் :(
தேர்வுக்கு முன் ஒரு முழு மாதம் விடுமுறை என்றாலும் தேர்வு நெருங்க நெருங்க புத்தகங்களை தேடி அலைவதும், டைம்டேபிள் போட்டு படிப்பது போல் பாவனை செய்ததும்...என்னை விட என் அம்மாவிற்குத் தான் டென்ஷன் அதிகமாகி விடும். அம்மா, காலையில் மூணு மணிக்கெல்லாம் எழுப்பி விட்று என்று சொல்லி விட்டு தூங்க, அப்போது மட்டும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் கடிகாரமோ தூங்கிய மறுநொடியே மூன்று மணியானதை சொல்லும் பொழுது எரிச்சலாக இருக்கும். அம்மாவும் எழுந்திரு எழுந்திரு எழுந்திரு என்று பொறுமையாக சொல்ல, இதோ அஞ்சே அஞ்சு நிமிஷம் என்று சொல்லியே ஒரு மணி நேரம் ஓடி விடும். அதற்குள் சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் வேறு! அதை குடித்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தூக்கம். இப்பொழுது அக்காவும் சேர்ந்து கொண்டு நீ நேத்தும் ஒண்ணும் படிக்கல. இன்னும் தூங்கிட்டு இருக்கே. எழுந்திரு என்று ஆரம்பித்து விடுவாள். அவளிடமும் அதே ஐந்து நிமிட நாடகம் தொடர்ந்தாலும், திடீரென்று அய்யோயோ இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கே என்று பயத்துடன் எழுந்தால் மணி ஐந்தாகி விட்டிருக்கும். அப்புறம் என்னத்த படிக்கிறது? ஒரு குயிக் ரீடிங் மட்டுமே!

ஹால் டிக்கெட் எடுத்துக்கிட்டாச்சா?? சாமி கும்பிட்டு போங்க. முருகா, உன்னைத் தான் நம்பி இருக்கேன்னுட்டு கிளம்பி...ஹாலுக்குள் நுழையும் பொழுது இன்னைக்கு என்ன எக்ஸாம் என்று ஒரு நொடி ஸ்தம்பித்து ...எதுவுமே மண்டையில் ஞாபகத்துல இல்லியே என்ற கலக்கத்துடன் உள்ளே நுழைந்தால்...அங்கே கதம்பமாக அனைத்துத்துறை மாணவ, மாணவிகள்...சிலர் குழப்பத்துடன், சிலர் ஒரு முடிவுடனே(!), சிலர் பயபக்தியுடன்...

ஆசிரியர்கள் வந்து பேப்பர் கொடுத்து, தேர்வு எண்ணை எழுதுங்கள், இப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று சொன்னவுடன்...கேள்வித்தாளை படித்து தேறுவோமோ இல்லையென்றால் எப்படி தேறுவது என்று யோசிக்க ஆரம்பித்து விடும் மனது. முதல் ஒரு மணி நேரத்தில் அழகான கையெழுத்துடன் ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல தலைஎழுத்தாக மாறி விடும்! அதுவும் அருகில் இருக்கும் மாணவிகள் பரபரவென்று எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தால், என்னங்கடா நான் மட்டும் தான் இப்படி இருக்கேனா என்று சுற்றுமுற்றும் பார்த்தால் நமக்கு கம்பெனி கொடுக்க நிறைய மாணவர்கள் இருப்பார்கள்!

சில மாணவர்கள் பரீட்சை ஹாலில் வாத்தியார்களை டென்ஷன் பண்ணியதும் உண்டு. இவன் பிட் அடிக்கப் போறானோ என்று அவனையே சுத்தி வருவார்கள். ஆனால் வேறொரு கூட்டம் அங்கே பிட்டு, பேப்பர் மாத்துறது என்று சகலத்தையும் பண்ணியதாக கேள்வி!

கல்லூரி ஸ்ட்ரைக், வகுப்பாக படத்திற்குப் போனது, நண்பர்களுடன் சேர்ந்து போனது, கொஞ்சம் படித்தது, நிறைய வெட்டி பேச்சு பேசினது, படிப்பாளிகளை கண்டு மிரண்டது ...அது ஒரு இனிமையான காலம் தான்! பல புதிய நண்பர்களின் அறிமுகம் என நட்பு வட்டாரம் விரிவடைந்ததும் இக்கால கட்டத்தில் தான்!

இன்றும், கல்லூரி என்றவுடன் பிரமாண்டமான அந்த ஆலமரங்கள், காற்றாட வெளிச்சமான வகுப்பறைகள், மரம் செடிகளுடன் நீண்ட சாலைகள், வரும் வழியில் ஒரு காபிக்கடை, பாய்ஸ் ஹாஸ்டல், அழகான மெயின் பில்டிங், பூச்செடிகள் சூழ்ந்த அமைதியான கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைப்பசேல் வயற்பரப்புகள் (இன்று இல்லை என்பது காலக்கொடுமை ) , திருப்பரங்குன்றம் மலை...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...