Thursday, August 13, 2015

ஆடிப்பெருக்கு - உலா ...

நாளைக்கு ஆடிப்பெருக்கு! அம்மா சொன்னவுடன், கோவிலுக்குப் போய் மீனாக்ஷியை தரிசனம் செய்து விட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன். காலையில் நேரத்திற்குச் சென்றால் கூட்டத்தைச் சமாளித்து விடலாம். தங்கை மகளும் வருகிறேன் என்றவுடன் கிளம்பி விட்டோம். வெளியில் கூட்டம் அவ்வளவாகத் தெரியவில்லை! செக்யூரிட்டியை கடந்து கோவில் உள்ளே நுழையும் போதே சந்தனம், பூக்களின் மணம் வர, அம்மா, மாலை வாங்கிட்டு போங்க, அர்ச்சனை தட்டு, சுவாமிக்கு அர்ச்சனை என்று முகத்திற்கு எதிரே நீட்டிய தட்டுக்களையும், மாலைகளையும் கடந்து உள்ளே சென்றால் அதிகாலையிலிருந்து வந்த மக்கள் கூட்டம், கூட்டம் கூட்டமாக!!!

அதிகாலை நேரமாதலால் கடைகள் மூடியிருந்தது. கடைகள் இல்லாத கோவில் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!

உறவினர்கள் சூழ வெட்கப்பட்டுக்கொண்டே புது மணப்பெண்கள், மணமகன்கள் என சுற்றுப் பிரகாராங்களில் கூட்டம். தாலி பெருக்குவது நடந்து கொண்டிருந்தது. பெரிய விசேஷம் தான் போலிருக்கு! எங்களிடையே அந்தப் பழக்கம் இல்லாததால் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்களை கடந்தேன். விபூதி பிள்ளையார் நவீன 'மொழுமொழு' விபூதியில் குளித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கோபுரத்தின் பின்னணியில் எழும் சூரிய பகவானை பார்த்து விட்டு அம்மன் சன்னதி கூட்டத்தில் இணைந்தோம்.


நீண்ட வரிசை!!! இந்த வரிசையில் நின்றால் எப்போது பார்ப்பது? மலைப்பாகத் தான் இருந்தது! மேடம், ஐம்பது, நூறு ரூபாய் டிக்கெட் இருக்கு. சீக்கிரம் அம்மனை பார்த்துடலாம். எவ்வளவு சீக்கிரம்? இந்தா, வரிசை நகர்ந்துட்டே இருக்கு பாருங்க. ம்ம்ம்... இருக்கட்டும். இந்த வரிசையையும் கொஞ்சம் சீக்கிரம் நகர்ற மாதிரி செய்யலாமே!! வளைந்து வளைந்து சென்றது வரிசை. ஜாலியாகச் சுவரில் இருந்த திருவிளையாடற்புராண சித்திரங்களைப் படித்துக் கொண்டே ஒரு வழியாக சன்னதிக்குள் வந்தாகி விட்டது. பெரிய பெரிய மின்சார விசிறிகளை ஆங்காங்கே வைத்திருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது! அந்தக் காலை நேரத்திலும் அப்படி வியர்த்தது! அநேக பெண்களும் தலை குளித்து, வாச மலர்களைச் சூடி, சிலர் மஞ்சள் பூசிய முகத்துடனும், புத்தாடையுடனும், புது நகையுடனும் 'பளிச்'சென்று இருந்தார்கள்.

அம்மனை நெருங்க ஏசியின் குளிர் நன்றாகத் தான் இருந்தது. நடுநடுவே கரைவேட்டிக்கு, போலீஸ்காரர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று ஒரு கூட்டம் தனி வரிசையில் சென்று அம்மனை மறித்து நின்று அனைவரின் வயிற்றெரிச்சலையும் வாங்கி கட்டிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக அம்மனின் தரிசனம் கிட்டியது. அழகி அவள்!!!

வைர கிரீடமும், வைர கிளியுடனும் வாசனை மலர்களுடன் தீபாராதனையில் ஜொலிக்க...திவ்ய தரிசனம் !!! குங்குமத்தை வாங்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு ஒதுங்கினோம். தட்டில் விழும் காணிக்கையில் குறியாக இருக்கிறார்கள் சில பட்டர்கள் :(

முக்குறுணி விநாயகரை தரிசிக்கச் செல்லும் வழியில் சூடான வெண்பொங்கலை தொன்னையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்! மிளகு, நெய் வாசம் சுண்டி இழுத்தாலும் கணேஷா என்று பிள்ளையாரை பார்க்க அவ்விடத்தைக் கடந்தோம். சுவாமி சன்னதியில் கூட்டம் இல்லை. நிம்மதியாக நீண்ட நேரம் அங்கு நின்று தரிசனம் செய்ய முடிகிறது. சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி, பிட்சாடனர், லக்ஷ்மி தரிசனம் அமர்க்களமாக இருந்தது. சித்தர் எண்ணை காப்பு அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார். துர்க்கையும் எலுமிச்சை பழ மாலையுடன்!

சுற்றுப்பிரகாரத்தில் காளி, வீரபத்ரர், திருக்கல்யாண கோலத்துடன் அம்மன் , வெண்ணையில் மூழ்கிய ஹனுமான், நவக்கிரகங்கள் எல்லோரையும் தரிசித்தாயிற்று !! பார்வதி- குட்டி யானையின் ஆசிர்வாதமும் ! கோவில் கடையில் பிரசாதம்...அப்பம், முறுக்கு, புளியோதரை நிறைய இருந்தது. வெளியில் வந்து பொற்றாமரைக்குளத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நல்ல கூட்டம்! பலரும் கோபுரத்துடன், குளத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்! சூரிய ஒளியில் கோபுரம் ஜொலித்துக் கொண்டிருந்தது! இம்முறை செவ்வாடை, ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இல்லாதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது!



தூண்கள் எல்லாம் 'sandblasting' செய்யப்பட்டுச் சிலைகள் வழுவழுப்பாக இருந்ததில் அதன் சுயத்தை இழந்திருந்தது. புதிதாக தூண்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பராமரிப்பு வேலைகளும் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. கோவிலில் குடிகொண்டிருக்கும் புறாக்களும், வௌவால் கூட்டங்களும் குறைவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது!

அம்மா, அப்பா, பாட்டி, பெரியம்மாவுடன் எத்தனை முறை வந்திருக்கிறேன்? பாட்டி வீடு அருகிலிருந்ததால் சொற்பொழிவுக்கூட்டங்களுக்கும் வந்திருக்கிறோம். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் கோவில்! ஆடிப்பெருக்கன்று கோவிலுக்குச் சென்று வந்ததில் பரம திருப்தி!

4 comments:

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...