Thursday, September 24, 2015

ரயில் பயணங்களில் ...

ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தாலும் பெங்களூரிலிருந்து மதுரைக்கு முதன்முறையாக இரவில் தனிமைப் பயணம்... சிறிது அச்சத்துடனே பயணித்தேன்!

சில நிமிடங்களே நிற்கும் ரயில்வே ஸ்டேஷன் என்றதால் தம்பி குடும்பத்துடன் பல நிமிடங்களுக்கு முன்பே ஆஜராகி விட்டோம். எல்லோரும் சேர்ந்து போக வேண்டியது ஏனோ தம்பியின் கடைசி நிமிட வேலை செய்த குழப்பத்தில் டிக்கெட்டை கான்சல் செய்ய வேண்டியதாயிற்று!

சுத்தமாக இருந்த ரயில்வே நிலையத்தில் அந்த ஒரு பிளாட்பாரத்தில் மட்டுமே வரிசையாக ரயில்கள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டுச் செல்ல, இரவுப்பயணம் தான் என்றாலும் 'பளிச்'சென்று இருந்தார்கள் பலரும்! சிலர் சோகமாகவும், சிலர் சிரித்த முகத்துடனும் ரயிலில் பயணிகளை ஏற்றி விட்டு ஜன்னல் அருகே நின்று பேசிக்கொண்டும் வண்டி புறப்பட கையசைத்துக் கொண்டே விடைபெறுவதுமாய் என ரயில் நிலையத்துக்கே உரிய காட்சிகள்!

ரயில் வந்து நின்றவுடன் அதனுடனே வந்த மூச்சை அடைக்கும் மூத்திர நாற்றம்... என்று மாறுமோ இந்த நிலை என்று ஏங்க வைத்தது. வண்டி கிளம்பியவுடன் அந்த நாற்றமும் மறைந்தது தான் ஆச்சரியம்! இரண்டு மூன்று ரயில்கள் வருவதும், மக்கள் இறங்குவதும், ஏறுவதும்,  கன்னட, ஹிந்தி மொழிகளில் கனத்த குரலில் அறிவிப்பாளர்களின் பேச்சு புரியாவிட்டாலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல வேளை, ஆங்கிலத்திலும் சொன்னதால் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கள் தப்பித்தார்கள்!

நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட, பார்த்து பத்திரமா போ! செல்போன் எடுத்துக்கிட்டியா?? எப்ப வேணுமினாலும் கூப்பிடு, பரபரத்தான் தம்பி. தனியாகச் செல்லும் என்னைப் பற்றி அவனுக்குத் தான் அதிக கவலை! ஒண்ணும் பயமில்லை. நான் பார்த்துக்கறேன்- சொல்லி விட்டேனே தவிர எனக்குள்ளும் உள்ளூர உதறல் தான் :( இன்னும் ரெண்டு மூணு நாள் தங்கி இருந்திருக்கலாம். நீ வந்ததில் நாட்கள் போனதே தெரியவில்லை. அடுத்த தடவை பாவா, குழந்தைகளுடன் வரும் போது ஒரு வாரமாவது தங்கி இருக்கிற மாதிரி ப்ளான் பண்ணிட்டு வா. முடிஞ்சா அடுத்த வாரம் நானும் மதுரை வரப்பார்க்கிறேன்.

சரி, நீயும் பத்திரமா இரு. போயிட்டு வர்றேன் என்று தம்பி குழந்தை, மனைவியிடமும் சொல்லி விட்டு வண்டியில் ஏறியாச்சு! தம்பியும் வேகமாக என் பெட்டிகளை உள்ளே வைத்து விட்டு சீட்டுக்கு அடியில் தள்ள முயற்சிக்க அதுவோ மக்கர் பண்ண, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர் வந்து உதவி செய்ய அவருக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, சரி சரி, நீ இறங்கு வண்டி கிளம்ப போகுது!! 

இனி அடுத்த வருடமோ, இரண்டு வருடம் கழித்தோ தான் பார்ப்போமோ என்னவோ?? வருத்தமாக இருந்தது.

எனக்கு எதிரே இருந்தவர் அடிக்கடி ரயில் பயணம் செய்பவர் போல. நிமிடங்களில் விரிக்கையைப் போட்டு தன் படுக்கையை தயார் செய்து கொண்டு TTRக்காக காத்திருந்தார். ஏனோ ஹோட்டலில் ஆற அமர சாப்பிடாமல் 'லபக் லபக்' என்று வாயில் உருட்டித் தள்ளுபவர்கள் ஞாபகம் வந்தது. நானும் என் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலேயே 'கோட்டு' போட்டுக் கொண்டு வந்த TTR பாஸ்போர்ட் வாங்கி சரிபார்த்து விட்டு அவர் பேப்பரில் 'டிக்' அடித்து விட்டு நகர, என் போர்வை, தலையணை எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்திவிட்டு சிறிது நேரம் மூடியிருந்த ஜன்னல் வழியே நகரை வேகமாக முந்திக்கொண்டுச் செல்லும் ரயில்பாதையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நண்பர் ரத்தினக்குமார் வேறு ரயிலில் எலி இருக்கும் என்று பயமுறுத்தியிருந்தார். ஞாபகம் வந்தவுடன் 'சடக்'கென்று காலை மேலே தூக்கி வைத்துக் கொண்டேன். அடுத்த மூன்று இருக்கைகளில் கணவன், மனைவி ஒரு பெண்குழந்தை. அப்பா, அம்மா இருவரும் அவர்கள் தாய்மொழியில் குழந்தையிடம் பேசினால் அவள் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். NRI போல!! :) அவர்களுக்கும் அடுத்த இருக்கையில் அப்போது தான் கால் முளைத்து நடை பயிலும் ஒரு சிறு குழந்தை. கள்ளம்கபடமற்ற சிரிப்புடன் புதுமுகங்களை பார்த்துக் கொண்டே ரயிலின் ஆட்டத்துடன் அவனும் சேர்ந்து ஆடியபடியே கம்பார்ட்மெண்ட் முழுவதும் வளைய வந்து கொண்டிருந்தான். ஏண்டா , இப்படி படுத்தறே??? என்ற அவன் தாயின் கேள்வியில் களைப்பும் வருத்தத்தையும் விட அன்பும் பெருமையும் தான் இருந்ததாக தோன்றியது எனக்கு! அத்தனை ஆட்டம் போட்ட குழந்தை விளக்குகள் அணைந்த மறுநொடியே தாயிடம் அடைக்கலமாயிருந்தான் !! என்னைத்தவிர பலரும் தூங்கியே விட்டிருந்தார்கள். கடவுளே, யாரும் குறட்டை விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே படிக்கவேண்டிய புக்கை எடுத்து வைத்துக் கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர ஆரம்பித்தேன்.

புத்தகத்தின் சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

ரயிலின் ஆட்டமும் ஊருக்கு வந்த நாளிலிருந்து தூக்கம் சரிவர இல்லாத களைப்பும் சேர்ந்து கண்ணை அழுத்த எப்பொழுதுஉறங்கினேன் என்றே தெரியவில்லை. 'க்ரீச்' என சக்கரம் தண்டவாளத்தை உரசி நிற்கையில் தூக்கம் களைந்து பார்த்தால் சேலத்தில் வண்டி நின்று கொண்டிருந்தது. நேரம் இரண்டரையோ என்னவோ! அந்த இரவிலும் சிலர் இறங்குவதும் ஏறுவதும் என ஒரு சிறு பரபரபப்பு.

'தடக் தடக்' என மீண்டும் வண்டி புறப்பட, தூக்கமும் கண்களைத் தழுவ, அடுத்து ஈரோட்டில் நிற்க, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கணவர் மடியில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைத் தவிர வேறு மக்கள் கூட்டம் அதிகமில்லை. அவர்களுக்கான ரயில் இனிமேல் தான் வருகிறது போல! சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நின்றது. 

தூக்கம் விடை பெற, விடிந்தும் விடியாத காலைப்பொழுதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கம்பார்ட்மெண்டில் என்னைத்தவிர அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்!!! அமைதியான அழகான மனதை வருடும் காலை நேரப்   பயணங்கள் எனக்குப் பிடித்தமான ஒன்று. கரூரை நெருங்கும் வேளையில் விடிய ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறிது விளைநிலங்கள், ஓங்கி வளர்ந்த பனை, தென்னை மரங்கள், நெருஞ்சி முள்ளாய் கருவேல மரங்கள் வழியெங்கும் வறண்டு கிடந்த நிலங்களை கண்டு ஏனோ மனம் நெருடியது. வாழ்வாதாரமாய் இருந்த விவசாயம் கண்முன்னே கருகிக் கொண்டிருக்கிறது! ம்ம்ம்...

நன்றாகவே விடிந்து விட்டது இப்பொழுது. வண்டியும் கொஞ்சம் வேகமாக செல்வதைப் போல இருந்தது. செம்மண் நிலங்கள், பின்புலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோ??? பறவைகள் பறந்து செல்வதும், ஆடு, கோழி, மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதும், காலைக் கடனை கழித்துக் கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்று ரயிலுக்கு மரியாதை செலுத்துவதும், ரயில் பாதையை ஒட்டி இருக்கும் வீடுகளில் பெண்கள் வாசல் தெளித்து கோலமிடுவதும் என காலைநேரக் காட்சிகளுக்கு குறைவில்லை!

திண்டுக்கல் நெருங்கும் போதே தண்ணீர் பாய்ச்சிய விளைநிலங்கள் மனதை கொள்ளை கொண்டது. பூந்தோட்டங்கள், கீரை, காய்கறிச் செடிகள், நெல், வாழை, தென்னந்தோப்புகளுடன் சோழவந்தான் பசுமையில் திளைத்துக் கொண்டிருக்க...இயற்கை அன்னையின் அரவணைப்பில் கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த ஊர் அப்படியே இருக்க வேண்டும். மாறி விடக்கூடாது ... அத்தனைக்கும் ஆசைப்படு மனமே!

அடுத்து வந்த காட்சிகள் மதுரையை நெருங்கி விட்டதை பறைசாற்றியது!!! எங்கும் ஈ மொய்க்கும் குப்பை மேடுகள், அதைச் சுற்றி குட்டிகளுடன் பன்றிக்கூட்டங்கள்,  ரயில் சந்திப்புகளில் பொறுமையில்லா மனிதர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பேருந்துகள், லாரிகள், சைக்கிள், பைக்குகளின் அணிவகுப்புகள்...சுற்றிலும் கட்டிடக்குவியல்களுடன் வறண்ட குப்பை மேடாய் வைகை! தேங்கியிருக்கும் குட்டை நீரில் வண்ணான்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க...பொதி மூட்டையை சுமந்து வந்த கழுதைகள் 'தேமே' என்று நின்று கொண்டிருக்க, அவிழ்த்து விட்ட மாடுகளும், எருமைகளும்தேங்கி இருக்கும் நீரில் குளியல் போட்டுக் கொண்டிருக்க...காட்சிகளுக்கு என்றுமே குறைவில்லை!

மதுரை சந்திப்பு என்று மஞ்சள் வண்ணம் அடித்த போர்டை பார்த்தவுடன் வந்த குதூகலத்தை வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை! அதோ அம்மா, அக்காவின் மகன்கள்...அவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருந்தார்கள்! வண்டியில் இருந்த பலரும் மதுரையில் இறங்கினார்கள். வண்டியும் அதிக நேரம் நின்றது! ரயில்வே ஸ்டேஷனுக்கே உரிய பல மொழித்தகவல் அறிக்கையும் மணிச்சத்தமும் கூடுதலாக தமிழ் பேச்சும்,...ஹையா!!! ஊருக்கு வந்துவிட்டேன்! 

அம்மா தான் வயதாகி துவண்டு விட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவருக்கும் ஆனந்தம்! அக்கா மகன்களும் நன்கு வளர்ந்திருந்தார்கள்! அவர்களைப் பார்த்து நான்கு வருடமாயிற்றே! அவசரஅவசரமாக பெட்டிகளை இறக்கி பேசிக்கொண்டே தானியங்கி மாடிப்படிகளில் இறங்கி வெளியில் வந்தால் வாங்கம்மா, சார் எப்படி இருக்கிறாரு?? குழந்தைங்க எப்படி இருக்காங்க? ஏன் அவங்கள்லாம் வரலே என்று பழகிய பாசத்துடன் டிரைவர் அண்ணன்.

மதுரை வெக்கை வரவேற்க, அம்மாவைப் பார்த்ததில், ஊருக்கு வந்ததில் சில நாட்களுக்கு அமெரிக்காவா?? அப்படின்னா... :)

Saturday, September 5, 2015

வெள்ளி விழா கொண்டாட்டம் - 3


வெள்ளி விழா கொண்டாட்டங்களின் இரண்டாம் நாள் நிகழ்வு கல்லூரியில்,
மறக்கமுடியுமா அந்த வளாகத்தை!, ஒரு பக்கம் பச்சைபசேலென வயலும் வரப்புமாய் விரிந்திருக்க, மறுபுறம் திருப்பரங்குன்றம் மலைகள் சூழ்ந்திருக்க ,இடையில் மலை அடிவாரத்தில் ஏற்றமும் இறக்கமுமான சாலைகள், அதை ஒட்டிய பெரிய பெரிய கட்டிடங்கள், அவற்றில் காற்றோட்டமான பெரிய வகுப்பறைகள், சோதனைக் கூடங்கள், நூலகம்,, மாணவர் விடுதிகள், விழுதுகள் தாங்கிய மரங்கள், நடுவே பெரிய மைதானம். எப்போதும் சிலுசிலுவென வீசும் வயற்காற்று என இயற்கையின் வனப்பு சூழ்ந்த அற்புத வளாகம் எங்கள் கல்லூரி.

ஏதோ முதல் நாள் கல்லூரிக்கு போவது போல அத்தனை பரபரப்பாய் கிளம்பினேன். இருக்காதா பின்னே, எத்தனை வருடங்கள் ஆயிற்று. என்னதான் குடும்பம், வேலை, பணம், குழந்தை வளர்ப்பு, அவர்களின் படிப்பு என பலவாகிலும் வாழ்க்கை திசை மாறிப் போனாலும் கல்லூரி நாட்கள் எனக்கே எனக்கானவை. இன்று அவற்றை எல்லாம் திரும்பிப் பார்க்க எனக்கொரு வாய்ப்பு. இல்லையில்லை எங்கள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு.

நினைக்கவே உற்சாகமாய் இருந்தது.

வழி நெடுகே மதுரைக்கே உரிய பிரத்யேகமான ட்ராஃபிக்கும், இரைச்சலுமாய் மூலக்கரையைத் தாண்டியதும் அதிர்ந்தே போனேன். எங்கே போயிற்று பசுமை சுமந்த வயல்கள். எல்லாம் காங்க்ரீட் குவியலாய் மாறியிருந்தது. எப்படி இருந்த இடம். இங்கிருந்து பார்த்தால் கல்லூரி தெரியும்.இன்றோ....

ரயில்வே கேட், அதைத் தாண்டியதும் பளிச்சென கண்ணில் படுகிற மாதிரி கல்லூரியின் பெயர் பலகை, பின்னனியில் போலிஸ் ஸ்டேஷன்,அதையொட்டி கல்லூரிக்குச் செல்லும் மரங்கள் அடர்ந்த தனிபாதை.இன்றோ எதுவும் இல்லை. ஒரு மேம்பாலம் இவை எல்லாவற்றையும் மறைத்து நின்றது.

சட்டென மனம் கனத்துப் போனது.

பாலத்தின் மேல் ஏறி ஒரு சுற்று சுற்றிவிட்டு திருப்பரங்குன்றம் மலையையும், கோவில் கோபுரத்தையும் தரிசனம் செய்துவிட்டு, குண்டு, குழியுமான சாலையில், முன்தினம் பெய்த மழையில் தேங்கியிருந்த தண்ணீர் குட்டைகளை கடந்தும் நான் மிகவும் ஆவலுடன்எதிர்பார்த்த 'Thiagarajar College of Engineering' போர்டை பார்க்கவே முடியாமல் போனது.


ஒரு வழியாய் கல்லூரி போய் சேர்ந்தேன். பழைய இடங்கள், கட்டிடங்கள் அப்படியே இருக்க புதிதாக கட்டிடங்கள் பிரம்மாண்டமாய் முளைத்திருந்தன. கல்லூரியின் சேர்மன் திரு.கருமுத்து கண்ணன் அவர்களால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்ற செய்தியை அறிந்த போது ஏமாற்றமாய் இருந்தது. இவருக்காகத்தானே வெள்ளிவிழா தேதியை மாற்றினோம். அதனால்தானே இன்று பலராலும் நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனது .

யாருக்குத் தெரியும், அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருந்திருக்கலாம்.

நாங்கள் போய் சேர்வதற்கு முன்னரே நண்பர்கள் செட்டியார் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிகளை முடித்திருந்தார்கள். எல்லோரும் பழைய நாட்களுக்கு திரும்பியிருந்தோம். சிரிப்பும், சந்தோஷமுமாய் வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நானும் அந்தக் கூட்டத்தில் ஐக்கியமானேன்.

நான் கல்லூரியில் சேரும் பொழுது முதல்வராக இருந்த Dr.மரியலூயிஸ். அவர்களிடம் சென்று வணக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பற்றியும், என் வேலை பற்றியும் விசாரித்தார். அவர் மகன் நியூஜெர்சியில் இருப்பதாகவும்,அதனால் அவர் அடிக்கடி அமெரிக்கா வருவதாக கூறினார். தற்போது புத்தகங்கள் எழுதுவதாகவும், அழைப்பின் பேரில் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் பேசி வருவதாகவும் சொன்னார். சிரித்த முகத்துடன் அவர் வயதுக்கு மிக இளமையாகவே தெரிந்தார்.

அடுத்து எனக்கு 'மிகவும் பிடித்த'Engineering Drawing' (!!???) வகுப்பெடுத்த பேராசிரியர்.பழநியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். I think I remember you என்றார். ஒரு வேளை வேறு யாரையோ போட்டுக் குழப்பிக் கொள்கிறாரோ என நினைத்தாலும், என் ஆசிரியர் என்னை நினைவில் வைத்திருப்பதாய் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களை இன்ஜினியர்களாக ஆக்கியதில் எங்களுக்குச் சிரமமில்லை. அப்பொழுதெல்லாம் நுழைவுத்தேர்வு, கட்-ஆப் மதிப்பெண்கள் என ஒரு தர நிர்ணயம் இருந்தது. இப்போது அப்படி எதுவுமில்லை என வருத்தப் பட்டார். உண்மை தான்! இன்றைய ஆசிரியர்களின் நிலைமை பாவம்தான்!

என்னுடன் படித்த S .அருணாவின் அப்பாவான பேராசிரியர் திரு.சோமன், என்னுடன் படித்த சந்திரசேகரின் அப்பாவான இயற்பியல் பேராசிரியர். அகியோரிட்ம் பேசிக்கொண்டிருந்த போது பேராசிரியர் RRSம் எங்களோடு சேர்ந்து கொண்டார். அருணாதான் நிகழ்வுக்கு வரவில்லை. பேராசிரியர் சோமன் இத்தனை வருடம் கழித்தும் என் அக்கா மற்றும் என்னுடைய பெயரை நன்றாக நினைவு வைத்திருந்தது மகிச்சியாய் இருந்தது.

சுகந்தி மேடம் அன்று போலவே அதே சிரிப்புடன்! சாந்தி மேடம் தான் சிறிது மன நலமில்லாமல் இருப்பதாகக் கூறியதை கேட்க வருத்தமாக இருந்தது. அதற்குள் முதல்வர்களும், பேராசிரியர்களும் வந்து சேர, அனைவரும் சேர்ந்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். அனைவரையும் ஆடிட்டோரியத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

முன்னாள் முதல்வர் மெய்யப்பன் உடல் தளர்ந்திருந்தார்.பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கம்பீரமாகப் பார்த்தஆசிரியர்களை வயோதிக நிலையில் பார்த்ததில் கொஞ்சம் வருத்தம்தான்! எல்லோருக்கும் ஒரு காலத்தில் வயதாகதான் போகிறது. இருந்தாலும் சமயங்களில் அறிவு சொல்வதை மனது ஏற்றுக் கொள்வதில்லைதானே..

ஆடிட்டோரியத்தில் பேராசிரியர் முரளிதரனிடம் நலம் விசாரித்து விட்டு அவரவர் இருக்கையில் அமர விழா துவங்கியது. குத்துவிளக்கேற்றிய உடன், எங்களோடு படித்து இன்று காலம் கடத்திப் போன எங்களுடைய நண்பர்களுக்காக அஞ்சலி செலுத்தினோம். யார்,யாரெனச் சொல்லியிருக்கலாமோ என ஒரு கணம் தோன்றியது.

ராஜி 'ஜம்'மெனத் தமிழில் வரவேற்புரை துவங்கி வைக்க, என் மனமோ கல்லூரியின் முதல் நாள் நினைவுகளில் மூழ்கியது. இதே ஆடிட்டோரியத்திற்குள் பயந்துகொண்டே வந்ததையும், சீனியர் மாணவ, மாணவியர்கள் சந்தனம், கல்கண்டு கொடுத்து ஜூனியர்களை வரவேற்றதை படபடக்கும் இதயத்துடன் எதிர்கொண்டதையும், முதலாமாண்டு கணித வகுப்பெடுத்த ஆசிரியர் மோகனுடன் 'A' செக்க்ஷன் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றதும் நினைவுக்கு வர, எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.

பயந்தாங்கொள்ளி நாட்கள்!

மெயின் பில்டிங் மாடியில் முதலாமாண்டு வகுப்பறைகள்.ஒவ்வொரு பீரியடாய் கடந்து அடுத்தடுத்த பாடங்கள், இடைவேளை, மதியநேரம் என்று அந்நாள் முடியும் வரை யாரிடமும் ராகிங்கில் மாட்டி விடக்கூடாது என்ற நினைவில் கழிந்த பொழுதுகள் இன்று நினைத்தாலும் ரசிக்கமுடிகிறதே!!! ராகிங் கொடுமை தான் என்றாலும் என்னைப் பாதிக்காதவரை நான் ரசித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்!

இன்றோ எல்லாமே நிறையவே மாறி இருந்தது, என்னைப் போலவே!

மீண்டும் நினைவுலகத்திற்கு வந்தால் Dr .மரியலூயிஸ் இன்னும் பேசிக் கொண்டிருந்தார். அட ராமா!!! இவ்வளவு நேரமாகவா பேசுவார்?? மனமோ முதலாம் ஆண்டு வகுப்புகள், லேபுகள், ஆசிரியர்கள், கலாட்டாக்களின் நினைவுகளையே சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தது.

இப்பொழுது Dr.மெய்யப்பனின் முறை. அவரும் தன் பங்கிற்கு எங்கெல்லாம் வேலை பார்த்தார், என்ன செய்தார் என்று ஆரம்பிக்க, அந்த நாட்களில் அவர் வகுப்புகளில் நடந்த கலாட்டாக்கள், அவரிடமிருந்து தப்பித்து ஓடிய மாணவர்கள்...வழக்கம் போலவே அவர் பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார்.இதே பழைய நாட்களாய் இருந்திருந்தால் இன்னேரத்துக்குப் பின்னால் இருந்து கமெண்டுகளும், கைதட்டல்களும்,ராக்கெட்டுகளும் வந்திருக்கும்..இன்று எல்லோரும் நெகிழ்வான மனநிலையில் இருந்ததாலோ என்னவோ அமைதி காத்தனர்.

இவர்களுக்கு அடுத்ததாக Alumini president பேசினார். நாங்கள் ஆளாளுக்கு சீரியஸாய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தோம். ம்ம்ம்...இத்தனை நிமிடத்திற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று இவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கலாமோ???

ஆசிரியர்களுக்கும் முதல்வர்களுக்கும் நினைவுப்பரிசுகளை மாணவர்களைக் கொண்டே வழங்கினார்கள்! தாமோதரன் 'தடா'லென ஆசிரியரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறேன் பேர்வழி என்று அரசியல்வாதி தோற்றான்.

என்ன தான் வயதானாலும், உருவத்தில் வளர்ந்திருந்தாலும் நாங்கள் இன்னும் அதே பழைய ஆட்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சிலர் அரங்கத்தில் கூச்சலிட்டது ஏனோ சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.
நடுவில் ஒரு சின்னப் பிரேக். உச்சி வெயில் மண்டையைப் பிளக்க அப்போதும் சூடான காபி, யாருடைய ஐடியாவோ நானறியேன். கூடவே பருப்பு வடை, கேக். பலரும் சாப்பிட்டுக் கொண்டே கல்லூரி வளாகத்தைச் சுற்றி வர கிளம்ப, சிலரே மீண்டும் அரங்கிற்குத் திரும்பினோம். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு என தனியே கலை நிகழ்ச்சிகளை வேறு அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தொடர் உரைகளினால் சோம்பியிருந்த கூட்டத்தினரை உற்சாகப்படுத்த தாமோதரன், சுரேஷ், பொன்ராஜ், சித்திக் பழைய நாட்களின் புகழ்பெற்ற dumbcharades ஐ எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல் மீண்டும் நடத்திக் காட்டினர். தாமோதரனின் நகைச்சுவைப் பேச்சும் தூங்கி வழிந்தவர்களை நிமிர வைத்தது.

அடுத்து, கல்லூரி முதல்வர் Dr.அபய்குமார் பேசினார் பேசினார் பேசிக் கொண்டே இருந்தார்.எத்தனை ஸ்லைடுகள், எத்தனைவிஷயங்கள்!!! 'நறுக்'கெனச் சில முக்கியமான விஷயங்களை மட்டும் பேசியிருக்கலாம் எனத் தோன்றியது. அங்கு வந்திருந்தவர்களுக்கு கல்லூரி இன்று பல விஷயங்களில் முன்னேறி நல்ல பெயரை பெற்றுள்ளது என்பதைத் தவிர அவர் சொன்னதில் எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. அவ்வளவு நேரம் பேசியதற்கு பதிலாக துறை வாரியாக எங்களை அழைத்துச் சென்று இன்று எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது, லேப் வசதிகள் எப்படி பெருகியிருக்கிறது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு கட்டத்தில்அவர் எப்படா பேசி முடிப்பார் என்ற தவிப்பு தான் பலருக்கும்!

மதிய உணவிற்கு கிளம்புவதற்கு முன் Dr.ராஜாராமிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முந்தைய நாள் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தவரிடம் வலியப் போய் என்னை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென கேட்டுக் கொண்டேன். மேற்படிப்பு படிக்க அவரிடம் ரெக்கமண்டேஷன் கடிதம் வாங்க கல்லூரிக்கு வந்ததை நினைவுறுத்த ஞாபகம் வருகிறது என்றார். நீ சொன்னதால் தான் இன்று வந்தேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். நல்லாசிரியர்!

முதல்நாள் துறைவாரியாக எடுத்த படங்களை ஃப்ரேம் போட்டு ராஜன் ஒவ்வொருவரிடமும் கொடுக்க, அனைவருக்கும் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும்!

சுவையான சாப்பாடு , 'சுடுசுடு' வெயில், பலரும் அவதிஅவதியாகச் சாப்பிட்டு விட்டு சுடுநீரை காலில் கொட்டிக் கொண்டது மாதிரி ஊருக்கு கிளம்பணும், பெர்சனல் வேலைகள் , நாளைக்கு வேலைக்குப் போகனும் என்று காரணங்களைச் சொல்லி கிளம்பி விட்டார்கள். முதல் நாள் எவ்வளவு கலகலப்புடன் ஆரம்பித்தது சடுதியில் முடிந்து விட்டது போலிருந்தது. சம்திங் இஸ் நாட் ரைட் என நினைத்துக் கொண்டேன்.

வெளியில் வந்தால் பலரும் நாங்கள் கொடைக்கானல் போகிறோம் என்று தப்பித்துப் போன மாதிரி ஓடிக் கொண்டிருந்தார்கள்! உமாவுடன் சேர்ந்து கொண்டு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தால் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் மாணவர்கள். தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி.

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடல் இன்னும் கொஞ்சம் ஆர்கனைஸ்டாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. பல சமயங்களில் ராஜன் தனி ஆளாய் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததைப் பார்க்க வருத்தமாகவும் இருந்தது. குறை சொல்வது எளிது தான். களத்தில் இறங்கி இத்தனை தூரம் நிகழ்வை சிறப்பாக்கிய நண்பர்களின் உழைப்புக்கு நிஜமாகவே ஒரு ராயல் சல்யூட்.
அப்ளைட் சயின்ஸ் செந்தில் முருகன், அவர் மனைவி, அவருடன் படித்தவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அவர்களும் கிளம்பி விட, அந்தச் சூழலே 'வெறிச்'சென்றிருக்க, எனக்கு மிகவும் பிடித்த ஆலமரத்தின் கீழ் அமைதியாக தனிமையில் அமர்ந்திருந்தேன். எத்தனை பேரின் கனவுகளைச் சுமந்த இடம் இது. இன்னும் எத்தனை எத்தனையோ மாணவர்களைப் பார்க்கப் போகும் இடம். இந்த மரத்தின் வரலாற்றில் எனக்கும் ஓர் துளி உண்டு என நினைத்த போது பெருமிதமாய் இருந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங் முன் இருக்கும் ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு பயத்துடன் லேப் தேர்வுகளுக்காகக் காத்திருந்தது, கடந்து செல்லும் MCA மாணவர்களை கலாய்த்தது , ஹாஸ்டல் லஞ்ச் கூட்டாஞ்சோறை சேர்ந்து உண்டது...ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...பாடியது மனம்.

அதோ, அங்கே தான் வீணா சுந்தரத்துடன் நான் பேசிக் கொண்டிருப்பேன். சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருப்பாள். வீணாவின் தன்னம்பிக்கையும், திறமைகளும் என்னுள் அவளைப் பற்றின உயர்வான பிம்பத்தை வளர்த்திருந்தாலும், அவள் ஏதோ சொல்ல வந்து பின் அமைதியானதைப் போல் ஒரு பிரம்மை எனக்கு எப்போதும் உண்டு.ஏனோ அதைப் பற்றி கடைசிவரை கேட்கத் தோன்றியதே இல்லை.

கல்லூரியில் படிக்கும் பொழுது கிடைத்த நண்பர்கள், அவர்களுடன் உண்டு களித்த நேரங்கள், படித்த பாடங்கள், வகுப்பெடுத்த ஆசிரியர்கள், நூலகம்,அங்கு நான் படித்த ஸ்போர்ட்ஸ் ஸ்டார், எனக்குப் பிடித்த ஸ்டார்களின் பக்கங்களைக் கிழித்து எடுத்துக் கொண்டது, அடித்துப் பிடித்து முதல் ஆளாக லைப்ரேரியில் புத்தகங்களை எழுதிக் கொடுத்தது, லேப்-ல் அரட்டை அடித்தது...என்று ஒன்றன்பின் ஒன்றாகப் பழைய நினைவுகள்....ம்ம்ம்...அது ஒரு கனாக்காலம்!!!

தனியே உட்கார்ந்திருக்கையில் இப்படி பலதும் மனதில் நிழலாடியது...என் வாழ்க்கைப் பாதையில் என் மகிழ்ச்சியில், துயரங்களில் உறுதுணையாக நின்ற நல்ல நண்பர்களை இந்தக் கல்லூரி தான் எனக்கு அடையாளம் காட்டியது. இன்று நானிருக்கும் நிலைக்கும் இந்தக் கல்வி தான் எனக்கு உறுதுணையாக இருக்கிறது.

கல்லூரியில் மரங்களும், செடிகளும் சூழ்ந்திருந்த நிலை மாறி கட்டடங்களின் வளர்ச்சி கல்லூரியின் வளர்ச்சியை உணர்த்திற்று! கல்லூரி அதன் அழகைஇழந்து விட்டதோ??? கல்லூரி வளாகம் ஏதோவொரு இறுக்கம் சூழ்ந்ததைப் போலிருந்தது. ஒருவேளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் எனக்கு அப்படித்தோன்றியதோ என்னவோ.

'கீச்கீச்' பறவைகளின் சத்தம் கேட்க இனிமையாக இருந்தது. சில மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, மாணவ, மாணவியர்கள் சகஜமாகப்பேசி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்! காலம் தான் எப்படியெல்லாம் மாறி விட்டிருக்கிறது!

பல நண்பர்களோடு இன்றும் தொடர்பிலும், நெருக்கத்துடனும் இருந்தாலும் சிலருடன் முற்றிலும் தொடர்பே இல்லாமல் போனது வருத்தம்தான். சமீபகாலமாக ஃபேஸ்புக் வாயிலாகவும், ஈமெயில் மூலமாகவும் நண்பர்களோடு மீண்டும் தொடர்பில் இருப்பது டெக்னாலஜியின் கருணையே கருணை.

முன்பு நேரடியாக அறிமுகம் இல்லாமல் முகநூல் வாயிலாக அறிமுகமான பல நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினருடன் நேரில் பேசியது புதிய அனுபவம்.என்னுடைய முகநூல் குறிப்புகள், பத்தி எழுத்துக்கள் அவர்களுக்கு பிடித்திருப்பதாய்ச் சொல்லியதை நம்பமுடியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இந்த முறை நண்பர்களுடன் பேசுகையில் பலரும் வருந்திய விஷயம்- படிக்கும் காலத்தில் சிறுபிள்ளைத்தனமாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் மெச்சூர்டாக நடந்திருந்தால் புரிதலுடன் கூடிய பல நட்புகள் சாத்தியப்பட்டிருக்கலாம் என்பதுதான்.

என்னைப் போல சொந்த மண்ணையும், மக்களையும் பிரிந்து தூரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற இனிய நினைவுகள் தான் சோர்வடையாமல் வைத்திருக்கும் மருந்து. அந்த வகையில் இந்தச் சந்திப்பு எனக்குள் நினைத்துக் களிக்க ஏராளமான நினைவுகளைத் தந்திருக்கிறது.



மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு உருவாகி, இதே போல நண்பர்களோடு சேர்ந்து களிக்கும் ஒரு நிகழ்வு நடக்கவேண்டும் என நினைத்துக் கொண்டே, பை பை TCE ... என கல்லூரியிடமிருந்து விடைபெற்றேன்.



அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...