Sunday, November 15, 2015

நினைக்கத் தெரிந்த மனமே...

இம்முறை ஊருக்குச் சென்றிருந்த பொழுது புட்டு வாங்க அரசமரம் செல்வதற்கு முன் நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டையும் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று தம்பி என்னை அழைத்துச் சென்றான். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அங்கு சென்றேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க ஆவலாகத் தான் இருந்தது.

செயின்ட் மேரிஸ் பள்ளியிலிருந்து செயின்ட் ஜோசப் பள்ளி வரை கடைகள் நிரம்பி வழிய, மிஷன் ஆஸ்பத்திரியின் வளர்ச்சியோ கட்டிடங்களாய் பிரமாண்டமாய் வளர்ந்து விட்டிருந்தது. மெயின் ரோடிலிருந்து கால்வாய் அருகே பிரிந்து செல்லும் தெரு இன்னும் குறுகி மேடு பள்ளங்களுடன் அன்று போல் இன்றும் கால்வாய் நாற்றத்துடன் பால்யகால நினைவுலகத்திற்கே கொண்டு சென்றது. தம்பியும் பாரு, அந்த பலசரக்கு கடை இன்னும் இருக்கு என்று ஒரு கடையை கடந்தவுடன் சொன்னவுடன் தான், ஆமா! இங்க ஒண்ணு இருந்தது! அதற்கு எதிர்ப்புறம் கூட அம்மாவின் சித்தப்பா பெண் வீடு இருந்ததே. கடவுளே! எல்லாம் மாறி விட்டிருக்கிறது. இங்க தான ஒரு டெய்லர் கடை இருந்தது? இந்தச் சந்தில் என்னுடன் படித்தவர்கள் வீடும், குச்சி ஐஸ் செய்யும் கடையும், அதைத்தாண்டி சென்றால் தெருவே மணக்கும் கருவாடு விற்பவரின் வீடு...மனம் அலைபாய...

பெரிய விறகுக்கடை இங்கிருந்தது. சாயப்பட்டறைக்கு அங்கிருந்து தான் வாங்குவதுண்டு. அவ்வளவு பெரிய தராசு! அங்கிருக்கும் எடைக்கற்கள் தூக்க பிரயத்தனப்பட்ட நாட்கள், கால்ல போட்டுக்காதே, வேண்டாம்மா...பதறுவார் விறகு கடைக்காரர். எதிரே கரிக்கடை, அங்கே வேலை செய்பவர் பாவம் கறுத்தே இருப்பார்! நல்ல பெரிய பெரிய கரித்துண்டு வாங்கிட்டு வரச் சொன்னாங்க, பணம் அம்மா வந்து கொடுப்பாங்க...கையில் கரி பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாய் வாங்கிச் சென்ற நாட்கள் நிழலாடின.

எதிரில் அப்பாவின் சித்தி வீடு. எனக்கு மிகவும் பிடித்த வீடும் கூட. உள்ளே நுழைந்தால் ஏதோ கிராமத்து வீடு போல இருக்கும். ஆடு, கோழி, மாடுகளுடன் சாயப்பட்டறை என்று பெரிய இடம். கூட்டுக் குடும்பம். முட்டைமேல் அடைகாக்கும் கோழியை வேடிக்கை பார்த்தது , குஞ்சுகளை கையிலெடுத்து கொஞ்சியது, கொய்யா, எலுமிச்சை மரங்கள், சாணி மணக்க மாடுகள் என்றிருக்கும் அங்கு பாட்டியுடன் அடிக்கடி விஜயம் செய்ததது இன்று அடையாளமே தெரியவில்லை! அத்தைகளும், மாமாக்களும் மிகவும் அன்பானவர்கள்! ம்ம்ம்...

இதோ, இங்கே தான் பெரியப்பா வீடு. சாயப்பட்டறையுடன் பெரிய உயரமான மாடியுடன். எதிர் வீட்டில் கூட அப்பாவின் உறவுகள் தான். தெரு முழுவதுமே தெரிந்த உறவுகளும், பங்காளிகளும் என்று ஒருவொருக்கொருவர் அனுசரணையாக இருந்தது நினைவிற்கு வந்தது.

நாங்கள் இருந்த தெரு அந்த கால சிம்ரனின் இடுப்பை போல் குறுகி இருந்தது. வீட்டின் முன் நானும் தம்பியும் அமைதியாக நின்று கொண்டிருந்தோம்.
அன்று ஒரு பெரிய வீடு. இன்று பல வீடுகளாய் வளர்ச்சியடைந்திருந்தது!அதோ அந்த வாசலில் உட்கார்ந்து கடந்து செல்பவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார் பாட்டி. பூர்விக வீட்டை வாங்கி விடு என்று அப்பா சொன்னாலும் ஏனோ மனம் ஒப்பவில்லை. பாட்டி இல்லாத வீடு... இவ்வளவு வருடத்திற்குப் பின்னும் பாட்டியை நினைத்து ஏங்குகிறேன். தி கிரேட் பாட்டி!

நாங்கள் சென்றிருந்த நேரம் அதிகாலை மற்றும் விடுமுறை ஆதலால் தெருவில் யாரும் இல்லை. பெண்கள் எழுந்து வாசல் தெளித்து விட்டு மீண்டும் தூங்கச் சென்று விட்டார்களோ? குழந்தைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். மூன்றாம் நான்காம் ஜாமம் முடிந்தும் சுகமாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

அப்பாவிடம் அடி, அம்மாவிடம் திட்டு, பாட்டியிடம் புலம்பல், அக்கா, தங்கை, தம்பிகளுடன் நான் பண்ணிய அலம்பல்கள், தெருவே கதி என கிடந்த என் சிறுவயது நாட்கள், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று முழங்கால் அடிபட்ட நாட்கள், தெருப்பெண்களுடன் பல்லாங்குழி, கபடி, பாண்டிச்சில்லு என விளையாடியது, சேர்ந்து உண்டது, வேடிக்கைப் பேச்சுக்கள், வயதில் மூத்த பெண்கள் சொல்லும் பேய்க்கதைகளை பயத்துடன் கேட்டு புளிய மரம், வேப்ப மரம் என்றாலே பயந்து நடுங்கியது...பேய், பிசாசு என்று இல்லாத ஒன்றை கண்டு மிரண்டது, மெதுவாக திரும்பி பார்த்தேன், கால்வாயின் மறுபுறத்தில் மிஷன் ஆஸ்பத்திரியை சேர்ந்த புளிய, வேப்ப மரங்கள் ...காணாமல் போய் கட்டிடங்களாய் ...

அம்மா, பேய்ன்னு ஒன்னு இருக்கா? யாரு அப்படியெல்லாம் சொன்னது. அதெல்லாம் ஒன்னும் கிடையாது. பாட்டி , பேய் எப்படி இருக்கும்? ஐயோ, பிள்ளை எதையோ பார்த்து பயந்து போய் கெடக்குன்னு தெற்குவாசல் மசூதியில் வெள்ளிக்கிழமை மந்திரிப்பு, கோவிலில் வேண்டி தாயத்து...அதையே சாக்கா வைத்து பள்ளிக்குப் போக மாட்டேன் என்று நான் பண்ணிய சேட்டைகள்...

அம்மாவுடன் மார்க்கெட் சென்று சீசனுக்கு வரும் ஒரு பழங்களையும் விடாமல் வாங்கிச் சாப்பிட்டது...தெரு எதிரே தான் பலாப்பழம், நுங்கு, கொடை ரோடு ப்ளம்ஸ், மலைப்பழம், சீத்தாப்பழம் , நவ்வாப்பழம் , நெல்லிக்காய், கடுக்காய்ப்பழம், இலந்தப்பழம், மாம்பழம் என்று சீசனுக்கேற்றார் போல் விற்கும் தோல்கள் சுருங்கிய பாட்டி ஈ ஒட்டியபடி இருப்பாள். எவ்வளவு பொறுமையாக எண்ணெய் தொட்டு பலாப்பழ சுளையை பதமாக பிரித்தெடுப்பார். அதை வேடிக்கை பார்ப்பதிலும் சுகம்!

வீட்டில் குடியிருந்த ரேஷன், சலூன், பலசரக்கு, பொரிகடலை, கறிக்கடைகள், குடியிருப்பவர்கள் என்று எல்லோரையும் நினைத்துக் கொண்டோம். படிப்பறிவு இல்லாத அண்ணாச்சி மனக்கணக்கு போடுவதை படிக்காமல் எப்படி இவரால் கணக்கு போட முடிகிறது என்று வியந்திருக்கிறேன்! கறிக்கடையில் அம்மா காலையிலேயே ஆட்டுத்தலையும், காலும் வேண்டுமென்று சொல்லி விடுவார்... அவர்களும் வியாபாரம் முடிந்தவுடன் தீயில் வாட்டிக் கொடுக்க...அன்று தலையும், காலும் வைத்த கொழுப்பு மின்ன சுவையான அம்மா கையால் செய்த சூப். சுடச்சுட குடும்பத்துடன் உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்ட நாட்கள் ...பனி, மழைக்காலங்களில் அதிகம் இந்த சூப் வைத்துக் கொடுப்பார். சுவரொட்டி, கல்லீரல், ரத்தப்பொரியல், குடல் குழம்பு என்று ஒன்று விடாமல் சாப்பிட்டு ருசியை கண்டறிந்த காலங்கள்...ம்ம்ம்...

இந்த வாசலில் தான் குமுதம், விகடனுக்காக காத்திருந்து அக்கா தங்கையிடம் சண்டை போட்டுக் கொண்டு நகம் கடித்துக் கொண்டே முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை விடாமல் படித்ததெல்லாம் ஞாபகம் வருதே...

வீட்டின் அருகில் இருந்த கல் வாசலில் தோளில் மெஷினை வைத்துக் கொண்டு வரும் தையல்காரரிடம் தைப்பதற்க்கென்றே சிலவற்றை வைத்திருப்பார் அம்மா. வெயிலில் அலைந்து திரிந்து நிறம் கறுத்து குடித்து குடித்து சிவப்பேறிய கண்களுமாய், மலிந்த ரக பீடி குடிக்கும் தையல்காரரை பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால் குனிந்த தலை நிமிராமல் நேர்த்தியாக அவர் துணிகள் தைப்பதை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அந்த சிறு தையல் மெஷினுக்குள் கத்திரிக்கோல் முதல் நூற்கண்டுகள், ஊசி என பலதும் இருக்கும். மதிய நேரம் வரை வேலை இருந்தால் சாப்பாடும் கொடுத்து விடுவார் அம்மா. நியாயமாக கொடுக்கிற காசை வாங்கிக் கொண்டு வீட்டு வாசலுக்கே வந்து வேலை செய்கிறவர்கள் இப்போது இருக்கிறார்களா என்ன?

குப்பைத் தட்டு செய்ய பான்ட்ஸ் பவுடர் டப்பா, எண்ணெய் கேன்கள் தயாராக இருக்கும். அவர் குரல் கேட்டால் போதும் தெருவே பரபரத்து பரண் மேல் இருக்கும் சாமான்களை கொடுத்து அவரும் தட்டி தட்டி ஆணி அடித்து அழகாக குப்பைத்தட்டு செய்து கொடுப்பதை குழந்தைகள் நாங்கள் எல்லோரும் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்.

பாத்திரங்களில் பேர் வெட்றது என்று ஒருவர் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டே வருவார். திருமணங்களுக்கு, வீட்டு விஷேசங்களுக்கு பரிசாக கொடுக்கும் பாத்திரங்களில் பெயர் அடித்து கொடுப்பது அன்றைய வழக்கம். இன்றும் என் திருமணத்திற்கு வந்த பாத்திரங்களில் பெயரை பார்க்கும் போதெல்லாம்கொடுத்தவர்கள் நினைவிற்கு வந்து செல்கிறார்கள்! இன்றோ யாருக்கும் உபயோகப்படாத பரிசுகளை வாங்கிக் கொடுத்து குப்பைகளை பெருக்குகிறோம். ஒரு வீட்டு கிரகப்ரவேசம் என்று சொன்னால் போதும் முக்கால்வாசிப் பேர் கடிகாரம் கொண்டு வந்து நிற்கிறார்கள். திருமணத்திற்கும் அப்படித்தான்! பேர் அடித்து பாத்திரங்கள் கொடுப்பது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்டது போல!

பஞ்சு மிட்டாய், ஐஸ்க்ரீம், பொம்மைத் தலையுடன் குச்சிமிட்டாய் என்று குழந்தைகளை மகிழ்விக்க வியாபாரிகள் தெருவில் வந்து கொண்டிருந்ததெல்லாம் நினைவிற்கு வந்தது. யார் வந்தாலும் தெருக் குழந்தைகள் வாங்குகிறார்களோ இல்லையோ வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள். அஞ்சு பைசா வாட்ச் மிட்டாய் அநேகமாக அனைவர் கையிலும் பிசுபிசுத்துப் போகும் வரை இருக்கும்.
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா என்று எதற்கெடுத்தாலும் கிண்டலடிக்கும் இத்தலைமுறை அதை கண்டிருக்குமா என்ன? நிச்சயதார்த்தம் முதல் தியேட்டரில் அடுத்து வருகிற படத்திற்கான விளம்பரங்கள் வரை அந்த லைட்டின் துணையில்லாமல் நடந்ததில்லை. போஸ்டரை ஒட்டிக் கொண்டு தள்ளு வண்டிகள்... அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே பின்தொடரும் சிறுவர் பட்டாளம்...இரவு நேரங்களில் வரும் குல்ஃபி ஐஸ், பஞ்சு மிட்டாய்...காத்திருந்து சாப்பிட்ட காலங்கள்...

மாலையில் சிறிது நேரம் அடுத்த தெருவில் புல்லாங்குழல் செய்பவர்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. அவர்கள் பேசிக்கொண்டே நெருப்பில் இருந்து இரும்புக்குச்சியை எடுத்து துளையிடுவதை ஆச்சரியமாக ரசித்ததுண்டு. என் சிறுதீனிக் கடைகள்...கமர்கட், பூஸ்ட் மிட்டாய், கடலை, தேங்காய், பாக்கு மிட்டாய்கள், நியுட்ரின் , எக்லேர்ஸ் சாக்லேட்டுகள் , மேரி, ட்ரூ நைஸ் , பொம்மை ரொட்டிகள்...என்று சதாசர்வ காலம் நொறுக்கிக் கொண்டிருந்த நான்!

ஆமவடை, உளுந்த வடை, தூள் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜியின் மேல் காதல் வந்ததே இரண்டாவது தெருவில் இருந்த கடையால் தான். காலையில் அப்பம் சாப்பிடவே வீட்டு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்துக் காத்திருப்பேன். அப்பத்திற்க்கென்றே குழியான மண்பாத்திரம், அதற்கு ஒரு மூடி, அதுவும் மண்பாத்திரமே! வெண்ணெய் போட்ட அப்பம் கருப்பட்டி ஏலக்காய் மணக்க வாயில் வைத்தாலே கரையும் ...மாவை ஊற்றுவதும், பிய்க்காமல் எடுப்பதும்...சமையல் மேல் ஆர்வம் வந்ததும் அவரால் இருக்குமோ?

மூன்றாவது தெருவில் இருந்த மார்க்கெட்டில் தான் முற்றல் இல்லாத காய்களை பேரம் பேசி எப்படி வாங்குவது என அம்மாவிடம் கற்றுக் கொண்டது! மிகவும் பிடித்த மதுரை மல்லி , பிச்சி, முல்லைப்பூக்களை அழகான திண்டிகளாக கட்டும் நேர்த்தியை கண்டு மனம் மயங்கியது மூன்றாவது தெருவில் தான்! மாலை நேர நொறுக்குத்தீனிகள் முறுக்கு, நெய்கடலை, மசாலா கடலை, காராபூந்தி, மைசூர்பாகு, ஜிலேபி, காராசேவு, ஓமப்பொடி, பக்கோடா விற்கும் கடைகள்...ம்ம்ம்...இன்னும் மணம் காற்றில் வளைய வருகிறதோ???

அரிசி, பருப்புக் கடைகள்...விழாக்காலங்களில் கூட்டம் அலைமோதும் சேலை, காதணி கடைகள்...பலசரக்கு கடைகளில் ஐந்து கிராம் முதல் இருபது கிலோ வரை பேப்பரில் தான் மடித்துக் கொடுத்தார்கள். பிளாஸ்டிக் குப்பை பூதங்கள் வராத பொற்காலம் அது. ஹோட்டல்களில் வாழை இலையில் வைத்து தான் இட்லி, தோசைகளை மடித்துக் கொடுப்பார்கள். சாம்பாருக்கு வீட்டில் இருந்தே தூக்குச் சட்டி கொண்டு செல்ல வேண்டும். இன்று போல் மட்டமான பிளாஸ்டிக் குப்பைகள் அன்று இல்லை. துணிக்கடைகளும் மஞ்சள் பையை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தது. இன்றைய சுற்றுச்சூழலை கெடுப்பது போல் மக்காத பிளாஸ்டிக் பைகள் இல்லை. எப்படித்தான் மாறி விட்டோம்!

பள்ளி விட்டு வந்தவுடன் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஐந்து தெருக்களையும் சுற்றி வந்த பட்டாம்பூச்சி நாட்கள்...இன்று குழந்தைகளை வெளியே அனுப்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் புழுதி, போக்குவரத்து, இடித்து விட்டு மனசாட்சியே இல்லாமல் செல்லும் கூட்டம் என்று குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டிய கொடுமையான நிலைமை...மனம் புதிய, பழைய நினைவுகளில் அலைக்கழிக்க, நான் பிறந்து வளர்ந்த வீட்டை சில படங்கள் எடுத்துக் கொண்டு நானும் தம்பியும் கொஞ்சம் வருத்தத்துடனே கிளம்பினோம்.

டிவி இல்லாத நாட்களில் வானொலியில் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்கள் தான் இன்று வரை துணையாக இருக்கிறதோ? அந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையின் வேகம் ஒரு வித ஏக்கத்தை தான் தரும்.

என் மன வானில் நான் சிறகடித்து பறந்த அந்த நாட்கள் தான் எத்தனை இனிமையாக...வாழ்க்கை அன்று அவ்வளவு சுமையானதாக இல்லையோ? முகமறிந்த மனிதர்களுடன் அளவளாவியது போய் முகமறியா நட்புகள் என்று வாழ்க்கை வேறு திசையில் போய்க் கொண்டிருக்கிறது.

உறவுகளுக்கும், குடும்பங்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே இருந்த நெருக்கத்தை குறைத்து தன்னை மட்டுமே முன்னிறுத்தி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை நீரோட்டத்தில் மக்கள் ஓடுவதைப் பார்த்தால்...ம்ம்ம்...அயர்ச்சியாக இருக்கிறது.









6 comments:

  1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!! பாராட்டுக்கள்!
    எல்லோருக்குமே மலரும் நினைவுகள் ஒரு சுகத்தையும் சில சமயங்களில் வலிகளையும் கொடுத்துக்கொண்டு தானிருக்கிறது!

    ReplyDelete
  2. மிக்க நன்றி, திருமதி.மனோ சாமிநாதன்.
    //மலரும் நினைவுகள் ஒரு சுகத்தையும் சில சமயங்களில் வலிகளையும் கொடுத்துக்கொண்டு தானிருக்கிறது!// உண்மை தான்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு! என்னை 70-80 களில் பயணிக்க வைத்துள்ளீர்கள்!
    மிக்க நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி, விஜய்குமார்.

      Delete
  4. என்றும் மனதில் நிற்கும் மலரும் நினைவுகள் மிக அருமை ... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி, ரவி செண்பகம்.

      Delete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...