Saturday, February 13, 2016

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்...

ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானும் கணவரும் காலையில் அன்றைய தமிழக முதல்வரின் ஐந்து செயலாளர்களில் ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கிக் கொண்டு கல்வி மண்டல இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்றோம். அப்போதே நேரம் பத்து மணி இருக்கும். அலுவலகத்திற்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்போரும் உண்டு, வேலையைத் தவிர மற்றதை எல்லாம் செய்பவர்களும் உண்டு. அரசு சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு அலட்சியமான, அதிகாரமான உடல் மொழியும் உண்டு என்று கண்டுணர்ந்த நாளும் கூட!. உட்கார்ந்தே வேலை பார்த்து எடை கூடிய ஆண்களும், பெண்களும் நிறைய இருந்தார்கள்.

 கணினி, கைப்பேசி இல்லாத 'டொக்டொக்டொக்டொக்'  'சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்ற ஒரு இழுப்பில் தட்டச்சு பேசிய காலமது. அதிகாரி தந்த குறிப்புகளை காகிதங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர் பலர். ஒரு சிலர் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருப்பவரிடம் பேசிக் கொண்டும், முன் தினம் முடிக்காத வேலையை பார்த்துக் கொண்டும், ஏதோ எழுதுவதும், கையொப்பமிடுவதும், பியூனை அழைத்து கோப்புகளை வேறு மேசைக்கு எடுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மையாகவே தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்களையும் பார்த்தோம்.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகள் மாதிரி நாங்கள் நின்று கொண்டிருக்க ...

என்ன விஷயம். யாரை பார்க்க வந்திருக்கீங்க? கேட்டுக் கொண்டே வந்தவரைப் பார்த்தவுடன் அவர் தான் பியூன் என்று தெரிந்து கொண்டோம்.

ஒரு நாலைந்து ஆட்கள் தத்தம் வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்து வேடிக்கை பார்க்க, நாங்கள் மண்டல இயக்குனரை பார்க்க வேண்டும். மதுரையிலிருந்து வருகிறோம் என்று இன்ன பிற தகவல்களை சொல்லி, தமிழக முதல்வரின் செயலாளர் கொடுத்த பரிந்துரை கடிதத்தையும் கொடுத்தோம்.

இங்க இருங்க சார். உக்காருங்க மேடம். சார்ட்ட சொல்றேன்.

சொல்லிவிட்டு இயக்குனர் அறை வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

ஒரு பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு, சார்  இந்த கோப்புகளை அவர்ட்ட கொடுத்து கையொப்பம் வாங்கணும். செயலாளர் கொடுத்த பரிந்துரை கடிதத்தை இன்னும் நீங்கள் உள்ளே எடுத்துச் செல்லவில்லையே என்றவுடன்,

சார் இப்ப ரொம்ப பிஸி. கொஞ்ச நேரம் பொறுங்க மேடம்.

கோபம் மெதுவாக எட்டி பார்க்க ஆரம்பித்தது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்ற கதையா இருக்கே.  மீண்டும் முதல்வரின் செயலாளர் அறைக்குச் சென்று விஷயத்தைச் சொல்லி, உங்கள் கடிதத்தை கூட அவர் உள்ளே எடுத்துச் செல்லவில்லை என்றவுடன், அவர் தொலைபேசியில் யாரிடமோ பேசினார். இப்போது போய் பாருங்கள்.

மீண்டும் வந்தால் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை தான்.

இப்பொழுதும் உங்களால் என்னை என்ன செய்து விட முடியும் என்ற அகங்கார, அதிகார தோரணையுடன் அந்த காக்கிச்சட்டை . (என்ன புடலங்காய் மரியாதை வேண்டியிருக்கிறது).

வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளே குளிரூட்டப்பட்ட அறையில் அந்த இயக்குனர்! அலுவலகத்தில் அவருடைய வெளியுலகத் தொடர்பே அந்த படிக்காத மேதை மூலமாகத்  தான் நடக்கிறது என்பது துயரமான விஷயம்.

அதற்குள் பதினோரு மணி ஆகி விட, உழைத்து உழைத்து களைத்துப் போன சமுதாயம் தேநீர் அருந்த கிளம்பி விட்டது.

அந்த பியூனும் சார், நீங்களும் மேடமும் காபி சாப்பிட்டு வாங்க. சாரை பார்க்க இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்றார்.

கணவரும், இவர் நம்மிடம் பணத்தை எதிர்பார்க்கிறார் போலிருக்கு என்றவுடன். என்ன கொடுமை, உயர் பதவியில் இருப்பவரிடமிருந்து சிபாரிசு கடிதம் கொண்டு வந்த நமக்கே இப்படி இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கு வந்த ஆத்திரத்திற்கு எனக்குத் தெரிந்த தெரியாத எல்லா நல்ல வசவுகளையும் மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டேன். வேறு என்ன செய்வது?

அதற்குள் அங்கிருப்பவர்கள் எங்களை காட்சிப்பொருளாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அங்கிருந்த சில மணிநேரங்களில் ஓரிருவர் இயக்குனர் அறைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தனர். அதில் ஒரு பெண்மணி, பார்க்க விஷய ஞானம் உள்ளவர்போல தெரிந்தது. அவரும் காலையில் இருந்து நாங்கள் உட்கார்ந்திருந்ததும்,பியூனிடம் பேசிப்பார்ப்பதையும் பார்த்து எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

வந்த விஷயத்தைச் சொல்லி, சிபாரிசு கடிதத்தையும் குறிப்பிட்டோம். அவர் அந்த காக்கிச்சட்டையிடம் கேட்க, சார் பிஸியா இருக்கார் மேடம் அதான் என்று அவன் இழுக்க...அந்த பெண்மணிக்குத் தெரிந்து விட்டது போலும்.

எங்களிடம் இருந்த அலுவல் கோப்புகளைத்  தானே வாங்கிப் பார்த்து விட்டு, சில அரசாங்க ஆணைகளையும்  படித்து விட்டு, இன்னும் இரு  மாநகர அலுவலகங்களில் இருந்து NOC வாங்கி கொண்டு வர வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்குள் மதியம் ஆகி விடவே, சாப்பிட்டு விட்டு வாருங்கள். அதற்குள் சில படிவங்களை எடுத்துத் தருகிறேன் என்றார். அந்த காக்கிச்சட்டைக்கு அது பிடிக்கவில்லை தான்.

பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றோம். இங்கு யாரை பார்க்க வேண்டுமோ? இன்று மாலைக்குள் வேலை முடிந்து விடுமோ முடியாதோ என்று பல கேள்விகளுடன் உள்ளே நுழைந்தோம். நல்ல பெரிய மிகவும் சுத்தமான விசாலமான இடம். பெரிய மரங்கள் செடிகள் என்று நன்றாக இருந்தது. உள்ளே நுழையும் பொழுது கணவரின் உறவினர் தென்பட்டார். என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து அப்போதைய IPS ஆபிசரிடம் அழைத்துச் சென்றார். அவரும் பெரியப்பாவின் உறவினர். அங்கு அவர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உதவியால் சென்ற வேலை உடனடியாக முடிந்து மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அந்தப் பெண்மணியும் விரைவில் வேலையை முடித்து விட்டு வந்த எங்களை அதிசயத்துடன் பார்த்தார்.  நாங்கள் வருவதற்குள் ஒரு கட்டு படிவங்களை டைப் செய்து வைத்திருந்தார். ஒவ்வொன்றிலும் கையெழுத்திட்டு அவரே ஒரு பைலில் போட்டு அந்த வாயிற்காப்போனை கூப்பிட்டு உள்ளே இயக்குனரிடம் கொடுத்து விடுங்கள். நான் சரி பார்த்து விட்டேன். அவர் கையொப்பமிட்டால் வேலை முடிந்து விடும் என்று சொல்லி விட்டார்.

அப்போது அந்த கடுவன் மூஞ்சியில் இருந்த கடுப்பை பார்க்க வேண்டுமே? வேண்டா வெறுப்பாக உள்ளே எடுத்துச் சென்றது மட்டும் தான் தெரியும். இப்படியே சில மணிநேரங்கள்.

சார், நான் உள்ளே போய் சார்ட்ட விஷயத்த சொல்றேன் என்றவுடன், அவர் இப்பொழுது ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அனுமதிக்கவில்லை.

மணி மூன்றாகி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் கிளம்பி விடுவார்கள். இன்று இந்த வேலை முடியுமோ முடியாதோ என்று ஒரே கலக்கம்.

அந்தப் பெண்மணியிடம் சென்று நிலைமையைச் சொல்லி அந்த பியூன் பைலை உள்ளே எடுத்துச் சென்றாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னவுடன் அவரே உள்ளே சென்று பியூனிடம் இருந்த பைலை இயக்குனரிடம் கொடுத்து விட்டு வந்தார்.

நல்ல வேளை, இன்றிரவு இயக்குனர் ஒரு அவசர வேலையாக டெல்லி செல்கிறார். எப்பொழுது வருவார் என்று தெரியவில்லை என்று சொல்லும் பொழுது அந்த பியூன் மேல் அவ்வளவு கோபம் வந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் எப்படியெல்லாம் அலைக்கழிக்க பார்த்தான். இவனெல்லாம்...

இயக்குனர் கையெழுத்திட்ட படிவங்கள் எங்கள் கைகளில் கிடைக்கும் பொழுது அந்தப் பெண்மணியைத் தவிர மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். வேண்டா வெறுப்பாக பைலை கொண்டு வந்து கொடுத்த அந்த பியூன் போன்ற ஆட்கள் இத்தனை வருடங்கள் கடந்தும் பல அரசு அலுவலகங்களில் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் வருத்தம்.

ஆனாலும் கடவுள் இருக்காருடா கொமாரு மாதிரி சில நல்லவர்களும் இருப்பதினால் மழை அவ்வப்போது பெய்கிறதோ என்னவோ?

நான் வெளிநாடு செல்ல முகம் தெரிந்த மனிதர்கள் பலரும், அப்பெண்மணியை போல முகமறியாதவர் பலரும் உதவினர் என்பதே என்னுடைய அதிர்ஷ்டம் தான்!


4 comments:

  1. iniyaavadu, anda peon gaLukku koDukkavENDiyadaik koDuttu kaariyattai muDittukkoNDu kaalaakaalattil viiDu vandu sErunga..


    idutaan idilirundu niingaL aRiya vENDiya ' anubhavam'


    :-(

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம். என்னிக்கு லஞ்சம் ஒழியும் ?

      Delete
  2. Ennakki vote poduvatharku kaasu koduppadai vaangame irukkira manobhavam varukiratho annikkuthan lanjam ozhiya vayppu ulladhu amma!!!

    ReplyDelete
  3. லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரை லஞ்சம் ஒழியாது :(

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...