Saturday, March 26, 2016

குளுகுளு பெங்களூரு

சென்னை காற்றை சுவாசித்துக் கொண்டே பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு நிலையத்திற்கு கடந்து செல்கையில் எங்கிருந்து கண்ணாடி உடையுமோ? என் தலை தப்புமோ? பயந்து கொண்டே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். (சமீபத்தில் தான் கண்ணாடி உடையும் சம்பவம் தன் சஷ்டியப்தபூர்த்தியை வெற்றிகரமாக கொண்டாடியிருக்கிறது.) இடைப்பட்ட தூரத்தில் இன்னும் சில மின் விளக்குகளைப் போடலாம். நாய்கள் வேறு உலாத்திக் கொண்டிருந்தது. இருட்டில் தனியே நடந்து வர கொஞ்சம் பயமாக இருந்தாலும் கூட்டமில்லாத லிஃப்டில் தெரியாத மனிதர்களுடன் வருவது அதை விட பயமாக இருந்தது. உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிப்பவர்கள் கூட்டம் குறைவாக அமைதியாக இருக்க, நேரம் செல்ல செல்ல கூட்டம் வருமோ என்னவோ?

காவலுக்கு இருந்தவர்கள் இரவு ஒரு மணிக்கு மேல் தான் உள்நாட்டு விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதி. அதுவரை வெளியில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வேறு வழி ? அருகிலிருந்த கடையில் நுரை ததும்பும் காஃபியை வாங்கி சுவைத்திட...ம்ம்ம். ஊருக்கு வரும் போது மட்டுமே கிடைக்கும் ஆனந்தம்.

ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இந்த விமான நிலையத்தில் தான் எத்தனை எத்தனை மாறுதல்கள்! பளபளவென பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் கூரை எப்பொழுது யார் தலையில் விழுமோ, கண்ணாடி ஜன்னல்கள் எந்த திசையில் பறக்குமோ என்ற பயமும் கூடவே வருவதை மறுப்பதற்க்கில்லை. ஆனாலும் கவலையேபடாமல் அதன் கீழ் பெட்டி மேல் தலையை கவிழ்த்துக் கொண்டும், கழுத்தை தொங்கப் போட்டுக் கொண்டும், மனைவி தோள் மேல் சாய்ந்தபடியும் பலரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ஓரிரு வெள்ளைக்காரர்களும் காலை நீட்டிக் கொண்டும், படித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும்... எப்படா கதவு திறக்கும் என காத்துக் கொண்டிருந்தவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

'ஜிலுஜிலு'வென இதமான காற்று. குளிராத அமைதியான இரவு. இரைச்சல் இல்லாத சாலையில் ஓடும் வண்டிகள். தெருவிளக்குகளுடன் அந்த இடமே ஜொலித்துக் கொண்டிருந்தது. அழகான இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். அரக்கபரக்க பகலில் ஓடிக் கொண்டிருக்கிறோம்! ஒரு வேளை நாம் தூங்குவதால் தான் இரவு அழகாகிறதோ?

அதிசயமாக கொசுத்தொல்லை இல்லை. தூக்கம் வராமல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். வஞ்சகமே இல்லாமல் 'இனிப்பாக' இருக்கும் காஃபியை மீண்டுமொரு சாப்பிட ஆசை. கடையை மூடிவிட்டிருந்தார்கள். போரடிக்கவே சிறிது நேரம் நடந்து கொண்டிருந்தேன். நடுநிசிக்குப் பிறகு உள்ளே செல்லலாம் என்று சொன்னவுடன் அனைவரும் 'திபுதிபு'வென்று உள்ளே நுழைந்தோம். கண்கள் தூக்கத்திற்கு ஏங்கினாலும் உட்கார்ந்து கொண்டே தூங்குவதைப் போல கொடுமை வேறு ஏதுமில்லை. எனக்கென்ன என சிலர் தரையில் படுத்து விட்டார்கள். உள்ளே ஏசி குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதை குறைக்கலாம். நேரத்திற்கேற்ற மாதிரி குளிரை மாற்றி வைக்கும் ஆட்டோமேடிக் செட்டிங்க்ஸ் இன்னும் வரவில்லையோ ? எவ்வளவு மின்கட்டணம், மின்சார செலவு? ம்ம்ம்... மதுரையில் அநியாயத்துக்கு மின்வெட்டு இங்கோ ...

லோக்கல் போலீஸ் மாதிரி தொப்பையப்பன்களாக இல்லாமல் நன்றாக ட்ரிம்மாக சீருடை அணிந்த காவலர்கள், இருவர் இருவராக ரோந்து பணியில் ஒரு சோதா துப்பாக்கியை தோளில் சுமந்த படி நடந்து கொண்டிருந்தார்கள். ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியவர்களிடம் இருக்க வேண்டிய துப்பாக்கியா அது? அவர்கள் உயிரையும் காத்துக் கொண்டு மக்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பெரும்பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு AK47 ரக துப்பாக்கியாவது வேண்டாமா? அது தான் அவர்களுடைய வேலை என்றாலும் பொறுப்புணர்வுடன் இரவு முழுவதும் அவர்கள் கடமையாக விழித்திருந்து தங்களுக்குள் இடத்தையும் பொறுப்பையும் மாற்றிக் கொண்டு கடமையாக காவலுக்கு இருந்தது பெருமையாக இருந்தது.

இன்னும் மூன்று மணி நேரங்கள் கடத்தியாக வேண்டுமே! சரி கொஞ்ச நேரம் சுற்றிப் பார்க்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். புது விமான நிலையத்தினுள்ளே மிகவும் மோசமான ஒரு பரத நாட்டிய படத்தை ரசனையே இல்லாமல் ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். அதற்கு அதை வைக்காமலே இருந்திருக்கலாம். இண்டோர் டெக்கரஷன் என்ற போர்வையில் சில பல அலங்கோலங்கள். சம்பந்தமே இல்லாமல் குரோட்டன் செடிகள் சிறிதும் பெரிதுமாக கலைப்படைப்புகளினிடையே வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நான்கைந்து காஃபி, ஐஸ்க்ரீம் கடைகள்! பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக! தமிழ் தமிழ் என முழங்கும் தமிழ்நாட்டில் எங்கும் ஆங்கில மயம்! கடைகளில் மேலை நாட்டு உணவுகளின் ஆதிக்கம்!

அங்கிருந்த இருவரின் கடின உழைப்பில் தரை சுத்தமாக இருந்தது. துடைத்துக் கொண்டே இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் ஒரே சலசலப்பு. தூங்குபவர்கள் தூங்கிக்கொண்டே இருக்க, புதிதாக வெளியிலிருந்து வருபவர்கள் கூட்டம். அவர்களின் பேச்சிலும் சிரிப்பிலும் விமான நிலையமும் விழித்துக் கொண்டது. அனேகமாக சென்னை-பெங்களூரு செல்லும் அதிகாலை விமானமே அங்கிருந்து கிளம்பும் முதல் விமானமாக இருக்கக் கூடும். கவுண்டரில் வேலை செய்பவர்கள் அனைவருமே இளம்வயதினர். வயதானவர்களுக்கு அங்கு வேலையில்லை போலும்! பெட்டிகளை பரிசோதிக்க இங்கு கொண்டு வரவும் என்றவுடன் தூங்கிக் கொண்டிருந்த கூட்டம் மெல்ல விழித்துக் கொள்ள... தள்ளு வண்டியில் காபிஃயும் வர, அங்கும் கூட்டம்.  டிக்கெட் வாங்கிக் கொண்டு விமானத்திற்காக காத்திருந்த பொழுது காலை மணி ஐந்து.

பெங்களூரு செல்பவர்களுக்கான கேட் திறந்தவுடன் ஒரு ஓட்டை பஸ் பயணிகளை ஏற்றிக் கொள்ள, அந்த பஸ்சை ஓட்ட தனித்திறமை தான் வேண்டும்! இஷ்டத்துக்கு வளைத்து வளைத்து ஓட்டி ஒரு குட்டி விமானத்தின் முன் நிறுத்தினார்கள். மொத்தமே ஏழெட்டு படிகள் இருந்தும் கைப்பெட்டிகளுடன் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. கூட்டமே இல்லை. அமர்ந்தவுடன் தூங்கியும் விட்டார்கள் சிலர்! இரு அழகான இளங்காளை ஃப்ளைட் அட்டெண்டர்கள் கனிவான சிரித்த முகத்துடன். தண்ணீர் வேண்டுமா, காம்ப்ளிமென்டரி பிரேக்பாஸ்ட் வெஜ்/நான்-வெஜ் எது வேண்டும்? எதுவுமே வேண்டாம் என்றவுடன் அதிசயமாக பார்த்துக் கொண்டே சாக்லேட் மேம், நோ தேங்க்ஸ். சிரித்துக் கொண்டே நகர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அதே டயலாக்கை ஒப்பிக்க, அவர் வேகமாக வேண்டாம் என சொல்ல, திஸ் இஸ் ஃப்ரீ சார் என்றவுடன், ஒரு நிமிடம் யோசித்து விட்டு நான்-வெஜ் கேட்டு வாங்கி பரபரவென பிரித்து காலை ஆறு மணிக்கு சிக்கன் சேண்ட்விட்ச்சை மடமடவென சாப்பிட்டு தண்ணீரும் குடித்து விட்டு மீண்டும் தூங்கியும் போனார். ஓசியில் கிடைத்தால் எதையும் சாப்பிடுவோர் சங்கத்து ஆள் போல ! அந்த விமானத்தில் பயணித்த எட்டு பத்து பயணிகளுள் ஒரே பெண்மணி நான் தான்!

இளஞ்சூரியன் நீல வானில் வலம் வரும் அதிகாலை நேரம் மனதிற்கு இதமான நேரம். சென்னை கடற்கரை மெல்ல மெல்ல மறைந்து வறண்ட பாறைக்குன்றுகள் செம்மண் பரப்பின் மேல் பறந்து கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் பச்சைப்பசேலென மரங்கள் தெரிய, விமானமும் கீழிறங்க, விமானியும் காலை நேர மிதமான குளிர் விவரங்களைச் சொல்ல வந்தே விட்டது பெங்களூரு.

கல்லூரிச் சுற்றுலாவில் நண்பர்களுடன் பிரபலமான இடங்களைப் பார்த்த ஞாபகம். பிறகு கல்லூரி ஆசிரியர்களுக்கான referesher courseக்காக சுற்றி வந்தது, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக கணவருடன் வந்தது என நான் பார்த்த பெங்களூரு! ஒரு காலத்தில் அங்கேயே வேலை பார்த்து தங்கி விடவேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ம்ம்ம்...

'தட் தட்' என தரை தட்டி விமானம் நடக்க ஆரம்பிக்க, இறங்கும் வேளையில் ஃப்ளைட் அட்டெண்டர்கள் அழகாக சிரித்துக் கொண்டே நன்றியை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

பெரிய விமான நிலையம் தான். சென்னையை போல அலங்கோல கலையுணர்வு அலங்காரங்கள் இல்லாமல் நேர்த்தியாக, மக்கள் கூட்டம் இல்லாத காலை நேர அமைதியுடன் அழகாக இருந்தது. பெட்டிகளும் விரைவில் வர, வெளியில் வரும் பொழுது மணி ஏழு. தம்பியை வேறு மெதுவாக வா என்று சொல்லி அவனை இன்னும் காணவில்லை. ஃபோன் செய்யலாம் என்றால் சில்லறை காசு இல்லை. கடைகளில் கேட்டால் முறைத்துக் கொண்டே பதிலும் இல்லை. மொழி தெரியாத ஊரில் முழித்துக் கொண்டே நிற்பதைப் போல கொடுமை வேறு எதுவுமில்லை. பார்த்த அனைவர் கையிலும் செல்போன் இருந்தாலும் கேட்டு வாங்கிப் பேசவும் தயக்கமாக இருந்தது. உட்காரும் இடத்தை ஆக்கிரமித்திருந்த கன்னடர்கள் கொஞ்சம் சிடுமூஞ்சிகள் போல. 'உர்ர்ர்'ரென்று முறைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பது போல ஒரு முகபாவம். சரி, தம்பி வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியது தான் என்று நின்று கொண்டிருந்தேன்.

மிடில் ஈஸ்ட்டிலிருந்து விமானம் ஏதோ ஒன்று வந்திறங்கியதோ என்னவோ, பர்தா போட்டுக் கொண்டு பெண்களும், தாடி வைத்துக் கொண்ட ஆண்களுமாய் பெருங்கூட்டம்! அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தவர்கள் சிரிப்புடன் கட்டி அணைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் தம்பியும் வந்து விட்டான். அவனைப் பார்த்தவுடன் தான் ஊருக்கு வந்த திருப்தி! நீ வந்து ரொம்ப நேரமாச்சோ?...

வந்து ஒரு அரைமணி நேரமாச்சு!

அடடா! ஃப்ளைட் சீக்கிரம் வந்துருச்சு போல. சாரி.

அது இருக்கட்டும். குழந்தை எப்படி இருக்கான்னு பேசிக் கொண்டே காரை நோக்கி நடந்தோம்.

அவனுக்கென்ன. நல்லா சேட்டைய பண்ணிக்கிட்டு இருக்கான். இங்க இப்பத்தான் ரெண்டு நாளா மழை இல்ல. குளிரும் பரவாயில்லை என்றான்.

ஞாயிற்றுக்கிழமை காலை அமைதி கூட்டமில்லா சாலைகளில் பயணிக்கும் போது தெரிந்தது. தம்பியின் வீடும் அரை மணி நேரத்தில் வந்து விட, இதே சென்னை என்றால் ரோட்டோரத்தில் மனிதர்களுடன் படுத்துறங்கும் நாய்களும், ஆடிமாதத்து ஸ்பெஷல் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்களும், மின்விளக்குகளுடன் ஜொலிக்கும் அம்மன் படங்களும் என்று கோலாகலமாக இருந்திருக்கும்.

பெங்களூரின் 'ஜில்'லென்ற இதமான வருடும் குளிரின் வரவேற்பு சுகமாக இருந்தது!







Friday, March 11, 2016

ஹலோ! கஸ்டமர் சர்வீஸ்... அப்படின்னா???

கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த காலத்தில் என்னுடைய சீனியர் மாணவி ஒருவர் என்னுடைய resume கொடுத்தால் அவர் வேலை செய்யும் இடத்திலேயே முயற்சிக்கலாம் என்று சொன்னவுடன் பெங்களூர் டேஸ் கனவுகளோடு நானும் அவரை சந்திக்கச் சென்றேன். அப்பொழுது அவர் வீட்டில் இல்லை. அவருடைய பெற்றோர்களிடம் பேசும் பொழுது சமீபத்தில் அவர் வேலை நிமித்தமாக பாரிஸ் சென்று வந்த விவரத்தைக் கூறி அங்கு எடுத்திருந்த படங்களை காண்பித்தார்கள். பரவாயில்லையே, சேர்ந்த ஒரு வருடத்தில் அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இந்த கம்பெனியில் சேரும் வழியை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மதுரை ரயில்வே நிலையத்தின் எதிரே இருக்கும் வங்கிக்கு காலையில் சென்றாள். இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் ஆளைக் காணாமே என்று அவருடைய அப்பா தெருவை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார். நான் வேண்டுமானால் இன்னொரு நாள் வருகிறேனே என்றதற்கு இல்லைம்மா இருந்து பேசி விட்டுப் போய் விடு நாளைக்கு ஊருக்குச் சென்று விடுவாள் என்று சொல்ல, வேறு வழியின்றி உட்கார்ந்திருந்தேன்.

மதுரை வெயில் 'சுள்'ளென்று அடித்துக் கொண்டிருக்க கடுகடுத்த முகத்துடன் வியர்வை வழிய உள்ளே நுழைந்த என்னுடைய சீனியர் என்னை பார்த்ததும் சிரித்துக் கொண்டே, சாரி, வங்கியில் இவ்வளவு நேரமாகும் என்று தெரிந்திருந்தால் உன்னை சிறிது நேரம் கழித்து வரச் சொல்லி இருப்பேன் என்று கூறி விட்டு, நான் எடுத்துச் சென்றிருந்த resumeல் மாற்ற வேண்டியதைச் சொல்லி விட்டு ஒரு காப்பியை எடுத்துக் கொண்டார்.

இங்கிருக்கும் வங்கிகளுக்கு கஸ்டமர் சர்விஸ் என்றால் என்ன என்று துளியூண்டு கூட தெரியவில்லை. நான் பாரிஸில் வங்கிகளுக்காக சாஃப்ட்வேர் எழுதத் தான் சென்றேன். அங்கு வங்கிகளில் இவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பதில்லை. ஒவ்வொரு கஸ்டமரையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என எவ்வளவு தீவிரமாக அவர்கள் மனம் புண்படாத மாதிரி இருப்பார்கள் தெரியுமா என்றார். நம் நாடு என்று திருந்துவது? யாருக்கும் அக்கறையில்லை என்று புலம்பித் தள்ளி தீர்க்க...

எல்லோருக்கும் தோணுவது போல், என்னாடா, மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஏதோ ஒரு வெளிநாட்டிற்குப் போய் விட்டு வந்து இந்த அலம்பல் பண்றாரேன்னு தோன்றியது. ஹ்ம்ம்...ஃபாரின் போனாலே ஆட்கள் மாறி விடுவார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் அமெரிக்கா வந்த பிறகு மதுரைக்குச் சென்ற பொழுது ஒரு வேலையாக வங்கிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஹாஜீமூசா பக்கத்தில் இருந்த ஞாபகத்தில் சென்றால் இடத்தை மாற்றி விட்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் கேட்டால், அது எப்பவோ மாத்திட்டாங்களேம்மான்னு வாசலில் உட்கார்ந்திருந்தவர் சொல்ல, குத்துமதிப்பாக அவர் சொன்ன விலாசத்தை கேட்டுக் கொண்டு ஆட்டோ பிடித்து போனால், தேடினேன், தேடினேன் அந்த அட்ரஸ் மட்டும் தென்படவே இல்லை. என்னடா இது, இங்கே ஒரு பேங்க் இருக்கிறது. ஒருத்தருக்கும் தெரியவே இல்லையே? என்று தெருவில் இறங்கி நடந்து ஒவ்வொரு வீட்டையும் பார்த்துக் கொண்டே வந்தால், ரேஷன் கடை முன் இன்றைய சப்ளை : காலை - 10-12 ஜீனி, மதியம் - 1-4 மண்ணெண்ணெய் போர்டு போல், ஒரு சின்ன போர்டில் பேங்க் பெயர்.

அட ராமா! எப்படி இருந்த வங்கி இன்று இப்படி உருமாறி போயிற்றே! எவ்வளவு பெரிய வங்கி இன்று ஆட்கள் குறைப்புடன் இடத்தையும் சிறிதாக்கிக் கொண்டிருக்கிறது!

வாசலில் காக்கிச் சட்டை போட்டு வெயிலில் நின்று அநியாயத்திற்கு கறுத்துப் போயிருந்த தாத்தா கையில் லத்தி ஒன்றை வைத்துக் கொண்டு அந்த வங்கிக்கு காவல்! மேல தான்ம்மா பேங்க் இருக்கு என்றார். வளைந்து சென்ற குறுகிய படிகள்! ஏறும் போதே மூச்சு வாங்குகிறது. வயதானவர்களுக்கு மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள் ? தஸ்புஸ்வென்று மூச்சு விட்டுக் கொண்டு ஒரு வழியாக உள்ளே நுழைந்தேன்.

நுழைந்தவுடனே இடப்பக்கத்தில் இரு கவுண்டர்கள். நிச்சயம் நான் மாடியேறி வந்தது அவர்களுக்கு கேட்டிருக்கும். ஆனாலும் கேட்காத மாதிரி தலையை கவிழ்த்துக் கொண்டு ஓரக்கண்ணால் நான் நிற்பதையும் பார்த்துக் கொண்டே லெட்ஜரில் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! எதிரில் இருந்த புறாக்கூண்டில் உட்கார்ந்து பணத்தை 'சரசர'வென எண்ணிக் கொண்டிருக்கும் கேஷியர்... அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மூவரும் வருபவர்கள் யாரையும் பார்ப்பதில்லை அது எங்களது வேலையுமில்லை என்ற ரேஞ்சில் கடமையாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்!

சரி, மேனஜரை பார்த்துப் பேசலாம் என்று அவர் மேஜைக்கு எதிரில் நிற்கிறேன். அப்போது பிஸியாக தன் கைப்பேசியில் யாருடனோ சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். பேசினார் பேசினார் பேசிக் கொண்டே இருந்தார். நீ ஒண்ணு பண்ணு ராமசாமி. கடைக்குப் போய் அத வாங்கி வீட்ல அண்ணி இருப்பா. குடுத்திட்டு எனக்கு ஒரு ஃபோன போடு. இந்த ரேஞ்சில் போய்க் கொண்டே இருந்தது அவருடைய தொல்லை பேச்சுகள். எனக்குப் பிறகு வந்த கூட்டம் பெருகி அனைவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தோம். அந்த மேனேஜரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பேச்சிலேயே மும்முரமாக...மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டால் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட வேண்டும் போல் கோபம். இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது. மேஜையைத் தட்டி சார் என்றேன். அந்த...க்கு அது அவமரியாதையாக இருந்திருக்கும் போல, சரி, ராமசாமி நீ அப்புறமா ஃபோன் பண்ணு என்று வைத்து விட்டு, என்னம்மா? ம்ம்ம்... வாயில் வந்த வசவை கட்டுப்படுத்திக் கொண்டு நான் கேட்க வேண்டிய கேள்வியை கேட்டதற்கு எழுதி கொடுத்துட்டுப் போங்க, ஹெட் ஆபிஸ்ல இருந்து கூப்பிடுவாங்க. இதுக்கு எவ்வளவு நேரம் நான் காத்திருக்கணுமா ? இவ்வளவு பேரு வரிசையில நிக்கிறாங்க. நீங்க பாட்டுக்கு உங்க வேலைய பார்த்துக்கிட்டு இருக்கீங்க என்றவுடன் ஒரு முறைப்பு. முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினேன். ஏதோ என் மேல் தவறு மாதிரி பார்த்தார்கள். சை !

வேறொரு முறை என் கையெழுத்தைப் பார்த்து இது உங்கள் கையெழுத்து இல்லை மேடம். நீங்கள் எங்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்தீர்களோ அந்த வங்கிக்கே சென்று பணத்தை எடுங்கள் என்று சொல்லி கடுப்பேற்றினார்கள். அடச் சை!

வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துவதும் இல்லை. அவர்களுடைய கேள்விகளை காது கொடுத்து கேட்பதும் இல்லை. தினம்தினம் இவர்களை எதிர்கொள்ளும் மக்களை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது.

இதற்க்கெல்லாம் முத்தாய்ப்பு இந்த ஐசிஐசிஐ வங்கிக்காரர்கள். NRI என்று தெரிந்து விட்டால் போதும், வாங்க வாங்க, என்று ஏதாவது ஒரு பாலிசியை தலையில் கட்ட காபி, கோலா, கிஃப்ட் என்று நாம் பேச இடமே கொடுக்காமல் அவர்கள் மட்டுமே பேசி நாம் கேட்டு...அப்பப்பா...ஊருக்குப் போனால் இவர்களிடமிருந்து தப்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

அங்கிருக்கும் ATMகள் அதை விட. மூன்றில் ஒரு ATM எப்பொழுதுமே மௌனியாகவே இருக்கிறது! என்னங்க வெறும் நூறு ரூபாய் நோட்டு தான் இருக்காம் இந்த ATMல என்று கேட்டால், காவலுக்கு நிற்பவரோ, எதுத்தாப்பல இருக்குற ATMல எடுத்துக்கோங்க மேடம். அப்புறம் எதுக்கு உங்க பேங்க் ATM ?

சரியா தான் போட்டேன். பாஸ்வர்டு இது இல்லைன்னு வருது? உள்ள கேட்டுக்கோங்க மேடம். உள்ளே போய் கேட்டால் சாரி மேடம். நீங்க NRI ? ஆமா, இத மட்டும் கரெக்டா கண்டு பிடிச்சிடுங்க. மேடம், ஒரு அஞ்சு நிமிஷம். சாரிங்க, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும்னு ஊர் வந்து இறங்கியதிலிருந்து இவர்களிடமிருந்து தப்பிக்க பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.

பாவம் இவர்கள் தங்களுடைய வருடாந்திர பாலிசி டார்கெட்டை எட்ட, எங்களை மாதிரி ஆட்களிடம் நேரங்காலம் தெரியாமல் நிலைமை புரியாமல் வாங்கி கட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்கே வந்து உட்கார்ந்து கொண்டு இந்த பாலிசி வாங்குங்கள், அந்த பாலிசி வாங்குங்கள் என்று ஒரே அராஜகம் வேறு. ஆன்லைன் விஷயத்திலும் என்றுமே பிரச்னை தான்.

குப்பை, வண்டிகள் விடும் புகை, கொசு, ஈயிடமிருந்து கூட தப்பித்து விடலாம்...ஆனால் இவர்களிடமிருந்து தப்பிப்பது தான் பெருஞ்சிரமமாக இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் விஷயத்தில் தனியார் வங்கிகள் அரசு வங்கிகளை விட கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

வங்கிக்குச் செல்லும் போதெல்லாம் அன்று என் சீனியர் மாணவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று புரிந்தது. கேஎப்சி , மெக் டி, பீட்ஸா, கோலா... என்று வேண்டாத அமெரிக்க விஷயங்களில் நாட்டம் கொள்ளும் நாம் மேலை நாடுகளில் குறிப்பாக வங்கிகளில் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் பற்றி தெரிந்து கொள்ளுதலும் அவசியம். வாடிக்கையாளர்கள் இல்லையேல் நிறுவனம் இல்லை, நமக்கு வேலை இல்லை என்று தெரிந்தால் இவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்களோ என்னவோ?

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...