Thursday, May 19, 2016

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு...

எப்படித்தான் நான்கு ஆண்டுகள் ஓடிப்போனதோ? நினைத்துப் பார்த்தாலே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது! இதோ, இந்த வார இறுதியில் மகளின் கல்லூரி பட்டமளிப்பு விழா!

நான்கு வருடங்களுக்கு முன் மகளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய கடமை கவலையாக மனதை ஆக்கிரமித்திருந்தது. வேறு வழியில்லை. அவள் படிப்பிற்கு நான்கு மணிநேரத் தொலைவில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று தான் ஆக வேண்டும். பள்ளி படிப்புக் காலம் வரை என் சிறகுகளுக்குள் அடைகாத்து வைத்திருந்தேன். சில நாட்களில் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கப் போகிறாள், பறந்து விரிந்த கல்லூரியும், அடர்ந்த மரங்களும் பார்க்க நன்றாக இருந்தாலும் மகளின் பாதுகாப்பை எண்ணி யும் அவள் இல்லாத வீட்டை நினைத்ததும் மன உளைச்சலாக இருந்தது.

கல்லூரியில் தன் தேவைகளைத் தானே செய்து கொள்ள வேண்டுமே? வீட்டில் இருக்கும் வரை கேட்ட நேரத்தில்உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அவளுக்குப் பிடித்த சாப்பாடு, பள்ளிக்குச் செல்கையில் அவள் நண்பர்களே பொறாமைப்படும் வகையில் பழங்கள், காய்கறிகள், மதிய உணவு என்ற பார்த்து பார்த்து கொடுத்து பழக்கி விட்டோமே!  இனி பசித்தாலும் உணவகத்திற்கு நடந்து சென்றால் தான் ஏதாவது கிடைக்கும். அதுவும் அவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ...

காலை எழுவதில் இருந்து, துணி துவைப்பது, அறையைச் சுத்தம் செய்வது, நேரத்திற்கு வகுப்புகளுக்குச் செல்வது, பாடங்களைப் படிப்பது என்று அவளுக்காகக் காத்திருக்கும் கடமைகள் என்னை மலைக்க வைத்து மனதை வதைத்தது. மகளோ, கல்லூரி வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் வயதில் நானும் அப்படித்தான் இருந்தேன். என் அம்மா தான் என்னை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த நாளும் வந்தது. பெட்டி, படுக்கைகளுடன் கல்லூரிக்குச் சென்று அவளுக்காக ஒதுக்கப்பட்ட சிறிய அறையில் இரு மாணவிகளுடன் எப்படி இருக்கப் போகிறாளோ, அவர்கள் எப்பேர்பட்டவர்களோ, யாரோ? எவரோ? ஒத்துப் போவோர்களோ?நல்லவர்களாக இருக்க வேண்டுமே? என்று வேண்ட ஆரம்பித்து விட்டது மனம். ஒரு வழியாக, அவள் கொண்டு சென்றிருந்த துணிகளையும், பொருட்களையும் அடுக்கி வைத்து விட்டு, சென்று வருகிறோம், கவனமாக இரு, ஒழுங்காகப் படி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் உடைந்து அழ, அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கண்ணீரும் பேச்சு வரமால் அழுகையிலேயே ஊமையாய் நிமிடங்களும் கரைய..

தைரியம் சொல்ல வேண்டிய நீயே அழுதால் அவள் என்ன செய்வாள் என்று கணவர் சமாதானம் செய்து மகளை விட்டுச் செல்ல மனமில்லாமல் கலக்கத்துடன் வீட்டிற்குக் கிளம்பினோம். வழியெல்லாம் அவளைப் பற்றிய சிந்தனைகளே! மனமும் உடலும் சோர்ந்து வீடு வந்து சேர்ந்ததும்அவளை அழைத்துப் பேசும் பொழுது அவள் குரலிலும் சோர்வு. நீயும் போய்த் தூங்கு.காலையில் பேசலாம் என்று அவளிடம் சொல்லி விட்டுத் தூக்கம் வராமல் களைத்துப் போனேன்.

காலையில் எழுந்ததும் மகளிடமிருந்து அழைப்பு வர, எனக்கும் தூக்கமே இல்லைம்மா என்றாள். புது இடம் அப்படித்தான் இருக்கும். வகுப்புகள் ஆரம்பமானவுடன் எல்லாம் சரியாகி விடும், அடுத்த வாரம் வரும் வார விடுமுறையில் வீட்டிற்கு வந்து விடலாம் என்று சமாதானம் கூறினாலும் தூங்காத அவள் முகமே நினைவில் அலைக்கழிக்க, வார விடுமுறைக்காகக்காத்திருந்தேன்.

ஒரு வாரத்திற்குள் நன்றாக மெலிந்து சோகையுடன் இருப்பது போல் இருந்தாள். அதற்குள் ஒரு வண்டி ஹோம்வொர்க்கும் கொடுத்திருந்தார்கள். பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றவுடன் அங்கும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற ஆவல்,ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பது எதுவும் புரியவில்லை என்ற புலம்பல், வகுப்புத் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராமல் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது, புது நண்பர்கள் என முதல் ஆண்டுக் கல்லூரி வாழ்க்கையோடு பலவும் கற்றுக் கொள்ள...அவளிடமிருந்து நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களும் பல.

இவளுடன் தங்கி இருந்த மாணவிகள் இருவருக்கும் கல்லூரி அருகிலேயே வீடு. வார இறுதியில் சென்று விடுவார்கள். இருந்திருந்து சூப்பர் ஸ்டார்ம் சேன்டி என்ற தீவிர புயல்மழை வர வேண்டுமா? அதற்கு முதல் நாள் தான் அவளைப் பார்த்து விட்டு வந்திருந்தோம். எங்கிருந்து தான் புயல் வந்ததோ தெரியவில்லை. நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் அது வரை கண்டிராத புயல்! தனியாக இவள் மட்டும் அறையில் மாட்டிக் கொண்டு மின்சாரமும் இல்லாமல், புயற்காற்றின் வேகத்தில் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விட்டது என்று சொல்லவும் கவனமாக இருக்கச் சொல்லி...அப்பா,  வந்து என்னைய கூட்டிட்டுப் போங்க, எனக்குப் பயமாக இருக்கிறது என்றவுடன், கிளம்பலாம் என்று பார்த்தால் பாலங்கள் மூடப்பட்டு விட்டது.  பயணிப்பது நல்லதல்ல எனச் செய்தி கேட்டு... என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க...அந்த சில நாட்கள் மிகவும் கவலையான நாட்களாக கழிய...எப்படா கல்லூரி முடியும் என்றாகி விட்டது.

ஆடிட்டோரியம் போன்ற வகுப்பில் இருநூறு மாணவர்களுடன் முதல் வருடம் முழுவதும் சில அடிப்படை வகுப்புகள். பல மாணவர்களும் முதல் ஆண்டு முடிப்பதற்குள் பாடங்களில் தேர்ச்சிப் பெறாமல் படிப்பைத் தொடரவும் முடியாமல் கல்லூரியை விட்டுச் செல்வதும், அல்லது வேறு துறைக்கு மாறுவதும் அரங்கேறியது. உனக்கும் கடினமாக இருந்தால் மாற்றிக் கொள் என்று சொல்லியும், கடினம் தான் ஒன்றும் பிரச்னை இல்லை என்று அவள் தேர்ந்தெடுத்திருந்த படிப்பைத் தொடர்ந்தாள்.

அதிகாலை நேர வகுப்புகள், இரவு ஏழு மணிக்கு மேல் தேர்வுகள், நடுநிசிக்குள் கொடுத்து முடிக்க வேண்டிய அசைன்மென்ட்கள் என்று நேரம் காலம் இல்லாமல் அவளுடைய படிப்பு... கடவுளே, என் கல்லூரி வாழ்க்கை இவ்வளவு கடுமையாக இல்லாமல் எவ்வளவு இனிமையாக இருந்ததே!  பாவம்,  இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாளே என்று வருந்தாத நாளில்லை. திடீரென இரவு 10.30 மணிக்கு மேல் அழைத்து அம்மா, காலையில் நான்கு மணிக்கு எழுப்பி விட முடியுமா, அலாரம் வைத்திருக்கிறேன், இருந்தாலும் நான் தூங்கி விட்டால் அதான். நான் தூங்க இன்னும் இரண்டு மணிநேரம் கூட ஆகலாம், அவ்வளவு வேலை இருக்கிறது என்று சொல்லும் பொழுதெல்லாம் இப்படி கஷ்டப்பட்டுப் படிக்கத் தான் வேண்டுமா என்ற கேள்வி எழும். 

அமெரிக்காவில் கல்லூரி படிப்பு என்பது காலையில் கிளம்பி ஒரே வகுப்பில் உட்கார்ந்து கொண்டு மாலையில் திரும்பி வருவது அல்ல. ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு வகுப்புகள். தங்கியிருக்கும் இடத்திலிருந்து வகுப்புகளுக்குச் செல்ல சிலருக்கு அரைமணி நேரம் கூட ஆகிறது. பனிக்காலத்திலும், மழைக்காலத்திலும் சென்று வருவது மிகவும் சிரமம். விடிந்தாலும் ஏழு மணிவரை வெளிச்சம் இருக்காது. மாலை மூன்று மணி முதல் இருட்டவும் ஆரம்பித்து விடும். குளிருடன் இருட்டில் தனியாக நடந்து வர வேண்டும். ஆரம்பத்தில் இதையெல்லாம் நினைத்து தூக்கத்தை இழந்தது தான் மிச்சம். அந்த நேரங்களில் நண்பர்கள் யாரும் துணைக்கு இல்லையென்றால் அவளுடைய அறைக்கு வந்து சேரும் வரை ஃபோனில் பேசிக்கொண்டே வர வேண்டும் என்று சொல்லி...ஹ்ம்ம்...

தேர்வுகளும், அசைன்மென்ட்களும் அப்படியே புத்தகத்திலிருந்து எழுத முடியாது. கான்செப்ட் புரிந்தால் மட்டுமே கேள்விகளும் புரியும். அதற்குப் பதில்களும் எழுத முடியும். அவ்வளவு கடினம்! நான் கல்லூரியில் படித்ததையே கடினம் என்று நினைத்ததெல்லாம்  ஒன்றுமில்லை என்று நினைக்க வைத்து விட்டது இங்குள்ள கல்லூரிப் படிப்பு! தேர்வுக்கு முன் வரும் விடுமுறையில் படித்துப் பாஸாகி விடலாம் என்பதெல்லாம் இக்கல்லூரிகளில் இல்லை என்றும் புரிந்தது.

அமெரிக்காவில் கல்லூரி படிப்பு அதுவும், பொறியியல், மருத்துவம் என்றால் செலவும் அதிகம். அதனால், பலருக்கும் கனவாகவே இருக்கிறது! படிப்பதும் அவ்வளவு எளிதல்ல. மாணவர்களின் தகுதியைப் பொறுத்து கல்லூரி வழங்கும் சிறிய உதவித் தொகையும் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். பலரும் வங்கியில் கடன் வாங்கித் தான் படிக்கிறார்கள்.பெற்றோர்களும் தங்கள் பங்குக்கு கடனை வாங்குகிறார்கள். கல்லூரியிலேயே கடைகள், அவசர மருத்துவ ஊர்தி, அலுவலகங்கள், உணவகங்களில் மாணவர்களுக்குப் பகுதி நேர வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. அதற்குப் பலமான போட்டியும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். பல மாணவர்களுக்கும் அந்தச் சொற்ப ஊதியமே கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான ஒன்றாக இருக்க...இந்திய மாணவர்களுக்கும், வசதியுள்ள மற்ற மாணவர்களுக்கும் அத்தகைய பிரச்னைகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

படிப்புடன் பகுதி நேர வேலை என்பது அமெரிக்காவில் சாதரணமான விஷயம். இந்த வேலை தான் என்றில்லை, உணவகங்களில் சர்வர் வேலை, கடைகளில் , சூப்பர் மார்கெட்டுகளில், வீட்டு வேலைகள் என்று தங்கள் உழைப்பால் படிப்பைத் தொடர வேண்டிய நிர்பந்தத்தில் பல மாணவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்என்று நினைத்துக் கொள்வேன்.

மகளுக்கு இரண்டாவது வருடத்திலிருந்து ரெசிடென்ட் அசிஸ்டன்ட் (ஹாஸ்டல் வார்டன்) பகுதி நேர வேலையும் பலத்த போட்டிக்குப் பின் கிடைத்தது. அவளுடைய ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் கல்லூரியில் மாணவர்களாலேயே நடத்தப்படும் நாளிதழில் அவள் கட்டுரைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற, விரைவிலேயே எடிட்டர் வேலையும் கிடைத்தது. இதைத் தவிர, அவள் துறை சார்ந்த ஆன்லைன் நிறுவனம் ஒன்றிலும் வேலை கிடைக்க, மூன்று பகுதி நேர வேலைகளையும் செய்து கொண்டே இரண்டாம் வருடத்தை வெற்றிகரமாக முடித்தாள். 

வேலை, படிப்பு, துறை சம்பந்தப்பட்ட மாணவ சங்கங்கள், நண்பர்கள் என கல்லூரியில் மாணவர்கள் நேரத்தை நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். தவறும் மாணவர்கள் முன்னேறுவதில் சிரமப்படுகிறார்கள். வீட்டினரின் தலையீடு இல்லாமல் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றது, படித்ததைத் தவிர வேறு எந்த வித கவலைகளும் இல்லாமல் நான் படித்தது நினைவுக்கு வர...மாணவர்களின் மேல் கரிசனமும் கூடிற்று.

இதைத்தவிர, கோடை மற்றும் பனிக்காலங்களில் மாணவர்கள் வேலை செய்யவும், படிக்கவும் இந்நாட்டில் வசதிகள் இருக்கிறது. உலகின் எந்த மூலைக்கும் கல்லூரி வாயிலாகப் படிப்பதற்கோ, வேலைக்கோ சென்று வர முடிகிறது. இத்தாலியில் ஆறு மாதம், இங்கிலாந்தில் ஆறு மாதம் தங்கி அங்கிருக்கும் கல்லூரியில் படிக்க முடிகிறது. கலாச்சாரத்தையும் அருகிலிருக்கும் சுற்றுலா இடங்களையும் சுற்றிப் பார்க்கும் அனுபவம் இளம் வயதில் கிடைப்பது எனக்கு மிகவும் பிடித்தது.

மகளுக்கும் கோடை விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி சென்று அங்குள்ள கல்லூரியில் இருக்கும் மாணவர்களுடன் சேர்ந்துஆராய்ச்சி செய்யும் வாய்ப்பும் கிடைக்க, ஒரு ஜெர்மனியரின் குடும்பத்துடன் தங்கி அவர்களுடைய கலாச்சாரத்தையும், ஜெர்மனில் சரளமாக உரையாடவும் கற்றுணர்ந்தது அவளுடைய வாழ்க்கையில் சிறந்த அனுபவமே. அங்கிருந்த நாட்களில் தான் உலக கால்பந்து போட்டி நடந்து ஜெர்மனியும் வெற்றி வாகை சூடியதை அந்நாட்டு மக்களுடன் கொண்டாடிய இரவை அவள் மூலம் நாங்களும் அறிந்து மகிழ்ந்தோம். அவளுடைய வாழ்வின் மறக்க முடியாத நாளாகவும் இருக்கும்!

மூன்றாம் ஆண்டும் கடினமான ஆண்டாகவே இருந்தது. அந்த வருட கோடை விடுமுறையில் சைனாவிற்குச் சென்று சுற்றுப்புறச்சூழல் தொடர்பான படிப்பை அங்கிருக்கும் கல்லூரியில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்களுடன் படித்தது அவளுக்கு மற்றுமொரு இனிய அனுபவம்.

நான்காம் வருடம் வேலை தேடும் தீவிரம். வாஷிங்டன் டிசி, பாஸ்டன் என எங்கெங்கு நேர்முகத்தேர்வுகள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சென்று பல நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் தேர்வுகள் என்று பல நிலைகளையும் தாண்டி இன்று ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் இருந்து வேலையில் சேர அழைப்புகள்! 

தனியாக கல்லூரியிலிருந்து ட்ரைன் பிடித்து நியூயார்க் விமான நிலையம் சென்று, அங்கிருந்து நார்த் கரோலினா, அட்லாண்டா என பயணித்து, ஹோட்டல்களில் தங்கி...நேர்முகத் தேர்வுகளை முடித்துக் கொண்டு...அப்பப்பா...அவள் ஊர் திரும்பும் வரை எங்களுக்குத் தான் எவ்வளவு தவிப்பு!

வேலை தரும் நிறுவனங்கள் பலவும் மாணவர்களின் படிப்பை விட அவர்களின் அணுகுமுறை, பேச்சு சாதுர்யம், குழு மனப்பான்மை , பழகும் தன்மை போன்ற தகுதிகளையே அதிகம் எதிர்பார்க்கிறது. பல நிலைகளை கடந்து நிறுவனங்களுக்கே சென்று உயர் பதவியில் இருப்பவர்களுடன் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் பொழுது குறைந்தது மூன்று இண்டர்வியூக்களாவது நடந்திருக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழுவினருடன்! ஒரு இண்டர்வியூ என்றாலே வெலவெலத்துப் போகும் என்னால், இதையெல்லாம் இருபது வயதில் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகவே இருந்தது. படிப்புடன் கூடிய பல்வேறு தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளும் சூழ்நிலை நான் படிக்கும் காலத்தில் இல்லை. இன்றைய கல்லூரிகளின் நிலைமை மாறி இருக்கிறதோ என்னவோ?

இந்த நான்கு வருடங்களில் தன்னுடன் பழகிய நண்பர்களிடமிருந்து எப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என மனித மனங்களை கற்றறிந்தது, தன் திறமைகளை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களைத் தவறாமால் பயன்படுத்திக் கொண்டு மாணவர் சங்கங்களின் உயர் பதவிகளில் தன் நிர்வாகத்திறனை  நிரூபித்தது, பல நண்பர்கள், சில எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டது என மகளின் படிப்பு, வேலை என்பதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதநேயம் மிக்க இளம்பெண்ணாகவும், படிப்பைத் தவிர அவளுடைய ஆர்வங்கள் இலக்கியம், சுற்றுலா, இசை, ஆர்ட்  என விரிந்திருப்பது நான் எப்படி இருக்க வேண்டும்  என்று அன்று நினைத்தேனோ அப்படி அவள் வளருவது கண்டு ஒரு தாயாக எனக்கு மிகவும் பெருமை. இனி அவள் வாழ்க்கை அவள் கையில். சரியான முடிவுகளைத் தேர்ந்தெடுத்து,  பெரியவர்களின் ஆசியுடன் அவள் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்பதே அன்னை மீனாட்சியிடம் நான் வேண்டி நிற்பது! 

அவள் எனக்கா மகளானாள்...



3 comments:

  1. Just WOW! Amazing narrative of your life and your daughter's, when she was in college for the last 4 years, the feelings you went through,truly tugged at my heart, which reflects mine also so precisely when my daughter was in college too! Just beautifully written!!

    ReplyDelete
    Replies
    1. Thank you, Geetha. I am sure we all went through the same. Glad you liked reading this post.

      Delete
  2. No matter if some one searches for his required thing, therefore he/she
    needs to be available that in detail, thus that thing is maintained over here.

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -6- ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 314ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம்.  ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்...