Friday, June 3, 2016

அமெரிக்கா வாசம் ...

அமெரிக்கா வந்த புதிதில் நாங்கள் தங்கி இருந்ததோ மிக்ஷிகனில் Farmington Hills என்றொரு நகரத்தில். என் வேலையிடமோ Grand Rapids என்ற பக்கத்து நகரத்தில். கார் ஓட்டத் தெரியாத நாட்கள். நான் மட்டும் அங்கு தங்கி இருக்க வேண்டிய சோதனையான காலம்!

அதுவரை குழந்தை, கணவரை விட்டு நாட்கணக்கில் தனியாகச் சென்றதில்லை. மதுரையில் இருந்தவரை என் வீடு, அம்மா வீடு என்றிருந்து பழக்கப்பட்ட எனக்கு குழந்தையை விட்டுத் தனியாக இருக்க வேண்டியிருக்கே என்ற கவலை. எப்படி இருக்கப்போகிறேனோ என்ற பதட்டம். அதுவும் தனியாக ரூம் எடுத்து ஹோட்டலில். ஒரே அழுகை. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ என்று எரிச்சல்.

அந்த நாளும் வந்தது. விதியை நொந்து கொண்டே பயத்துடன் நான் மட்டும் அந்த அறையில். உணவை ஆர்டர் செய்தால் பெரிய தட்டு நிறைய... அமெரிக்க உணவுகள் பழக்கமில்லாததால் சாப்பிடவும் தெரியாது அப்போது. பாதி சாப்பிட்டு மீதியை அப்படியே வைத்து விட்டு கொஞ்ச நேரம் டிவி பிறகு புத்தகத்தைப் படித்தாலும் தூக்கம் மட்டும் வருவேனா என்று அடம்பிடிக்க...நேரம் செல்ல செல்ல ஒருவித பதற்றம்...

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணை மூடினால், வெளியில் பேசிக்கொண்டே நடந்து செல்பவர்களின் சத்தம் வேறு பயத்தை கொடுத்தது. அப்படி ஒரு பயந்தாங்கொள்ளி நான்! உடனே, எல்லா விளக்குகளையும் போட்டு விட்டு, துணைக்கு டிவியையும் ஆன் பண்ணி...தனிமை தந்த பயத்தைப் போக்க மிகவும் சிரமப்பட்டேன்...அதிகாலையில் தூக்கம் வர கண்ணை மூடினால், எழுப்பி விடச் சொன்னீர்களே என்று ரிசெப்ஷனிஸ்ட் எழுப்பி விட, சிவந்த கண்களுடன் அவசரஅவசரமாக தயார் செய்து கொண்டு காலை உணவை சாப்பிடச் சென்றால் muffins, cupcakes, bread, bagels, cereals , பழங்கள், ஜூஸ் , காஃபி என்று அழகாக பரப்பி வைத்திருந்தார்கள். சாப்பிடத் தெரிந்த ஒரே ஐட்டம் cornflakes மட்டுமே. அரையும்குறையுமாக சாப்பிட்டு விட்டு மதியத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை கொஞ்சம் லவட்டிக் கொண்டு...வாடகை காருக்காக காத்திருந்தேன்.

நினைத்த நேரத்தில் பேசிக்கொள்ள இன்றைய செல்ஃபோன் காலமும் கிடையாது. காலையில் கணவரிடமிருந்து போன் வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இப்படியெல்லாம பயப்படுவே, யூ ஆர் எ ஸ்ட்ராங் வுமன் அப்படி இப்படின்னு டயலாக் வேற ... இப்படி சொல்லி சொல்லியே என்னைய ஒரு வழி பண்ணிட்டாங்களேன்னு எனக்குள்ள பயங்கர வருத்தம். சந்தோஷமா ஆபீஸ் போ. புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. யூ வில் பி ஆல்ரைட். அப்புறம் நீ எங்களடோ பேசுறதுக்கு கூட நேரமிருக்காது...ன்னு வேற சொல்லி எரிச்சல் படுத்த...சரி நான் போயிட்டு வாரேன். கார் வந்துடுச்சு. குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்கன்னுட்டு கிளம்ப...

ஓட்டிக் கொண்டு வந்தவரோ ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். அவர்களைப் பார்த்தாலே எனக்கு ஒரு இனம் புரியாத பயம். அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வது வேறு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. படபடக்கும் இதயத்தோடு ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன். புது இடம், புது மக்கள்...அலுவலகத்தில் ஏதோ ஒரு தேவ பாஷையில் அவர்கள் பேச. சுத்தம். ஆங்கிலப்படம் பார்ப்பது போல் இருந்தது. கைநிறைய படிவங்கள். ஒரு மண்ணும் புரியலையே?!

ஹெல்த் இன்சூரன்ஸ், லாங் டெர்ம் டிசபிளிட்டி இன்சூரன்ஸ், 401K...இத்யாதி இத்யாதிகள்...கடவுளே இந்த குப்பைகளை என்னிக்கு படிச்சு என்னிக்கு ... 'திருதிரு'வென நான் முழிப்பதை பார்த்த அந்த சைஸ் ஜீரோ வெண்ணிற மங்கை, ஒன்னும் அவசரமில்லை. மெதுவா படிச்சிட்டு அடுத்த வாரம் கொடுத்தா போதும்னு சொன்னதுக்கப்புறம் தான் அப்பாடாவென்றிருந்தது.

எப்படி இப்படி 'சிக்'கென்று இருக்கிறாள்! அழகா மேக்கப் போட்டிருக்காளே. என்ன வயசு இருக்கும்? கல்யாணம் ஆகியிருக்குமா? அழகா இருக்கே அவ போட்டிருக்க ஷூ! என் கவலைகள் திசை திரும்ப...

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களை ஒரு ஹாலில் உட்கார வைத்தார்கள். அங்கே போனால்...ஐயோ அம்மா...இம்பூட்டு தேசிகளா ??? நடுநடுவே கொஞ்சம் மானே தேனேன்னு போட்டுக்குற மாதிரி ரெண்டு சைனீஸ், மூணு அமெரிக்கன்ஸ்...

நானாக யாரிடமும் சென்று பேசத் தயங்குவேன். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் தயங்குவார்கள். அது வேற விஷயம் :) முதலில் என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவர் ஒரு தெலுங்குக்காரர். இதற்கு முன் ஏதோ ஒரு ஊரில் வேலை பார்த்திருக்கிறார். இப்பொழுது தான் அமெரிக்கா வந்திருக்கிறீர்களா என்று ஆச்சரியப்பட்டு நாங்கள்லாம் சீனியர்ஸ் லுக் கொடுத்து கொஞ்சம் இலவசமாக அறிவுரைகளையும் அள்ளித் தெளித்து விட்டு நகர...

அமைதியாக உட்கார்ந்திருந்தேன். பிறகு கனடாவிலிருந்து வந்திருந்த ஒரு கனேடிய பெண், PhD முடித்த சைனீஸ், கொஞ்சம் வயதானவர்கள் என்று பலருடனும் பேசிய பிறகு, ஹாய் ஐயாம் ஸ்ரீதேவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம்...ஹாய் என்றேன். வேர் ஆர் யூ ஃப்ரம்? இந்தக் கேள்வி இன்று வரை என்னை திக்குமுக்காடச் செய்யும். அன்றும் நான் யோசித்துக் கொண்டிருக்க அவரே, இன் இந்தியா என்றவுடன், ஹி ஹி ஹி...மதுரை, தமிழ்நாடு என்றவுடன்...ஹேய் ...எனக்கு சேலம்னு சிக்சர் அடிச்சாரே!!! எனக்கா அவ்வளவு சந்தோஷம்! அமெரிக்காவுல, வேலை பார்க்கிற இடத்துல தமிழ்ல பேச முடியுது...அபிராமி அபிராமின்னு சோ ஹேப்பி!

நீங்க மதுரையா? என் கணவரும் மதுரை தான். ஆஹா!! மதுரை வேறயா?? அதுவரையில் இருந்த தனிமை உணர்வு மெல்ல மெல்ல விலகிச் செல்ல...எப்படா சாயங்காலம் வரும். கணவரிடம் சொல்ல வேண்டுமே என்று பரபரத்து... அவருக்கும் கொஞ்சம் டென்ஷன் விலகியது அவர் பேச்சிலிருந்து தெரிய...

அடுத்த நாளே ஸ்ரீதேவி அவர் கணவர் கண்ணனை அறிமுகப்படுத்த, அவருக்கும் என்னை பார்த்ததில் மதுரையிலிருந்து வந்திருக்கும் பெண் என்று ஒரே பாசம். படித்த விவரங்கள், ஊர் பற்றி பேச ஆரம்பித்து அவர்கள் வீட்டுக்குத் தினமும் டின்னருக்கு அழைத்துச் செல்ல... மொழி, ஊர் பாசம்ன்னா என்னன்னு தெரிய ஆரம்பித்தது.

எப்படா வெள்ளிக்கிழமை வரும் என்று (அன்றிலிருந்து இன்று வரை) காத்திருப்பேன். முதல் பஸ் பயணம் அமெரிக்காவில். மீண்டும் படப்படப்பு. தூங்கிடக்கூடாதே என்று கவலை. பஸ்சில் ஏறினால் நான் மட்டும் தான் ப்ரவுன் நிறத்தில்! இரண்டு மூன்று வெள்ளை அமெரிக்கர்கள். டெட்ராய்ட் செல்லும் அந்த வண்டியில் நிறைய சாமுவேல் ஜாக்சன்களும், ஜானெட் ஜாக்சன்களுமாய்...அய்யோ...ஒரே நேரத்தில் இவ்வளவு கருப்பு அமெரிக்கர்களை கண்டதும் பயம். அவர்கள் பார்க்க கொஞ்சம் என்ன, நன்றாகவே முரட்ட்ட்ட்ட்ட்டுத்தனமாக இருந்தார்கள். பெரும்பாலான ஆண்களின் கண்கள் 'விஜயகாந்தின் கண்கள்' போலவே சிவப்பா... பெண்களோ பேய் நகங்களுடன். பெரிய பெரிய உதடுகள்...கண்களும் பெரிதாக. எல்லாமே பெரிசு பெரிசா...அது என்ன முடியா? ...அப்படி ஒரு சுருட்டை. உட்கார அதிக இடமெடுத்துக் கொண்டு...நானோ ஒடுங்கிக் கொண்டே ஒருத்தியின் அருகில்...குடித்து விட்டு வந்திருப்பாளோ? சிகரெட் வேற புகைத்திருப்பாள் போலிருக்கே! குடலை குமட்டும் நாற்றம். இடம் மாறி உட்காரலாம் என்றால்...எதுவுமே பிடிக்கவில்லை. எப்படா ஊர் போய்ச் சேருவோம் என்று இருந்தது.

நடுநடுவே வண்டி நிற்க, கறுப்பாக பயங்கரமாக இருந்தவர்கள் சிலர் இறங்க, பயங்கரமாக கருப்பாக இருந்த சிலர் ஏற...இவர்களுடன் பயணித்த நேரங்களில் 'டப் டப்' என்று அனாயசமாக துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொன்று போடும் படங்கள் மனதில் நிழலாட... கடவுளே, ஏன் இதெல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வந்து தொலையுது? போராட்டத்துடனே ஊர் வந்திறங்கியதும் ... குழந்தையையும், கணவரையும் பார்த்தவுடன் தான் அப்பாடா என்றிருக்கும்.

நான் தனிமையில் பயணம் செய்து அநியாயத்திற்கு மாட்டிக்கொண்ட ராஜபாளையம்-விருதுநகர்-மதுரை பயணம் மூளையில் மின்னலடிக்க...இன்று நினைத்தாலும் குலை நடுங்கும் அந்த அனுபவம் போலில்லாமல், பஸ் பயணங்களில் மனிதர்களை, அவர்களின் நடை உடை பாவனைகளை என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து...நன்றாக குடித்து விட்டு வந்தாலும் 'கம்'மென்று அமைதியாக, வாந்தி கீந்தி எடுக்காமல், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் பெண்களை நோண்டாமல், கண்களால் கற்பழிக்காமல், கண்ணிருந்தும் குருடர்களாக இடித்துக் கொண்டு ஏறாமல்...அமைதியான பயணம் பிடிக்க ஆரம்பித்தது.

பயந்தாங்கொள்ளியாக இருந்த என் ஆரம்பகால நாட்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை தான். ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.


2 comments:

அடடா மழைடா ஐஸ் மழைடா!

எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்...