Sunday, August 14, 2016

அமெரிக்க மாட்டுப்பண்ணை ஒரு விசிட்...



நண்பர் ஒருவர் அவருடைய குடும்பம் நடத்தும் ஃபார்ம் ஓபன் ஹவுஸ்க்கு வா என அழைப்பு விடுவிக்க நேற்று சென்றிருந்தோம். என் அப்பாவின் பெரியம்மா வீட்டில் மாடுகள் இருந்தது. இயற்கை உணவுகளை உண்டு குடும்பத்தில் ஒன்றாக அம்மாடுகள் வளைய வந்த நினைவும், மாடுகளின் பெரிய கண்களை கண்டு மிரண்டதும், கன்று ஈன்றவுடன் சீமைப்பாலில் பால்கோவா செய்த நினைவுகள் வர, அமெரிக்க மாட்டுப்பண்ணைகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்பி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிளம்பி விட்டோம்.

வீட்டிலிருந்து நாற்பது நிமிட கார் பயணம். கோடைமழைக்கான கருமேகங்கள் பின் தொடர, பளிச்சென நீல வானம் முன் தொடர பச்சைப்பசேல் மரங்கள் வழியெங்கும். வெயிலோ 100+ டிகிரியோ என அனலாக!

வியர்த்து விறுவிறுக்க குழந்தைகளுடன் பண்ணையை சுற்றிப்பார்க்க வந்திருந்த கூட்டத்துடன் ஐக்கியமாகி நடக்க ஆரம்பித்தோம். சோளத்தை பறிக்கும் பொழுதே பிரித்தெடுக்கும் ராட்சத மெஷின்கள், மாடுகளின் சாணத்தை தொடர்ந்து எடுத்துச் சென்று அதையே தோட்டங்களில் உரமாக, காய்ந்த புற்களை மாடுகளுக்குத் தீவனமாக என்று கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள்.

800 கறவை மாடுகள் காற்றோட்டமான சூழ்நிலையில் கொட்டகையில் இருந்தது. நம்மூர் மாடுகளைப் போலில்லாமல் ஒவ்வொன்றும் பெரிய பெரிய உருவங்களில் பெரிய பெரிய மடிகளுடன்!

அங்கு பால் கறப்பது ரொபாடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன்! மாடுகளின் கழுத்தில் இருக்கும் காலரில் பால் கறந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தால் தான் மீண்டும் பால் கறக்கிறது அந்த மெஷின். இல்லையென்றால் கதவை ஆட்டோமேட்டிக்காக திறந்து அந்த மாட்டை வெளியே அனுப்பி விடுகிறது. மாடுகளும் தன்னிச்சையாக பால் கறக்கும் இடத்திற்கு வர பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். மாடுகளின் மடியினை சுத்தம் செய்வது முதல் எத்தனை கேலன் பால் கறக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்களையும் அந்த ரோபோட்ஸ் சேர்த்து வைக்கிறது.

ஒவ்வொரு மாடும் 5-8 காலன் பால் ஒரு முறை தருகிறது. ஒரு மாட்டிலிருந்து மூன்று முதல் நான்கு முறை பால் கறக்கிறார்கள். கறக்கும் போதே குளிரூட்டப்பபட்டு முறையாக பெரிய கண்டைனர்களில் சேமித்து வைக்கிறார்கள்.

கன்றை ஈன்றும் பருவத்திலிருக்கும் மாடுகள், கர்ப்பம் தரித்திருக்கும் மாடுகள், பால் தரும் மாடுகள் என மாடுகளை தனித்தனி கொட்டகையில் பிரித்து வைத்திருக்கிறார்கள். மாடுகளுக்கு காய்ந்த வைக்கோலும், சோளமுமே புரதான உணவாக இருக்கிறது.

மாடுகள் எல்லாம் ஆரோக்கியமான சூழ்நிலையில் நல்ல உணவுடன், நீர் ஆகாரத்துடன் பராமரிக்கப்பட்டு வளர்ந்தாலும் கன்றுக்குட்டியை தாயிடமிருந்து பிரித்து தனியே அடைத்து வைத்திருப்பதும், இயற்கை முறையில் கருத்தரிக்க விடாமல் செயற்கை முறையில் கருத்தரிக்க வைப்பதும்... நமக்காக அந்த ஜீவன்கள்...பாவம் தான்!

ஒரு மாட்டுப் பண்ணையை சமாளிக்க பல மணிநேரங்கள் உழைத்தாலும் அவர்களுக்கு லாபம் அவ்வளவாக இல்லை என்று சொல்லும் பொழுது உலகமெங்குமே இவர்களின் நிலை இப்படித்தான் போல என வருந்தியபடி அங்கிருந்து விடைபெற்றோம்.


படங்கள் : https://goo.gl/photos/Tn183BJPCot9yKgM6















1 comment:

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...