Friday, October 7, 2016

நானும் ரவுடி தான்...

பேச்சு கூட சரியாக வராத என் இரண்டு வயது சுப்பிரமணியை வேறு வழியில்லாமல் பேபிசிட்டரிடம் விட வேண்டிய நிலை. நல்ல வசதியான பஞ்சாபிக்காரர்கள் வீடு. அந்தப் பெண்மணியின் மூன்று வயது பேத்தியும் அங்கு இருக்கவே சரி, விளையாட துணைக்கு ஆள் இருக்கிறதே என்று தினமும் அவனை விட்டுவிட்டுச் செல்வேன். மூன்று வயது தான் என்றாலும் அந்தப் பெண்குழந்தை அழகாக இருப்பாள். நல்ல வளர்த்தி. குண்டு வேறு. ஒரு நாள் மாலையில் அவனை அழைத்து வரச்சென்ற போது அவள் வேகமாக ஓடி வந்து சுப்பிரமணியை கீழே தள்ளி விட்டு அடிக்க கையை ஓங்கும் நேரம் நான் கதவைத் திறக்க, என்னை எதிர்பார்க்காததால் உறைந்து போய் நிற்க, சுப்பிரமணி வேகமாக வந்து என் கால்களை கட்டிக்கொண்டான்.

அடி லங்கிணி! என் குழந்தையை போட்டா அடிக்கிறாய்? என்று நானும் வேகமாக அவள் பக்கத்தில் சென்று கண்ணை உருட்டி இனி என் குழந்தையை தொட்டால் அவ்வளவு தான் என்று அடிப்பது போல் மிரட்டினேன். மாய்மாலக்காரி! அதற்குள் ஏதோ அடி வாங்கினவள் போல் பொலபொலவென கண்ணீருடன் ஓடிப் போய் பாட்டியிடம் தஞ்சம் புக, பேத்தி அழுவதைக் கண்டதும் என்ன ஏது என்று கையில் ஃபோனுடன் பாட்டியும் வர, வந்ததே கோபம் எனக்கு.

என் குழந்தைய காசு கொடுத்துத் தான பார்த்துக்கிறீங்க. நீங்க பாட்டுக்கு ஃபோன்ல இருந்தா என்ன அர்த்தம்? இதோ உங்க பேத்தி என் பையன தள்ளி விட்டு அடிக்கப் போறா. ஏதாவது ஆச்சுன்னா? இதுக்கா உங்ககிட்ட விட்டுட்டுப் போறேன். நான் கோபப்பட்டு அன்று தானே பார்த்திருக்கிறாள் அந்தப் பெண்மணி.

என் பேத்தி அப்படியெல்லாம் செய்ய மாட்டாள்.

அப்ப நான் பார்த்தது என்ன?

அவங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க .

இனிமே என் குழந்தை எங்க இருக்கானோ அங்க தான் நீங்க இருக்கணும். உங்களால குழந்தையை பார்த்துக்க முடியலன்னா சொல்லிடுங்க. நான் வேற ஆளை பார்த்துக்கிறேன்னு சொல்லிவிட்டு கோபமாய் பயந்து போய் நின்று கொண்டிருந்த குழந்தையுடன் வெளியேறினேன்.

மனசே ஆறவில்லை.! கிராதகி கிராதகி!

பின் சீட்டில் கலவரத்துடன் உட்கார்ந்திருக்கும் சுப்பிரமணியை பார்த்தவுடன் மிகவும் கஷ்டமாகி விட்டது. சரியாக பேசக்கூட தெரியாத குழந்தையை தள்ளி விட்டாளே! நல்லா நாலு போடு போட்டு இருந்துருக்கணும். குண்டச்சி. தின்ன கொழுப்பை என்கிட்டயே காமிக்கிறாளே!
வீட்டிற்கு வந்தவுடன் அமைதியாக குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு கணவர் வந்தவுடன் ஒரு புலம்பு புலம்ப, எங்கே, வேற பேபிசிட்டரைப் பார்க்கணும் என்று ஆரம்பித்து விடுவேனோ என்று அவருக்குப் பயம் வந்து விட்டது. குழந்தைகள் விளையாடும் போது இப்படியெல்லாம் நடக்கும். அவன் ஒரு தடவ அடி வாங்குவான். அப்புறம் சாமாளிச்சுக்குவான். 

ஆனாலும் மனசு ஆறவேயில்லை. என் குழந்தை எதற்கு அடி வாங்கணும்?

இரவு தூங்குவதற்கு முன் சுப்பிரமணியிடம் மெதுவாக பேச்சு கொடுத்து நாளைக்கு அந்தப் பெண் அடிக்க வந்தால் நீயும் அடித்து விடு, தள்ளி விட்டால் நீயும் தள்ளி விடணும், சரியா? பயமாக இருந்தால் அவள் பாட்டியுடனே இருந்து விடு என்று ஓதி விட்டேன். பாவம், குழப்பத்துடன் என்னை பார்த்துக் கொண்டிருந்தவன் தூங்கி விட்டான். எனக்குத் தான் தூக்கமே போய் விட்டது.

அடுத்த நாள் காலையில் எங்களைப் பார்த்தவுடன் பாட்டியிடம் தஞ்சம் புகுந்தவளைப் பார்த்து எங்க, என் பையனை இப்ப வந்து தள்ளி விடு பார்க்கலாம் என்றவுடன் மெதுவாக எட்டிப் பார்த்தாள். அவளெதிரே சுப்பிரமணியிடமும் அவள் தள்ளி விட வந்தால் அவளை நீ தள்ளி விடு. அடித்தால் திருப்பி அடி என்றவுடன் அவள் பாட்டிக்கும் பயம் வந்திருக்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. கவலைப்படாமல் இருங்கள் என்று சொன்னாலும் அந்த குட்டிச்சாத்தானை முறைத்துக் கொண்டே வெளியேறினேன். தினமும் காலையில் சிரித்துப் பேசி விட்டுச் செல்பவள் இன்று கண்டிப்புடன் போகிறாளே என்று அந்த குண்டுப்பெண்ணும் யோசனையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று முழுவதும் மணிக்கொருமுறை ஃபோன் செய்து குழந்தை பத்திரமாக இருக்கிறானா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

உடனடியாக அடுத்த பேபிசிட்டரை தேடவும், தெய்வாதீனமாக ஒரு நல்ல ஆத்மா கிடைக்க, அவரிடம் தான் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆனந்தமாக சென்று வந்தான் சுப்பிரமணி. இதாண்டா சாக்கு என்று நானும் மகளும் என் தம்பிகளின் திருமணத்திற்கு மூன்று வாரம் ஊருக்கும் சென்று வந்தோம்.

சுப்பிரமணி ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் பள்ளித்தலைமை ஆசிரியரிடமிருந்து ஃபோன். இவர் ஏன் காலையிலேயே கூப்பிட்டுக்கிட்டு? யோசனையுடன் எடுத்தால்...பஸ்சில் ஒரு இன்சிடென்ட் நடந்தது என்றவுடன் பதட்டம். ஐயோயோ என்னாச்சு? ஒன்னும் இல்ல. உங்க பையன் இன்னொரு பையனை அடிச்சுட்டான்.

வாட்? நம்பவே முடியலை. அப்படியெல்லாம் அடிக்கிறவனில்லையே? என்ன நடந்தது என்று கேட்கவும் நேரில் வரச்சொல்லி விட,

போச்சுடா! இது என்ன புது பூதம்! நேராக சுப்பிரமணியின் வகுப்பு ஆசிரியரிடம் பேசினேன். அவரும் ஆச்சரியப்பட்டு நம்பவே முடியவில்லை. இவனா அடித்தான் என்று!

என்னடா நடந்துச்சு?
அவன் ஒரு வாரமா என்னை nerd nerdன்னு சொல்லிக்கிட்டே எரிச்சலை கிளப்பினான். அதான் இன்னைக்கு அடிச்சுட்டேன். (ரஜினி, விஜய் படம் பார்க்காமலே இப்படின்னா...!)

ஒரு வாரமா நடந்துருக்கு. நீ எங்கிட்ட சொல்லல. டிரைவர், டீச்சர், பிரின்சிபால்னு இத்தனை பேர் இருக்காங்க. யார்ட்டயாவது சொல்லி இருந்துருக்கலாம். இப்ப பாரு! வீணா பிரச்னைய இழுத்து வச்சிருக்கே! ஆனா ஒன்னு, நல்லா அடிச்சிட்டே இல்ல. இனி ஒரு பய உங்கிட்ட வாலாட்ட மாட்டான். உன் பக்கமும் தப்பு இருக்குறதுனால என்ன தண்டனையோ ஏத்துக்க தான் வேணும். சொல்லிவிட்டு பிரின்சிபாலிடம் இவனை வம்புக்கிழுத்ததால் நடந்திருக்கிறது என்று சொல்ல, அவரும் அந்த மாதிரி சமயங்களில் எங்களிடம் வந்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

அடி வாங்கின அந்தப் பையன் சுப்பிரமணியை விட இரண்டு மடங்கு வளர்த்தி. எங்கள் தெருவில் இருப்பவன் தான். கொஞ்சம் அப்நார்மலாக இருந்தான் அப்போது. அதற்குப் பிறகு வந்த கோடைவிடுமுறையில் சுப்பிரமணியனை வீடு தேடி வந்து விளையாட அழைத்துப் போனான்.

ஆரம்பப் பள்ளி இறுதி ஆண்டில் பஸ்சில் நடக்கும் bullying பற்றி சுப்பிரமணி எழுதிய குறுங்கவிதை(!) ஒன்றை பள்ளி நுழைவாயிலில் பெரிய போஸ்டராக ஒட்டியும், இறுதி ஆண்டு பட்டமளிப்பு விழாவின் போது அழைப்பிதழில் அச்சடித்தும் சுப்பிரமணியை அவன் வகுப்பு ஆசிரியர்கள் கௌரவித்தார்கள்!

நானும் ரவுடி தான் - சுபம்.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...