Sunday, March 19, 2017

இப்படியும் சில ஜென்மங்கள்!

வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே எந்த குக்கர் எத்தனையாவது விசில் கணக்கையும் கவனித்துக் கொண்டு காது முழுவதும் டிவி நிகழ்ச்சியில் என வழக்கமான ஞாயிற்றுக்கிழமை காலை. இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தங்கள் திருமணத்திற்காகப் பெற்றவர்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைப் பற்றி பேசினார்கள். சரி, வழக்கமான ஒன்று தான். பெண்கள் படித்து வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில்அப்படி என்ன கேட்டு விடப் போகிறார்கள்?

முதலில் பேசிய இளம்பெண் நூறு சவரன் நகை வேண்டும், அப்புறம் கார், அப்பா கட்டிய வீடு ... அவளுடைய அம்மாவோ சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண்ணோ லேட்டஸ்ட் வைர நகை செட். ஹெலிகாப்டர்ல மாப்பிள்ளையும் பொண்ணும் வந்து இறங்கணுமாம்! வாவ்! ஆசை இருக்கலாம். அதுக்காக இப்படியா?

ஏதோ எங்களால முடிஞ்ச அளவில ஒரு இருபது பவுன் நகை, மாப்பிளைக்குச் செயின் அம்மா சொல்லி முடிப்பதற்குள் மகள் இருபது பவுனுக்கு கல்யாணமே வேண்டாம்னு அலறல். எண்பது சவரன் கேட்டால் தான் ஐம்பதாவது போடுவார்கள் சார். அவர்களால் முடியும் என்று ஏதோ மூன்றாம் மனிதரிடம் வசூலிப்பது போல் எப்படித் தான் பேச முடிகிறதோ? வீட்டில் பார்த்து திருமணம் செய்வது பெற்றோர்களிடம் இருந்து பணம் பறிக்கத்தான் ரீதியில் அந்தப் பெண்கள் பேசியது மிகவும் கேவலமாக இருந்தது.

நானும் ஆரம்பத்தில் இந்தப் பெண்கள் பையனை பெற்ற அம்மாக்களிடம் தான் வரதட்சணை கேட்கிறார்கள் போல என்று பார்க்கஆரம்பித்து, பெற்ற அம்மாவிடம் கேட்டவுடன் இப்பேர்பட்ட ஜடங்களும் ஜந்துகளும் வெட்கமின்றி தகுதிக்கு மீறிய  பணம்,வீடு, நகை கொடுக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை என பொதுவெளியிலேயே பேசியதை பார்த்தபொழுது இப்படியும் பெண்கள்  அதுவும் படித்து சுயமாய் முன்னேறி பெற்றவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் காலத்தில் வாழ்கிறார்களே.... வெறுப்பாக இருந்தது.

வெளிப்படையாகப் பேசுகிறேன் என்று இரு பெண்கள் பேசியது கொடுமையிலும் கொடுமை. சாகிற வரைக்கும் பென்ஷன் வரப்போகுது, சம்பாதித்திருக்கிறார்கள் கொடுப்பதற்கென்ன... இவர்கள் இறந்து விட்டால் சொத்துக்களைப் பிரிப்பதில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்க திருமணத்திற்கு முன்பே சொத்துக்களை என் பெயருக்கு எழுதி வைத்து விட வேண்டும்...ம்ம்ம்...இவர்களைப் பெற்றவர்கள் பாவம் தான்.

தங்களுக்காகப் பெற்றவர்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளதே என்ற வருத்தத்தை விட, பெண்ணைப் பெற்றவர்கள் ஆரம்பத்திலிருந்து சேர்த்து வைத்திருக்க வேண்டியது அவர்கள் கடமை ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நெருடலாக இருந்தது. காலம் தான் எப்படி மாறி விட்டிருக்கிறது? உறவுகளின் பலம் உணராமல் பணம் இருந்தால் போதும் அதுவும் தனக்கு வேண்டியது கிட்டினால் போதும், கூட பிறந்தவர்களைப் பற்றி கூட சிறிதும் கவலைப்படாத சுயநல மனநிலையை நினைத்தால் தான் ஆச்சரியமாக இருக்கிறது!

அம்மாவிடம் அவ்வளவு நகை, பணம், சொத்து கிடையாது என்று தெரிந்திருந்தும் அடாவடியாக லிஸ்ட் போட்டு கேட்கிறார்கள். சென்டிமென்டல் வேல்யூவென்று சொல்லி அம்மாக்களின் சேலைகளையும் விட்டு வைக்கவில்லை!

அப்பா இன்று வரை எங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கை வாழவே இல்லை. இனி எப்போது வாழ்வார் என்றும் தெரியவில்லை. அதே நிலைமை என் வருங்கால கணவருக்கும் வரக்கூடாது அதனால் தான் பணம் வேண்டும் என்று கேட்கிறேன் என்பதில் இருக்கும் அப்பட்டமான சுயநலம், புகுந்த வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்க பிறந்த வீட்டினர் செய்ய வேண்டிய சீர் வரிசை... மாமியாரே பரவாயில்லை போலிருக்கிறது! ... சிந்தித்து தான் பேசுகிறார்களா?

இந்த கேடு கேட்ட ஜென்மங்களிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கப் போகும் அந்த அப்பாவி ஆண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

எனக்குத் தெரிந்து சில உறவினர் வீடுகளில் இப்படியும் கேவலமான ஜந்துகள் பெற்றவர்களின் நிலைமை தெரிந்தும் அவர்களை வதைப்பதை கண்டு போதிய படிப்பறிவும், உறவுகளின் அன்பை புரிந்து கொள்ளக் கூட முடியாத உணர்ச்சியற்றவர்களாய் இருக்கிறார்களே என வருந்தியதுண்டு. பெண்கள் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டு சொந்தக்காலில்உழைத்து தன்னைச் சுற்றியுள்ளோரையும் உயர்த்த வேண்டும் என்ற துடிப்புடன் முன்னேறும் இந்த கால கட்டத்தில் கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக் கொண்டு ஒடத் துடிக்கும் பெண்களின் மனவோட்டம், நிகழ்ச்சி பார்த்த பலரையும் முகம்சுளிக்க வைத்திருக்கும்.

இப்படியுமா பெண்கள் இருப்பார்கள் ? இருக்கிறார்கள்? இவர்கள் தான் நவீன உலகின் பெண்களா? குடும்பங்களில் உறவை பேணிக்காக்கும் நற்குணங்களைப் பணம், சொத்து, நகை கொண்டு அளவிடும் மனநிலையில் இருப்பவர்கள்  இப்படி பேசுவதற்கு சில பெற்றோர்களின் ஆண்பிள்ளை பாசம் தான் காரணமா? ஆண், பெண் பாரபட்சமின்றி இருவருக்கும் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் பெற்றோர்களுக்கு இன்னும் என்ன தயக்கம் ? பிள்ளை தங்களை வைத்துக் காப்பாற்றுவான் தான், அவன் மனைவி சொல்லும் வரை. வயதான காலத்தில்சொத்துக்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு சில பெற்றோர்கள் படும்பாட்டை நேரிலேயே பல இடங்களில் காண்கிறோம்.

சொத்துக்களைச் சேர்த்து சொந்தங்களைப் பிரித்து வைக்கும் வேலையைச் செவ்வனே செய்கிறது இந்தப் பாழாய்ப் போன பணம். பணமா பாசமா என்றால் பணம் தான் என்று பெரும்கூச்சலுடன் பெரும்பாலாரும், பாசம் என்று மெல்லிய குரலில் சிலருமாகிப் போனது காலத்தின் கோலம்!

வடஇந்திய ஸ்டைலில் மெகந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல தமிழ் சமுதாயத்தில் ஊடுருவதையும் சில அம்மாக்கள் விரும்பவில்லை. மாடர்ன் பெண்களுக்கு அதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜஸ்ட் ஃபார் ஃபன். அவர்கள் செலவில் திருமணத்தை செய்தால் இந்த ஆடம்பரங்கள் எல்லாம் இருக்குமா?

மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சிணை கேட்பார்கள் என்றில்லை. பெற்ற பெண்களே கேட்பார்கள் என்ற காலகட்டத்தில் வாழும் பெற்றோர்களுக்கு கொடுமையான காலம் தான். நல்ல கல்வியை கொடுத்து விட்டோம் இனி உன் பாடு என்று சொல்லஆரம்பித்தால் அவர்களுக்கும் பொறுப்பு வரும். எதிர்பார்ப்புகளும் குறையலாம்.

பெற்றோர்களும் தங்கள் சுயசம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்களைப் பிள்ளைகளுக்குச் சரிசமமாக பங்கு பிரித்துக் கொடுத்தும், ஆண் பெண் குழந்தைகளைப் இனம் பிரித்துப் பாராமல் அவர்கள் விருப்ப கல்வியினை வழங்கி தத்தம் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் வகையில் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் அதிக எதிர்பார்ப்பிற்கு பெற்றோர்களும் ஏதோ ஒரு வகையில் காரணிகளாகி விடுகிறார்கள். குடும்ப நிலைமையை குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் வயதில் தெளிவாக சொல்லிப் புரிய வைக்காததும், அரும்பாடுபட்டு சேர்த்த பணத்தின் அருமையை உணர வைக்காததும் பல பெற்றோர்கள் செய்யும் தவறு.

கல்வியறிவு இன்னும் இத்தகைய பெண்களின் எண்ணங்களை மாற்றவில்லை. சம உரிமை கேட்கும் பெண்களுக்குத் தங்களால் பெற்றோர்கள் படும் துயரிலிருந்து அவர்களை மீட்கும் எண்ணமும் இல்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண்களிடம் கண்ட வருத்தமான விஷயம். ஆண்கள் வரதட்சணை கேட்பதே பெண்களை அவமதிக்கும் செயல் என்று போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் பெண்களைப் பெற்றவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பெரும்பொறுப்பிலிருப்பதாக இப்பெண்கள் பேசியதில் இருந்த மடமையை எண்ணி வெட்கி தலைகுனிய வைத்தது இந்நிகழ்ச்சி.

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...