Friday, April 14, 2017

அந்த 100 நாட்கள்

டிசம்பர் 31,2016 இரவு ஆங்கில புது வருட வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டே ஃபேஸ்புக் ஆப்-ஐ அலைபேசியில் இருந்து எடுத்து விட, இனி 100 நாட்களை எப்படிக் கடக்கப் போகிறேனோ? ஒருவேளை அவசரப்பட்டு விட்டேனோ? ஒரு வாரம் இல்லையென்றால் ஒரு மாதம் முயற்சி செய்து பார்த்திருக்கலாமோ? ஃ பேஸ்புக் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? ஜீவிதமே அங்க தான இருந்தது. தடாலடியா 100 நாட்கள் எனத் தாவி இருக்கக் கூடாதோ? மனதில் பட்டிமன்றம் ஓடினாலும் நாட்டில் 100 நாட்கள் விதவிதமாகப் பல்வேறு வண்ணங்களில் சேலை, டிஷர்ட் போட்டுப் படங்களைப் போடுவதை விட இது ஒன்றும் பெரிய விஷயமாகப்படவில்லை. தொடர் பழக்கத்திலிருந்து வெளிவருவது அவ்வளவுஎளிதானதும் அல்ல. முயற்சி செய்து தான் பார்ப்போமே. எனக்கும் சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது.

ஜனவரி முதல் நாள் காலையில் மகளை ஊருக்கு வழியனுப்பி விட்டு வரும் வழியில் ஆதவனின் வருகையையும், வானின் வண்ணங்களையும் நெஞ்சிலும் காமெராவிலும் படம்பிடித்துக்கொண்டே... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கையில் ஓ! ஃபேஸ்புக் தான் இப்ப கிடையாதே! சிறிது வருத்தமாகவும் இருந்தது. அதனால் என்ன, இன்ஸ்டாகிராமில்போட்டு திருப்திபட்டுக் கொண்டேன். செய்திகளை, டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுதோ கை பரபரவென ஸ்டேட்டஸ் போட துடித்ததென்னவோ உண்மை. முதல் இரு நாட்கள்மட்டுமே அப்படி இருந்தது. சுப்பிரமணிக்குப் பள்ளி திறந்தவுடன் என் அதிகாலை பரபரப்பு குறைந்திருந்ததை உணர முடிந்தது. காலையில் ஃபேஸ்புக் பக்கம் வராத பொழுதுகள் அமைதியாகப் பழைய நாட்களைப் போல.

என்ன, உடனுக்குடன் தெரிந்த செய்திகள் கொஞ்சம் சாவகாசமாகத் தெரிந்தது. காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படும் அரசியல் பதிவுகளைப் படிக்காமல் மனம் நிம்மதியாக இருந்தது.ரெசிபியை ஃபேஸ்புக்கில் தேடி சமைத்து முடித்ததும் படம் போடுவது போன்ற அலப்பறைகள் இல்லாமல் பாட்டு கேட்டுக் கொண்டே நிதானமாகச் சமையல் வேலைகள் முடிந்தது.ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செல்போனை நோண்டிக் கொண்டிராமல் நடப்பதும் விளையாடுவதும் அதிகரித்து வாரத்திற்கு 50000 ஸ்டெப்ஸ் டார்கெட்டை எட்ட முடிந்தது.

மடியில் கணினி, கையில் அலைபேசி, கண்கள் டிவியில் என மல்டிடாஸ்கிங் ஜிகிலடிக்கள் இல்லாத நாட்கள் எனக்கே ஆச்சரியமான ஒன்று! குடும்பமாக வெளியில் சென்ற பலநாட்களில் செல்ஃபோன் மறந்த நாட்களும் பலவாகிப் போனது! வேடிக்கைப் பார்த்துக் கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டே ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ததும் கடந்த காலமாகி மனக்கண்ணில் படங்களை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த வார்த்தைகளை மனதில் எழுதிக் கொண்ட பயணங்கள் மீண்டும் என் உலகத்திற்குள் நான்!

எத்தனை எத்தனை விஷயங்கள் தான் நடந்து விட்டது இந்த நூறு நாட்களில்! தமிழ்நாட்டு (அ)சிங்க அரசியல் தகிடுதத்தங்கள், டிரம்ப் பதவியேற்பு, எதிர்ப்பு, தினம் ஓர் அதிரடி அறிவிப்பு,வாடிவாசல் மெரீனா போராட்டம், நெடுவாசல் அரசியல் அரங்கேற்றங்கள், மதுரையில் வெயில் கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இத்யாதி இத்யாதிகள்... ஆம்... எல்லாவற்றுக்கும் காரணம் மோடி சர்க்கார்... புலம்ப ஒரு கோஷ்டி. எப்படித்தான் தமிழ்ச்செய்திகளையும், கலந்துரையாடல்களையும் பொறுமையாகத் தமிழர்கள் பார்க்கின்றனரோ? பார்த்தாலே ரத்தக்கொதிப்பு வந்து விடும் போல் ஏக டெசிபெலில் ஒவ்வொருவரும் சேனலில் கத்திக் கொண்டிருக்கிறார்கள்! தினசரிகளையும் தொலைத்ததில் மனஅமைதியே!

பனியும், குளிரும், வெயிலும், மழையுமாகச் சென்று கொண்டிருந்த பனிக்காலம் முடியும் தருவாயில் சென்றேன் என்று நினைத்தாயோ, வந்தேன் பார் என வரலாறு காணாதபனிப்புயலால் ஆல்பனியை கலங்கடித்து... இத்தனை வருடங்களில் முதல் முறையாக அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு எதிர்பாராத விடுமுறையைத் திகட்ட திகட்டகொண்டாட வைத்ததில் திளைத்த உள்ளங்கள் இரண்டு. வேறு யார்? நானும் என் செல்ல சுப்பிரமணியும் தான். அவனுக்குப் போனஸாக அடுத்த நாளும் விடுமுறை !ஆனந்தக்கூத்தாடியதை சொல்லவும் வேண்டுமோ?

மனதிற்கினிய மழைக்காலமும் வந்தே விட்டது. 'குளுகுளு' மழைச்சாரலில் நனையும் சுகமே அலாதி. மழைக்காற்றின் சுவாசத்தில் புத்துயிர் பெறும் மரங்கள் பச்சை வண்ணம்உடுத்தி வலம் வர ஆரம்பிக்கும் நாட்களும் வெகு அருகில். எங்கே மாயமாய் மறைந்தனவோ என்றிருந்த பறவைகள் வந்தேன் வந்தேன் எனக் கூட்டிற்குத் திரும்பி இனிய கானம்இசைக்கும் காலைப்பொழுதுகள், உல்லாச உலகில் அவர்களின் காதல் கீதங்கள் ரம்மியமாக இசைக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குருவிகளுக்காக ஆண் குருவிகளின் காத்திருத்தலும், சேர்ந்து கூடு கட்டும் அழகும்... கேமராவும் கையுமாக மீண்டும் நான்.

விசேஷ தினங்களுக்கு நண்பர்களிடமிருந்து வரும் வாழ்த்துகளுக்குக் குறையவில்லை. இணையம் தாண்டிய நட்பு வட்டம் என்று போல் இன்றும் உயிர்ப்போடு இருக்க,தொடர்பிலிருந்த வரை உள்ள நட்பு யாதெனவும் புரிந்தது. இணையத்தை, சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருப்பவர்களின் மேல் மரியாதை பன்மடங்கு கூடியிருக்கிறது. பலன்கள் பலவும், இழப்புகள் சிலவும் என இந்த 100 நாட்கள் பலவும் கற்றுத் தந்தது. என்னைக் காணாமல் எனக்கு ஏதோ உடற்பிரச்னை என்று நினைத்தவர்களும் கவலைப்பட்டவர்களும் தனி மடலில் செய்திகளை அனுப்பி அதற்கும் பதில் வராததால் கணவரிடம் விசாரித்த நல்ல உள்ளங்களும்...கண்ணு கொஞ்சம் வியர்த்துத்தான் போனது இந்த முகமறியா நட்புகளால்!

எப்படி இருக்கீங்க? ஃபேஸ்புக்ல நீங்க இல்லாதது உங்களைப் பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்கு. சுப்பிரமணிய, உங்க குருவிங்க படங்களை ரொம்பவே மிஸ் பண்றோம்னு பலஃபீலிங்ஸ்!

ஆக, முகநூல் அடிமையாகாமல் என்னால் வெளிவர முடியும் என்ற நம்பிக்கையும், திட்டமிட்ட பல வேலைகளுடன் திட்டமிடாத சில வேலைகளும், கற்றுக் கொண்ட பல பாடங்களுமாய் ... 100 நாட்களும் ஒரு சுகானுபவமே! இணையம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்டறிய வேண்டும் என்ற ஆசையும் துளிர்த்திருக்கிறது. பார்க்கலாம்.

அப்பாடா! தொலைந்தாள் என்றிருந்தவர்களே வந்து விட்டேன் உங்கள் டைம்லைனை நிரப்ப...ஹி ஹி ஹி...ஸ்டார்ட் த ம்யூசிக்க்க்க்க்க்க்.

துர்முகி வருடம் நிறைவடைந்து புது வருடமான ஹேவிளம்பி பிறக்கும் மங்களகரமான இந்நன்னாளில் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும், புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் பொன்மயமான வாழ்வு அனைவருக்கும்  அமையட்டும்.

நண்பர்கள்அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


Wednesday, April 12, 2017

அவனும் அவளும்

என்னங்க இன்னும் ரெடியாகலையா?

ஆறு மணி படத்துக்கு இப்ப இருந்தே போகணுமா? இன்னும் நேரமிருக்கே!

வீட்லருந்து தியேட்டர் போய்ச் சேர அரைமணி நேரமாவது ஆகும். இப்ப கெளம்பினா தான் சரியா இருக்கும். புதுப்படம் வேற. கூட்டம் இருக்கும். டிக்கெட் கிடைக்குமா?

அதெல்லாம் கிடைக்கும்.

படத்துக்குப் போக பிடிக்கலைன்னா நான் எங்கம்மா கூட போய்க்கிறேன்.

அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ தான் ரொம்ப அவசரப்படற.

ஹ்ம்ம். பெரிய டைரக்டர் படம். ARR மியூசிக். இன்னும் பல கவர்ச்சி அம்சங்கள் இருக்கு. படத்தை 'ஆஹா ஓஹோ'ன்னு விமரிசனம் பண்ணி மார்க் போட்ருக்காங்க. நீங்க என்னடான்னா ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க?

நான்ன்ன்ன் அலட்டறேன்? அது சரி!

பின்ன என்ன? எனக்கெல்லாம் விக்கோ வஜ்ரதந்தி விக்கோ வஜ்ரதந்தின்னு அந்த தாத்தா 'ஆஆ'ன்னு வாய பொளக்கிற விளம்பரத்துலருந்து, க்ளோஸ்அப்ல முடி பறக்க கண்ணு மின்ன சிரிக்கற மாதவன் விளம்பரம் எல்லாம் பார்த்தா தான் படம் பார்த்தா மாதிரி இருக்கும்.

சரி,சரி கிளம்பு! இவ்வளவு சீக்கிரமெல்லாம் நான் படத்துக்குப் போனதே இல்லை!

நீங்கள்லாம் கல்யாணாமே பண்ணிருந்துக்கக் கூடாது.

மாலை வெயிலும் சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்க...

எப்படியோ டிக்கெட் வாங்கி கூட்டத்தோடு கூட்டமாக கிடைத்த இரு இருக்கைகளில்... ஒரே ஜாலி. இன்னும் விளம்பரம் கூட போடலை.

விளம்பரம் முடிந்து படம் ஆரம்பித்து...

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை...
மூழ்கியதில்....

ஹே! வீட்டுக்குப் போகலாமா?

வீட்டுக்கா? எதுக்கு? இப்பத்தான படமே போட்ருக்கான்?

எனக்கு இப்பவே தலைவலிக்க ஆரம்பிச்சிடுச்சு.

எனக்கு வர்ற கோவத்துக்கு... உங்களையெல்லாம்....

ப்ளீஸ்!

இன்னும் இன்டெர்வல் கூட விடல. கடலைமிட்டாய், முறுக்கு, கோன் ஐஸ்கிரீம் எல்லாம் எனக்காக வெயிட்டிங். நான் வரமாட்டேன். நீங்க போங்க.

கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னென்ன அவஸ்தைகள்! நிம்மதியா ஒரு படம் பார்க்க முடியுதா! ஹூம்ம்ம்ம்ம்ம் ...

ஒரு வழியா படம் பார்த்து முடிய...

எப்படி இவ்வளவு ஆர்வமா இந்தப் படமெல்லாம் பார்க்கிற? உன்னைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு!

இருக்கும் இருக்கும். எப்படித்தான் உங்களை மட்டும் ஓவியமா பெத்தாய்ங்களோன்னு எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு!

பாட்டு ரிலீஸான நாள்லருந்து பாடி கொன்னுக்கிட்டிருந்தியே!

ஞே!

அந்தப் படம் ரிலீஸாயிடுச்சு போலிருக்கே! நீ போகல ?

ஏன்? நீங்க வரல? வந்து பார்த்த்துட்டு நாலு 'நல்ல' வார்த்தைய சொல்றது.

சரி சரி வர்றேன்.

ரொம்ப அலுத்துக்க வேணாம். நான் போயிட்டு வர்றேன். அந்த ஹீரோயின பார்த்தா கொஞ்சம் ஷோபனா மாதிரி இருக்காம்.

நான் தான் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றேனே! நாளைக்குப் போகலாம். உனக்காகத்தான் வர்றேன்.

 காதுல தோடு இருக்கான்னான்னு பார்த்துக்கிட்டேன். பத்திரமா தான் இருக்கு. ஹி ஹி ஹி!

ஆனா ஒன்னு. அங்க வந்து தலைவலிக்குது கால்வலிக்குதுன்னு சொன்னா அவ்வளவு தான்.

ஹேய்! என்ன? படம் பார்க்கணும்னு சாரட்டு வண்டியிலே சாரட்டு வண்டியிலேன்னு தையா தக்கான்னு ஆடிக்கிட்டு இருந்த? இப்ப தூங்கிக்கிட்டு இருக்க?

போகலாம் போகலாம். இன்னும் நேரமிருக்கே!

சீக்கிரம் கிளம்பு.

என்ன? என்னிக்குமில்லாத அதிசயமா இருக்கு! என்ன நடக்குது?

ரெவியூ எல்லாம் படிச்சியா? இப்பவே சொல்றேன்...

ஒன்னும் சொல்ல வேணாம். காசு குடுத்து தலைவலி வாங்கிக்க நான் ரெடி.

டிக்கெட்டும் வாங்கியாச்சு. இன்னும் முக்கா மணிநேரம் இருக்கு. இப்ப உள்ள போனா உன்னையும் என்னையும் தவிர ஒரு ஜனமும் இருக்காது. வா, மால் முழுக்க சுத்தி வருவோம். ஏதாவது சாப்பிடறியா?

ம்ஹூம். (மைண்ட் வாய்ஸ் - கவனிப்பெல்லாம் பலமா இருக்கே?!)

தியேட்டருக்குப் போயிடுவோம். எனக்கு கடைசி வரிசையில சென்ட்டர் சீட் வேணும்.

நமட்டுச் சிரிப்புடன், இந்தா தியேட்டர் முழுக்க உனக்குத்தான்!

என்ன கொடுமையிது! வெள்ளிக்கிழமை கூட கூட்டம் இல்லைன்னா... நம்ம டமில் மக்கள்ஸுக்கு  அறிவு கிறிவு முதிர்ச்சி ஏதாவது...??? உங்கள நம்பி பெரிய டைரக்டர் ஒருத்தரு மூளைய கசக்கிப் பிழிஞ்சு காதல் சொட்ட சொட்ட சில பல முன்னேற்ற கருத்துக்களை வச்சு படம் எடுத்தா... கொஞ்சம் கூட ரொமான்டிக் ரசனை இல்லை. இப்படியா துரோகம் பண்றது டமில்ஸ்?

அதுக்குள்ள ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக

பாப்கார்ன் வேணுமா?

தியேட்டர்லருந்து தப்பிச்சு ஓட காரணம் தேடுறாரோ?!

அதெல்லாம் வேண்டாம்.

கொஞ்ச நேரத்துல விக்ரம் வேதா ட்ரைலர்... 

ஹை!

அடுத்த தலைவலி வேற வருது போல!

இளம்தம்பதியர் தள்ளு வண்டியில் குழந்தையுடன்  தியேட்டரில் என்ட்ரி ஆக ...அப்பாடா! துணைக்கு ஆள் இருக்காங்க.

படத்த போடுங்கடா சீக்கிரம்.

கைநிறைய ராட்சஸ பாப்கார்ன் பக்கெட்ட்டுடன்... மூன்று பெண்கள் முன் வரிசையில்.

படத்தோட டைட்டில் போட்டவுடன்... சவுண்ட ஏன் இவ்வளவு கூட்றானுங்களோ?

திடீர்னு கத்திக்கிட்டே நாலு பொண்ணுங்க முன் வரிசையில். ஆன்சைட் ப்ராஜெக்ட்டுக்கு வந்துருப்பாங்களோ? அவங்க மட்டும் தான் ஆர் ஜே பாலாஜி வர்றப்பவும், 'வீசீ' கண்ணு முழிய விரிச்சு ஆணாதிக்கத்தனமா கத்துறப்பவும்...சீ சீ...உணர்ச்சிகரமா நடிக்கறப்பவும் ஓஓன்னு கூப்பாடு போட்டாங்க... மத்தபடி நடுநடுவில் வந்து சேர்ந்த இருபது பேரும் அமைதியாக  படத்தைப் பார்க்க...

 கேளாயோ கேளாயோ...முடிஞ்சு படம் தொடர, மெதுவா ஓரக்கண்ணால சைடுல பார்த்தா பசங்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டு... ஹ்ம்ம்... எப்ப தலைவலி படலம் ஆரம்பிக்கப் போகுதோ?

அங்க அந்த 'வீசீ' பாரதியார் கவிதைகளை காதலோட சொல்ற சீன்ல திரும்பி பார்த்தா... தலைவலிக்கு அமிர்தாஞ்சன் விளம்பரத்துல வர்ற மாதிரி நெத்தியில கைய வச்சுக்கிட்டு... பாவமா தான் இருந்துச்சு.

ஆனா, மனுஷன் எதுவுமே பேசலையே!

படம் முடிஞ்சு மால்-ஐ விட்டு வெளியே வந்தா,

வான் வருவான் தொடுவான்

மழை போல் விழுவான்

காற்றாய் கரைவான்

குளிராய் உறைவான்

-ங்கிற மாதிரி மழை தூறிய வானமும் சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் காற்றும் முகத்திலறைய...

அழகியே ஏ அழகியே take me home take me home னு

தொலைவில் நிறுத்தியிருந்த வண்டியில் ஓடிப்போய் ஏறி ஹீட்டர் போட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டுப் பாட்டை போட்டா...

விதி வலியது!









































































































அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...