Friday, April 14, 2017

அந்த 100 நாட்கள்

டிசம்பர் 31,2016 இரவு ஆங்கில புது வருட வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டே ஃபேஸ்புக் ஆப்-ஐ அலைபேசியில் இருந்து எடுத்து விட, இனி 100 நாட்களை எப்படிக் கடக்கப் போகிறேனோ? ஒருவேளை அவசரப்பட்டு விட்டேனோ? ஒரு வாரம் இல்லையென்றால் ஒரு மாதம் முயற்சி செய்து பார்த்திருக்கலாமோ? ஃ பேஸ்புக் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? ஜீவிதமே அங்க தான இருந்தது. தடாலடியா 100 நாட்கள் எனத் தாவி இருக்கக் கூடாதோ? மனதில் பட்டிமன்றம் ஓடினாலும் நாட்டில் 100 நாட்கள் விதவிதமாகப் பல்வேறு வண்ணங்களில் சேலை, டிஷர்ட் போட்டுப் படங்களைப் போடுவதை விட இது ஒன்றும் பெரிய விஷயமாகப்படவில்லை. தொடர் பழக்கத்திலிருந்து வெளிவருவது அவ்வளவுஎளிதானதும் அல்ல. முயற்சி செய்து தான் பார்ப்போமே. எனக்கும் சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது.

ஜனவரி முதல் நாள் காலையில் மகளை ஊருக்கு வழியனுப்பி விட்டு வரும் வழியில் ஆதவனின் வருகையையும், வானின் வண்ணங்களையும் நெஞ்சிலும் காமெராவிலும் படம்பிடித்துக்கொண்டே... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கையில் ஓ! ஃபேஸ்புக் தான் இப்ப கிடையாதே! சிறிது வருத்தமாகவும் இருந்தது. அதனால் என்ன, இன்ஸ்டாகிராமில்போட்டு திருப்திபட்டுக் கொண்டேன். செய்திகளை, டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுதோ கை பரபரவென ஸ்டேட்டஸ் போட துடித்ததென்னவோ உண்மை. முதல் இரு நாட்கள்மட்டுமே அப்படி இருந்தது. சுப்பிரமணிக்குப் பள்ளி திறந்தவுடன் என் அதிகாலை பரபரப்பு குறைந்திருந்ததை உணர முடிந்தது. காலையில் ஃபேஸ்புக் பக்கம் வராத பொழுதுகள் அமைதியாகப் பழைய நாட்களைப் போல.

என்ன, உடனுக்குடன் தெரிந்த செய்திகள் கொஞ்சம் சாவகாசமாகத் தெரிந்தது. காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படும் அரசியல் பதிவுகளைப் படிக்காமல் மனம் நிம்மதியாக இருந்தது.ரெசிபியை ஃபேஸ்புக்கில் தேடி சமைத்து முடித்ததும் படம் போடுவது போன்ற அலப்பறைகள் இல்லாமல் பாட்டு கேட்டுக் கொண்டே நிதானமாகச் சமையல் வேலைகள் முடிந்தது.ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு செல்போனை நோண்டிக் கொண்டிராமல் நடப்பதும் விளையாடுவதும் அதிகரித்து வாரத்திற்கு 50000 ஸ்டெப்ஸ் டார்கெட்டை எட்ட முடிந்தது.

மடியில் கணினி, கையில் அலைபேசி, கண்கள் டிவியில் என மல்டிடாஸ்கிங் ஜிகிலடிக்கள் இல்லாத நாட்கள் எனக்கே ஆச்சரியமான ஒன்று! குடும்பமாக வெளியில் சென்ற பலநாட்களில் செல்ஃபோன் மறந்த நாட்களும் பலவாகிப் போனது! வேடிக்கைப் பார்த்துக் கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டே ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ததும் கடந்த காலமாகி மனக்கண்ணில் படங்களை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த வார்த்தைகளை மனதில் எழுதிக் கொண்ட பயணங்கள் மீண்டும் என் உலகத்திற்குள் நான்!

எத்தனை எத்தனை விஷயங்கள் தான் நடந்து விட்டது இந்த நூறு நாட்களில்! தமிழ்நாட்டு (அ)சிங்க அரசியல் தகிடுதத்தங்கள், டிரம்ப் பதவியேற்பு, எதிர்ப்பு, தினம் ஓர் அதிரடி அறிவிப்பு,வாடிவாசல் மெரீனா போராட்டம், நெடுவாசல் அரசியல் அரங்கேற்றங்கள், மதுரையில் வெயில் கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இத்யாதி இத்யாதிகள்... ஆம்... எல்லாவற்றுக்கும் காரணம் மோடி சர்க்கார்... புலம்ப ஒரு கோஷ்டி. எப்படித்தான் தமிழ்ச்செய்திகளையும், கலந்துரையாடல்களையும் பொறுமையாகத் தமிழர்கள் பார்க்கின்றனரோ? பார்த்தாலே ரத்தக்கொதிப்பு வந்து விடும் போல் ஏக டெசிபெலில் ஒவ்வொருவரும் சேனலில் கத்திக் கொண்டிருக்கிறார்கள்! தினசரிகளையும் தொலைத்ததில் மனஅமைதியே!

பனியும், குளிரும், வெயிலும், மழையுமாகச் சென்று கொண்டிருந்த பனிக்காலம் முடியும் தருவாயில் சென்றேன் என்று நினைத்தாயோ, வந்தேன் பார் என வரலாறு காணாதபனிப்புயலால் ஆல்பனியை கலங்கடித்து... இத்தனை வருடங்களில் முதல் முறையாக அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டு எதிர்பாராத விடுமுறையைத் திகட்ட திகட்டகொண்டாட வைத்ததில் திளைத்த உள்ளங்கள் இரண்டு. வேறு யார்? நானும் என் செல்ல சுப்பிரமணியும் தான். அவனுக்குப் போனஸாக அடுத்த நாளும் விடுமுறை !ஆனந்தக்கூத்தாடியதை சொல்லவும் வேண்டுமோ?

மனதிற்கினிய மழைக்காலமும் வந்தே விட்டது. 'குளுகுளு' மழைச்சாரலில் நனையும் சுகமே அலாதி. மழைக்காற்றின் சுவாசத்தில் புத்துயிர் பெறும் மரங்கள் பச்சை வண்ணம்உடுத்தி வலம் வர ஆரம்பிக்கும் நாட்களும் வெகு அருகில். எங்கே மாயமாய் மறைந்தனவோ என்றிருந்த பறவைகள் வந்தேன் வந்தேன் எனக் கூட்டிற்குத் திரும்பி இனிய கானம்இசைக்கும் காலைப்பொழுதுகள், உல்லாச உலகில் அவர்களின் காதல் கீதங்கள் ரம்மியமாக இசைக்கத் தொடங்கியிருக்கிறது. பெண் குருவிகளுக்காக ஆண் குருவிகளின் காத்திருத்தலும், சேர்ந்து கூடு கட்டும் அழகும்... கேமராவும் கையுமாக மீண்டும் நான்.

விசேஷ தினங்களுக்கு நண்பர்களிடமிருந்து வரும் வாழ்த்துகளுக்குக் குறையவில்லை. இணையம் தாண்டிய நட்பு வட்டம் என்று போல் இன்றும் உயிர்ப்போடு இருக்க,தொடர்பிலிருந்த வரை உள்ள நட்பு யாதெனவும் புரிந்தது. இணையத்தை, சமூக வலைத்தளங்களை விட்டு விலகி இருப்பவர்களின் மேல் மரியாதை பன்மடங்கு கூடியிருக்கிறது. பலன்கள் பலவும், இழப்புகள் சிலவும் என இந்த 100 நாட்கள் பலவும் கற்றுத் தந்தது. என்னைக் காணாமல் எனக்கு ஏதோ உடற்பிரச்னை என்று நினைத்தவர்களும் கவலைப்பட்டவர்களும் தனி மடலில் செய்திகளை அனுப்பி அதற்கும் பதில் வராததால் கணவரிடம் விசாரித்த நல்ல உள்ளங்களும்...கண்ணு கொஞ்சம் வியர்த்துத்தான் போனது இந்த முகமறியா நட்புகளால்!

எப்படி இருக்கீங்க? ஃபேஸ்புக்ல நீங்க இல்லாதது உங்களைப் பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்கு. சுப்பிரமணிய, உங்க குருவிங்க படங்களை ரொம்பவே மிஸ் பண்றோம்னு பலஃபீலிங்ஸ்!

ஆக, முகநூல் அடிமையாகாமல் என்னால் வெளிவர முடியும் என்ற நம்பிக்கையும், திட்டமிட்ட பல வேலைகளுடன் திட்டமிடாத சில வேலைகளும், கற்றுக் கொண்ட பல பாடங்களுமாய் ... 100 நாட்களும் ஒரு சுகானுபவமே! இணையம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்டறிய வேண்டும் என்ற ஆசையும் துளிர்த்திருக்கிறது. பார்க்கலாம்.

அப்பாடா! தொலைந்தாள் என்றிருந்தவர்களே வந்து விட்டேன் உங்கள் டைம்லைனை நிரப்ப...ஹி ஹி ஹி...ஸ்டார்ட் த ம்யூசிக்க்க்க்க்க்க்.

துர்முகி வருடம் நிறைவடைந்து புது வருடமான ஹேவிளம்பி பிறக்கும் மங்களகரமான இந்நன்னாளில் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும், புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் பொன்மயமான வாழ்வு அனைவருக்கும்  அமையட்டும்.

நண்பர்கள்அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


1 comment:

  1. yes i too want to get less and less addicted to FB etc i now listen to speeches by renowned powerful thinkers and speakers like GURUMOORTHY, rajiva malhotra, subramaniam swamy etc

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...