Thursday, May 25, 2017

பச்சை நிறமே பச்சை நிறமே...

கடும்பனி மற்றும் கொடுங்குளிரிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் மழையை வரவேற்க, இலைகளைத் துறந்து குளிரில் சோகத்துடன் காட்சியளித்த மரங்களும், நீண்ட உறக்கத்திற்குச் சென்றிருந்த விலங்குகளும், திசைமாறிய பறவைகளும்  உலா வரும் காலமிது. 

மழையில் நனைந்த புற்களும் மரங்களும் புத்துயிர் பெரும் நாளில் நகரமே பச்சை வண்ண புத்தாடையுடன் வலம் வரும் அழகே அழகு! துளிர் விடும் இளம்பச்சை இலைகளும், மழைக்காலத்தில் மட்டுமே பூக்கும் வண்ண மலர்களும் மனங்களை மயக்கும் காலமும் இதுவே.

மழையில் நனைந்தபடி, குடைக்குள் பேசி சிரித்தபடி வெளியுலகில் மனிதர்கள் நடமாட, பூங்காக்களில் குழந்தைகளின் சிரிப்பும் கும்மாளமுமாய்...
ஒருவர் மடியில் ஒருவர் தலை வைத்து உலகை மறந்த நிலையில் காதலர்கள், சக மாணவ, மாணவியருடன் விவாதித்துக் கொண்டும் படித்துக் கொண்டும் கல்லூரி மாணவர்கள், ஸ்கேட்போர்டில் வளைந்து வளைந்து ஆடிக்கொண்டே செல்லும் இளங்காளையர்கள், கைகோர்த்து இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லும் தம்பதியர்கள், இடைவெளி விட்டு பேசிக்கொண்டே செல்லும் ஆண் பெண் நண்பர்கள், குளங்களில் குஞ்சுகளுடன், துணையுடன் வளைய வரும் வாத்துகள், மரத்திற்கு மரம் தாவும் அணில்கள்,  இரை தேடி விரையும் பறவைகள் துணையுடன் கூடு கட்டி குஞ்சுகளைப் பொறித்து பராமரித்து வளர்ப்பதை காணும் இன்பமுமாய் அனைவரும் கொண்டாடி வரவேற்கும் சிறப்பான காலமும் இம்மழைக்காலமே!

இடி, மின்னலுடன் மழை பொழிந்து மனிதர்களையும் மனங்களையும் குளிர்விக்க, வானவில்லின் அழகோ வானத்தை அலங்கரிக்க, வானில் தான் எத்தனை வர்ணஜாலங்கள்!

துளிர் விடும் மரங்கள், வளர்ந்து வரும் புற்கள் சிலருக்கு ஒவ்வாமையானதாக இருந்தாலும், எண்ணங்கள் சிறகடிக்க வண்ணங்களில் உணர்வுகள் சிதறும் மழைக்காலப் பொழுதுகள் தான் எத்தனை ரம்மியமானவை!


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

வள்ளுவன் வாக்கும் உண்மையன்றோ!

Monday, May 1, 2017

அந்த நாள் ஞாபகம்

கோடை விடுமுறையில் பார்க்க வேண்டிய படங்கள் அத்தனையையும் பார்த்தாகி விட்டது. பாட்டி வீடு, பெரியம்மா, மாமாக்கள் வீட்டு விசிட்டுகளும் முடிந்து விட்டது. வார இதழ்களையும் ஒன்று விடாமல் படித்தாகி விட்டது. வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய வேளையில் ...

அப்பா, போர் அடிக்குது. கதை புக்கு வாங்கித்தா.

போய் பாட புஸ்தகத்தை எடுத்து வாசி.

அது செம போர். ஸ்கூல் திறக்கட்டும்.

போன வருஷ கொஸ்டின் பேப்பருக்கு பதில் எழுதிட்டு வரச்சொல்லி இருக்காங்கள்ல. அதை எழுதி முடி. கையெழுத்து அழகாகும்.

போப்பா. அதுவும் போர்.

சும்மா நைநைன்னுட்டே இருக்காத. உன் கூட பிறந்தவங்க அமைதியா இல்ல. (பக்கத்துக்கு இலைக்கு பாயசம் கிடைக்கும்னு அவங்களுக்குத் தெரியும்) நீ மட்டும் தான் எப்ப பாரு போர் அடிக்குது போர் அடிக்குதுன்னு உயிரை வாங்குற. கொஞ்ச நேரமாவது அமைதியா இருக்க முடியுதா உன்னால?

அப்ப எங்கேயாவது வெளியில கூட்டிட்டுப் போப்பா.

இந்தா பஸ்சுக்கு காசு. நீயும் உங்க அக்காவும் சிம்மக்கல் லைப்ரரி போயிட்டு வாங்க.

ஹை ஜாலி!  தங்கையும் தம்பிகளும் வீட்டில் இருக்க, அக்காவும் நானும் பெரிய மனுஷித்தனமாக கிளம்ப, உனக்கு எந்த பஸ் சிம்மக்கல் போகும்னு தெரியும்ல? அதிகம் பேசாத அக்கா. பேசிக்கொண்டே இருக்கும் நான்.  நெல்பேட்டை வரை நடந்து செல்லும் வழியெல்லாம் பேசிக் கொண்டே சென்று  சிம்மக்கல் செல்லும் பஸ் ஏறி நூலக நிறுத்தத்தில் இறங்கிக்  கொண்டோம்.

சுள்ளென வெயில் கடமையாற்றிக் கொண்டிருக்க, சாலையை கடந்து முதல் முறையாக நூலகத்தின் படியேற, வாசலில் மட்டமான சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தவர் என்னம்மா, புஸ்தகம் ஏதாவது எடுக்க வந்திருக்கீங்களா?

இல்ல, படிக்க வந்திருக்கோம்.

சேர்த்துப்  போட்டிருந்த நீண்ட மேஜைகள் நான்கில்  தினசரி செய்தித்தாள்கள் இறைந்து கிடந்தது. சிலர் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்க, அந்த காலத்து மின் விசிறிகளும், டியூப் லைட்டுகளும் அலங்கரித்துக் கொண்டிருந்த கட்டடம். சூரிய பகவானின் கருணையால் தெரு வெளிச்சம் பாதி நூலகத்தை வெளிச்சமாக வைத்திருக்க, மீதி இடங்கள் இருட்டாகவே இருந்தது. நுழைவாசலுக்கருகே பெரிய அரை வட்ட மேஜையில் , அவர் தான் லைப்ரரியனோ? வெள்ளையும் சொள்ளையுமாய்...உள்ளே வருபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

என்னம்மா, என்ன புஸ்தகம் தேடுறீங்க?

கதை புஸ்தகம்.

கடைசியில இருக்கு. உள்ள போங்க. ஒல்லியான மனிதர் ஒருவர் கைகாட்ட...

நாங்கள் இருவரும் உள்ளே போக, அந்த கடைசி ஷெல்ப்-ல் நிறைய கதை புத்தகங்கள். பறந்து வந்த தெருப்புழுதியை கூட்டி குமித்து வைத்திருந்தார்கள் மூலையில். ஒரே கொசுக்கடி வேறு. அக்காவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. எங்களைத்தவிர பெண்கள் எவரும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

கிளம்பலாம் வா. எனக்கு இங்க பிடிக்கல.

மணிரத்னம் படத்துல வர்ற மாதிரி ரத்ன சுருக்கமா தான் பேசுவா.

இரு இரு. ஒரு கதையாவது படிச்சிட்டுப் போவோம்.

இல்ல. இப்பவே போகணும்.

வேறு வழியில்லை. கிளம்பித்தான் ஆகணும். படிக்க விடமாட்டாள்.

உன்னைய போய் கூட்டிட்டு வந்தேன் பாரு. தனியாவே வந்திருக்கலாம். இப்ப வீட்டுக்குப் போய் என்ன பண்ண போற?

உனக்கு இங்கேயிருந்து பாட்டி வீட்டுக்குப் போக வழி தெரியும்ல?

அதுவும் நல்ல ஐடியா தான்.

அக்ரஹாரத்து வீடுகளின் முன் போட்டிருந்த வளைவுக்கோலங்களையும், மோட்டார் உதிரி பாகங்கள் விற்கும் கடைகளையும், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆஃபிஸ்களின் பெயர் தாங்கிய பலகைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே பழைய சொக்கநாதர் கோவில் படியேறி வணங்கி விட்டு வியர்க்க விறுவிறுக்க சிம்மக்கல் சாலைக்கு பக்கவாட்டுச் சாலையில் பழங்கள் விற்கும் மண்டிகளின் பெரிய பெரிய தராசுகளையும்,   மாம்பழம், வாழை, சாத்துக்குடி, ஆப்பிள், தேங்காய் என்று அனைத்து வித பழங்களும் விற்கும் தெருவையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இம்பீரியல் தியேட்டரையும் கடக்க, எத்தனை மனிதர்கள், எத்தனை வேடிக்கை காட்சிகள்!

பஸ் காசு இருக்கு. புதுமண்டபம் பக்கத்துல எள்ளு மிட்டாய் வாங்கிச்சாப்பிடலாம் வா. அதையும் விடுவானேன். ஆளுக்கொரு பாக்கெட் வாங்கிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே பழக்கப்பட்ட தெருக்களை கடந்து தேர்முட்டி வந்து விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துச் சந்தில் பாட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

எங்க போயிட்டு வர்றீங்க இந்த வேகாத வெய்யில்ல? எங்களை எதிர்பார்க்காத பாட்டி.

சிம்மக்கல் லைப்ரரி போனோம். இவளுக்கு அங்க பிடிக்கல. அதான் கிளம்பி வந்துட்டோம்.

பரவாயில்லையே! வழி தவறாம சரியா வந்து சேர்ந்துட்டீங்க.

 கைபேசி இல்லாத காலங்கள் தான் எவ்வளவு சுகமாக இருந்தது.

என்ன இருக்கு பாட்டி சாப்பிட? பசிக்குது. சாப்பிட்டு கிளம்புறோம்.

கொஞ்ச நேரம் பேசி விட்டு வெயில் குறைந்த பிறகு வழியில் வாங்கிச் சாப்பிட பாட்டி கொடுத்த பணத்துடன் மீண்டும் நடை.

மிகவும் பழகிய தெருக்கள். மனிதர்கள். கடைகள். கீழவாசல் பிள்ளையார் கோவில் அருகே 'பனங்கா உண்டோ' என்று அரிசி மாவு, பொரிகடலை, வெல்லம், ஏலக்காய் சேர்த்து செய்த மாவு உருண்டை விற்பார்கள். கமகம மணத்துடன் பற்களின் உறுதியையும் தாடையையும் பதம் பார்க்கும் பதார்த்தம். வாயில் போட்டால் வீடு செல்லும் வரை கரையாது. உப்பிய கன்னத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்த கதையைச் சொல்ல...

இன்று போல் இல்லாவிடினும் அன்றும் போக்குவரத்து நெருக்கடிகள் இருந்தது. நெல்பேட்டையிலிருந்து முழுவதுமாக ஒரு ரவுண்டு அடித்து திரும்பியதில் ஒரு திருப்தி. எத்தனை கேர்ஃப்ரீயாக இருந்திருக்கிறோம்! பதினான்கு வயதில் பயமில்லாமல் ஊர் சுற்ற முடிந்திருக்கிறது. சுற்றவும் விட்டிருக்கிறார்கள். இன்று குழந்தைகளை வெளியே அனுப்பவே பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது!

புத்தகம் படிக்க முடியா விட்டாலும் வழியெங்கும் எத்தனை எத்தனை காட்சிகள், மனிதர்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், சினிமா போஸ்டர்கள், கோவில்கள், கடைகள், மரங்கள் ...

இது போதும் எனக்கு இது போதுமே-ன்னுட்டு... கோடையை கழித்த நல்லதொரு இனிமையான நாள்.

அந்த நாள் ஞாபகம்...



















அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...