Thursday, May 25, 2017

பச்சை நிறமே பச்சை நிறமே...

கடும்பனி மற்றும் கொடுங்குளிரிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் மழையை வரவேற்க, இலைகளைத் துறந்து குளிரில் சோகத்துடன் காட்சியளித்த மரங்களும், நீண்ட உறக்கத்திற்குச் சென்றிருந்த விலங்குகளும், திசைமாறிய பறவைகளும்  உலா வரும் காலமிது. 

மழையில் நனைந்த புற்களும் மரங்களும் புத்துயிர் பெரும் நாளில் நகரமே பச்சை வண்ண புத்தாடையுடன் வலம் வரும் அழகே அழகு! துளிர் விடும் இளம்பச்சை இலைகளும், மழைக்காலத்தில் மட்டுமே பூக்கும் வண்ண மலர்களும் மனங்களை மயக்கும் காலமும் இதுவே.

மழையில் நனைந்தபடி, குடைக்குள் பேசி சிரித்தபடி வெளியுலகில் மனிதர்கள் நடமாட, பூங்காக்களில் குழந்தைகளின் சிரிப்பும் கும்மாளமுமாய்...
ஒருவர் மடியில் ஒருவர் தலை வைத்து உலகை மறந்த நிலையில் காதலர்கள், சக மாணவ, மாணவியருடன் விவாதித்துக் கொண்டும் படித்துக் கொண்டும் கல்லூரி மாணவர்கள், ஸ்கேட்போர்டில் வளைந்து வளைந்து ஆடிக்கொண்டே செல்லும் இளங்காளையர்கள், கைகோர்த்து இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லும் தம்பதியர்கள், இடைவெளி விட்டு பேசிக்கொண்டே செல்லும் ஆண் பெண் நண்பர்கள், குளங்களில் குஞ்சுகளுடன், துணையுடன் வளைய வரும் வாத்துகள், மரத்திற்கு மரம் தாவும் அணில்கள்,  இரை தேடி விரையும் பறவைகள் துணையுடன் கூடு கட்டி குஞ்சுகளைப் பொறித்து பராமரித்து வளர்ப்பதை காணும் இன்பமுமாய் அனைவரும் கொண்டாடி வரவேற்கும் சிறப்பான காலமும் இம்மழைக்காலமே!

இடி, மின்னலுடன் மழை பொழிந்து மனிதர்களையும் மனங்களையும் குளிர்விக்க, வானவில்லின் அழகோ வானத்தை அலங்கரிக்க, வானில் தான் எத்தனை வர்ணஜாலங்கள்!

துளிர் விடும் மரங்கள், வளர்ந்து வரும் புற்கள் சிலருக்கு ஒவ்வாமையானதாக இருந்தாலும், எண்ணங்கள் சிறகடிக்க வண்ணங்களில் உணர்வுகள் சிதறும் மழைக்காலப் பொழுதுகள் தான் எத்தனை ரம்மியமானவை!


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

வள்ளுவன் வாக்கும் உண்மையன்றோ!

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 315ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் ஏழாம் பாகம்  அமேசிங் பிரிட்டன் -7- கிளாஸ்கோ- கிரெட்னா கிரீன்-லேக் டிஸ்ட்ரிக்ட் பயணக...